புதுச்சேரி (பிரெஞ்சு: Pondichéry, ஆங்கிலம்: Puducherry) அல்லது பாண்டிச்சேரி எனவும் இந்த ஒன்றியப் பகுதி அழைக்கப்படுகின்றது.
சென்னை மாநகரில் இருந்து 170 கி.மீ. தொலைவில், இந்திய நடுவண் அரசின் ஒன்றியப் பகுதியாக வங்கக் கடலோரத்தில் அமைந்துள்ளது. முன்பு இந்த நகரம் பிரெஞ்சு நாட்டின் ஒரு பகுதியாக இருந்தது. புதுச்சேரி, ஏறக்குறைய இருநூறு ஆண்டுகளுக்கு மேல் பிரெஞ்சுக்காரர்களின் ஆதிக்கத்தில் இருந்தது. இதனை சுருக்கமாக புதுவை என்றும் பாண்டி என்றும் அழைக்கப்படுகின்றது. வரலாற்று ரீதியாக பாண்டிச்சேரி (Pāṇṭiccēri) என்று அழைக்கப்பட்டு வந்த இப்பிரதேசம், அதன் அதிகாரப்பூர்வ பெயராக, 20 செப்டம்பர் 2006 அன்று புதுச்சேரி என மாற்றப்பட்டது.
புதுச்சேரி | |
---|---|
ஒன்றியப் பகுதி | |
மேலிருந்து கடிகார சுழல் திசையில்: புரோமேனடே கடற்கரை, மாத்ரிமந்திர், புதுச்சேரி துறைமுகம், புதுச்சேரி கடற்கரை | |
சின்னம் | |
பண்: தமிழ்த்தாய் வாழ்த்து | |
இந்திய வரைபடத்தில் உள்ள புதுச்சேரியின் இடம் (சிவப்பு நிறத்தில் குறிக்கப்பட்டுள்ளது) | |
ஆள்கூறுகள்: 11°54′40″N 79°48′45″E / 11.911082°N 79.812533°E | |
நாடு | இந்தியா |
பகுதி | தென்னிந்தியா |
தலைநகரம் மற்றும் மிகப்பெரிய நகரம் | பாண்டிச்சேரி |
மாவட்டம் | |
அரசு | |
• நிர்வாகம் | புதுச்சேரி அரசு |
• துணைநிலை ஆளுநர் | தமிழிசை சௌந்தரராஜன் (கூடுதல் பொறுப்பு) |
• முதலமைச்சர் | ந. ரங்கசாமி |
• தலைமைச் செயலாளர் | அஸ்வானி குமார், இ.ஆ.ப. |
• காவல்துறையின் தலைமை இயக்குனர் | பாலாஜி ஸ்ரீவஸ்தவா, இ.கா.ப |
• சட்டமன்றப் பேரவை | ஓரவை முறைமை (33*) |
பரப்பளவு | |
• மொத்தம் | 483 km2 (186 sq mi) |
பரப்பளவு தரவரிசை | 33-ஆவது |
மக்கள்தொகை (2011) | |
• மொத்தம் | 13,94,467 |
• தரவரிசை | 29-ஆவது |
• அடர்த்தி | 2,900/km2 (7,500/sq mi) |
இனங்கள் | புதுச்சேரியர் |
மொழிகள் | |
• அலுவல் மொழி | தமிழ், ஆங்கிலம் |
• கூடுதல் அலுவல்மொழி | மலையாளம் (மாகேவில்), தெலுங்கு (யானமில்), பிரெஞ்சு |
நேர வலயம் | இ.சீ.நே. (ஒசநே+05:30) |
அஞ்சல் குறியீடு | 605 014 |
ஐ.எஸ்.ஓ 3166 குறியீடு | IN-PY |
வாகனப் பதிவு | PY 01, PY 02, PY 03, PY 04, PY 05 |
HDI (2018) | 0.738 (High) •7-ஆவது |
இணையதளம் | www |
சின்னங்கள் | |
சின்னம் | புதுச்சேரி அரசு சின்னம் |
விலங்கு | இந்திய அணில் |
பறவை | குயில் |
மலர் | நாகலிங்கம் மலர் |
மரம் | வில்வம் |
^* 30 தேர்ந்தெடுக்கப்பட்டார், 3 பரிந்துரைக்கப்பட்டார் |
அதனால் இங்குள்ள அடித்தட்டு மக்களும் பிரெஞ்சுச் சொற்களை, மிகச் சாதாரணமாகப் பயன்படுத்துகின்றனர். ஆந்திர மாநிலத்தின், காக்கி நாடாவுக்கு அருகாமையில் உள்ள யானம் நகரும், தமிழகத்தின், நாகப்பட்டினத்தின் அருகாமையில் உள்ள காரைக்கால் நகரும், கேரள மாநிலத்தின் கோழிக்கோட்டுக்கு அருகில் உள்ள மாஹே நகரும், இந்த மாநிலத்தின் ஆட்சிப் பகுதிகளாக விளங்குகின்றன.
