மார்க்சியம் (Marxism, மார்க்சிசம்) என்பது ஓர் வரலாற்றியலான சமூகப் பொருளியல் பகுப்பாய்வு முறையாகும்.
இது வர்க்க (பொருளியல் வகுப்பு) உறவுகளையும் சமூகப் போராட்டத்தையும் வரலாற்றுப் பொருள்முதல்வாதக் கண்ணோட்டத்தில், அதாவது வரலாற்றை பொருளாயதவாதியின் விளக்க முறையிலும் சமூக உருமாற்றத்தை இணைமுரணியல் (இயங்கியல்) உலகப் பார்வை வழியிலும் பகுப்பாய்வு செய்து விளக்குகிறது. இது 19 ஆம் நூற்றாண்டின் இடைப்பகுதியில் இருந்து இறுதிப்பகுதி வரை கார்ல் மார்க்ஸ், பிரெட்ரிக் ஏங்கல்ஸ் ஆகிய மெய்யியலாளர்களின் எழுத்துக்களால் உருவாக்கப்பட்ட புதிய உலகப்பார்வை ஆகும்.
மார்க்சியம், பொருளியல், அரசியல், மெய்யியல் கோட்பாடுகளை தன்னகத்தே கொண்டுள்ளது. அடிப்படையில் மார்க்சியம் இயங்கியல் பொருள்முதல்வாதக் கருத்தியலின் அடிப்படையில் கட்டியெழுப்பப்பட்ட மெய்யியலாகும்.
மெய்யியல்கள் எல்லாம் உலகை விளக்குவதையே தமது தன்மையாக கொண்டிருக்க, புரட்சி மூலம் உலகை மாற்றியமைப்பது பற்றி பேசுவதால், மார்க்சியம் உலகில் நிகழும் பல்வேறு போராட்டங்களுக்கும் புரட்சிகளுக்கும் அடிப்படைக் கருத்தியல் ஆயுதமாக மார்க்சியர்களால் விளக்கப்படுகிறது.
மார்க்சிய முறையியல் தொடக்கத்தில் வரலாற்றுப் பொருள்முதல் வாதம் என்ற பொருளியலையும் சமூக அரசியல் ஆய்வையும் உள்ளடக்கிய முறையைப் பயன்படுத்தி, முதலாளித்துவத்தின் வளர்ச்சியை உய்யநிலையில் பகுப்பாய்வு செய்து, சமூகப் பொருளியல் மாற்றத்தில் வர்க்கப் போராட்டத்தின் பங்கினை விளக்கப் பயன்படுத்தியது. மார்க்சிய நோக்கில் முதலாளியச் சமூகத்தில் வருக்கப் போராட்டம், உபரிப் பொருள் விளைவிக்கும் சமூகமயப் பொருளாக்கத்தில் ஈடுபடும் பாட்டாளி வருக்கத்திற்கும் தனியார் உடமைவழியாக அந்தப் பொது உபரிப் பொருளை (தம் ஈட்டம்-இலாபம் என்ற பெயரில்) எடுத்துக் கொள்ளும் சிறுபான்மையான தனியார் உரிமையாளர்களே முதலாளி (பூர்சுவா) வருக்கத்திற்கும் இடையே எழும் முரண்களால் எழுகிறது. தம் உழைப்பால் உருவாகிய உபரிப் பொருள் தம்மிடம் சேராமல் அயன்மைப்பட்டுத் தனியாரிடம் (முதலாளிகளிடம்) சேரும் முரண்பாடு பாட்டாளி வருக்கத்திற்குத் தெளிவாகும்போது இந்த இரு பொருளியலாக முரண்பட்ட வகுப்புக்களிடையே சமூகப் போராட்டம் கிளைத்தெழுகின்றது. இதுவே முனைப்படைந்து சமூகப் புரட்சியாக உருமாறுகின்றது. இந்தப் புரட்சியின் நீண்டகால வெளிப்பாடாக சமூகவுடைமை அல்லது நிகரறச் சமூகம் உருவாகின்றது; இச்சமூகம், பொருளாக்கத்துக்கான வளங்கள் அனைத்தையும் சமூக உடைமையாக்கி ஒவ்வொருவருக்கும் அவரவர் பங்களிப்பிற்கேற்ற ஈட்டத்தைப் பகிர்ந்தளித்து நேரடிப் பயன்பாட்டிற்குத் தேவையான பொருள்வளத்தை