நேர வலயம் (time zone) என்பது சட்டம், வாணிகம், சமூகம் சார்ந்த நோக்கங்களுக்காக ஒரே சீரான செந்தர நேரம் நடைமுறைப்படுத்தப்படும் புவிக்கோளத்தின் ஒரு பகுதியாகும்.
நேர வலயம் நாடு/நாடுகளின் எல்லைகளையும் அதன் உட்பிரிவுகளையும் பின்பற்ற முனைகிறது. ஏனெனில், அப்போதுதான் நெருக்கமாக அமைந்த வணிக, தொடர்பாடல் செயல்பாடுகளை ஒரே நேரத்தில் நிகழ்த்தல் ஏந்தாக அமையும்.
நேர வலயம் என்பதை எளிமையாக, புவிக்கோளத்தில் வடக்கு-தெற்காக பிரிக்கப்பட்ட நிலப்பகுதிகளில் ஒவ்வொரு நிலப்பிரிவுக்கும் ஒரு குறிப்பிட்ட நேரத்தைச் செந்தர நேரமாகக் கொள்ளும் திட்டம் எனலாம். புவிக்கோளம் தன் தென்வடலான (தெற்கு-வடக்கான) சுழல் அச்சை நடுவாகக்கொண்டு சுழலுவதால் ஓரிடத்தில் கதிரவன் உச்சியின் இருக்கும் பொழுது புவிக் கோளத்தின் மறுபுறம் இருளாக இருக்கும். எனவே புவிக் கோளத்தின் வெவ்வேறு பகுதிகளில் வெவ்வேறு நேரங்கள் அமைவது இயற்கை. இதனைச் செந்தரப்படுத்தி உலகம் முழுவதற்குமாக நேரத்தை வரையறை செய்தது நேர வலயத் திட்டம் ஆகும். கனடா நாட்டினராகிய சர். சுட்டான்வோர்டு விளெமிங் (Stanford Fleming) என்பவர் முதன் முதலாக உலகம் முழுவதற்குமான நேர வலயத் திட்டத்தை 1876 இல் அறிவித்தார். புவிக் கோளத்தில் தென்வடலாகச் செல்லும் நில நெடுவரைக் கோடுகளில் 15 பாகைக்கு (15°), ஒரு நேரமாகக் கொண்டு, ஒவ்வொரு 15° நிலப்பகுதிக்கும் ஒரு மணி நேரம் வேறுபாடு என்று நிறுவி உலகம் முழுவதற்குமாக மொத்தம் 24 நேர வலயங்களாக 24 பிரிவுகள் உள்ளன. ஒவ்வொரு வலயமும் அதனுடைய அண்மை வலயத்தில் இருந்து ஒரு மணி நேரம் வேறுபடும். நேரவலயக் கோடுகள் எப்போதும் ஒழுங்காக அமைவதில்லை காரணம் அவை நாடுகள் அல்லது நிர்வாக கட்டமைப்புகளை மையமாகக் கொண்டே வரையப்படுகின்றன.
பெரும்பாலான நேர வலயங்கள் ஒருங்கிணைந்த பொது நேரத்தில் இருந்து முழு மணிகளால் ஆகிய குறிப்பிட்ட இடைவெளி அமைந்த புவிக்கோளப் பகுதிகளாகும். இந்நேர இடைவெளிகள் ஒபொநே−12 முதல் ஒபொநே+14 வரையில் அமைகின்றன. என்றாலும் சில வலயங்கள் 30 அல்லது 45 மணித்துளிகள், முழு மணியில் இருந்து கூடுதல் அல்லது குறைவான இடைவெளி கொண்டதாக அமைதல் உண்டு. எடுத்துகாட்டாக, நியூசிலாந்து நேர வலயம் அல்லது செந்தர நேரம் ஒபொநே+05:45 ஆகும். அதேபோல, நேபாளத்தின் செந்தர நேரம் ஒபொநே=03:30 ஆகும். இந்தியச் செந்தர நேரம் ஒபொநே+05:30 ஆகும்.
சில மிதவெப்ப மண்டல, உயர் அகலாங்கு நாடுகள் ஆண்டின் ஒரு பகுதியில்,, கள நேரத்தை ஒருமணி நேரம் மாற்றிவைத்து பகல் ஒளி காப்பு நேரத்தைப் பயன்படுத்துகின்றன. பல நேர வலயங்கள் தம் இயல்நேர வலயங்களில் இருந்து மேற்கு நோக்கிச் சரித்தபடி பின்பற்றுகின்றன. இம்முறையும் நிலையான பகல் ஒளி காப்பு நேர விளைவைத் தருகிறது.
