இனப்படுகொலை (Genocide) ஓர் இனத்தை பகுதியாகவோ அல்லது முழுமையாகவோ, மனித இனம் சார்ந்த, இன ஒதுக்கல், சமய வேற்றுமை அல்லது தேசிய இன வேற்றுமை போன்ற காரணங்களால் கொல்ல நினைப்பது அல்லது அழிப்பது.
இது குறித்து 1948 இல் ஐக்கிய நாடுகளின் பிரதிநிதிகள் சபை இதை தடைசெய்யப்பட்ட, தண்டனைக்குரிய மற்றும் குற்றமுறை செயலாக ஐ நா சட்ட விதி 2 இன்படி அறிவித்துள்ளது. இதன்படி ஓர் இனத்தை பகுதியாகவோ அல்லது முழுமையாகவோ, மனித இனம் சார்ந்த, இன ஒதுக்கல், சமய வேற்றுமை அல்லது தேசிய இன வேற்றுமை போன்ற காரணங்களால், உடல் ரீதியாகவோ, மன ரீதியாகவோ தொல்லை கொடுப்பது, கொல்ல நினைப்பது அல்லது அழிப்பது, இனவேறுபாட்டைக் காரணங்காட்டி குழந்தைப் பிறப்பை தடுப்பது, குழந்தைகளை இடம் பெயரச் செய்வது, வேறு எவ்வகையிலாயினும் இனவேறுபாடு காட்டுவது போன்றவை குற்றமுறை செயல்களாக, இனப்படுகொலைக் குற்றங்களாக சர்வதேச தடைச்சட்டத்தின்படி குற்றச்செயலாகும்..
இக்கொடுஞ்செயல் புரிவோரைத் தண்டிக்க சர்வதேசக் குற்றவியல் நீதிமன்றம் 2002 இல் கொண்டுவரப்பட்டது. இந்நீதிமன்றம் விசாரணை செய்து தண்டனை அளிக்க உடன்படிக்கையின் மூலம் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. இவ்வுடன்படிக்கையில் கையொப்பமிட நீதிமன்ற ஆணையத்தால் சர்வதேச உறுப்பினர்களை அழைத்தும் இன்னும் ஒருவரும் கையொப்பமிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இனப்படுகொலை (Genocide) என்ற வார்த்தை முதன் முதலில் ரபேல் லேம்கின் 1944ல் வெளிவந்த "Axis Rule in Occupied Europe" என்ற புத்தகத்தில் பயன்படுத்தியுள்ளார்.
போலந்து-யூதச் சட்ட வல்லுனரான ராபேல் லெம்கின் (Raphael Lemkin) என்பவரே இனப்படுகொலை என்னும் கருத்துருவுக்கு முதன் முதலில் சொல்வடிவம் கொடுத்தவராவார். 1933 ஆம் ஆண்டில் நடைபெற்ற நாடுகள் கூட்டமைப்பின் (League of Nations), சட்ட அவையின் அனைத்துலகக் குற்றவியல் சட்டம் தொடர்பான மாநாட்டில், லெம்கின் ஒரு முன்மொழிவைச் செய்தார். இதற்காக அவர் காட்டுமிராண்டித் தனமான குற்றம் (Crime of Barbarity) உலகச் சட்டங்களுக்கு எதிரான ஒரு குற்றம் என்னும் பொருளில் கட்டுரை ஒன்றை எழுதினார். இக் குற்றம் தொடர்பான கருத்துரு பின்னர் இனப்படுகொலை தொடர்பான எண்ணமாக உருவானது. இது, 1933 ஆம் ஆண்டில், ஈராக்கில் அசிரியர்கள் கொலை செய்யப்பட்ட அநுபவத்தில் இருந்து உருவானதாகும். லெம்கினுக்கு, ஈராக்கில் நடைபெற்ற இச் சம்பவம், முதலாம் உலகப் போரின்போது ஆர்மீனியர்கள் படுகொலை செய்யப்பட்டதை நினைவுபடுத்தியது. அந்த ஆண்டிலேயே லெம்கின், இத்தகைய காட்டுமிராண்டித்தனமான செயல்களைச் சட்டத்துக்குப் புறம்பானதாக ஆக்கும்படியான தனது முன்மொழிவை, நாடுகள் கூட்டமைப்பின் சட்ட அவையிடம் கையளித்தார். இம் முன்மொழிவு ஏற்றுக்கொள்ளப் படவில்லை என்பதுடன், அப்போது நாஸி ஜெர்மனியுடன் சமாதானம் செய்ய்துகொள்ள விரும்பிய போலந்து அரசும், லெம்கினின் நடவடிக்கைகளை ஏற்றுக்கொள்ளவில்லை. எனினும் லெம்கின் தொடர்ந்தும் தனது நோக்கங்களுக்காகப் பல வழிகளிலும் போராடி வந்தார்.
லெம்கினின் வெற்றிகரமான பிரச்சாரங்கள் 1948 ஆம் ஆண்டில் இனப்படுகொலை அனைத்துலகச் சட்டங்களின் கீழ் குற்றமாக்கப்படுவதற்கு உதவின.
This article uses material from the Wikipedia தமிழ் article இனப்படுகொலை, which is released under the Creative Commons Attribution-ShareAlike 3.0 license ("CC BY-SA 3.0"); additional terms may apply (view authors). வேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 4.0 இல் கீழ் கிடைக்கும். Images, videos and audio are available under their respective licenses.
®Wikipedia is a registered trademark of the Wiki Foundation, Inc. Wiki தமிழ் (DUHOCTRUNGQUOC.VN) is an independent company and has no affiliation with Wiki Foundation.