ஆகையால், ஆங்கிலம், பிரெஞ்சு, தமிழ் மொழிகளுடன், தெலுங்கு, மலையாளம் மொழி பேசும் மக்களும் சிறுபான்மையினராக இங்கு வாழ்ந்து வருகின்றனர்.
புதுச்சேரியின் மிகத் தொன்மையான வரலாறு இரண்டாம் நூற்றாண்டில் தொடங்குகிறது. இரண்டாம் நூற்றாண்டின் செங்கடல் செலவு, பொடுகெ எனப்படும் சந்தை இடத்தைக் குறிக்கிறது. இந்த இடம் நவீன புதுச்சேரியிலிருந்து 2 கி.மீ. தொலைவிலுள்ள அரிக்கமேடு (தற்போது அரியாங்குப்பத்தின் பகுதி) என ஜி.டபுள்யூ.பி. ஹன்டிங்போர்டு என்பவர் அடையாளம் காண்கிறார்.
இதே வரலாற்று ஆசிரியர் 1937-ஆம் ஆண்டில் அரிக்கமேட்டில் உரோமானிய மண்பாண்டங்கள் கண்டறியப்பட்டதாகக் கூறுகின்றார். 1944-இலிருந்து 1949 வரை அந்த இடத்தில் தொல்லியல் அகழ்வாய்வுகள் நடத்தப்பட்டன. அந்த வகையில் கி.பி. முதலாம் நூற்றாண்டின் பிற்பகுதியில், அந்த இடத்தில் உரோமானியப் பொருட்கள் இறக்குமதி செய்யப்பட்டு வணிக மையமாக விளங்கியதைச் சுட்டுவதாகக் குறிப்பிடுகின்றார். கி.பி. 14-ஆம் நூற்றாண்டு முதல் பாண்டிச்சேரி விஜயநகரப் பேரரசின் ஆட்சியின் கீழ் வந்தது.மன்னர் கிருஷ்ணதேவராயர் ஆட்சி காலத்தில் பல்வேறு கோவில்கள் கட்டப்பட்டன... பிஜப்பூர் சுல்தான் ஆட்சியில் வெளியிடப்பட்ட ஆவணத்தின்படி, பிரெஞ்சு நாட்டினரால் 1693-இல் துவக்கப்பட்ட “பிரெஞ்சுக் கிழக்கிந்தியக் கம்பெனி” மூலம் புதுச்சேரி நகரத்தின் அடித்தளம் அமைக்கப்பட்டுள்ளது. பிப்ரவரி 04, 1673-இல் பிரெஞ்சு கம்பெனி பிரான்சுவா மார்ட்டின் என்பவரை முதல் ஆளுநராக நியமித்தது. அவரே சிறு மீனவ கிராமமாக இருந்த புதுச்சேரியை, பெரிய துறைமுக நகரமாக உருவெடுக்கும் திட்டத்தை துவக்கினார்.
1674-இல் பிரெஞ்சுக் கிழக்கிந்தியக் கம்பனி ஆளுநர் பிரான்சுவா மார்ட்டின் புதுச்சேரில் வர்த்தக மையத்தை அமைத்தார். அதுவே, இந்திய நாட்டின் தலைமை பிரஞ்சு பகுதியாக பின்னாளில் அமைந்தது. அக்காலகட்டத்தில் இந்தியாவுடனான வர்த்தக பங்களிப்பு தொடர்பாக ஐரோப்பா நாடுகளுடையே போர் மூண்டது. ஆதலால் புதுச்சேரி 1693-ஆம் ஆண்டு டச்சு நாட்டினரால் பிடிக்கப்பட்டது. பின்னர் 1699-ஆம் ஆண்டு “டிர்ட்டி ஆப் ரிஸ்விக்” ஒப்பந்தத்தின்படி பிரஞ்சு கம்பெனியிடம் மீண்டும் ஒப்படைக்கப்பட்டது. 1720-1738-ஆம் காலகட்டத்தில் பிரஞ்சு கம்பெனி மாகே, ஏனாம் மற்றும் காரைக்கால் பகுதிகளை தன்னுடையதாக்கியது. 1742-1763-இல் ஏற்பட்ட ஆங்கிலோ – பிரெஞ்சு போரின் போது ஆங்கிலேய கிழக்கு இந்திய கம்பெனிக்கு கைமாறிய புதுச்சேரி, பின்னர் 1763-ஆம் ஆண்டில் ஏற்பட்ட பாரிஸ் ஒப்பந்தத்தின்படி மீண்டும் பிரஞ்சு கம்பெனி நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்பட்டது.