மட்டுமே உருவாக்கும். உற்பத்தி விசைகளும் தொழினுட்பமும் முன்னேறி வருவதால் சமூகவுடமைச் சமூகம் இறுதியில் பொதுவுடைமைக்கு வழிவகுக்கும் எனக் கருதினார்; அனைத்தும் மக்களின் உடமையானதும் பொதுவுடைமைச் சமூகம், "ஒவ்வொருவரின் திறனுக்கேற்ற வகையில் உழைப்பு பெறப்பட்டு ஒவ்வொருவருக்கும் அவரவர் தேவைக்கேற்ப பொது ஈட்டம் பகிர்ந்து வழங்கப்படும்" என்ற கொள்கைப்படி செயல்படும். இது வருக்கங்களற்ற, தனிநாட்டுப் பாங்கற்ற, ஒப்புயர்விலாத உலக மாந்தரினச் சமூகமாக முன்னேறும் என மார்க்சு மொழிந்தார்.
மார்க்சியப் பகுப்பாய்வுகளும் முறையியல்களும் பல்வேறு அரசியல் கருத்தியல்கள்பாலும் சமூக இயக்கங்கள்பாலும் தாக்கம் செலுத்திவருகின்றன. மார்க்சிய வரலாற்றியலையும் சமூகவியலையும் சில கல்வியியலாளர்கள் தொல்லியலுக்கும் மாந்தரினவியலுக்கும் தகவமைத்துப் பயன்படுத்துகின்றனர்; அதேபோல, ஊடக ஆய்வுகளுக்கும், அரசியலுக்கும் அரங்கியலுக்கும் வரலாற்றியலுக்கும் சமூகவியலுக்கும் கலைக்கோட்பாட்டுக்கும் பண்பாட்டு ஆய்வுகளுக்கும் கல்வியியலுக்கும் பொருளியலுக்கும் புவியியலுக்கும் இலக்கியத் திறனாய்வுக்கும் அழகியலுக்கும் உய்யநிலை உளவியலுக்கும் (critical psychology) மெய்யியலுக்கும் கூடப் பயன்படுத்துகின்றனர். இப்புலங்கள் மார்க்சிய எனும் முன்னொட்டுடன் அறிமுகப்படுத்தப்படுகின்றன.
மார்க்சியப் பகுப்பாய்வு சமூகப் பொருள் தேவைகளைச் சந்திக்கும் பொருளாயத நிலைலைகளையும் பொருளியல் நடவடிக்கைகளையும் ஆய்வதில் இருந்து தொடங்குகிறது. பொருளியல் ஒருங்கமைப்பு அல்லது பொருளாக்க உறவுகள் நேரடியாக மற்ற சமூக உறவுகளையும், அரசியல்,சட்ட அமைப்புகள், அறநெறிமுறைகள், கருத்தியல் போன்ற அனைத்து சமூக உணர்வுகளையும் உருவாக்குகிறது அல்லது தாக்கம் செலுத்துகிறது எனக் கொள்கிறது. பொருளியல் அமைப்பும் சமூக உறவுகளும் சமுகத்தின் அடித்தளமாக அமைகின்றன. சமூகத்தின் பொருளாக்க விசைகள் வளரும்போது அதாவது குறிப்பாகத் தொழில்நுட்பம் வளரும்போது நிலவும் சமூகப் பொருளாக்க வடிவங்கள் திறமற்றுப் போகின்றன. அதனால் அடுத்துவரும் சமூக முன்னேற்ரத்தை அவை தடுக்கின்றன. காரல் மார்க்சு கூறுகிறார்: "At a certain stage of development, the material productive forces of society come into conflict with the existing relations of production or – this merely expresses the same thing in legal terms – with the property relations within the framework of which they have operated hitherto. From forms of development of the productive forces these relations turn into their fetters. Then begins an era of social revolution."
