நாகப்பட்டினம் (Nagapattinam) இந்தியாவின், தமிழ்நாடு மாநிலத்திலுள்ள, நாகப்பட்டினம் மாவட்டத்தின் தலைநகரமாகும்.
இந்நகரம் நாகை என்றும் அழைக்கப்படுகிறது. இம்மாவட்டம் 1991 அக்டோபர் 18 அன்று தஞ்சாவூர் மாவட்டத்தில் இருந்து பிரிக்கப்பட்டு தனித்து இயங்குகிறது. வங்காள விரிகுடாக் கடலோரத்தில் அமைந்துள்ளதால், 2004 டிசம்பர் 26 அன்று ஏற்பட்ட ஆழிப்பேரலையால் பெரிதும் பாதிப்புக்குள்ளான பகுதிகளில் நாகப்பட்டினமும் ஒன்றாகும்.
நாகப்பட்டினம் நாகை | |
---|---|
சிறப்பு நிலை நகராட்சி | |
அடைபெயர்(கள்): துறைமுக நகரம் மற்றும் கோயில் நகரம் | |
ஆள்கூறுகள்: 10°46′02″N 79°50′42″E / 10.767200°N 79.844900°E | |
நாடு | India |
மாநிலம் | தமிழ்நாடு |
மாவட்டம் | நாகப்பட்டினம் |
பகுதி | சோழ நாடு |
அரசு | |
• வகை | தேர்வு நிலை நகராட்சி |
• நிர்வாகம் | நாகப்பட்டினம் நகராட்சி |
• மக்களவை உறுப்பினர் | ம. செல்வராசு |
• சட்டமன்ற உறுப்பினர் | ஆளூர் ஷா நவாஸ் |
• மாவட்ட ஆட்சியர் | மருத்துவர் ஏ. அருண் தம்புராஜ், இ. ஆ. ப |
பரப்பளவு | |
• மொத்தம் | 17.92 km2 (6.92 sq mi) |
ஏற்றம் | 29 m (95 ft) |
மக்கள்தொகை (2011) | |
• மொத்தம் | 1,02,905 |
• அடர்த்தி | 615.99/km2 (1,595.4/sq mi) |
மொழிகள் | |
• அலுவல்மொழி | தமிழ் |
நேர வலயம் | இசீநே (ஒசநே+5:30) |
அஞ்சல் குறியீடு | 611 xxx |
தொலைபேசி குறியீடு | 914365 |
வாகனப் பதிவு | TN 51 |
சென்னையிலிருந்து தொலைவு | 303 கி.மீ (188 மைல்) |
திருச்சியிலிருந்து தொலைவு | 142 கி.மீ (88 மைல்) |
கடலூரிருந்து தொலைவு | 131 கி.மீ (81 மைல்) |
மதுரையிலிருந்து தொலைவு | 253 கி.மீ (157 மைல்) |
இணையதளம் | nagapattinam |
நாகப்பட்டினம் என்பது நகரில் இருந்து உருவானது. இங்கு குடியேறிய இலங்கையைச் சேர்ந்தவர்களையும், பட்டினம் என்பது நகரத்தையும் குறிக்கும். முதலாம் குலோத்துங்க சோழன் காலத்தில், ஒரு முக்கியமான துறைமுகங்களில் ஒன்றாக இருந்த இந்நகரம், வள்ளிப்பட்டினம் என்றும் அழைக்கப்பட்டது. தொலெமி என்பவர் நாகப்பட்டினத்தை நிகாம் என்று குறிப்பிடுகிறார். மேலும் இது பண்டைய தமிழ்நாட்டின் மிக முக்கியமான வர்த்தக மையங்களில் ஒன்றாக இருந்ததாக குறிப்பிடுகிறார். ஆனால் "நிகாமா" அல்லது "நிகாம்" என்ற பெயரில், ஒரு பெருநகர இருப்பதை நிரூபிக்க சான்றுகள் இல்லாததால் காரணத்தால், இது சந்தேகத்திற்குரியதாக கருதப்படுகிறது. நாகப்பட்டினம் ஆரம்பகாலத்தில் எழுத்தாளர்களாலும் மற்றும் போர்த்துகீசியர்களாலும் "கோரமண்டல் நகரம்" என்று அழைக்கப்பட்டது. 7 ஆம் நூற்றாண்டின், புனித கவிஞர்களான அப்பரும், திருஞானசம்பந்தரும், தேவாரத்தில் உள்ள வசனங்களில் இந்நகரத்தை "நாகை" என்று குறிப்பிடுகின்றனர். இந்த நகரம் முதலில் "நாகை" என்று அழைக்கப்பட்டது மற்றும் பட்டினம் என்ற சொல் சோழர் காலத்தில், இந்நகரில் ஒரு முக்கியமான துறைமுகம் இருந்த காரணத்தால் இணைக்கப்பட்டது.
