திருவிழா அல்லது உற்சவம் என்பது, ஆண்டுக்கு ஒரு முறை அல்லது குறிப்பிட்ட சில தினங்களில் மக்கள் ஒன்றுகூடி கொண்டாடுவது.
திருவிழா அல்லது ஊர்வலம் அல்லது வலம் என்பதே சரியான தமிழ்ப் பதமாகும். உற்சவம் என்பது பிற மொழிச் சொல்லாகும்.
தமிழ்நாட்டின் இரண்டாவது பெரிய நகரான மதுரை திருவிழா நகரம் என்றழைக்கப்படுகின்றது. உலகில் வேறெங்கும் காண முடியாத அளவிற்கு இங்குள்ள மீனாட்சி சுந்தரேசுவரர் கோவிலில், ஆண்டிற்கு 12 மாதங்களும், 10 நாட்களுக்குக் குறையாமல் திருவிழா நடக்கும். மேலும் இங்கு நடக்கும் சித்திரைத் திருவிழாவும், தெப்பத் திருவிழாவும் மிகவும் பிரசித்தம்.
தமிழ்நாட்டிலுள்ள மதுரை, விருதுநகர், இராமநாதபுரம், சிவகங்கை, தஞ்சாவூர், திருச்சி, திண்டுக்கல், புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் உள்ள மாரியம்மன் கோவில்களில் மாசி, பங்குனி, சித்திரை, வைகாசி ஆகிய மாதங்களில் திருவிழா நடக்கும். அதற்கு ஒரு வாரத்திற்கு முன்பாக பூச்சொரிதல் திருவிழா நடக்கும். இந்நிகழ்வே, திருவிழா ஆரம்பிப்பதற்கான அறிகுறியாகும். பூச்சொரிதல் அன்று, ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோவிலில் கூடி, மணமுள்ள மலர்களைக் கொணர்ந்து மூலவரான பெண் தெய்வங்கள் மேல் சொரிந்து வழிபடுவர்.
பழனி முருகன் கோயில், மதுரை மீனாட்சியம்மன் கோவில், திருவாரூர் தியாகராசர் கோவில் மற்றும் பல முக்கியமான திருக்கோயில்களில் தேர்த் திருவிழா மிக முக்கியமாக கொண்டாடப்படுகிறது. தேர்த் திருவிழாவின் போது, உற்சவர் தேரில் திருக்கோயிலை சுற்றி பவனி வருவார். திருவாரூர் தியாகராசர் கோவில் தேரே, தமிழகத்தின் பெரிய தேராக கருதப்படுகின்றது.
தை மாதத்தில் கொண்டாடப்படுகின்ற முக்கியமான திருவிழா, தைப் பூசத் திருவிழா ஆகும். உலகிலுள்ள அனைத்து முருகன் கோவில்களிலும் இத்திருவிழா மிகவும் பிரசித்தியானது.
முதன்மைக் கட்டுரை: சித்திரைத் திருவிழா
சித்திரைத் திருவிழா இந்தியாவின் தமிழ்நாட்டில் தமிழ் ஆண்டுப்பிறப்பான சித்திரை மாதத்தில் பௌர்ணமிக்கு முன்னதாக பத்து நாட்கள் கொண்டாடப்படும் விழாவாகும். இது தமிழகம் மட்டுமின்றி, தமிழர்கள் வாழும் இடங்களிலும் கொண்டாடப்படுகிறது.
தமிழகத்திலும், அதனைச் சுற்றியிருக்கும் மாநிலங்களில் வீற்றிருக்கும் பெண் தெய்வமான மாரியம்மனுக்கு ஆடி மாதத்தில் திருவிழா கொண்டாடப்படும். இம்மாதத்தில், பெண்கள் மாரியம்மனுக்கு விரதமிருந்தும், தீ மிதித்தும், அம்மனுக்கு கூழ் வார்த்தும் தங்களது நேர்த்திக்கடனை செலுத்துவர்.
