நியூசிலாந்து (ஆங்கிலம்: New Zealand ஞூ ஃஜீலண்ட்; மாவோரி: Aotearoa அவ்தேருவா) என்பது பசிபிக் பெருங்கடலின் தென்மேற்குப் பகுதியில் அமைந்துள்ள ஒரு தீவு நாடாகும்.
இது வடக்குத் தீவு, மற்றும் தெற்குத் தீவு ஆகிய இரண்டு முக்கியமான நிலப்பகுதிகளையும், சதாம் தீவுகள் போன்ற பல சிறிய தீவுகளையும் உள்ளடக்கியது. நியூசிலாந்தின் மாவோரி மொழிப் பெயர் ஔதேயாரோவா (Aotearoa) என்பதாகும். இதற்கு நீளமான வெண்ணிற முகில் நிலம் என்று பொருள். குக் தீவுகள், நியுவே, தொக்கேலாவு ஆகியனவும் நியூசிலாந்தின் ஆட்சி எல்லைக்குள் அடங்கியுள்ளன. புவியியல் அடிப்படையில் நியூசிலாந்து மிகவும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது. நியூசிலாந்து தாசுமான் கடலுக்குக் குறுக்காக ஆத்திரேலியா நாட்டுக்கு கிழக்கே 1,500 கிலோமீட்டர்களுக்கு (900 மைல்கள்) அப்பாலும், வடக்கே இதன் அண்மையிலுள்ளவை நியூ கலிடோனியா, பிசி, தொங்கா ஆகிய பசிபிக் தீவுகளுக்குத் தெற்கே ஏறத்தாழ 1000 கிமீ தூரத்துக்கப்பாலும் அமைந்துள்ளது. மனிதர் கடைசியாகக் குடியேறிய நாடுகளில் இதுவும் ஒன்றாகும். இதன் நீண்டகாலத் தனிமையின் காரணமாக, நியூசிலாந்தில், பறவைகளை முக்கியமாகக் கொண்ட தனித்துவமான விலங்கினங்கள், மற்றும் பூஞ்சைத் தாவரங்களும் வளர்ச்சியடைந்துள்ளன. இவற்றுள் பல இனங்கள் மனிதர்களும் அவர்களால் அறிமுகப்படுத்தப்பட்ட பாலூட்டிகளும் நாட்டுக்குள் வந்தபின்னர் அழிந்துவிட்டன. நியூசிலாந்தின் மாறுபட்ட இட அமைப்பியல் மற்றும் கூர்மையான மலை உச்சிகள் காரணமாக நிலங்களின் கண்டத்தட்டுப் பெயர்வு, மற்றும் எரிமலைக் குமுறல்கள் இங்கு அடிக்கடி நிகழ்கின்றன. நியூசிலாந்தின் தலைநகரம் வெலிங்டன் ஆகும். ஆக்லாந்து மக்கள் அதிகமாக வாழும் நகரமாகும்.
நாட்டுப்பண்: "நியூசிலாந்தைக் கடவுள் காப்பாற்றுவார்" (மாவோரி மொழி: "Aotearoa") "அரசரைக் கடவுள் காப்பாற்றுவார்" | |
தலைநகரம் | வெலிங்டன் |
பெரிய நகர் | ஓக்லாந்து |
ஆட்சி மொழி(கள்) | ஆங்கிலம் (98%) மாவோரி (4.2%)3 சமிக்கை மொழி (0.6%) |
இனக் குழுகள் |
|
மக்கள் | நியூசிலாந்தர், கிவி |
அரசாங்கம் | நாடாளுமன்ற மக்களாட்சி, அரசியல் முடியாட்சி |
• அரசர் | மூன்றாம் சார்லசு |
• தலைமை ஆளுநர் | சிண்டி கிரோ |
• பிரதமர் | கிறிஸ் ஹிப்கின்ஸ் |
சட்டமன்றம் | நாடாளுமன்றம் (பிரதிநிதிகள் அவை) |
விடுதலை ஐக்கிய இராச்சியத்திடம் இருந்து | |
• தன்னாட்சி | செப்டம்பர் 26, 1907 |
• வெஸ்ட்மின்ஸ்டர் சட்டம் | டிசம்பர் 11, 1931 |
• அரசியல் சட்டம் 1986 | டிசம்பர் 13, 1986 |
பரப்பு | |
• மொத்தம் | 268,680 km2 (103,740 sq mi) (75வது) |
• நீர் (%) | 2.1 |
மக்கள் தொகை | |
• டிசம்பர் 2007 மதிப்பிடு | 4,252,000 (122வது (2007)) |
• 2006 கணக்கெடுப்பு | 4,143,279 |
• அடர்த்தி | 15/km2 (38.8/sq mi) (204வது) |
மொ.உ.உ. (கொ.ஆ.ச.) | 2008 IMF மதிப்பீடு |
• மொத்தம் | $117.696 பில்லியன் (58வது) |
• தலைவிகிதம் | $27,785 (28வது) |
மொ.உ.உ. (பெயரளவு) | 2008 IMF மதிப்பீடு |
• மொத்தம் | $128.071 பில்லியன் (53வது) |