அண்டை துறைமுகமான காவிரிப்பூம்பட்டினம், சங்ககாலத்தில் சோழ இராச்சியத்தின் தலைநகராக இருந்தது, இது பட்டினப் பாலை போன்ற தமிழ் நூல்களில் பரவலாக குறிப்பிடப்படுகிறது.
நாகப்பட்டினம் ஒரு வரலாற்றுச் சிறப்புக்கொண்ட இடமாகும். பண்டைத் தமிழ் நாடுகளில் ஒன்றான சோழ நாட்டில் ஒரு பகுதியாகிய நாகப்பட்டினம், முற்காலச் சோழர் காலத்திலேயே ஒரு முக்கிய துறைமுக நகராக விளங்கியது. பிற்காலத்தில், இராஜராஜ சோழனின் விருதுப்பெயர்களில் ஒன்றான சத்திரிய சிகாமணி என்னும் பெயரில் அமைந்த பகுதியின் தலைமை இடமாகவும் இது விளங்கியது. நாகப்பட்டினம் முற்காலத்தில் சோழகுலவல்லிப் பட்டினம் என்றும் அழைக்கப்பட்டது. பொ.ஊ.மு. மூன்றாம் நூற்றாண்டைச் சேர்ந்த பர்மா நாட்டு வரலாற்று நூலொன்றில் நாகப்பட்டினம் பற்றிய குறிப்புக்கள் உள்ளன. இதே நூலில், அசோகப் பேரரசன் கட்டிய புத்த விகாரம் ஒன்று இங்கே இருந்தது பற்றியும் குறிப்பிடப்பட்டுள்ளது. சீனப் பயணியான ஹியுவென் சாங் (Hiuen Tsang) என்பவனும் தனது நூலில் இங்கிருந்த புத்த விகாரம் பற்றிக் குறிப்பிட்டுள்ளான். பண்டைய புத்த இலக்கியங்களில், நாகபட்டினம், படரிதித்த என்ற பெயரிலும் குறிப்பிடப்பட்டுள்ளது. இன்று நாகபட்டினத்தின் ஒரு பகுதியின் பெயரான அவுரித்திடல், படரிதித்த என்பதன் திரிபாக இருக்கலாமென ஆய்வாளர்கள் கருதுகிறார்கள். படரிதித்த என்பது இப் பகுதியில் அதிகமாகக் காணப்படும் ஒரு பழமரம் ஆகும். நாகப்பட்டினம் சோழப் பேரரசின் பழமைவாய்ந்த துறைமுக நகரங்களுள் ஒன்று. இது "நாவல் பட்டிணம்" -கப்பல்களின் நகரம் என்றும் அழைக்கப்பட்டது.[சான்று தேவை].