கார்த்திகை தீபத் திருவிழா ஆண்டு தோறும் 10 நாட்கள் வெகு சிறப்பாக நடைபெறுவது வழக்கம். கார்த்திகைத் தீபத் திருவிழா அன்று மாலை, குன்றுகளைக் கொண்ட அனைத்து சிவ மற்றும் முருகர் கோவில்களில் அகண்ட கார்த்திகை தீபம் ஏற்றப்படும். இத்திருவிழா,திருவண்ணாமலையில் மிகவும் பிரசித்தி பெற்றது. மேலும், தமிழகத்தின் தென்மாவட்டங்களிலுள்ள (குன்றுகள் அல்லாத) சைவசமயம் மற்றும் வைணவ தலங்களில், பெரிய கார்த்திகை நாளன்று சொக்கப்பனை கொளுத்தப்படும்.
ஐப்பசி திருவோண நட்சத்திரத்தில் கொண்டாடப்படுவது ஓணம். சங்ககால ஏடுகளில் விஷ்ணுவின் பிறந்தநாளாகவும் வாமணன் அவதரித்ததும் அன்று தான் எனவும் குறிப்புகள் உள்ளன. பத்துப்பாட்டு நூல்களில் ஒன்றான மதுரைகாஞ்சியில் பாண்டிய மக்கள் பத்து நாட்களாக எவ்வாறு கொண்டாடினார்கள் என மாங்குடி மருதனார் விவரிக்கிறார்.
“கணம் கொள் அவுணர் கடந்த பொலம் தார்
மாயோன் மேய ஓண நன் நாள்
கோணம் தின்ற வடு வாழ் முகத்த
சாணம் தின்ற சமம் தாங்கு தடக்கை
மறம் கொள் சேரி மாறுபொரு செருவின்
மாறாது உற்ற வடு படு நெற்றி
சுரும்பார் கண்ணி பெரும் புகல் மறவர்
கடு களிறு ஓட்டலின் காணூநர் இட்ட
நெடுகரை காழகம் நிலம் பரல் உறுப்ப
கடுங்கள் தேறல் மகிழ் சிறந்து திரிதர…" - மதுரைக் காஞ்சி (அடிகள் 590 முதல் 599 வரை)
நாலாயிர திவ்யபிரபந்தததில் பெரியாழ்வார் பரம்பரையாக திருமாலுக்கு தொண்டுசெய்வதையும் திருஓண நன்னாளில் நாரசிம்ம அவதாரமெடுத்து இரணியனை அழித்தவனை நம் துன்பங்கள் போக பல்லாண்டு வாழ்த்துவமே
“எந்தை தந்தை தந்தைதம் மூத்தப்பன் ஏழ்படி கால்தொடங்கி
வந்து வழிவழி ஆட்செய்கின் றோம்திரு வோணத் திருவிழவில்
அந்தியம் போதி லரியுரு வாகி அரியை யழித்தவனை
பந்தனை தீரப்பல் லாண்டுபல் லாயிரத் தாண்டென்று பாடுதமே” - பெரியாழ்வார் திருமொழி 6
தேவாரத்த்தில் சம்பந்தர் ஓணம் கபாலிசரத்தில் (மயிலை) எவ்வாறு கொண்டாடப்பட்டது என்று விளக்குகிறார்
“மைப்பயந்த ஒண்கண் மடநல்லார் மாமயிலைக்
கைப்பயந்த நீற்றான் கபாலீச்சரம் அமர்ந்தான்
ஐப்பசி ஓண விழாவும் அருந்தவர்கள்
துய்ப்பனவும் காணாதே போதியோ பூம்பாவாய்” - திருஞானசம்பந்தர், திருமறை 2, பதிகம் 47
இன்று அத்திருவிழா தென் தமிழகத்திலும் கோவில்களோடும் நின்றுவிட்டது. பாண்டியன் ஆட்சி செய்த கேரளத்தில் ஓணம் சிறப்பாக கொண்டாடப்படுகிறது.