• தலைவிகிதம் | $30,234 (27வது) |
ஜினி (1997) | 36.2 மத்திமம் |
மமேசு (2007) | 0.943 அதியுயர் · 19வது |
நாணயம் | நியூசிலாந்து டொலர் (NZD) |
நேர வலயம் | ஒ.அ.நே+12 (NZST) |
• கோடை (ப.சே.நே.) | ஒ.அ.நே+13 (NZDT) |
(செப் முதல் ஏப்ரல் வரை) | |
அழைப்புக்குறி | 64 |
இணையக் குறி | .nz |
கிபி 1250-1300 களில் பொலினீசியர்கள் நியூசிலாந்தில் குடியேறி தனித்துவமான மாவோரி கலாசாரத்தைப் பேணி வந்தனர். 1642 ஆம் ஆண்டில் ஏபெல் தாசுமான் என்ற டச்சு நாடுகாண் பயணியே முதன் முதலாக நியூசிலாந்தைக் கண்ட ஐரோப்பியர் ஆவார். 1840 இல் பிரித்தானிய அரசும் மவோரியரும் வைத்தாங்கு உடன்பாட்டை ஏற்படுத்தி நியூசிலாந்தை பிரித்தானியக் குடியேற்ற நாடாக்கினர். இன்றுள்ள 4.5 மில்லியன் மக்களில் பெரும்பான்மையானோர் ஐரோப்பிய வம்சாவழியினர் ஆவர். தாயக மாவோரி இனத்தவர் மிகப்பெரிய சிறுபான்மையினர். இவர்களுக்கு அடுத்ததாக ஆசியரும், பசிபிக் தீவு மக்களும் வாழ்கின்றனர். இதனால் நியூசிலாந்தின் கலாச்சாரம் முக்கியமாக மாவோரி மற்றும் ஆரம்ப கால ஐரோப்பிய கலாசாரங்களை மையப்படுத்தி உள்ளது. அண்மைக் காலத்தில் உலகின் வேறு பகுதிகளில் இருந்து இங்கு குடியேற்றம் தொடங்கியதில் இருந்து பல்கலாச்சாரம் பரவி வருகிறது.
ஐக்கிய இராச்சியத்தின் அரசர் என்ற வகையில் ஐக்கிய இராச்சியத்தின் மூன்றாம் சார்லசு நியூசிலாந்தின் நாட்டுத் தலைவராக உள்ளார். இவரது சார்பில் ஆளுநர் ஒருவர் நியூசிலாந்தில் உள்ளார். அரசரிக்கு நடைமுறையில் எவ்வித அரசியல் அதிகாரமும் கிடையாது. நாட்டின் அரசியல் அதிகாரம் மக்களாட்சி முறையில் தேர்வு செய்யப்படும் ஓரவையைக் கொண்ட நாடாளுமன்றத்திடமே உள்ளது. இதன் தலைவரான தலைமை அமைச்சரே அரசின் தலைவராக உள்ளார். திறந்த பொருளாதார அமைப்பைக் கொண்ட நியூசிலாந்தின் பொருளாதாரம் உலகில் கூடிய அளவு கட்டற்ற சந்தை முறையைக் கொண்ட முதலாளித்துவ பொருளாதாரங்களில் ஒன்று. நாடாளுமன்றத்தை விட நியூசிலாந்தில் 78 உள்ளூராட்சி அமைப்புகள் உள்ளன. அத்துடன் நியூசிலாந்தின் ஆளுகைக்கு உட்பட்ட பகுதியில் டோக்கெலாவ் (சார்பு மண்டலம்); குக் தீவுகள் மற்றும் நியுவே (சுயாட்சி அமைப்புடைய மாநிலங்கள்) ஆகியனவும், அன்டார்க்டிக்காவில் உள்ள ரொசு சார்பு மண்டலமும் உள்ளன. நியூசிலாந்து ஐக்கிய நாடுகள் அவை, பொதுநலவாய நாடுகள், அன்சஸ், பொருளியல் கூட்டுறவு மற்றும் வளர்ச்சிக்கான அமைப்பு, பசிபிக் தீவுகளின் ஒன்றியம், ஆசிய-பசிபிக் பொருளாதாரக் கூட்டமைப்பு ஆகிய அமைப்புகளில் உறுப்பு நாடாக உள்ளது.
டச்சு நாடுகாண்பயணி ஏபெல் தாசுமான் 1642 ஆம் ஆண்டில் நியூசிலாந்தைக் கண்டு அதற்கு Staten Landt எனப் பெயரிட்டார். தென்னமெரிக்காவின் தென்முனையில் இதே பெயரைக்கொண்ட நிலப்பகுதி இதனை இணைப்பதாக அவர் கருதினார். 1645 இல் டச்சு நிலப்படவரைவாளர்கள் டச்சு மாகாணமான சீலாந்து (Zeeland) என்ற பெயரை அடிப்படையாகக் கொண்டு இந்நிலத்துக்கு நோவா சீலாந்தியா (Nova Zeelandia) எனப் பெயரிட்டனர். பிரித்தானியக் கப்டன் சேமுசு குக் இதே பெயரை ஆங்கிலப்படுத்தி நியூ சீலாண்ட் (New Zealand) என அழைத்தார்.