1793–இல் ஏற்பட்ட பிரஞ்சு புரட்சியின் பிறகு ஆங்கிலேய கிழக்கு இந்திய கம்பெனிக்கு மாறிய புதுச்சேரி பின்னர் 1814-ஆம் ஆண்டு பிரஞ்சு கிழக்கு இந்திய கம்பெனி நிர்வாகத்திடம் திரும்ப ஒப்படைக்கப்பட்டது. ஆனால், இந்தியாவின் பிறபகுதிகளில் ஆங்கிலேய கிழக்கு இந்திய கம்பெனின் ஆதிக்கம் அதிகமானாலும் புதுச்சேரி, காரைக்கால், மாகே, ஏனாம் மற்றும் சந்தர்நகோர் ஆகிய பகுதிகள் மட்டும் பிரஞ்சு கிழக்கு இந்திய கம்பெனி நிர்வாகத்தின் கீழ் செயல்பட அனுமதித்தனர்.
1947-ஆம் ஆண்டு சுதந்திர இந்தியா உத்வேகத்துடன் இந்தியா அரசும் மற்றும் பிரஞ்சு அரசும் சேர்ந்து 1948-ஆம் ஆண்டு ஒரு உடன்படிக்கை செய்துகொண்டனர். அதில் குறிப்பிட்ட காலத்திற்கு பிறகு இப்பகுதிகளில் வசிக்கும் மக்கள் தங்களது அரசியல் எதிர்காலத்தை தாங்கலே தேர்ந்து எடுக்க அனுமதி வழங்கப்பட்டது. 1954-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் ஒன்றாம் தேதி உடன்படிக்கையின்படி புதுச்சேரி, காரைக்கால், மாகே, ஏனாம் மற்றும் சந்தர்நகோர் ஆகிய பகுதிகள் இந்தியாவின் ஒருங்கிணைத்த பகுதிகளாக மாறியது. இது 1963-ஆம் ஆண்டு நடைமுறைப்படுத்தப்பட்டது. இதில் சந்தர்நகோர் பகுதி மேற்கு வங்க மாநிலத்தில் இணைக்கப்பட்டது. புதுச்சேரி, காரைக்கால், மஹே மற்றும் ஏனாம் பகுதிகள் ஒருங்கிணைந்து நடுவண் அரசின் ஒன்றிய பகுதியாக புதுச்சேரி யூனியன் பிரதேசமாக மாறியது.
புதுச்சேரி ஒன்றியப் பகுதி ஒன்றுடன் ஒன்று இணைக்கப்படாத நான்கு மாவட்டங்களைக் கொண்டுள்ளது. வங்காள விரிகுடாவை ஒட்டி புதுச்சேரி, காரைக்கால், ஏனாம் மாவட்டங்கள் உள்ளன. அரபிக் கடலைச் சார்ந்து மாஹே மாவட்டம் உள்ளன. பரப்பளவு, மக்கள்தொகை வகையில் புதுச்சேரியும் காரைக்காலும் பெரிய மாவட்டங்கள். இவை தமிழ்நாட்டின் பகுதிகளால் சூழப்பட்டுள்ளவை. காரைக்கால், மாஹே, ஏனாம் மாவட்டங்கள் ஆகியவை பொருளாதார பின்தங்கிய நிலை. புதுச்சேரி மட்டுமே பொருளாதாரத்தில் உயர்ந்த மாவட்டம்.
ஏனாம் நிலப்பகுதி, ஆந்திரப் பிரதேச மக்களின் அயலக வளாகமாகவும், மாஹே கேரள மக்களின் அயலக வளாகமாகவும் விளங்குகின்றன. புதுச்சேரி ஒன்றியப் பகுதியின் மொத்த பரப்பளவு 492 ச.கி. மீ ஆகும். பாண்டிச்சேரியின் பரப்பளவு 293 ச.கி.மீ; காரைக்காலின் பரப்பளவு 160 ச.கி.மீ; மாஹேயின் பரப்பளவு 9 ச.கி.மீ; ஏனாம் பரப்பளவு 30 ச.கி.மீ. ஆகும். 2011ஆம் ஆண்டு கணக்கெடுப்புப்படி மொத்த மக்கள்தொகை 13,94,467 ஆகும். 68.31% மக்கள் நகர்ப்புறங்களில் வசிக்கின்றனர் இது இந்திய அளவில் 5-ஆவது இடமாகும்.
இந்த வளாகங்கள் ஒன்றுகொன்று தொடர்புகள் இல்லாமல் தனித் தனிப் பகுதிகளாக உள்ளன. புதுச்சேரி மாவட்டத்தில் மட்டும் இத்தகைய 11 தனித் தொகுதிகள் உள்ளன. இவை முற்றிலும் தமிழ்நாட்டு நிலப்பகுதிகளால் சூழப்பட்ட மிகச்சிறியதான நிலப்பரப்புகள் ஆகும்.
மாகேயில் இத்தகைய மூன்று நிலப்பரப்புகளில் முற்றிலும் கேரள மாநிலத்தவர் குடி அமர்ந்துள்ளனர். குடிமைப்பட்ட காலத்தில் புதுச்சேரி ஒன்றியப் பகுதி பிரெஞ்சு இந்தியாவின் எல்லைகளைத் தக்க வைத்துக் கொள்வதற்காக, இந்த வழக்கத்திற்கு மாறான புவியியல் அமைப்பு தோற்றுவிக்கப்பட்டது.
