மலேசியா எயர்லைன்ஸ் விமானம் 370 (MH370, அல்லது புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் படி சீனா சதர்ன் ஏர்லைன்ஸ் விமானம் CZ748) என்பது 227 பயணிகள் மற்றும் 12 பணிக்குழுவினரோடு காணாமல் போன போயிங் 777 வகை விமானம் ஆகும்.
காணாமல்போன 9M-MRO விமானம், 2011ம் ஆண்டு சார்லசு டிகால் வானூர்தி நிலையத்தில் | |
சுருக்கம் | |
---|---|
நாள் | 8 மார்ச் 2014 |
சுருக்கம் | காணவில்லை, தேடும் பணி நடக்கின்றது |
இடம் | கடைசித் தொடர்பு: தென்சீனக் கடலின் கோத்தா பாருவில் இருந்து 120 கடல் மைல்கள் கிழக்கே |
பயணிகள் | 227 |
ஊழியர் | 12 |
வானூர்தி வகை | போயிங் 777-2H6ER |
இயக்கம் | மலேசியா எயர்லைன்ஸ் |
வானூர்தி பதிவு | 9M-MRO |
பறப்பு புறப்பாடு | கோலாலம்பூர் பன்னாட்டு வானூர்தி நிலையம், கோலாலம்பூர் |
சேருமிடம் | பெய்ஜிங் தலைநகர் பன்னாட்டு விமான நிலையம், பெய்ஜிங் |
மலேசியா எயர்லைன்ஸின் போயிங் 777 வகை விமானங்களில் அதிக சேதம் விளைவித்ததும், உலகின் போயிங் 777 வகை விமானத்தினால் அதிக உயிர்ச்சேதம் ஏற்படுத்தியதும் இந்த நிகழ்வாக இருக்கும். போயிங் 777 வகை விமானம் இத்தகைய மீட்கமுடியா விபத்துக்குள்ளாவது இது மூன்றாவது முறையாகும்.
மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் இருந்து சீனத் தலைநகர் பெய்ஜிங்கிற்கு 8 மார்ச் 2014 அன்று 00:41 (ம.நே) மணியளவில் இவ்விமானம் புறப்பட்டது. இருவேறு முரண்பாடான தகவல்களின்படி அதிகாலை 01:22 அல்லது 2.40 மணியளவில் தாய்லாந்து வளைகுடாவை கடக்கும் போது இவ்விமானம் கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பை இழந்தது. அப்போது இந்த விமானம் கடலுக்கு மேலே 36,000 அடிகள் உயரத்தில் பறந்துள்ளது.
அமெரிக்கா, சீனா, பிலிப்பைன்சு, மலேசியா சிங்கப்பூர் மற்றும் வியட்னாமிய கடற்படையினர் விமானத்தை தேடும் பணியில் ஈடுபட்டனர்.
தேடும் பணிகளில் உதவிடுமாறு 25 நாடுகளிடம் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளதாக மலேசியா தெரிவித்தது.
சுமத்ராவிலிருந்து தெற்கு இந்தியப் பெருங்கடல்வரை தேடும் பணிகளில் ஆஸ்திரேலியா, இந்தோனேசியா நாடுகள் முன்னெடுத்து வருகின்றன. லாவோசிலிருந்து காப்சியன் கடல்வரை தேடும் பணிகளில் சீனாவும் கசகஸ்தானும் முன்னெடுத்து வருகின்றன.
விமானத்தின் உடைந்த இரு பாகங்கள் என நம்பப்படும் பொருட்களை தெற்கு இந்தியப் பெருங்கடல் பகுதியில் தமது செய்மதிகள் கண்டுபிடித்துள்ளதாக ஆத்திரேலியப் பிரதமர் டோனி அபோட் தெரிவித்தார்.
பூமியின் தொலைதூரப் பகுதியில், கடுமையான சூழலில் விமானங்கள் தொடர்ந்து தேடுதல் பணிகளை செய்தன.
விமானத்தின் உடைந்த பாகம் என நம்பப்படும் பொருள் பற்றிய செய்மதிப் படிமத்தை சீனா ஆராய்ந்து வருவதாக மலேசியா தெரிவித்தது.
விமானத்தின் உடைந்த பாகம் என நம்பப்படும் பொருள் பற்றிய புதிய செய்மதிப் படிமங்களை பிரான்ஸ் தந்துள்ளதாக மலேசியா தெரிவித்தது.
விமானம் தெற்கு இந்துமாக்கடலில் விழுந்துள்ளதாக செய்மதிப் படிமங்கள் மற்றும் ராடார் மூலம் தெரியவந்துள்ளது.
காணாமல் போன இவ்விமானத்தின் வலதுபுற இறக்கையின் சிறுபகுதி மடகஸ்காருக்கு அருகில் அமைந்துள்ள பிரான்ஸ் நாட்டுக்குச் சொந்தமான ரியூனியன் தீவிலிருந்து கண்டெடுக்கப்பட்டு, அச்சிறுபகுதி மலேசியா எயர்லைன்ஸ் விமானம் 370தினுடையதே என உறுதிசெய்யப்பட்டது. இத்தகவலை மலேசியப் பிரதமர் ஆகத்து, 5, 2015 அன்று உத்தியோகபூர்வமாக அறிவித்தார்.