ஔதேயாரோவா (Aotearoa, "நீண்ட வெணிற முகிலின் நிலம்" எனப் பொருள்) என்பது நியூசிலாந்தின் தற்போதைய மாவோரி மொழிப் பெயராகும். ஐரோப்பியர்கள் குடியேறுவதற்கு முன்னர் முழு நாட்டுக்கும் இதே மாவோரி பெயர் இருந்ததா என்பது அறியப்படவில்லை, ஆனாலும் ஆரம்பத்தில் வடக்குத் தீவு மட்டுமே ஆவோதேயாரோவா என அழைக்கப்பட்டு வந்தது. இரு முக்கிய தீவுகளும் மவோரி மொழியில் பாரம்பரியமாகப் பல பெயர்களால் அழைக்கப்பட்டு வந்துள்ளது. வடக்குத் தீவு தே இகா-ஆ-மாவுய் (மாவுயின் மீன்), என்றும் தெற்குத் தீவு தே வைப்பவுனாமு (பச்சைக்கல்லின் நீர்நிலைகள்) எனவும் மவோரி மொழியில் அழைக்கப்படுகின்றன. ஆரம்பகால ஐரோப்பிய நிலவரைகள் இத்தீவுகளை வடக்கு (வடக்குத் தீவு), நடு (தெற்குத் தீவு), மற்றும் தெற்கு (ஸ்டூவர்ட் தீவு) எனக் குறிப்பிட்டன. 1830 இல், வடக்கு, தெற்கை மிகப்பெரிய இரண்டு தீவுகளாக வேறுபடுத்தி நிலவரைகள் வரையப்பட்டன. 1907 வாக்கில் இது பரவலாக ஏற்றுக் கொள்ளப்பட்டது. 2013 ஆம் ஆண்டில் இவ்விரண்டு தீவுகளுக்கு வடக்குத் தீவு (தே இகா-ஆ-மாவுய்), தெற்குத் தீவு (தே வைப்பவுனாமு) என முறைப்படி ஏற்றுக் கொள்ளப்பட்டது. இரு பெயர்களில் ஏதாவது ஒன்றையோ, அல்லது இரண்டையுமோ அதிகாரபூர்வமாகப் பயன்படுத்தலாம்.
நியூசிலாந்து மிகவும் அண்மைக்காலத்தில் குடியேற்றம் நிகழ்ந்த மிகப்பெரிய நிலப்பகுதிகளுள் ஒன்று. கதிரியக்கக்கரிமக் காலக்கணிப்பு, காடழிப்புக்கான ஆதாரங்கள் மற்றும் மாவோரி மக்களிடையே காணப்படும் இழைமணிகளின் டிஎன்ஏ மாறுபாடுகள் போன்றவை கிழக்குப் பொலினீசியர்கள் 1250 - 1300 ஆம் ஆண்டுகளில் தெற்குப் பசிபிக் தீவுகளில் இருந்து தொடர்ச்சியான பல புலப்பெயர்வுகளின் இறுதியில் நியூசிலாந்தில் முதன்முதலில் குடியேறியவர்கள் என்பதைக் காட்டுகின்றன. இதற்குப் பிந்திய சில நூற்றாண்டுகளில் இவர்கள் தனித்துவமான பண்பாட்டைக் கொண்ட மாவோரி என்னும் இனத்தவராக வளர்ச்சியடைந்தனர். "ஐவி" (iwi) என்ற இனக்குழுவாகவும், "ஆப்பூ" (hapū) என்ற துணை இனக்குழுவாகவும் பிரிந்துள்ளனர். இவர்கள் சில சமயங்களில் கூட்டுறவுடனும், சிலவேளைகளில் போட்டியிட்டும், சண்டை செய்து கொண்டும் வாழ்ந்துள்ளனர். ஒரு காலகட்டத்தில் மாவோரி இனத்தின் ஒரு பிரிவினர் நியூசிலாந்தில் இருந்து 680 கிமீ தென்கிழக்கேயுள்ள சதாம் தீவுகளுக்கும் குடிபெயர்ந்துள்ளனர். அத்தீவுகளுக்கு அவர்கள் ரெக்கோகு (Rēkohu) என்ற பெயரையும் சூட்டினர். அங்கே இவர்கள் தனித்துவமான மொரியோரி பண்பாடு ஒன்றை உருவாக்கினர். 1830களில் தரனாக்கி மாவோரி ஆக்கிரமிப்பு மற்றும் அடிமைப்படுத்தலாலும், ஐரோப்பிய நோய்களின் தாக்கங்களினாலும் 1835 - 1862 காலப்பகுதியில் மோரியோரி இனம் பெரும் அழிவைச் சந்தித்தது. 1862 இல் 101 மோரியோரிகளே எஞ்சியிருந்தனர். கடைசி மொரியோரி இனத்தவர் 1933 ஆம் ஆண்டில் இறந்தார்.