இவ்வூரின் அமைவிடம் 10°46′N 79°50′E / 10.77°N 79.83°E ஆகும். இந்நகரம் கிழக்கில் வங்காள விரிகுடா, தெற்கில் உப்பனாறு, மேற்கில் திருவாரூர் மாவட்டம், வடமேற்கில் தஞ்சாவூர் மாவட்டம் மற்றும் வடக்கில் காரைக்கால் மாவட்டம் (புதுச்சேரி) ஆகிய இடங்களால் சூழப்பட்டுள்ளது. இந்த நகரம் கடல் மட்டத்தில் அமைந்துள்ளது. இந்நகராட்சி 14.92 km2 (5.76 sq mi) பரப்பளவைக் கொண்டுள்ளது. நாகப்பட்டினம் சென்னையிலிருந்து 303 கிமீ (188 மைல்) தொலைவிலும், காரைக்காலில் இருந்து 14 கிமீ (8.7 மைல்) தொலைவிலும், மயிலாடுதுறையில் இருந்து 40 கிமீ (25 மைல்) தொலைவிலும், கும்பகோணத்திலிருந்து 40 கிமீ (25 மைல்) தொலைவிலும், தஞ்சாவூரிலிருந்து 80 கிமீ (50 மைல்) தொலைவிலும் மற்றும் திருவாரூரிலிருந்து 25 கி.மீ (16 மைல்) தொலைவிலும் அமைந்துள்ளது. நாகப்பட்டினம் மார்ச் முதல் மே வரையிலான கோடை மாதங்களில் வெப்பமண்டல காலநிலையைக் கொண்டுள்ளது. இந்த நகரம் சூறாவளி பாதிப்புக்குள்ளான மண்டலங்களில் ஒன்றாகும், இது 2004 சுனாமியின் போது பேரழிவிற்கு உட்பட்டது.
டிசம்பர் 2004ல் சுமத்திரா தீவின் வடமேற்கு கடற்கரையில் ஒரு நிலநடுக்கமும், ஆழிப்பேரலையும் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் மற்றும் ஆழிப்பேரலையால் தமிழ்நாடும் பாதிக்கப்பட்டது. இதில் நாகப்பட்டினம் மாவட்டம், தமிழகத்தில் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ள பகுதியாகும். இது மாநிலத்தில் 8,009 உயிரிழப்புகளில், இம்மாவட்டத்தில் மட்டும் 6,064 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் அதிகமாக பலியானவர்கள் மீனவர் சமூகத்தைச் சேர்ந்தவர்கள், இவர்கள் அக்கரைப்பேட்டை, கீச்சாங்குப்பம் போன்ற கடலோரப் பகுதிகளில் வசித்து வந்தனர். இதனால் பெரும்பாலான படகுகள் நீரில் மூழ்கியதால், மீன்பிடித் தொழில்கள் பாதித்தது.
ஆண்டு | ம.தொ. | ±% |
---|---|---|
1901 | 57,190 | — |
1911 | 60,168 | +5.2% |
1921 | 54,016 | −10.2% |
1931 | 55,978 | +3.6% |
1941 | 62,674 | +12.0% |
1951 | 69,370 | +10.7% |
1961 | 74,965 | +8.1% |
1981 | 80,560 | +7.5% |
1991 | 86,155 | +6.9% |
2001 | 93,148 | +8.1% |
2011 | 1,02,905 | +10.5% |
2011 ஆம் ஆண்டின் இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 102,838 பேர் இங்கு வசிக்கின்றார்கள். இவர்களில் 50,809 பேர் ஆண்களும் 52,029 பேர் பெண்களும் ஆவார்கள். நாகப்பட்டினம் மக்களின் சராசரி கல்வியறிவு 79% ஆகும். இதில் ஆண்களின் கல்வியறிவு 83% உம் பெண்களின் கல்வியறிவு 74% உம் ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% ஐ விடக் கூடியதே. நாகப்பட்டினம் மக்கள் தொகையில் 11,308 பேர் ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.
2011 ஆம் ஆண்டு மதவாரியான கணக்கெடுப்பின்படி, நாகையில் இந்துக்கள் 71.4%, முஸ்லிம்கள் 24.79%, கிறிஸ்தவர்கள் 3.68%, சீக்கியர்கள் 0.01%, பௌத்தர்கள் 0.02%, சைனர்கள் 0.1% மற்றும் 0.08% பிற மதங்களைப் பின்பற்றுபவர்களும் உள்ளனர்.