புதுச்சேரியின் நான்கு மாவட்டங்களுமே கடலோரத்தில் அமைந்துள்ளன. எனவே சில ஆறுகள் புதுச்சேரியில் கடலில் கலந்தாலும் அனைத்துமே புதுச்சேரியில் தொடங்குபவை அல்ல. புதுச்சேரி மாவட்டத்தில் ஐந்து ஆறுகளும், காரைக்காலில் ஏழு ஆறுகளும், மாஹேயில் இரண்டும், ஏனாமில் ஒன்றும் கடலில் கலக்கின்றன.
புதுச்சேரி ஒன்றியப் பகுதி நகரங்கள் பிரெஞ்சுக்காரர்களால் வடிவமைக்கப்பட்டதால் சாலைகள் பெரும்பாலும் நேர்கோட்டில் அமைந்தவை என்பது ஒரு சிறப்பு அம்சமாகும். அது குறித்து ஒரு சொலவடை உள்ளது. ‘நீதி அழகு இல்லையென்றாலும் வீதி அழகு உண்டு’ என்பதாகும். புதுச்சேரி, காரைக்கால், மற்றும் ஏனாமின் கிழக்குப் பகுதிகளில் வங்காள விரிகுடாக் கடற்கரை உள்ளது. மாஹேயின் மேற்குப் பகுதியில் அரபிக் கடலின் கடற்கரை உள்ளது.
ஏனாம் கோதாவரியின் கழிமுகத்திலும், காரைக்கால் காவிரியின் கழிமுகத்திலும் அமைந்துள்ளன. சிறிய மாநிலமான புதுச்சேரியில் ஒன்பது மருத்துவக் கல்லூரிகளும், பதினைந்து பொறியியல் கல்லூரிகளும், பல கலை, அறிவியல், தொழில்நுட்பக் கல்லூரிகளும் அமைந்துள்ளன. இது ஒரு கல்வி மையம் என்றும் அழைக்கப்படுகிறது.
மேலும் புதுவையில் உள்ள அரசுப் பள்ளிகளில் (சி.பி.எஸ்.சி) பாடத்திட்டம் பின்பற்றப்படுகிறது.
புதுச்சேரியின் நகரமைப்பு பிரான்சிய வலைமுறை வடிவமைப்பும் செக்டர்களையும் ஒன்றையொன்றை வெட்டும் சாலைகளையும் கொண்டுள்ளது. நகரம் இரண்டு பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளது: பிரெஞ்சுப் பகுதி (வில்ல் பிளாஞ்ச்சே அல்லது 'வெள்ளையர் நகர்') மற்றும் இந்தியப் பகுதி (வில்ல் நோய்ர் அல்லது 'கறுப்பர் நகர்'.) பல சாலைகள் இன்றும் தங்கள் பிரெஞ்சுப் பெயர்களை தக்க வைத்துக்கொண்டுள்ளன; பிரெஞ்சு பாணியிலான மாளிகைகளையும் காணலாம்.
பிரெஞ்சுப் பகுதியில் குடிமைப்பட்ட கால பாணியில் உயரமான சுவர்களுடனும் நீண்ட சுற்றுச்சுவர்களுடனும் உள்ள கட்டிடங்களைக் காணலாம். இந்தியப் பகுதியில் வீடுகள் தாழ்வாரங்களுடன் பெரிய கதவுகளுடன் காணப்படுகின்றன. இந்த பிரெஞ்சு மற்றும் இந்திய பாணி வீடுகள் அடையாளப்படுத்தப்பட்டு அந்த வடிவமைப்புகள் அழிவிலிருந்து பாதுகாக்கப்படுகின்றன. பிரெஞ்சு மொழிச் சொற்கள் பேச்சுவழக்கில் ஊடுருவியிருப்பதை இன்றும் காணலாம்.
புதுச்சேரியில் பல இந்தியர்களும் சிறுபான்மை இந்திய வம்சாவளியல்லாதவர்களும், இன்னமும் பிரெஞ்சுக் கடவுச்சீட்டு வைத்துள்ளனர். இவர்கள், 1954-இல் புதுச்சேரியை விட்டு விலகும்போது பிரான்சிய அரசு வழங்கிய விருப்பத் தேர்வின்படி பிரான்சிய குடிமக்களாக நீடிக்க விரும்பியவர்களின் சந்ததியினர் ஆவர்.
புதுச்சேரியின் அலுவல்முறை மொழிகளாக தமிழ் (89%), மலையாளம் (4.8%), தெலுங்கு (2.9% ஏனாம்) மற்றும் பிரெஞ்சு (1%). ஒவ்வொரு மாவட்டத்திலும் இந்த மொழிகளின் நிலை மாறுபடுகிறது. வெவ்வேறு மொழிகள் பேசும் மாவட்டங்களிடையே தொடர்பாடலுக்கு நடைமுறை வசதி கருதி பொதுவாக ஆங்கிலம் பயன்படுத்தப்படுகிறது.