ஹோலி அல்லது ரங்கபஞ்சமி என்று அழைக்கப்படும் பண்டிகை இந்து மதத்தின் பிரபலமான வசந்த காலப் பண்டிகையாகும். இந்தப் பண்டிகை இந்தியா, நேபாளம், வங்கதேசம், போன்ற நாடுகளிலும் சூரிநாம், கயானா, தென்னாப்பிரிக்கா, டிரினிடேட், இங்கிலாந்து, மொரீசியஸ் மற்றும் ஃபிஜி போன்ற இந்து மக்கள் அதிகம் வாழும் நாடுகளிலும் பரவலாகக் கொண்டாடப்படுகின்றது. இந்தியாவின் மேற்கு வங்காளம் மற்றும் வங்கதேசம் ஆகியவற்றில் டோல்யாத்திரை (டெளல் ஜாத்ரா) அல்லது வசந்த-உற்சவம் ("வசந்தகாலத் திருவிழா") என அழைக்கப்படுகின்றது. பெரும்பாலும் பிரஜ் சமூகத்தினரால் கடவுள் கிருஷ்ணனுடன் தொடர்புடைய மதுரா, விருந்தாவன், நந்தகோன் மற்றும் பர்சனா நகரங்களில் ஹோலி சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. ஹோலிப் பண்டிகை காலத்தில் அவை நடைபெறும் 16 நாட்களும் இந்த நகரங்கள் சுற்றுலாத் தலங்களாக இருக்கும்.
கிறித்துமசு கொண்டாட்டம் உள்ளிட்ட மிக முக்கிய தினங்களில், தேவாலயத் திருவிழாக்கள் வேளாங்கண்ணி உள்ளிட்ட பல புனித ஆலயங்களில் திருவிழா ஊர்வலமும் சிறப்பு பிரார்த்தனைக் கூட்டமும் நடைபெறும்.
ஒவ்வொரு வருடமும் இசுலாமிய நாட்காட்டியின் ரமலான் மாதத்தில் நோன்பு நோற்பது இசுலாமின் மூன்றாவது கட்டாய கடமையாகும். சூரிய உதயம் முதல் அந்தி சாயும் வரை உணவு மற்றும் நீர் ஆகிய எதுவும் எடுத்துக்கொள்ளாமல் இது நிறைவேட்றப்படுகிண்றது. நோயாளிகள் , பருவமடையாத குழந்தைகள், மாதவிலக்கு நேர பெண்கள், குழந்தைகளுக்குப் பால் கொடுக்கும் தாய்மார்கள் மற்றும் பிரயாணம் செய்பவர்கள் ஆகியோருக்கு இதில் இருந்து விலக்கு அளிக்கப்படுகின்றது.
தியாகத் திருநாள் அல்லது பக்ரித் பண்டிகை, உலக அளவில் இசுலாமியர்களால் கொண்டாடப்படும் முக்கிய பண்டிகை ஆகும். இந்த பண்டிகை ஃஅச்சுப் பெருநாள் எனவும் அழைக்கப்படுகின்றது. இறைவனின் தூதரான இப்ராகிம் நபியின் தியாகத்தை நினைவுகூறும் விதமாக, ஒவ்வொரு ஆண்டும் அராபிய மாதம் துல்கச்சு (Dul Haji) 10-ம் நாள் இது கொண்டாடப்படுகின்றது.
புத்த பூர்ணிமா (இந்தியாவில்) அல்லது விசாகம் (இலங்கையில்) (Wesak) வைகாசி மாத பௌர்ணமி (முழு நிலா) நாளன்று உலகில் உள்ள அனைத்து பௌத்தர்களாலும் சிறப்பாகக் கொண்டாடப்படும் பண்டிகை ஆகும். புத்தர் அவர்கள் பிறந்ததும் இந்நாளே, ஞானோதயம் பெற்றதும் இந்நாளே மற்றும் அவர் இயற்கை எய்தியதும் இந்நாளே. இக்காலப்பகுதியில் பந்தல்கள் தோரணங்கள் ஒளிக்கூடுகள் கட்டப்பட்டும் எங்கும் விழாக்கோலமாக இருக்கும். கொண்டாட்ட முறைகளில் நாடுகளிற்கு இடையே சில வேறுபாடுகள் இருப்பதாகவும் அறியமுடிகின்றது.
This article uses material from the Wikipedia தமிழ் article திருவிழா, which is released under the Creative Commons Attribution-ShareAlike 3.0 license ("CC BY-SA 3.0"); additional terms may apply (view authors). வேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 4.0 இல் கீழ் கிடைக்கும். Images, videos and audio are available under their respective licenses.
®Wikipedia is a registered trademark of the Wiki Foundation, Inc. Wiki தமிழ் (DUHOCTRUNGQUOC.VN) is an independent company and has no affiliation with Wiki Foundation.