உ (ⓘ) தமிழ் மொழியின் எழுத்துகளில் ஒன்று.
இது தமிழ் நெடுங்கணக்கில் ஐந்தாவது எழுத்து. இது மொழியின் ஓர் ஒலியையும் அவ்வொலியைக் குறிக்கும் வரிவடிவத்தையும் குறிக்கும். இவ்வெழுத்தை "உகாரம்" என்பர். எனினும் பொதுப் பேச்சு வழக்கிலும் பிள்ளைகளுக்கு எழுத்துக் கற்பிக்கும்போதும் இவ்வெழுத்தை "ஊனா" என வழங்குவர்.
தமிழ் எழுத்துக்கள் | |||||
---|---|---|---|---|---|
அ | ஆ | இ | ஈ | உ | |
ஊ | எ | ஏ | ஐ | ஒ | |
ஓ | ஔ | ஃ | |||
க் | ங் | ச் | ஞ் | ட் | |
ண் | த் | ந் | ப் | ம் | |
ய் | ர் | ல் | வ் | ழ் | |
ள் | ற் | ன் | |||
தமிழ் எழுத்துகளின் உள்ள உயிரெழுத்து, மெய்யெழுத்து என்னும் இரண்டு வகைகளில் உ உயிரெழுத்து வகையைச் சேர்ந்தது. ஒலிக்கும் கால அளவின் அடிப்படையில் இது குற்றெழுத்து எனப்படுகின்றது. குற்றெழுத்துகள் ஒரு மாத்திரை அளவே ஒலிக்கும் தன்மை வாய்ந்தன. இதனால் இவ்வெழுத்தும் ஒரு மாத்திரை அளவுடனேயே ஒலிக்கும்
தமிழில் உள்ள சுட்டெழுத்துகள் மூன்றில் இதுவும் ஒன்று. இது சேய்மைக்கும் அண்மைக்கும் இடைப்பட்டவற்றைக் குறிக்கப் பயன்படுகின்றது. எடுத்துக்காட்டாக உவன், உது, உங்கே போன்ற சேய்மைச் சுட்டுச் சொற்களில் உ முதல் எழுத்தாக நிற்பதைக் காணலாம். இந்த எடுத்துக்காட்டுகளில் உ சொல்லின் உள்ளேயே வருவதால் அஃது அகச்சுட்டு எனப்படுகின்றது. உ புறச்சுட்டாகவும் வருவதுண்டு. அவ்வாறு வரும்போது அது சொல்லுக்குப் புறம்பாக நிற்கும். உவ்விடம் (உ + இடம்) போன்ற சொற்கள் இதற்கு எடுத்துக்காட்டுகள்.
எழுத்து ஒலியின் பிறப்பிடம் (இடம்), முயற்சி என்பவற்றின் அடிப்படையில் உயிரெழுத்துகளை இனங்களாகப் பிரிப்பதுண்டு. அது போலவே பொருள், வடிவு என்பவற்றாலும் இனங்கள் பிரிக்கப்படுகின்றன.
தனி உ சொற்களில் முதல் எழுத்தாக வரும். க், ச், த், ந், ப், ம் ஆகிய மெய்யெழுத்துகளுடன் சேர்ந்தும் உ சொற்களுக்கு முதலாக வரும் என்கின்றன தொல்காப்பியம், நன்னூல் ஆகிய நூல்கள். இதிலிருந்து ஙு, ஞு, டு, ணு, ரு, லு, வு, ழு, ளு று, ஆகிய எழுத்துகள் சொற்களுக்கு முதலாக வரா என்பது தெளிவு. எனினும் தற்காலத்தில், பிற மொழிச் சொற்களை எழுதுவோர் சிலர் டு, ரு, லு போன்ற எழுத்துகளும் சொல் முதலாக வரும்படி எழுதுகிறார்கள். டுவிட்டர், ருக்குமணி, லுக்மன் போன்ற சொற்களை இவற்றுக்கு எடுத்துக்காட்டாகக் கொள்ளலாம். உகரம் தனித்தும் மெய்களுடன் சேர்ந்தும் சொற்களுக்கு இறுதியில் வரும்.
உ உடன் மெய்யெழுத்துகள் சேர்ந்து உகர உயிர் மெய்யெழுத்துகள் உருவாகின்றன. மெய்யெழுத்துகள் முதலெழுத்துகளாக இருப்பினும் வரிவடிவங்களில் எழுதும்போது மூல வரிவடிவங்கள் அகரத்தோடு கூடிய மெய்யெழுத்துகளையே குறிக்கின்றன. உகர உயிர்மெய்களைக் குறிப்பிடுவதற்கு அகரமேறிய மெய்கள் மூன்று வகையாகத் திரிபு அடைகின்றன. சில எழுத்துகளுக்குக் கீழ் நிலைக்குத்தான சிறு கோடு(இறங்கு கீற்று) ஒன்று இடப்படுகிறது. பு, சு, பு, யு, வு என்னும் எழுத்துகள் இவ்வகையின. எழுத்தின் கீழ்ப்பகுதியைச் சுற்றி வளைவாகக் கோடு(கீழ் விலங்கு) வரைவது இன்னொரு வகை. கு, டு, மு, ரு, ழு, ளு என்பன இவ்விரண்டாம் வகையைச் சேர்ந்தவை. மேலும் ஞு, ணு, து, நு, லு, று, னு ஆகியவை மடங்கு ஏறு கீற்று பெற்றவை மூன்றாவது வகையைச் சேர்ந்த எழுத்துகள் ஆகும்.