கடிகாரங்கள் கண்டுபிடிக்கப்படும் முன்பு,தோற்ற சூரிய நேரத்தை (இது உண்மைச் சூரிய நேரம் எனவும் வழங்கும்) வைத்து பகல் நேரம் கூறுவது பொது வழக்கமாக இருந்தது – எடுத்துகாட்டாக. சூரியக் கடிகையில் இருந்தும் நேரம் அறிதலைக் கூறலாம். இந்நேரம் ஒவ்வொரு இடத்திலும் அவ்விடம் அமைந்துள்ள அகலாங்கைப் பொறுத்து மாறும். நன்கு ஒழுங்குபடுத்திய எந்திரக் கடிக்காரங்கள் 19 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் வடிவமைக்கப்பட்டதும், ஒவ்வொரு நகரமும் களச் சூரிய நிரல் (சராசரி) நேரத்தைப் பயன்படுத்த தொடங்கியது. தோற்ற சூரிய நேரமும் நிரல் சூரிய நேரமும் ஏறத்தாழ 15 மணித்துளிகள் அளவுக்கு வேறுபடலாம். இந்நிலை சூரியனைப் புவி சுற்றிவரும் வட்டணையின் நீள்வட்ட வடிவத்தாலும் புவிக்கோள அச்சு சாய்வாலும் ஏற்படுகிறது. நிரல் சூரிய நேரம் சம நீளமுள்ள (பொழுதுள்ள) நாட்களைக் கருதுகிறது. இரண்டு கூட்டுத்தொகைகளுக்கும் இடையில் அமையும் வேறுபாடு ஓராண்டில் சுழியாகிறது. கிரீன்விச் நிரல் நேரம், 1675 இல் கிரீன்விச்சில் அரசு வான்காணகம் கட்டப்பட்டதும் கடலில் கப்பலோட்டிகள் அகலாங்கை தீர்மானிக்க உருவாக்கப்பட்டது. அப்போது இங்கிலாந்தின் ஒவ்வொரு நகரமும் ஒரு களச் சூரிய நிரல் நேரத்தைப் பின்பற்றியதால், இது செந்தர மேற்கோள் நேரமாக அமைந்தது.
தொடர்வண்டி போக்குவரத்தும் தொலைதொடர்பும் வளர்ச்சிபெற்றதும், களச் சூரிய நேரங்கள், களத்தின் அகலாங்குகளின் வேறுபாட்டைப் பொறுத்து மாறியதால், அவை பெரிதும் குழப்பத்தை விளைவித்தன. இவ்வகைக் கள நேரங்கள் ஒவ்வொரு பாகை அகலாங்கு வேறுபாட்டுக்கும் 4 மணிதுளிகள் அளவுக்கு வேறுபட்டன. எடுத்துகாட்டாக, பிரிசுட்டல் நகரம் கிரீன்விச்சில் இருந்து 2.5 பாகை மேற்கில் தள்ளியமைவதால், பிரிசுட்டலில் மதியம் ஆகும்போது கிரீன்விச்சில் மதியத்தைத் தாண்டி 10 மணித்துளிகள் கூடுதலாக இருக்கும். நேர வலயங்களின் பயன்பாடு, இந்தச் சிறுசிறு நேர வேறுபாடுகளைக் கூட்டி மேலும் பெரிய நேர அலகுகளாக, அதாவது, மணியளவு வேறுபாடுகளாக, மாற்றுகிறது. இதனால் அருகருகே உள்ள இடங்கள் பொது செந்தர நேரத்தைப் பின்பற்றலாம்.
பெரும்பிரித்தானியாவில் அந்நாட்டு தொடர்வண்டிக் குழுமங்களால் 1847 திசம்பர் 1 இல் முதன்முதலாக கிரீன்விச்சின் நேரத்தைப் பயன்படுத்திய கப்பற் காலமானிகளின் உதவியால் பின்பற்றப்பட்டது. இவ்வாறு முதலில் 18840 நவம்பரில் செந்தர நேரத்தைப் பின்பற்றிய குழுமமாக மேற்குப் பெருந்தொடர்வண்டிக் குழுமம் அமைந்தது. இது உடனே தொடர்வண்டி நேரம் என வழங்கப்பட்டது. 1852 ஆகத்து 23 இல் கிரீன்விச் அரசு வான்காணகத்தில் இருந்து, தொலவரி வழி காலக் குறிகைகள் (சைகைகள்) அனுப்பப்பட்டன.1855 அளவில் பெரும்பிரித்தானியாவின் 98% பொது கடிகாரங்கள் கிரீன்விச் நிரல் நேரத்தையே பின்பற்றினாலும், 1880 ஆகத்து 2 வரை அது சட்டப்படியான நேரமாக ஏற்கப்படவில்லை. இந்தக் காலத்தின் சில பிரித்தானியக் கடிகாரங்கள் இரண்டு மனித்துளிக்கான முட்கலைக் கொண்டிருந்தன. இவற்ரில் ஒன்று கள நேரத்தையும் மற்றொன்று கிரீன்விச் நிரல் நேரத்தையும் காட்டின.