இந்நகரின் முக்கிய தொழில் என்பது வங்காள விரிகுடா கடலில் மீன்பிடித் தொழில் ஆகும். இவ்வாறு பிடிக்கும் மீனானது, தினசரி மற்றும் வாராந்திர மீன் சந்தைகளில் விற்பனை செய்யப்படுகிறது. மீன்களைப் பாதுகாக்க ஏராளமான ஐஸ் தொழிற்சாலைகள் உள்ளன. 26 டிசம்பர், 2004 அன்று தாக்கிய ஆழிப்பேரலைக்கு பின்பு, இத்தொழில் பின்னடைவை சந்தித்தது.
இந்நகரில் விவசாயமும் செய்யப்படுகிறது. நாகப்பட்டினத்தை சுற்றியுள்ள நகரங்கள் மற்றும் கிராமங்களுக்கான சில்லறை விற்பனை வர்த்தக மையமாகவும், இந்நகரம் விளங்குகிறது.
நாகப்பட்டினம் இரண்டு தேசிய நெடுஞ்சாலைகளால் இணைக்கப்பட்டுள்ளது. தேசிய நெடுஞ்சாலை 45 எ விழுப்புரம் மற்றும் தேசிய நெடுஞ்சாலை 67 கோயம்புத்தூர் மற்றும் கருநாடக மாநிலத்தின், குண்டலுபேட்டை ஆகியவைகள் ஆகும். நாகப்பட்டினம் சென்னை, வேலூர், திருவண்ணாமலை, ஆரணி, விழுப்புரம், கோயம்புத்தூர், திருச்சிராப்பள்ளி, காரைக்கால் மற்றும் தமிழகத்தின் பிற முக்கிய நகரங்களுடன் இணைக்கப்பட்டுள்ளது. இந்நகரின் வழியாக மாநில நெடுஞ்சாலைகளான, மாநில நெடுஞ்சாலை 22 ஆனது கல்லணை முதல் காவிரிப்பூம்பட்டினம் வரையிலும், மாநில நெடுஞ்சாலை 23 ஆனது மயிலாடுதுறை முதல் திருத்துறைப்பூண்டி வரையிலும், மாநில நெடுஞ்சாலை 64 ஆனது கும்பகோணம் முதல் சீர்காழி வரையிலும், மாநில நெடுஞ்சாலை 67 ஆனது நாகூர் முதல் நாச்சியார்கோயில் வரையிலும், மாநில நெடுஞ்சாலை 147 ஆனது கும்பகோணம் முதல் காரைக்கால் வரையிலும், மாநில நெடுஞ்சாலை 148 ஆனது நாகூர் முதல் வெட்டர் வரையிலும் ஆகிய மாநில நெடுஞ்சாலைகள் செல்கின்றது. இங்கிருந்து பல்வேறு நகரங்களுக்கு செல்ல தினமும் 175 அரசு பேருந்துகள் இயக்கப்படுகிறது. பெரும்பாலான பேருந்துகள், நாகப்பட்டினம் வழியாக திருச்சிராப்பள்ளி முதல் வேளாங்கண்ணி வரை இயக்கப்படுகிறது. நாகப்பட்டினம் மற்றும் அருகிலுள்ள கிராமங்களுக்கு தினமும் 25க்கு மேற்பட்ட பேருந்துகள், உள்ளூர் போக்குவரத்து தேவைகளை பூர்த்தி செய்ய இயக்கப்படுகிறது. பெங்களூர், திருவனந்தபுரம், சென்னை போன்ற நீண்ட தூர பயணத்திற்கு, அரசு விரைவுப் பேருந்துகள் இயக்கப்படுகிறது.