இவ்விமானத்தின் பொறுப்பாளர் (captain) சாகிரே அக்மத் ஷா ஆவார். 53 அகவையினரான இவர் மலேசியாவின் பினாங்கு நகரத்தவர். 1981இல் மலேசியா எயர்லைன்சில் இணைந்த இவர் 18,365 மணிநேரம் விமானம் ஓட்டிய அனுபவம் மிக்கவர் ஆவார். முதல் அதிகாரியான (first officer) இபரிக் அப்துல் அகமதுவும் மலேசியராவார். 27 அகவையினரான இவர் 2007இல் மலேசியா எயர்லைன்சில் இணைந்து 2,763 மணிநேரம் விமானம் ஓட்டிய அனுபவம் மிக்கவர். 227 பயணிகள் மற்றும் 12 பணிக்குழுவினரின் பெயர்ப்பட்டியலை தங்களின் பதிவேட்டிலிருந்து மலேசியா எயர்லைன்ஸ் வெளியிட்டுள்ளது. 12 பணிக்குழுவினரும் மலேசியராவர்.
நாடு | பயணிகள் |
---|---|
ஆத்திரேலியா | 6 |
ஆஸ்திரியா | 1 |
கனடா | 2 |
சீனா | 153 |
பிரான்சு | 4 |
ஆங்காங் | 1 |
இந்தியா | 5 |
இந்தோனேசியா | 7 |
இத்தாலி | 1 |
மலேசியா | 38 (+12 பணிக்குழுவினர்) |
நெதர்லாந்து | 1 |
நியூசிலாந்து | 2 |
உருசியா | 1 |
சீனக் குடியரசு | 1 |
உக்ரைன் | 2 |
ஐக்கிய அமெரிக்கா | 3 |
மொத்தம் (15 நாட்டினர்) | 239 |
இவ்விமானத்தில் பயணம் செய்த இருவர் திருடப்பட்ட கடவுச்சீட்டுக்களைப் பயன்படுத்தியிருப்பதாகத் தெரியவந்ததை அடுத்து, விமானம் காணாமல் போனமை பயங்கரவாதத்துடன் தொடர்புடையதா என்ற கோணத்தில் அமெரிக்க, மலேசிய அதிகாரிகள் ஆராய்ந்து வருகின்றனர்.
விமானத்தின் தகவல் தொடர்பு கட்டமைப்பானது வேண்டுமென்றே செயலிழக்கப்பட்டமை விசாரணையில் தெரியவந்துள்ளதாக மலேசியா அறிவித்தது. கோலாம்பூரில் நடந்த செய்தியாளர்கள் கூட்டத்தில் பேசிய மலேசியப் பிரதமர் நஜிப் ரசாக், செயற்கைக்கோள்கள் மற்றும் ரேடார்கள் தந்துள்ள ஆதாரங்களின்படி, இவ்விமானம் தனது பாதையினை மாற்றியிருப்பதோடு ஏறத்தாழ ஏழு மணி நேரம் வானத்தில் பறந்துள்ளதாக தெரிவித்தார். விமானத்திலிருந்த ஒருவரால் வேண்டுமென்றே நிகழ்த்தப்பட்ட நிகழ்வுகளாக தெரியவருகிறது எனவும் நஜிப் ரசாக் தெரிவித்தார் .
தன்னுடைய ரேடார் ஒரு விமானத்தைக் கண்டுள்ளதாகவும், அவ்விமானம் காணாமல்போன மலேசிய விமானமாக இருக்கக்கூடும் எனவும் தாய்லாந்து இராணுவம் தெரிவித்தது.
ஆப்பிரிக்காவின் மொசாம்பிக் கடற்கரையில் போயிங் வகை விமானத்தின் பாகங்களை கண்டுபிடித்துள்ளதாக அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஆனால் இந்த செய்தி எந்தளவுக்கு உண்மை என்பது இனிமேல்தான் தெளிவாகும்..
இந்த விமானம் விபத்துக்குள்ளானது என்பதற்கான காரணத்தை ஆராய்ந்த அந்த நாட்டின் உளவுத்துறை முற்றுப்பெறாத பிங் (partial ping) தகவலை காரணம் காட்டியுள்ளது. இந்த பிங்கிங் என்பது விமானத்திற்கும் செயற்கைக்கோளுக்குமான தொடர்பு பிரதிபலிப்பு ஆகும். விமானத்தின் எந்த ஒரு பகுதியையும் கண்டுபிடிக்காத நிலையில் அதன் கருப்புப்பெட்டியை தேடும் பணி முடுக்கிவிடப்பட்டுள்ளது. 2015ம் ஆண்டு மார்ச் நிலவரப்படி இதுவரை இந்த விமானம் பற்றிய தகவல் எதுவுமே கிடைக்கவில்லை.
This article uses material from the Wikipedia தமிழ் article மலேசியா எயர்லைன்ஸ் விமானம் 370, which is released under the Creative Commons Attribution-ShareAlike 3.0 license ("CC BY-SA 3.0"); additional terms may apply (view authors). வேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 4.0 இல் கீழ் கிடைக்கும். Images, videos and audio are available under their respective licenses.
®Wikipedia is a registered trademark of the Wiki Foundation, Inc. Wiki தமிழ் (DUHOCTRUNGQUOC.VN) is an independent company and has no affiliation with Wiki Foundation.