நியூசிலாந்தை அடைந்த முதல் ஐரோப்பியர் 1642 இல் தரையிறங்கிய டச்சு மாலுமி ஏபல் தாசுமன் மற்றும் அவரது குழுவினரும் ஆவர். மாவோரிகளுடன் இடம்பெற்ற சண்டையில் தாசுமனின் மாலுமிகள் நால்வர் கொல்லப்பட்டனர். குறைந்தது ஒரு மாவோரி இனத்தவர் சுட்டுக் கொல்லப்பட்டார். பின்னர் 1769 இல் பிரித்தானிய மாலுமி சேமுசு குக் கரையோரப் பகுதி முழுவதையும் சுற்றி வந்த போதே ஐரோப்பியர்கள் இரண்டாவது தடவையாக இங்கு வந்தனர். குக்கைத் தொடர்ந்து ஐரோப்பிய, வட அமெரிக்க திமிங்கில வேட்டையாளர்கள் மற்றும் வணிகக் கப்பல்கள் இங்கு வந்து போயின. அவர்கள் உணவு, உலோகக் கருவிகள், ஆயுதங்கள் போன்றவற்றை மரம், கைவண்ணப் பொருட்கள், நீர் போன்றவற்றுக்காகப் பண்டமாற்றம் செய்தனர். உருளைக்கிழங்கு, மற்றும் துப்பாக்கிகளின் அறிமுகம் மாவோரிகளின் வேளாண்மை, மற்றும் போர்முறைகளில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியது. 1801 முதல் 1840 ஆம் ஆண்டுக் காலப்பகுதியில் உள்ளூர் மாவோரிகளிடையே 600 இற்கும் அதிகமான போர்கள் இடம்பெற்றன. 30,000 முதல் 40,000 வரையான மாவோரிகள் கொல்லப்பட்டனர். 19ம் நூற்றாண்டின் ஆரம்பம் முதல், கிறித்தவ சமயப் பரப்பாளர்கள் நியூசிலாந்தில் குடியேற ஆரம்பித்தனர். இறுதியில் மாவோரி இனத்தவரின் பெரும்பாலானோர் மதம் மாறினர். 19ம் நூற்றாண்டில் மாவோரி இனத்தவரின் மகக்ள்தொகை 40% ஆகக் குறைந்தது. ஐரோப்பியர்களால் கொண்டுவரப்பட்ட நோய்களே இவர்களில் பெரும்பான்மையோரை அழித்தது.
1788 இல் ஆர்தர் பிலிப் நியூ சவுத் வேல்சு (இன்றைய ஆத்திரேலியாவின் ஒரு மாநிலம்) ஆளுனராகப் பதவியேற்ற போது நியூசிலாந்தை நியூ சவுத் வேல்சின் ஒரு பகுதியாக அறிவித்தார். 1832 இல் சேமுசு பசிபி என்பவர் நியூசிலாந்தின் பிரித்தானிய அரசின் பிரதிநிதியாக நியமிக்கப்பட்டார். 1835 இல், சார்ல்சு டி தியேரி என்பவர் பிரெஞ்சுக் குடியேற்றத்தை ஆரம்பிக்கவிருப்பதாக அச்சுறுத்திய போது, நியூசிலாந்தின் ஐக்கியப் பழங்குடியினர் என்ற அமைப்பு நியூசிலாந்தின் விடுதலையை அறிவித்து தமக்குப் பாதுகாப்பு வழங்குமாறு ஐக்கிய இராச்சியத்தின் நான்காம் வில்லியம் மன்னரைக் கேட்டுக் கொண்டது. இதனால் எழுந்த குழப்பநிலையை அடுத்து பிரித்தானிய அரசு நாட்டை தமது வசப்படுத்துவதற்காகவும் மாவோரி மக்களுடன் உடன்பாடு ஒன்றை ஏற்படுத்தவும் வில்லியம் ஓப்சன் என்ற கேப்டனை நியூசிலாந்துக்கு அனுப்பியது. 1840 பெப்ரவரி 6 இல் வைத்தாங்கி ஒப்பந்தம் பே ஒஃப் ஐலன்ட்சு (Bay of Islands) என்ற இடத்தில் கையெழுத்திடப்பட்டது. நியூசிலாந்து கம்பனி என்ற நிறுவனம் வெலிங்டனில் சுயாதீனமான ஒரு குடியேற்றத் திட்டத்தை அமைக்கவிருப்பதாக அறிவித்ததை அடுத்தும்,, பிரெஞ்சுக் குடியேறிகள் அக்கரோவா என்ற பகுதியில் நிலம் ஒன்றைக் கொள்வனவு செய்ய முயற்சித்ததைத் தடுக்கவும், வில்லியம் ஓப்சன் 1840 மே 21 இல் நியூசிலாந்து முழுவதையும் பிரித்தானியாவுக்கு சொந்தம் என அறிவித்தார். வைத்தாங்கி உடன்பாடு ஏற்படுத்தப்பட்டதை அடுத்து, குறிப்பாக ஐக்கிய இராச்சியத்தில் இருந்து, குடியேற்றங்கள் மிக விரைவாக அதிகரித்தன.