மக்களின் சார்பாளர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் வேறுவிதமாக தீர்மானிக்காதவரை அனைத்து அமைப்புகளின் ஆட்சிமொழியாக பிரெஞ்சு மொழி நீடிக்கும்" [தமிழாக்கம்]
இந்தியாவில் உள்ள 7 ஒன்றியப் பகுதிகளில் (டெல்லி தவிர்த்து) சட்டமன்றமும், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசும் உள்ள ஒரே ஒன்றியப் பகுதி புதுச்சேரி மட்டும் தான்.
மாநிலத்தில் மொத்தம் 30 சட்டமன்றத் தொகுதிகள் உள்ளன. அவற்றுள் 23 தொகுதிகள் புதுவையிலும், 5 காரைக்காலிலும், ஏனாம் மற்றும் மாஹியில் தலா 1 தொகுதியும் உள்ளன.
மேலும், புதுவை 1 மக்களவை உறுப்பினரையும், 1 மாநிலங்களவை உறுப்பினரையும் கொண்டுள்ளது.
புதுச்சேரி சுதந்திரம் அடைந்தது முதல், அதிக காலம் காங்கிரஸ் கட்சி ஆட்சி புரிந்து வந்துள்ளது. இடையே திமுக, அதிமுக, ஆகியவை ஆட்சி புரிந்தாலும், காங்கிரஸ் கட்சியே பெரும்பாலும் ஆட்சி புரிந்துள்ளது. காங்கிரஸ் கட்சியில் இருந்து பிரிந்து வந்த என். ஆர். காங்கிரசு கட்சி தான், புதுவையில் 5 ஆண்டு காலம் முழுமையாக ஆட்சி புரிந்த ஒரே மாநில கட்சியாகும்.
மேலும் மூன்று முறை, சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடாத நபர்கள் மாநிலத்தின் முதலமைச்சராக காங்கிரஸ் கட்சியின் சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். முன்னாள் மக்களவை உறுப்பினர் ப.சண்முகம் இரண்டு முறையும், முன்னாள் மத்திய இணை அமைச்சர் வி. நாராயணசாமி ஒரு முறையும் முதலமைச்சராக பதவியேற்றுக்கொண்டார்கள்.
கடந்த 2000 ஆம் ஆண்டு, திமுக கூட்டணியில் இருந்து தமாகா விலகியதால், அப்போதைய திமுக முதல்வர் ஜானகிராமன் பதவி விலகினார். கண்ணன் தலைமையிலான த.மா.கா, காங்கிரசுடன் கைகோர்த்து ஆட்சியில் அமர்ந்தது. அதனைத் தொடர்ந்து காங்கிரஸ் சார்பில் சட்டமன்ற உறுப்பினராக இல்லாத ப.சண்முகம் முதல் முறையாக முதலமைச்சராக பதவியேற்றுக்கொண்டார்.
பின்னர் 2001-ஆம் ஆண்டு நடந்த சட்டமன்றப் பொதுத்தேர்தலில் வெற்றிபெற்ற காங்கிரஸ் சார்பில் சட்டமன்ற உறுப்பினராக இல்லாத ப. சண்முகம் இரண்டாம் முறையாக முதலமைச்சராக பதவியேற்றுக் கொண்டார். மேலும் காங்கிரஸ் உறுப்பினர்கள் யாரும் தங்களது பதவியை ராஜினமா செய்ய முன்வராததால், சட்டமன்ற உறுப்பினராக இல்லாத சண்முகம் பதவி விலக நேர்ந்தது.
அதனைத்தொடர்ந்து, 2021-ஆம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில், என்.ஆர். காங்கிரசு சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்ற ந. ரங்கசாமி முதலமைச்சராக பதவியேற்றுக் கொண்டார்.
ஆண்டு | ம.தொ. | ஆ. ±% |
---|---|---|
1901 | 2,46,354 | — |
1911 | 2,57,179 | +0.43% |
1921 | 2,44,156 | −0.52% |
1931 | 2,58,628 | +0.58% |
1941 | 2,85,011 | +0.98% |
1951 | 3,17,253 | +1.08% |
1961 | 3,69,079 | +1.52% |
1971 | 4,71,707 | +2.48% |
1981 | 6,04,471 | +2.51% |
1991 | 8,07,785 | +2.94% |
2001 | 9,74,345 | +1.89% |
2011 | 12,47,953 | +2.51% |
சான்றுகள்: |
2011 ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி பாண்டிச்சேரி மாநிலத்தின் மொத்த மக்கள் தொகை 1,247,953 ஆக உள்ளது. கிராமப்புறங்களில் 31.67% மக்களும், நகரப்புறங்களில் 68.33% மக்களும் வாழ்கின்றனர். கடந்த பத்தாண்டுகளில் (2001–2011) மக்கள் தொகை வளர்ச்சி விகிதம் 28.08% ஆக உயர்ந்துள்ளது. மக்கள் தொகையில் 612,511 ஆண்களும் மற்றும் 635,442 பெண்களும் உள்ளனர். பாலின விகிதம் ஆயிரம் ஆண்களுக்கு 1037 பெண்கள் வீதம் உள்ளனர். 490 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட இம்மாநிலத்தில் மக்கள் தொகை அடர்த்தி ஒரு சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் 2,547 மக்கள் வாழ்கின்றனர். இம்மாநிலத்தின் சராசரி படிப்பறிவு 85.85 % ஆகவும், ஆண்களின் படிப்பறிவு 91.26 % ஆகவும், பெண்களின் படிப்பறிவு 80.67 % ஆகவும் உள்ளது. ஆறு வயதிற்குட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 132,858 ஆக உள்ளது.