உலகளாவிய தொலைத்தொடர்பு வளர்ச்சி, தொடர்பு கொள்ளும் வாடிக்கையாளரிடையே அனைவரும் பகிரமுடிந்த மேற்கோள் நேரத்தைப் பரிமாறிக் கொள்ளவேண்டிய தேவையை உருவாக்கியது. பேரளவு பகுதிகளில் உள்ள கடிகாரங்களை உலக முழுவதிலும் ஒருங்கியங்கவைத்து வேறுபடும் கள நேரங்களின் சிக்கல் ஓரளவு தீர்க்க முடிந்த்து, ஆனால், பல இடங்களில் இவ்வறு பின்பற்றிய செந்தர நேரம் மக்கள் பழக்கப்பட்ட சூரிய நேரத்தில் இருந்து வேறுபட்டிருந்தது.
1868 நவம்பர் 2 இல் அப்போதைய பிரித்தானிய ஆட்சிக்கு உட்பட்டிருந்த நியூசிலாந்து அந்நாடு முழுவதும் ஒரு குறிப்பிட்ட செந்தர நேரத்தைப் பின்பற்றலானது. இதுபோல முதன்முதலாக உலகில் பின்பற்றிய நாடு இதுவேயாகும். இது கிரீன்விச்சுக்குக் கிழக்கே உள்ள 172°30′ நெட்டாங்கைச் சார்ந்தமைந்தது. எனவே, இது கிரீன்விச் நிரல் நேரத்தில் இருந்து 11மணியும் 30 மணித்துளிகள் முன்பாக அமைந்தது. இச்செந்தர நேரம், நியூசிலாந்து நிரல் நேரம் எனப்பட்டது.
அமெரிக்கத் தொடர்வண்டித் தடங்களில் நேரங்கணிப்பது 19 ஆம் நூற்றாண்டின் இடைப்பகுதியில் ஓரளவு குழப்பமாகவே இருந்துள்ளது. ஒவ்வொரு தொடர்வண்டித் தடமும் ஒரு தனியான செந்தர நேரத்தைப் பின்பற்றியது. இது அதன் தலைமையகத்தின் கள நேரத்தையோ அல்லது மிக முதன்மையான நிலையத்தின் கள நேரத்தையோ செந்தர நேரமாக பின்பற்றியது. ஒவ்வொரு குழுமமும் தனது தொடர்வண்டி நேர அட்டவணையைத் தனது பொது நேரத்தைப் பயன்படுத்தி வெளியிட்டது. சில தொடர்வண்டிச் சந்திப்புகள் பல தடங்களுக்கு பொதுவாய் அமைந்ததால், அங்கு ஒவ்வொரு குழுமத் தடத்துக்கும் ஒரு தனி கடிகாரம் வைக்கப்பட்டிருந்தது. இவை ஒவ்வொன்றும் வேறு வேறு நேரத்தைக் காட்டின.