நியூசிலாந்து தொடக்கத்தில் நியூ சவுத் வேல்சின் ஒரு குடியேற்றப் பகுதியாக இருந்து, பின்னர் 1841 சூலை 1 இல் தனியான பிரித்தானியக் குடியேற்ற நாடாக அறிவிக்கப்பட்டது. 1852 இல் இங்கு பிரதிநிதித்துவ அரசு பதவியேற்று 1854 ஆம் ஆண்டில் முதலாவது நாடாளுமன்றம் கூடியது.. 1856 இல் உள்நாட்டு விவகாரங்களுக்கான சுயாட்சி உரிமை நியூசிலாந்துக்குக் கிடைத்தது. தெற்குத் தீவு சுயாட்சி உரிமை கோருவதற்கான சாத்தியக்கூறுகள் அதிகம் காணப்பட்டமையால், நியூசிலாந்தின் அன்றைய பிரதமர் ஆல்பிரட் டோமெட் ஆக்லாந்தில் அமைந்திருந்த தலைநகரை தெற்குத் தீவுக்கு மாற்ற முடிவு செய்தார். வெலிங்டன் நகரம் துறைமுகம், மற்றும் தெற்கு, வடக்குத் தீவுகளின் நடுவில் அமைந்திருந்ததால் இந்நகரம் தலைநகராகத் தெரிவு செய்யப்பட்டது. 1865 ஆம் ஆண்டில் வெலிங்டனில் முதன் முறையாக நாடாளுமன்றம் கூடியது. குடியேறிகளின் எண்ணிக்கை அதிகரிக்க, நிலம் தொடர்பான சர்ச்சைகளினால் 1860கள், 70களில் அங்கு போர் இடம்பெற்றது. மாவோரிகளின் பெரும் எணிக்கையானல் இதனால் பறி போனது. 1893 இல் பெண்கள் அனைவருக்கும் வாக்குரிமை வழங்கிய உலகின் முதல் நாடு என்ற பெருமையை நியூசிலாந்து பெற்றது.
1907 ஆம் ஆண்டில் நியூசிலாந்து நாடாளுமன்றத்தின் வேண்டுகோளின் படி, ஐக்கிய இராச்சியத்தின் ஏழாம் எட்வர்ட் மன்னர் நியூசிலாந்தை பிரித்தானியப் பேரரசின் கீழ் மேலாட்சி அரசு முறையை அறிவித்தார். 1947 ஆம் ஆண்டில் நியூசிலாந்து வெசிட்மின்சுடர் இயற்றுச் சட்டத்தை ஏற்றுக் கொண்டு, நியூசிலாந்து மக்களின் ஒப்புதல் இன்றி பிரித்தானிய நாடாளுமன்றம் அந்நாடு தொடர்பாக எவ்வித தீர்மானமும் எடுக்க முடியாது எனத் தீர்மானிக்கப்பட்டது. நியூசிலாந்து பிரித்தானியப் பேரரசுடன் இணைந்து முதலாம், இரண்டாம் உலகப்போர்களில் போரிட்டு, பெரும் பொருளியல் வீழ்ச்சியில் வீழ்ந்து துன்புற்றது. இதனால் அடுத்து வந்த தேர்தலில் தொழிற் கட்சி அரசு பதவிக்கு வந்து பாதுகாப்புவாத பொருளாதாரத்திட்டத்தை முன்னெடுத்தது. இரண்டாம் உலகப்போரின் பின்னர் நியூசிலாந்தின் வளம் பெரிதும் உயர்ந்தது. மாவோரி மக்கள் வேலை தேடி தமது பாரம்பரிய கிராமப் பகுதிகளை விட்டு நகரங்களுக்குக் குடி பெயரத் தொடங்கினர். மாவோரி எதிர்ப்பியக்கம் உருவாகி, ஐரோப்பிய மையவாதத்தை விமரிசித்தது, மாவோரி கலாச்சாரத்துக்கு அதிக அங்கீகாரம், வைத்தாங்கி ஒப்பந்தத்தை சரிவர நடைமுறைப் படுத்தல் போன்றவற்றுக்க்காகக் குரல் கொடுத்தது. 1975 ஆம் ஆண்டில், ஒப்பந்தம் மீறப்படுவதாக சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளை விசாரிப்பதற்காக 1975 ஆம் ஆண்டில் வைத்தாங்கி தீர்ப்பாயம் ஒன்று அமைக்கப்பட்டு பெரும்பான்மையான மாவோரிகளுக்கு வரலாற்று ரீதியாக மேற்கொள்ளப்பட்ட குறைபாடுகளுக்கு தீர்வு கண்டது.
ஒரு தீவுக் கூட்டமான நியூசிலாந்து 268,680 சதுர கிலோ மீட்டர்கள் (103,738 சதுர மைல்கள்) பரப்பளவு கொண்டது. இதில் பெரும்பகுதி, வடக்குத் தீவு, தெற்குத் தீவு எனப்படும் இரண்டு பெரிய தீவுகளுக்கு உரியது. குறைந்த அளவு அகலமாக 22 கிலோமீட்டரைக் கொண்ட குக் நீரிணை வடக்கு, தெற்குத் தீவுகளைப் பிரிக்கிறது. நியூசிலாந்து பரப்பளவு அடிப்படையில் சப்பான், இத்தாலி ஆகிய நாடுகளைவிடச் சற்றுச் சிறியதாகவும், ஐக்கிய இராச்சியத்தை விடச் சற்றுப் பெரிதாகவும் உள்ளது. இதன் வடக்கு-வடகிழக்கு அச்சில் இந்நாடு 1,600 கிமீ (1,000 மைல்கள்) நீளம் கொண்டது. இதன் கரைப் பகுதிகளின் மொத்த நீளம் 15,134 கிமீ (9,404 மைல்) ஆகும். வடக்குத், தெற்குத் தீவுகளை விட, மனிதர் வாழும் சிறிய தீவுகளில் முக்கியமானவை: சுடுவர்ட் தீவு, சதாம் தீவுகள், அவுராக்கி குடாவில் அமைந்துள்ள கிரேட் பேரியர் தீவு, டி'ஊர்வில் தீவு மற்றும் ஆக்லாந்தில் இருந்து 22 கிமீ தொலைவில் உள்ள வைகீக்கி தீவு ஆகியவை ஆகும். நியூசிலாந்து பெருமளவு கடல் வளங்களைக் கொண்டது. தனது நிலப்பரப்பிலும் 15 மடங்கு பெரிதான நான்கு மில்லியன் சதுர கிலோ மீட்டர் (1.5 மில்லியன் சதுர மைல்) பரப்பளவு கொண்ட, உலகின் ஏழாவது பெரிய தனிப் பொருளாதார வலயம் இந் நாட்டில் உள்ளது.