2011 ஆம் ஆண்டு மதவாரியான கணக்கெடுப்பின்படி, புதுச்சேரியில் இந்து மதம் பிரதான மதமாகும், இதில் 87.3% மக்கள் இதைக் கடைப்பிடிக்கின்றனர். பிற மதங்களில் கிறிஸ்தவம் (6.2%) மற்றும் இசுலாம் (6%) ஆகியவை அடங்கும்.
இந்துக்களிடையே வன்னியர்கள்பெரும்பான்மையாகவும், அதற்கு அடுத்தப் படியாக பறையர்கள், முதலியார்கள், ரெட்டியார்கள் எண்ணிக்கையில் ஆதிக்கம் செலுத்தும் குழுக்கள் ஆவர்.
இம்மாநிலத்தில் இந்து சமயத்தவரின் மக்கள் தொகை 1,089,409 (87.30 %) ஆகவும் இசுலாமிய சமய மக்கள் தொகை 75,556 (6.05 %) ஆகவும், கிறித்தவ சமயத்தினரின் மக்கள் தொகை 78,550 (6.29 %) ஆகவும், சமண சமய மக்கள் தொகை 1,400 (0.11 %) ஆகவும், பௌத்த சமய மக்கள் தொகை 451 (0.04 %) ஆகவும் சீக்கிய சமய மக்கள் தொகை 297 (0.02 %) ஆகவும் , பிற சமயத்து மக்கள் தொகை 168 (0.01 %) ஆகவும் மற்றும் சமயம் குறிப்பிடாதவர்கள் மக்கள் தொகை 2,122 (0.17 %) ஆகவும் உள்ளது.
பல சமயத்தினருக்கும் பொதுவான பன்னாட்டு நகரியமும் ஆய்வுமையமுமான ஆரோவில் இங்கு அமைக்கப்பட்டுள்ளது. உரோமைய ரோலாண்டு பொது நூலகம் பல அரிய பிரெஞ்சு சமய நூல்களைக் கொண்டுள்ளது.
புதுச்சேரியினதும் காரைக்காலினதும் பூர்வீகக் குடிமக்களில் பலரும் இந்தியா, பிரான்ஸ் ஆகிய நாடுகளின் குடியுரிமை பெற்று இரட்டைக் குடியுரிமை பெற்றவர்களாக உள்ளார்கள்[சான்று தேவை].
இந்து சமயத்துறவியான சிறீ அரபிந்தோவின் அரவிந்தர் ஆசிரமம் இங்குள்ளது. வெள்ளையர் பகுதியில் உள்ள மணக்குள விநாயகர் கோவில் மிகவும் புகழ்பெற்றத் தலமாகும். புதுச்சேரியை சித்தர்களின் பூமி என்று அழைக்கின்றனர். இங்கு முப்பதுக்கும் மேற்பட்ட சித்தர்களின் ஜீவசமாதிகள் அமைந்துள்ளன. புதுச்சேரியைப் பற்றிய தனிப்பாடல் ஒன்றில் சித்தர் வாழ் புதுவை என்று போற்றப்பட்டுள்ளது. கண்டமங்கலம் குருசாமி அம்மையார் கோயில் போன்ற சித்தர் கோயில்களும் உள்ளன.
நவக்கிரகங்களில் ஒருவரும், மிகவும் சக்தி வாய்ந்தவராக கருதப்படுபவருமான சனீஸ்வரன் சுயம்புவாக அமைந்த திருநள்ளாறு தர்ப்பாரண்யேசுவரர் கோயிலும், தேவாரம் பாடல் பெற்ற திருவேட்டக்குடி சுந்தரேசுவரர் கோயில், திருத்தெளிச்சேரி பார்வதீசுவரர் கோயில், தருமபுரம் யாழ்மூரிநாதர் கோயில் மற்றும் திருவாண்டார்கோயில் பஞ்சநதீசுவரர் கோயில் ஆகிய சிவதலங்கள் அமைந்துள்ளன. பக்தி இயக்கத்தின் முன்னோடியான காரைக்கால் அம்மையார் கோயிலும் இந்த மாவட்டத்தில் அமைந்துள்ளது.