நாகப்பட்டினத்தில் இரயில் நிலையம் ஒன்று உள்ளது. கிரேட் தென்னிந்திய ரயில்வே நிறுவனத்தின் (ஜி.எஸ்.ஐ.ஆர்) தலைமையகம் ஆனது, 1861 முதல் 1875 வரை நாகப்பட்டினத்தில் இருந்தது. அப்போது நாகப்பட்டினம் முதல் திருச்சிராப்பள்ளி வரை, திருவாரூர் மற்றும் தஞ்சாவூர் வழியாக, 1861 முதல் 1875 வரை ஒரு அகல ரயில் பாதை மூலம் ரயில்கள் இயக்கப்பட்டது. பின்னர் 1875 ஆம் ஆண்டில், இது மீட்டர் கேஜ் (எம்ஜி) பாதையாக மாற்றப்பட்டது. 1875 ஆம் ஆண்டு, கிரேட் தென்னிந்திய ரயில்வே நிறுவனத்தின் (ஜி.எஸ்.ஐ.ஆர்) தலைமையகம் ஆனது, திருச்சிராப்பள்ளிக்கு மாற்றப்பட்டது. நாகப்பட்டினத்தில் தொடர்வண்டி பணிப்பட்டறை (railway workshop) ஆனது 1929 வரை இருந்தது, இது நகரத்தின் வளர்ச்சிக்கு முக்கிய பங்கு வகித்தது. பின்னர் இது பொன்மலைக்கு மாற்றப்பட்டது. நாகப்பட்டினம் ரயில் நிலையம் ஆனது, மேற்கில் திருவாரூர் சந்திப்பையும், வடக்கில் நாகூரையும், தெற்கே வேளாங்கண்ணியையும் இணைக்கிறது. இங்கிருந்து திருச்சிராப்பள்ளி, தஞ்சாவூர், மயிலாடுதுறை, காரைக்கால், மன்னார்குடி மற்றும் திருத்துறைப்பூண்டி ஆகிய நகரங்களுக்கு பயணிகள் ரயில்கள் இயக்கப்படுகிறது. சென்னை எழும்பூருக்கு மயிலாடுதுறை வழியாகவும், எர்ணாகுளம் நகருக்கு, கோயம்புத்தூர் வழியாகவும் (டீ கார்டன் விரைவு ரயில்) தினசரி விரைவு ரயில்கள் இயக்கப்படுகிறது.
இதன் அருகிலுள்ள விமான நிலையம், 145 கி.மீ தொலைவிலுள்ள திருச்சிராப்பள்ளி பன்னாட்டு வானூர்தி நிலையம் ஆகும்.
வங்காள விரிகுடா கடலை அண்டிய தமிழ் நாட்டின் கிழக்குக் கரையில், வட அகலக்கோடுகள் 10.10' க்கும் 11.20' க்கும் இடையிலும், கிழக்கு நெடுங்கோடுகள் 79.15', 79.50' ஆகியவற்றுக்கிடையிலும் அமைந்துள்ளது. ஒரு தீபகற்பக் கழிமுகப் (peninsular delta) பகுதியான இதற்குக் கிழக்கே வங்காள குடாக்கடலும், தெற்கில் பாக்கு நீரிணையும், மேற்கிலும் வடக்கிலும் நிலப்பகுதியும் அமைந்துள்ளன.
நாகப்பட்டினத்தில் நாகூர், வேளாங்கண்ணி, சிக்கல், கோடியக்கரை, வேதாரண்யம், மன்னார்குடி மற்றும் தரங்கம்பாடி ஆகிய நகரங்கள் சுற்றுலாத் தளமாக விளங்குகிறது.
காயாரோகணேசுவரர் கோயில் ஆனது நாகப்பட்டினம் நகரில் உள்ள ஒரு புகழ் பெற்ற சிவன் கோயிலாகும். சம்பந்தர், அப்பர், சுந்தரர் மூவரதும் பாடல் பெற்ற கோயிலாகும். இத்தலத்தில் இறைவன் அகத்தியருக்குத் திருமணக் காட்சியளித்தார் என்பது தொன்நம்பிக்கை. அதிபத்த நாயனார் அவதரித்த தலம் எனப்படுகிறது. ஆதிசேஷன், புண்டரீக முனிவர், அகத்தியர், அம்பிகை, முருகன், திருமால், வசிட்டர், முசுகுந்தன், அரசகேசரி, விசித்திரகவசன், விரூரகன், பத்திரசேனன், பாற்கரன், மித்திரன், காளகண்டன், சண்டதருமன் முதலியோர் வழிபட்ட தலமென்பது தொன்நம்பிக்கை (ஐதிகம்). இந்த கோயில் காயாரோகணேசாமியின் மனைவியான நீலாயதாட்சியின் சன்னதிக்கும் பெயர் பெற்றது.