நியூசிலாந்தில் உள்ள மிகப்பெரிய நிலப்பகுதி தெற்குத் தீவு ஆகும். இது இதன் நீள வாக்கில் தெற்கு ஆல்ப்ஸ் எனப்படும் மலைத் தொடரினால் இரண்டாகப் பிரிக்கப்பட்டுள்ளது. இம் மலைத் தொடரின் மிகவுயர்ந்த சிகரம் ஆவேராக்கி/குக் மலை 3,754 மீட்டர்கள் (12,320 அடிகள்) உயரமானது. தெற்குத் தீவில் 3000 மீட்டர்களுக்கு மேல் உயரமான 18 மலைச் சிகரங்கள் உள்ளன. வடக்குத் தீவு தெற்குத்தீவிலும் குறைவான மலைகளைக் கொண்டது ஆயினும் எரிமலைச் செயற்பாடுகளைக் கொண்டது. வடக்குத் தீவில் மிக உயர்ந்த மலையான ருவாப்பேகூ மலை (2,797 மீ / 9,177 அடி) ஒரு இயக்கமுள்ள எரிமலையாகும்.
நியூசிலாந்தின் வேறுபட்ட நில அமைப்புக்கும், இது கடல் மட்டத்துக்கு மேல் வெளிப்பட்டதுக்கும் காரணம் பசிபிக் புவியோட்டுக்கும், இந்திய-ஆத்திரேலியப் புவியோட்டுக்கும் இடையே உள்ள இயங்கியல் எல்லை (dynamic boundary) ஆகும். நியூசிலாந்து, ஆத்திரேலியாவின் அரைப்பங்கு பரப்பளவு கொண்டதும், பெரும்பகுதி நீரில் முழுமையாக அமிழ்ந்துள்ளதுமான நியூசிலாந்தியா என்னும் கண்டம் ஒன்றின் ஒரு பகுதியாகும். சுமார் 25 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர், தட்டுப் புவிப்பொறை இயக்கங்கள் காரணமாக நியூசிலாந்தியா இரண்டு பகுதிகளாக இழுக்கப்பட்டது. இதனை ஆல்ப்ஸ், தாவுப்போ எரிமலை வலயம் ஆகிய பகுதிகளிலுள்ள பிளவுகளிலிருந்து அறிந்து கொள்ளக்கூடியதாக உள்ளது.
பண்பாட்டு அடிப்படையிலும், மொழியியல் அடிப்படையிலும், நியூசிலாந்து பொலினீசியாவின் ஒரு பகுதியாகும். இது பொலினீசிய முக்கோணப் பகுதியின் தென்மேற்கு மூலையாக உள்ளது. நியூசிலாந்தின் அகலக்கோடு 47°தெ 34 ஆக அமைந்துள்ளது. இது வட அரைக் கோளத்தில் இத்தாலியின் அமைவிடத்துடன் பொருந்தி வருகிறது. எனினும் கண்டச் செல்வாக்கிலிருந்து தனிமைப் படுத்தப்பட்டு இருப்பதும், தெற்கிலிருந்து வீசும் குளிர் காற்றுக்களாலும், கடல் நீரோட்டங்களாலும், இதன் காலநிலை மிதமானதாகவே உள்ளது. நாடு முழுதும் மித வெப்பக் காலநிலை நிலவுவதுடன் கடல் சார்ந்ததாகவும் உள்ளது. வெப்பநிலை மக்கள் குடியேற்றம் உள்ள இடங்களில் 0°ச (32°ப) க்குக் கீழ் செல்வதோ அல்லது 30 °C (86 °F) மேல் செல்வதோ கிடையாது. முக்கியமான நகரங்களில் கிறைசுட்சேர்ச்சே மிகவும் வரண்ட நகரமாகும். இது ஆண்டுக்கு 640 மிமீ (25 அங்) மழை வீழ்ச்சியைப் பெறுகிறது. ஆக்லாந்து கூடிய ஈரலிப்பான நகரம். இது ஏறத்தாழ இரண்டு மடங்கு மழையைப் பெறுகிறது. கிறிட்சர்ச், வெல்லிண்டன், ஆக்லாந்து ஆகிய நகரங்கள் ஆண்டுக்குரிய சராசரியாக 2000 மணிநேரங்களுக்கும் மேலான சூரிய ஒளியைப் பெறுகின்றன. தெற்குத் தீவின் தெற்கு மற்றும் தென்மேற்குப் பகுதிகள் குளிர்ந்ததும், மேக மூட்டம் கொண்டதுமான காலநிலையைக் கொண்டுள்ளன. இப் பகுதிகள் ஆண்டுக்கு 1400 - 1600 மணிநேர சூரிய ஒளி பெறுகின்றன. தெற்குத் தீவின் வடக்கு மற்றும் வடகிழக்குப் பகுதிகளே நாட்டில் அதிக சூரிய ஒளியைப் பெறும் பகுதிகளாகும். இவை ஆண்டுக்கு 2400 - 2500 மணிநேர சூரிய ஒளியைப் பெறுகின்றன.