சார்லசு எஃப். தவுடு 1963 இல் அமெரிக்கத் தொடர்வண்டித் தடங்களுக்கான ஒரு மணி நேர இடைவெளி அமைந்த செந்தர நேர வலயங்களின் அமைப்பை முன்மொழிந்தார். ஆனால், அவர் இந்த அமைப்பு பற்றி எங்கும் வெளியிடவில்லை. மேலும், 1969 வரை இதைப் பற்றி எந்த தொடர்வண்டிக் குழுமத்துடனுங்கூட கலந்துகொள்ளவும் இல்லை. பிறகு, இவரே 1870 இல் வடக்கு-தெற்கு எல்லைகள் அமைந்த நான்கு கருத்தியலான நேர வலயங்களை முன்மொழிந்தார். இதில் முதலாம் அமைப்பு வாழ்சிங்டனை மையமாக கொண்டதாகும். பிறகு 1972 ஆம் ஆண்டளவில் இது 75 ஆம் பாகை மேற்கு நெட்டாங்கை மையமாகக் கொண்டதாக மாற்றப்பட்டது. இதன் புவிப்பரப்பு எல்லைகளாக அப்பல்லாச்சிய மலையின் பகுதிகள் அமைந்தன. ஆனால், இவரது முறையை அமெரிக்கத் தொடர்வண்டிக் குழுமங்களேதும் ஏற்கவில்லை. மாறாக, அமெரிக்க, கனடியத் தொடர்வண்டித் தடங்கள், பயணரின் அலுவல்முறை தொடர்வண்டி வழிகாட்டி எனும் அட்டவணையின் ஆசிரியரான வில்லியம் எஃப். ஆலனால் முன்மொழியப்பட்ட முறையைப் பின்பற்றலாயின. இந்த நேர வலயத்தின் எல்லைகளாக, பெருநகரங்களின் ஊடான தொடர்வண்டி நிலையங்கள் அமைந்தன. எடுத்துகாட்டாக, கிழக்கு, மைய நேர வலயங்களின் இடையிலான எல்லை, தெத்ராயித்து, பப்பெல்லோ, பிட்சுபர்கு, அத்லாந்தா, சார்லசுடன் ஆகிய நகரங்களின் ஊடாக அமைந்தது. இது 1883 நவம்பர் 18 ஞாயிறன்று தொடங்கப்பட்டது. இந்நாள் இருமதியங்களின் நாள் எனப்பட்ட நாளாகும். ஒவ்வொரு தொடர்வண்டி நிலையத்தின் கடிகாரமும் ஒவ்வொரு நேர வலயத்திலும் உள்ள செந்தர மதிய நேரத்துக்கு ஒருங்கிணைக்கப்பட்டன. இந்த நேர வலயங்கள் இடைக்குடியேற்ற வலயம், கிழக்கு வலயம், நடுவண் வலயம், மலை வலயம், பசிபிக் வலயம் எனப் பெயரிடப்பட்டன. ஓராண்டுக்குள் 10,000 மக்கள் அளவுக்கு மேல் வாழும் 85% நகரங்கள், அதாவது 200 நகரங்கள் செந்தர நேரத்தைப் பயன்படுத்தலாயின. விதிவிலக்காக, கிழக்கு, நடுவண் வலயங்களின் நெட்டாங்குகளுக்கு நடுவே இருந்த தெத்ராயித்து மட்டும் 1900 வரையில் கள நேரமுறையைப் பின்பற்றியது. பிறகு, இது நடுவண் செந்தர நேரத்தைப் பின்பற்றியது. 1915 ஆண்டுக்குள் கிழக்கு நேர வலய முறையைப் பின்பற்றலானது. அப்போது தான் கிழக்கு செந்தர நேரத்துக்கான சட்டமுன் ஆணை வழங்கப்பட்டு, அது 1916 ஆகத்தில் பெருவாரியான மக்கள் ஆதரவுவழி பின்னேற்பைப் பெற்றது. செந்தர நேரங்கள் சார்ந்த அனைத்துக் குழப்பங்களும், அமெரிக்கப் பேராயம் 1918 மார்ச்சு 19 இல் செந்தர நேரச் சட்டத்தை நிறைவேற்றியதும், முடிவுக்கு வந்தன.
இத்தாலியக் கணிதவியலாளராகிய குவிரிகோ பிலோபந்தி தான் முதன்முதலாக நெட்டாங்குகளைச் சார்ந்து 24 மணிநேரத்துக்கான நேர வலயங்களின் அமைப்பை 1858 இல் தனது மிராண்டா எனும் நூலில் வெளியிட்டார். என்றாலும் இவரது எண்ணக்கரு நூலைவிட்டு இவர் இறக்கும் வரையில் வெளியுலகம் அறிய முடியாமலே இருந்தது. எனவே இவரது முறை 19 ஆம் நூற்றாண்டில் பின்பற்றப்படவில்லை. இவரது நேர வலய நாட்கள் நெட்டாங்கு நாட்கள் எனப்பட்டன. முதலில் இவை உரோம் நகரை மையமாகக் கொண்டிருந்தன. வானியலிலும் தொலைவரைவியலிலும் பயன்படுத்துவற்கான பொது நேரத்தையும் இவர் முன்மொழிந்துள்ளார்.
|
This article uses material from the Wikipedia தமிழ் article நேர வலயம், which is released under the Creative Commons Attribution-ShareAlike 3.0 license ("CC BY-SA 3.0"); additional terms may apply (view authors). வேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 4.0 இல் கீழ் கிடைக்கும். Images, videos and audio are available under their respective licenses.
®Wikipedia is a registered trademark of the Wiki Foundation, Inc. Wiki தமிழ் (DUHOCTRUNGQUOC.VN) is an independent company and has no affiliation with Wiki Foundation.