இந்தப் பொருளியல் விசைகளுக்கும் பொருளியல் உறவுகளுக்கும் இடையில் எழும் முரண்பாடுகள் வருக்கப் போராட்ட வடிவத்தில் சமூக உறவுகளின் முரண்பாடாக முகிழ்க்கிறது. முதலாளியப் பொருளாக்க முறைமையின் கீழ், இப்போராட்டம் பொருளாக்க அமைப்பை தம்முரிமையில் வைத்திருக்கும் சிறுபான்மை முதலாளிகளுக்கும் பொருள்களையும் சேவைகளையும் உருவாக்கும் பெரும்பான்மை பாட்டாளிகளுக்கும் இடையில் தோன்றுகிறது.இவ்வாறு சமூக மாற்றம், தம்முள் முரண்பட்ட சமூக வகுப்புகளுக்கிடையில் எழும் வருக்கப் போராட்டத்தால் உருவாகிறதெனவும் முதலாளியம் பாட்டாளிகளைச் சுரண்டி அடக்குகிறதெனவும் இதனால் பாட்டாளி வருக்கப் புரட்சி உருவாகிறதெனவும் என மார்க்சியர்கள் கூறுகின்றனர்.
மார்க்சியத்தின்படி உலக மக்கள் அவர்கள் செய்யும் வேலைகளின் அடிப்படையில் பல பிரிவுகளாக வர்க்கங்களாக பிரிக்கப்படுகின்றனர்.
முதலாளிகளின் எதிரி பாட்டாளிகள் = பெரும்பான்மையான மக்கள் தொழிற்சாலைகள், அலுவலகங்கள், வேளாண்மை பண்ணைகளில் ஊதியத்திற்காக வேலை புரிவதால் "பாட்டாளிகள்" எனப்படுகின்றனர். இவர்கள் "உழைக்கும் வர்க்கம்" (அல்லது "பாட்டாளி வர்க்கம்") எனப்படுகின்றனர்.
பாட்டாளி வர்க்கத்தினரை விட சிறுபான்மையினரான மற்றொரு பிரிவினர் "முதலாளி வர்க்கம்" (அல்லது "பூர்சுவாக்கள்") எனப்படுகின்றனர். இவர்கள் தொழிற்சாலைகள், நிலம், மற்றும் தொழிலாளர்கள் பணி புரியும் கட்டிடங்களுக்கு உரிமையாளர்கள். தவிரவும் பணியாளர்கள் பயன்படுத்தும் அனைத்து கருவிகளும் இவர்களுக்கு உரிமையானது. பாட்டாளிகளின் வேலைத்திறனால் பிழைப்பதால் மார்க்சு இவர்களை "ஆளும் வர்க்கத்தினர்" என்கின்றார். தவிரவும் ஆளும் வர்க்கத்தினர் அரசாங்கம், படைத்துறை, மற்றும் நீதிமன்றங்களையும் கட்டுப்படுத்துகின்றனர்.
மார்க்சியப் பார்வைகளில், மூலதனம் "உற்பத்திக்கான வழிமுறை" ஆகும்; முதலாளிகள் பணத்தை பல வணிக முயற்சிகளில் முதலீடு செய்து, "இலாபம்" அடைந்து தங்கள் மூலதனத்தைப் பெருக்கிக் கொள்கின்றனர்.