நியூசிலாந்தின் அரசியலமைப்பு சட்டமாக்கபடவிடினும், அது நாடாளுமன்ற முறையுடன் கூடிய அரசியல்சட்ட முடியாட்சி ஆகும். மூன்றாம் சார்லசு நாட்டின் அரசரும், நாட்டுத் தலைவருமாவார். பிரதமரின் ஆலோசனைக்கமைய அரசரால் நியமிக்கப்படும் தலைமை ஆளுநரே அரசரின் பிரதிநிதியாவார். தலைமை ஆளுநர் அரசரின் அதிகாரங்களை செயற்படுத்தும் அதிகாரமுடையவராக உள்ளார். அநீதி வழக்குகளை மீளாய்தல், அமைச்சர்கள், தூதர்கள், மற்றும் முக்கிய அரசு அதிகாரிகளை நியமித்தல் போன்ற வழமையான செயற்பாடுகளையும் சில அரிதான நேரங்களில் நாடாளுமன்றத்தைக் கலைத்தல், சட்ட முன்வரைவை சட்டமாக்க அனுமதி வழங்க மறுத்தல் போன்ற நடவடிக்கைகளையும் எடுக்க வல்லவர். அரசரின் அதிகாரமும் தலைமை ஆளுநரின் அதிகாரமும் அரசியலமைப்பினால் மட்டுப்படுத்தப்பட்டுள்ளன. ஆய அமைச்சரவையின் பரிந்துரை இல்லாது இந்த அதிகாரங்களை வழக்கமாகச் செயல்படுத்த இயலாது.
நியூசிலாந்தின் பாராளுமன்றம் சட்டமியற்றும் அதிகாரத்தையும் நாட்டின் இறைமையையும் கொண்டுள்ளது. இது அரசரையும் சுயாதீனமான நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கொண்டுள்ளது. நாடாளுமன்றத்தில் மேலவையும் அங்கமாக இருந்தது; இது 1950இல் கலைக்கப்பட்டது. அரசர் மற்றும் பிற அரசு அமைப்புகளின் மீதான நாடாளுமன்றத்தின் மீயுயர்வு இங்கிலாந்தில் 1689ஆம் ஆண்டு சட்டத்தினால் நிறுவப்பட்டு நியூசிலாந்துச் சட்டத்தினால் அங்கீகரிக்கப்பட்டது. நாடாளுமன்ற மக்கள் பிரதிநிதிகள் மக்களால் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்; பெரும்பான்மையினர் ஆதரவு பெற்ற கட்சி அல்லது கூட்டணி அரசு அமைக்கின்றது. பெரும்பான்மை இல்லையெனில் மற்ற கட்சிகளின் ஆதரவுடன் சிறுபான்மை அரசு அமையக்கூடும். தலைமை ஆளுநர் பிரதமரின் பரிந்துரைப்படி அமைச்சர்களை நியமிக்கின்றார். பிரதமரின் தலைமையில் கூடும் அமைச்சர்கள் கூடும் ஆய அமைச்சரவை அரசின் மிக உயர்ந்த முடிவெடுத்துச் செயற்படும் அமைப்பாகும். ஆய அமைச்சரவையின் முடிவுகளுக்கு அனைத்து அமைச்சர்களும் கூட்டாகப் பொறுப்பாவர்.
நீதிபதிகளும் நீதிமன்ற அலுவலர்களும் அரசியல் சார்பற்று கட்டமைக்கப்பட்ட விதிகளின்படி நியமிக்கப்படுகின்றனர்; இவர்கள் அரசியல் அமைப்பின்படி அரசரிடமிருந்து முழுமையான விடுதலை பெற்று சுயாதீனமுடையவர்கள். இதனால் நீதிமன்றங்கள் சட்டத்தை மற்றவர்களின் தாக்கமின்றி தெளிவாக்க இயல்கின்றது. இலண்டனில் உள்ள பிரைவி கவுன்சில் மீயுயர் முறையீடு நீதிமன்றமாக இருந்தது; 2004ஆம் ஆண்டிலிருந்து புதியதாக நிறுவப்பட்டுள்ள நியூசிலாந்து உச்ச நீதிமன்றம் இப்பணியை மேற்கொண்டுள்ளது.