முன்னாள்களில் பாண்டிச்சேரி என்று அழைக்கப்பட்ட புதுச்சேரி 1674 வரை ஒரு சிறு கிராமமாக இருந்தது. போர்த்துகீசியர்கள் அங்குக் குடியேற்றம் அமைத்து அதை ஒரு நகரமாக வளர்த்தெடுத்தார்கள். கிறித்தவ சமயத்தைப் பரப்பும் நோக்கத்துடன் சென்னையிலிருந்து வந்த கப்புச்சின் சபைத் துறவிகள் முதலில் அங்கு செயல்பட்டார்கள். பின்னர் 1689-இலிருந்து இயேசு சபையினர் அங்கு மறை பரப்பினர். 1773-இல் பாரிசு அயல்நாட்டு மறைபரப்பு சபை சமயத் தொண்டு ஆற்றியது. அவ்வமயம் புதுச்சேரியில் சுமார் 30,000 கத்தோலிக்கர் இருந்தனர். ஆயினும் வெளியிலிருந்து மறைபரப்புநர் வருவது குறைந்ததாலும், போர்த்துகீசிய மறைபரப்புநர் தெரிவித்த எதிர்ப்பு காரணமாகவும் புதுச்சேரி மறைத்தளம் நலியலாயிற்று.
1845-இல் "பாண்டிச்சேரி மறையாட்சித் தளம்" (vicariate) நிறுவப்பட்டது. 1887-இல் அது ஒரு உயர்மறைமாவட்டமாக எழுப்பப்பட்டது. இன்று புதுச்சேரியில் வாழ்கின்ற கிறித்தவர்களுள் மிகப் பெரும்பான்மையோர் கத்தோலிக்கர் ஆவர். கிறித்தவர்கள் மொத்த மக்கள் தொகையில் சுமார் 7% ஆவர். தமிழகத்திலிருந்து முதன்முறையாக கர்தினால் பதவிக்கு உயர்த்தப்பட்ட கர்தினால் துரைசாமி சைமன் லூர்துசாமி புதுவை உயர்மறைமாவட்டத்தைச் சேர்ந்தவர்.
புதுவையில் சாலைப் போக்குவரத்து பெரும்பாலும் தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகத்தின் மூலமும், புதுச்சேரி சாலைப் போக்குவரத்துக் கழகத்தின் மூலமும் பூர்த்தி செய்யப்படுகிறது.
புதுச்சேரி சாலைப் போக்குவரத்துக் கழகத்தின் கீழ் நூற்றுக்கும் மேற்பட்ட பேருந்துகள் உள்ளன. இது புதுவையிலிருந்து சென்னை, பெங்களூர், திருப்பதி, நாகப்பட்டினம், காரைக்கால், நாகர்கோயில், மாகி, நெய்வேலி, கடலூர், விழுப்புரம், திண்டிவனம், திருவண்ணாமலை, வேலூர் ஆகிய நகரங்களுக்கு நேரடி பேருந்து சேவையை வழங்குகின்றது.
மேலும் காரைக்காலில் இருந்த கும்பகோணம், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், வேளாங்கண்ணி, திருவாரூர், திருச்சி ஆகிய நகரங்களுக்கு பேருந்துகள் இயக்கப்படுகின்றது.
மேலும் தமிழ்நாடு அரசு விரைவு போக்குவரத்துக் கழகத்தின் மூலம் சென்னை, கோயம்புத்தூர், மதுரை, ஊட்டி, பெங்களூர், வேளாங்கண்ணி, திருநெல்வேலி, நாகர்கோவில், திருவனந்தபுரம், திருச்செந்தூர், செங்கோட்டை ஆகிய ஊர்களுக்கு விரைவுப்பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகத்தின் விழுப்புரம் கோட்டம், புதுவையிலிருந்து வேலூர், திருவண்ணாமலை, ஆரணி, காஞ்சிபுரம், சேலம், திருத்தணி, ஓசூர், சென்னை, வந்தவாசி, காரைக்கால், வேளாங்கண்ணி ஆகிய நகரங்களுக்கு பேருந்துகள் இயக்கப்படுகின்றது.
தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகத்தின் கும்பகோணம் கோட்டம், காரைக்காலில் இருந்து சென்னை, கும்பகோணம், தஞ்சாவூர், திருச்சி, சிதம்பரம், திருப்பூர் ஆகிய நகரங்களுக்கு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
புதுச்சேரி விழுப்புரம் மற்றும் சென்னையுடன் ஐந்து இணைப்பு தொடர்வண்டி அகல பாதையால் இணைக்கப்பட்டுள்ளது. இங்கிருந்து சென்னை, பெங்களூரு, விழுப்புரம், திருவண்ணாமலை, ஆரணி, வேலூர் - காட்பாடி, மும்பை, கொல்கத்தா, புது தில்லி முதலிய பல பெருநகர்களுக்கு விரைவுத் தொடருந்து இயக்கப்படுகின்றன. சென்னையிலிருந்து தொடர்வண்டி வழியாக புதுச்சேரியை அடைய நான்கு மணிநேரம் ஆகும்.