பெரும்பாலான தொழிலாளர்கள் முதலாளிகளின் அல்லது "பெடிட்-பூர்சுவா"க்களின் (சிறு வணிக உரிமையாளர்கள்) நிறுவனங்களில் பணி புரிகின்றனர். முதலாளிகள் தொழிலாளர்களின் வேலை நேரத்திற்கு மாற்றாக கூலி தருகின்றனர். முதலாளி தொழிலாளியின் நேரத்தை வாங்கியுள்ளதால் அந்த நேரத்தை முதலாளிக்கு வேலை செய்வதில் செலவிட வேண்டியுள்ளது. மார்க்சிய கருத்துக்களின்படி, விளைபொருள் ஒன்றிலிருந்து கூடுதல் பணம் பெற முதலாளிக்கு இதுவே ஒரே வழி. முதலாளிகள் தொழிலாளியின் நேரத்தை எவ்வளவு முடியுமோ அவ்வளவாக சுரண்டுகின்றனர். முதலாளிக்கு பணியாளர் தயாரித்த பொருளுக்கு குறிப்பிட்ட விலை கிடைக்கின்றது. இந்த விலையை விட பணியாளரின் வேலைநேரத்திற்கு குறைவாக விலை கொடுப்பதால் முதலாளிகள் மூலதனத்தை பெருக்கிக் கொள்கின்றனர். இவ்விதமாக தொழிலாளியின் வேலைத்திறனை சுரண்டுகின்றனர்:
தொழிலாளர் சுரண்டப்படுவதால் சிறுபான்மை வர்க்கத்தினரான முதலாளிகள் வேலை செய்யாமலே வாழ முடிகின்றது எனவும் பெரும்பான்மையான தொழிலாளர் வர்க்கம் முதலாளிகள் வாழ்வதற்காக வேலை செய்ய வேண்டியுள்ளது எனவும் மார்க்சு கருதினார்.
மார்க்சியத்தின்படி தொழிற்சாலைகள், கருவிகள், மற்றும் பணியிடங்கள் தாங்களாகவே எவ்வித மதிப்பையும் தரவியலாது. அவைகள் ஒரு அவுரிநெல்லி புதர் போன்றது: புதருக்கு தனியே மதிப்பில்லை. மக்கள் தங்கள் பணிநேரத்தை செலவிடுவதாலேயே மதிப்பு விளைகின்றது.எவரேனும் ஒருநாளை செலவழித்து அவுருநெல்லிகளைப் பறிக்கின்றனர். பறிக்கப்பட்ட அவுரிநெல்லிகளைத் தான் விற்கவும் உண்ணவும் முடியும்.
மார்க்சிய வ்ரலாற்றுப் பொருள்முதல்வாதக் கண்னோட்டத்தின்படி, வரலாறு என்பதே கால்ந்தோறும் நிகழும் சமூக வர்க்கங்களின் போராட்ட வரலாறே. இதன்படி, தற்காலத்தில் முதலாளிகளும் தொழிலாளிகளும் தொடர்ந்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனை அவர்கள் " இணைமுரண் பொருள்முதல்வாதம் அல்லது இயக்கவியல் பொருள்முதல்வாத அடிப்படையைச் சமூக இயக்கத்துக்குப் பயன்படுத்தி கொணர்கின்றனர். இதிலிருந்தே சமூக வரலாறு என்பது சமூக வர்க்கங்களுக்கிடையேயான போராட்ட வரலாறு என்ற மார்க்சியம் விளக்குகிறது. வெவ்வேறு பொருளியல் நோக்குடைய முரண்பட்ட இருவேறு வர்க்கங்களுக்கு இடையே தொடர்ந்த போராட்டம் நிலவுகிறது. சமூக மாற்றமே இதன் தீர்வாகும் என மார்க்சியம் உறுதிபடக் கூறுகிறது.