18 மெய்யெழுத்துகளோடும் உகரம் சேரும்போது உருவாகும் உயிர்மெய் எழுத்துகளையும் அவற்றின் பெயர்களையும் கீழேயுள்ள அட்டவணை காட்டுகின்றது.
மெய்யெழுத்துகள் | சேர்க்கை | உயிர்மெய்கள் | ||
---|---|---|---|---|
வரிவடிவம் | பெயர் | வரிவடிவம் | பெயர் | |
க் | இக்கன்னா | க் + உ | கு | கூனா |
ங் | இங்ஙன்னா | ங் + உ | ஙு | ஙூனா |
ச் | இச்சன்னா | ச் + உ | சு | சூனா |
ஞ் | இஞ்ஞன்னா | ஞ் + உ | ஞு | ஞூனா |
ட் | இட்டன்னா | ட் + உ | டு | டூனா |
ண் | இண்ணன்னா | ண் + உ | ணு | ணூனா |
த் | இத்தன்னா | த் + உ | து | தூனா |
ந் | இந்தன்னா | ந் + உ | நு | நூனா |
ப் | இப்பன்னா | ப் + உ | பு | பூனா |
ம் | இம்மன்னா | ம் + உ | மு | மூனா |
ய் | இய்யன்னா | ய் + உ | யு | யூனா |
ர் | இர்ரன்னா | ர் + உ | ரு | ரூனா |
ல் | இல்லன்னா | ல் + உ | லு | லூனா |
வ் | இவ்வன்னா | வ் + உ | வு | வூனா |
ழ் | இழ்ழன்னா | ழ் + உ | ழு | ழூனா |
ள் | இள்ளன்னா | ள் + உ | ளு | ளூனா |
ற் | இற்றன்னா | ற் + உ | று | றூனா |
ன் | இன்னன்னா | ன் + உ | னு | னூனா |
தமிழில் உகர ஒலியைக் குறிக்கும் வரிவடிவம் இப்போது இருப்பது போலவே எப்போதும் இருந்தது என்பதில்லை. ஏறத்தாழ கி.மு. மூன்றாம் நூற்றாண்டில் இருந்து பல்வேறு காலகட்டங்களிலும் தமிழில் உகரத்தைக் குறிக்கப் பயன்பட்ட வரிவடிவங்களில் ஏற்பட்ட மாற்றம் பற்றிய தகவல்கள் அவ்வக்காலத்துக் கல்வெட்டுகள் மூலம் தெரியவந்துள்ளன. சில காலங்களில் வெவ்வேறு இடங்களில் வெவ்வேறு வரிவடிவங்கள் பயன்பட்டதற்கான சான்றுகளும் உண்டு. கி.மு. மூன்றாம் நூற்றாண்டுக்குப் பின்னர்த் தமிழை எழுதுவதற்கு தமிழ்ப் பிராமி, வட்டெழுத்து, தமிழ் எழுத்து ஆகிய எழுத்துகள் பயன்பட்டுள்ளன.
உகரம் பல்வேறு மொழிகளிலும் பொதுவாக உள்ள ஓர் ஒலி. தென்னிந்திய மொழிகளிலும் சில அயல் மொழிகளிலும் உகரத்தின் வரிவடிவம் எவ்வாறு உள்ளது என்பதைக் கீழுள்ள படம் காட்டுகிறது. பிராமி இந்திய மொழிகள் பலவற்றின் எழுத்து முறைகளுக்கு அடிப்படை என்னும் கருத்து உள்ளதாலும், பல தென்னிந்திய மொழிகளினதும், சிங்களம் முதலிய அயல்நாட்டு மொழிகளினதும் வரிவடிவங்கள் கிரந்தத்தை அடிப்படையாகக் கொண்டவையாகவும் இருப்பதால் பிராமி, கிரந்தம் ஆகியவற்றின் உகரத்துக்கான வரிவடிவங்கள் ஒப்பீட்டுக்காகத் தரப்பட்டுள்ளன.
கண்பார்வையற்றோர் படிப்பதற்கு உதவும் பிரெய்லி முறைப்படி தமிழ் எழுத்துகளை எழுதுவதற்கும் முறைகள் வகுக்கப்பட்டுள்ளன. இந்திய மொழிகளுக்கென உருவாக்கப்பட்டுள்ள "பாரதி பிரெய்லி" தமிழ் எழுத்துகளையும் உள்ளடக்கியுள்ளது. ஆறுபுள்ளி முறையைப் பின்பற்றி அமைக்கப்பட்டுள்ள இம்முறையில் ஓர் எழுத்துக்கான இடம் ஒரு வரிசையில் இரண்டிரண்டாக மூன்று வரிசையில் ஆறு புள்ளிக்கான இடங்கள் உள்ளன. இதில் முதல் வரிசையில் இடப்பக்கப் புள்ளியும் மூன்றாவது வரிசையில் வலப்பக்கப் புள்ளியும் இடப்பக்கப் புள்ளியும் புடைத்து இருப்பின் அஃது உ வைக் குறிக்கும். இதை அருகில் உள்ள படம் காட்டுகிறது.
This article uses material from the Wikipedia தமிழ் article உ, which is released under the Creative Commons Attribution-ShareAlike 3.0 license ("CC BY-SA 3.0"); additional terms may apply (view authors). வேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 4.0 இல் கீழ் கிடைக்கும். Images, videos and audio are available under their respective licenses.
®Wikipedia is a registered trademark of the Wiki Foundation, Inc. Wiki தமிழ் (DUHOCTRUNGQUOC.VN) is an independent company and has no affiliation with Wiki Foundation.