காரைக்கால் தொடருந்து நிலையத்தில் இருந்து சென்னை, திருச்சி, பெங்களூரு ஆகிய நகரங்களுக்கு தொடர்வண்டிகள் இயக்கப்படுகின்றன.
புதுச்சேரியின் சாலைகளின் முழு நீளம் 2552 கிமீ ஆகும். இது இந்தியாவிலேயே மிக அதிகமானதாகும்.
சாலைகள் | |||
---|---|---|---|
புதுச்சேரியின் சாலைகளின் முழு நீளம் | 2552 கிமீ. | ||
1000 சதுர கிமீக்கு சாலைகளின் நீளம் | புதுச்சேரி | தமிழ்நாடு | இந்தியா |
4575 | 1572 | 663 |
எண் | வகை | நீளம் (கி.மீ) |
---|---|---|
1 | தேசிய நெடுஞ்சாலை | 64.450 |
2 | மாநில நெடுஞ்சாலை | 49.304 |
3 | மாவட்ட, பிற வீதிகள் | |
புதுச்சேரி – 173.384 | ||
காரைக்கால் – 55.162 | ||
மாகி – 19.622 | ||
ஏனாம் – 26.460 | ||
274.628 | 274.628 | |
4 | கிராமப்புற சாலைகள் | |
புதுச்சேரி – 164.964 | ||
காரைக்கால் – 83.470 | ||
248.434 | 248.434 | |
கூட்டுத்தொகை | 636.816 |
புதுச்சேரியின் விமான நிலையம் இலாஸ்பேட்டையில் அமைந்துள்ளது. இது 2012 ஆம் ஆண்டு புதுபிக்கப்பட்டு பெரிய விமானங்களும் பயன்படுத்தும் வகையில் மேம்படுத்தப்பட்டது. இப்புதிய விமான நிலையம் சனவரி 2013இல் திறக்கப்பட்டு பெங்களூருக்கு செல்லும் விமான சேவை ஆரம்பிக்கப்பட்டது. காரைக்காலில் கட்டப்படும் புதிய விமான நிலையம் 2014இல் நிறைவடையும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவிலேயே முழுதும் தனியார் மூலதனத்தோடு ஆரம்பிக்கப்படும் முதல் விமான நிலையம் இது ஆகும்.
புதுச்சேரி ஒன்றிய பிரதேசத்தில் மொத்தம் 10 சார் பதிவாளர் அலுவலகம் உள்ளது. அனைத்து சார் பதிவாளர் அலுவலகமும் கணினி மையமாக்கப்பட்டு உள்ளது. மென்பொருள் கொண்டு பதிவு செய்யும் நில பதிவு கணினியில் பதிவேற்றம் செய்யப்படுகிறது நில பதிவுகளுக்கு மின்-முத்திரைத்தாள் பயன்படுத்தப்படுகிறது. சொத்தின் மீது எடுக்கப்படும் வில்லங்க சான்றிதழ் கணினி மையமாக்கப்பட்டு வருகிறது, பட்டா மற்றும் செட்டில்மென்ட் நகல் பொது சேவை மையம் வாயிலாக பொது மக்களுக்கு கொடுக்கப்படுகிறது. திருமண பதிவு இங்கு கொடுக்கப்படும் ஒரு சேவை ஆகும்.
புதுச்சேரி தேசிய மற்றும் சர்வதேச சுற்றுலாப் பயணிகளுக்கு மிகவும் பிரபலமான சுற்றுலா தலங்களில் ஒன்றாகும். புதுச்சேரி அரவிந்தரின் (1872-1950) வசிப்பிடமாக இருந்தது, ஸ்ரீ அரவிந்தர் ஆசிரமம் இன்னும் புதுச்சேரியில் இயங்குகிறது. ஒரு தனித்துவமான நகரமான ஆரோவில் ஆனது, உலகின் உள்ள அனைத்து பகுதிகளிலிருந்தும் மக்களால் ஈர்க்கப்படுகிறார்கள், இது நகரின் புறநகரில் அமைந்துள்ளது. சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் பல கோவில்கள், தேவாலயங்கள், நினைவுச்சின்னங்கள், பூங்காக்கள் மற்றும் மசூதிகள் உள்ளன.
This article uses material from the Wikipedia தமிழ் article புதுச்சேரி, which is released under the Creative Commons Attribution-ShareAlike 3.0 license ("CC BY-SA 3.0"); additional terms may apply (view authors). வேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 4.0 இல் கீழ் கிடைக்கும். Images, videos and audio are available under their respective licenses.
®Wikipedia is a registered trademark of the Wiki Foundation, Inc. Wiki தமிழ் (DUHOCTRUNGQUOC.VN) is an independent company and has no affiliation with Wiki Foundation.