முதலாளித்துவம் தொழிலாளிகளை எவ்வளவு முடியுமோ அவ்வளவு சுரண்டும் எனவும் அவர்களது கூலியை எவ்வளவு குறைக்க முடியுமோ அவ்வளவு குறைக்கும் எனவும் மார்க்சியம் கூறுகின்றது. தங்களுக்கு கிடைக்கும் இலாபம் கூட வேண்டும் என்பதற்காகவும்னாதை விரைவாக அடைய வேண்டும் என்பதற்காகவும் முதலாளிகள் இவ்வாறு செய்ய வேண்டியுள்ளது. தொழிலாளர்கள் தங்கள் கூலிகளைக் காப்பாற்றிக்கொள்ள போராட வேண்டியுள்ளது; "சுரண்டல் வீதத்தை" குறைத்து தங்கள் வாழ்க்கை அமைதியாகச் செல்லப் போராடுகின்றனர். இதனையே மார்க்சியம் "வர்க்கப் போராட்டம்" என்கின்றது: தொழிலாளர்களும் அவர்களது மேலாளர்களும் தங்கள் வருக்கநலம் காக்க தொடர்ந்து போராடி வருகின்றனர்.
மார்க்சியவாதிகள் அனைத்து எழுதப்பட்ட வரலாறும் சமூகப்பொருளியல் வருக்கத்தினரால் பிரிக்கப்பட்டுள்ளதாக கருதுகின்றனர். வரலாற்றியலாக முதல் சமூக வருக்க வேறுபாடு அடிமையுடைமைச் சமூகத்தில் தொடங்கியது. அதற்கு முன் தொல்பொதுவுடைமைச் சமூக அமைப்பு நிலவியது. அடிமையுடைமைச் சமூக அமைப்புக்குப் பிறகு, நில மானிய முறைமை (நடுக்கால சமூகம் நிலக்கிழார்களாலும் உயர்குடியாளர்களாலும் கட்டுப்படுத்தப்பட்டது. ஆளும் வருக்கத்தினரின் செல்வமும் அதிகாரமும் உழவர்களின் உழைப்பால் விளைந்தவை. ஆனால், அதன் பலன் மட்டும் நிக்கிழாரின் கையில் சிக்கியிருந்தது உழவர்களின் விளைச்சலின் பகிர்வுக்காக பெரு, சிறு வணிகர்களும் அங்காடிகளும் தோன்றலாயின. இவர்கள் தங்களுக்குள் அமைப்புகளை உருவாக்கிக் கொண்டு பணியாளர்களை அமர்த்திக் கொள்ளத் தொடங்கினர். இந்த இடைத்தட்டு வருக்கத்தினர்களும் இப்பணிகளால் செழிக்கத் தொடங்கினர். இதுவே நிலக்கொ௶ஐச் சமூகம் இயங்கும் வரலாறாகும். இப்போது மேற்பத்தியில் விவரீத்த முதலாளிய சமூக அமைப்பு தொடர்கிறது.
இதேமுறையில், வர்க்கப் போராட்டத்திலிருந்து சமூகவுடைமையும் பின்னர்பொதுவுடைமையும் முறையே உருவாகித் தொடரும் என மார்க்சியவாதிகள் கருதுகின்றனர். இருப்பினும் தொழிலாளர் போராட்டம் வலுப்பெற்று புரட்சி வெடித்தால் முதலாளித்துவத்திற்கு மாற்றாக முதலில் சமூகவுடமை தோன்றும் எனக் கருதுகின்றனர்.
This article uses material from the Wikipedia தமிழ் article மார்க்சியம், which is released under the Creative Commons Attribution-ShareAlike 3.0 license ("CC BY-SA 3.0"); additional terms may apply (view authors). வேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 4.0 இல் கீழ் கிடைக்கும். Images, videos and audio are available under their respective licenses.
®Wikipedia is a registered trademark of the Wiki Foundation, Inc. Wiki தமிழ் (DUHOCTRUNGQUOC.VN) is an independent company and has no affiliation with Wiki Foundation.