சவுந்தரராஜபெருமாள் கோயில் இந்நகரில் அமைந்துள்ள 108 வைணவத் திருத்தலங்களில் 19வது திவ்யதேசம் ஆகும்.
சிக்கலில் உள்ள சிங்காரவேலர் கோவில், வேதாரண்யத்தில் உள்ள திருமறைக்காடர் கோயில் மற்றும் கூத்தனூரில் உள்ள மகா சரஸ்வதி கோயில் ஆகியவை, இம்மாவட்டத்தில் உள்ள புகழ் பெற்ற கோயில்கள் ஆகும்.
நாகூரில் அமைந்துள்ள தர்காவானது, இசுலாமியர்கள் புனிதமாக கருதப்படும் பள்ளிவாசல்களில் ஒன்றாகும்.
வேளாங்கண்ணியில் அமைந்துள்ள தூய ஆரோக்கிய அன்னை திருத்தலம் ஆனது, ஒரு புகழ்பெற்ற கத்தோலிக்க திருத்தலமாகும். இத்திருத்தலம் 1771 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம், அருட்தந்தை ஆன்டனியோ டி ரொசாரியோ அடிகளார் கண்காணிப்பில் தனிப் பங்காக உருவானது. வேளாங்கண்ணி முதன்மைப் பேராலயம் 1920 மற்றும் 1933 ஆகிய ஆண்டுகளில் புதுப்பிக்கப்பட்டது. பின்னர் 1962 நவம்பர் 3 ஆம் நாள் "இணைப் பெருங்கோவில்" என்னும் நிலைக்கு உயர்த்தினார். 2012 ஆம் ஆண்டு வேளாங்கண்ணி ஆலயம் "பெருங்கோவில்" நிலைக்கு உயர்த்தப்பட்டு, 50-ஆம் ஆண்டு பொன்விழா கொண்டாடப்பட்டது.
நாகப்பட்டினம் சப்தஸ்தானம் என்ற நிலையில் பொய்கைநல்லூர், பாப்பாகோயில், சிக்கல், பாளூர், வடகுடி, தெத்தி, நாகூர் ஆகிய ஊர்கள் காணப்படுகின்றன.
நகராட்சி அதிகாரிகள் | |
---|---|
தலைவர் | |
ஆணையர் | |
தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் | |
சட்டமன்ற உறுப்பினர் | ஆளூர் ஷா நவாஸ் |
மக்களவை உறுப்பினர் | ம. செல்வராசு |
நாகப்பட்டினம் நகராட்சியானது நாகப்பட்டினம் சட்டமன்றத் தொகுதிக்கும் மற்றும் நாகப்பட்டினம் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்டதாகும்.
2019 ஆம் ஆம் ஆண்டு நடந்த மக்களவைத் தேர்தலில், இம்மக்களவைத் தொகுதியை இந்தியப் பொதுவுடைமைக் கட்சியைச் சேர்ந்த ம. செல்வராசு வென்றார்.
2021 ஆம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில், இச்சட்டமன்றத் தொகுதியை விடுதலை சிறுத்தைகள் கட்சியையை சேர்ந்த ஆளூர் ஷா நவாஸ் வென்றார்.
This article uses material from the Wikipedia தமிழ் article நாகப்பட்டினம், which is released under the Creative Commons Attribution-ShareAlike 3.0 license ("CC BY-SA 3.0"); additional terms may apply (view authors). வேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 4.0 இல் கீழ் கிடைக்கும். Images, videos and audio are available under their respective licenses.
®Wikipedia is a registered trademark of the Wiki Foundation, Inc. Wiki தமிழ் (DUHOCTRUNGQUOC.VN) is an independent company and has no affiliation with Wiki Foundation.