1853 முதல் 1993 வரை நடைபெற்ற அனைத்து நாடாளுமன்றத் தேர்தல்களுமே முதலில் கூடுதலாக வாக்குகள் பெற்ற வேட்பாளரே வெல்வதாக அமைந்திருந்தன. 1930 முதல் இந்த தேர்தல்களில் இரண்டு அரசியல் கட்சிகள், நியூசிலாந்து தேசியக் கட்சி, நியூசிலாந்து தொழிலாளர் கட்சி முதன்மை வகித்தன. 1996ஆம் ஆண்டு முதல் விகிதாசாரப் பிரதிநிதித்துவத் தேர்தல் முறையில் அமைந்த கலவை உறுப்பினர் விகிதாச்சாரம் (MMP) பயன்படுத்தப்படுகின்றது. இந்த முறையில் ஒவ்வொரு வாக்காளருக்கும் இரண்டு வாக்குகள் தரப்படுகின்றன; ஒன்று தொகுதிக்கானது (சில மாவோரிகளுக்காக ஒதுக்கப்பட்டுள்ளன), மற்றது கட்சிக்கானது. 2005 முதல், 70 தேர்தல் தொகுதிகள் உள்ளன; மீதம் 50 இடங்கள் கட்சிகள் பெற்ற வாக்குகளுக்கு ஏற்ப பிரித்தளிக்கப்படுகின்றன. இந்த இடங்களைப் பெற ஒரு கட்சி ஒரு தேர்தல் தொகுதியிலாவது வென்றிருக்க வேண்டும், அல்லது கட்சிகளுக்கான மொத்த வாக்குகளில் 5% ஆவாது பெற்றிருக்க வேண்டும். மார்ச் 2005க்கும் ஆகத்து 2006க்கும் இடையிலான காலத்தில் நாட்டின் மிக உயரிய பதவிகள் (நாட்டுத் தலைவர், தலைமை ஆளுநர், பிரதமர், நாடாளுமன்ற அவைத்தலைவர், தலைமை நீதிபதி) அனைத்திலும் பெண்கள் பதவியிலிருந்த உலகின் ஒரே நாடாக நியூசிலாந்து இருந்தது.
நியூசிலாந்து உலகின் மிகவும் நிலைத்தத்தன்மை உடைய மற்றும் நன்கு அரசாளப்படும் நாடுகளில் ஒன்றாக அறியப்படுகின்றது. 2011இல் நாட்டின் மக்களாட்சி அமைப்புக்களின் வலிமை கொண்டு தரபடுத்திய பட்டியலில் நியூசிலாந்து ஐந்தாவதாக உள்ளது. அரசின் தெளிவுத்தன்மை மற்றும் ஊழலற்ற ஆட்சிக்கு முதலாவதாக உள்ளது. அண்மைய தேர்தல்களில் வாக்காளர் பங்களிப்பு 79% ஆக உள்ளது.
நியூசிலாந்து நவீன, வளமையான, வளர்ந்த சந்தைப் பொருளாதாரத்தை கொண்டுள்ளது. தனிநபர் கொள்வனவு ஆற்றல் சமநிலை அடிப்படையிலான மொத்த உள்நாட்டு உற்பத்தி ஏறத்தாழ US$28,250 ஆக உள்ளது. நியூசிலாந்தின் நாணயம் "கிவி டாலர்" என அறியப்படும் நியூசிலாந்து டாலர் ஆகும்; இது குக் தீவுகள், நியுவே, டோக்கெலாவ், மற்றும் பிட்கன் தீவுகளிலும் செல்லுபடியாகின்றது. 2013 மனித வளர்ச்சிச் சுட்டெண்படி ஆறாவதாக தரவரிசைப்படுத்தப்பட்டுள்ளது.
காலந்தொட்டு, பிழிந்தெடுக்கின்ற தொழில்கள் நியூசிலாந்தின் பொருளியலில் முதன்மையாக இருந்துள்ளன; அடைத்தல், திமிங்கல வேட்டை, பார்மியம், தங்கம், கவுரி பிசின் மற்றும் உள்நாட்டு வெட்டுமரம் தொழில்களும் பல்வேறு காலங்களில் முதன்மை பெற்றுள்ளன. 1880களில் குளிரூட்டப்பட்ட கப்பல்கள் உருவாக்கத் தொடங்கிய பிறகு, இறைச்சியும் பால்பொருட்களும் பிரித்தானியாவிற்கு ஏற்றுமதியாயிற்று; இது நியூசிலாந்தின் பொருளியல் வளர்ச்சிக்கு அடிப்படையாக அமைந்தது. ஐக்கிய இராச்சியத்திலும் ஐக்கிய அமெரிக்காவிலும் வேளாண்மைப் பொருட்களுக்கு தேவை மிகுந்தநிலையில் நியூசிலாந்தின் பொருளியலும் வாழ்க்கைத்தரமும் உயரத் தொடங்கியது. 1950களிலும் 1960களிலும் நியூசிலாந்தின் வாழ்க்கைத்தரம் ஆத்திரேலியா, மேற்கு ஐரோப்பியர்களுடையதை விட உயர்ந்ததாக இருந்தது. 1973இல் ஐக்கிய இராச்சியம் ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைந்த பிறகு நியூசிலாந்தின் ஏற்றுமதிச் சந்தை குறையத் தொடங்கியது. 1973 எண்ணெய் மற்றும் 1979 ஆற்றல் நெருக்கடிகளால் பெரும் பொருளியல் தாழ்வு ஏற்பட்டது. 1982இல் நியூசிலாந்தின் தனிநபர் வருமானம் உலக வங்கியால் மதிப்பிடப்பட்ட அனைத்து வளர்ந்த நாடுகளில் மிகவும் குறைந்ததாக இருந்தது. 1984 முதல் அடுத்தடுத்த அரசுகள் முதன்மை பருப்பொருளியல் சீரமைப்பை மேற்கொண்டு, நியூசிலாந்தை மிகவுயர்ந்த பாதுகாக்கப்பட்ட பொருளாதாரத்திலிருந்து தாராளமயமாக்கப்பட்ட கட்டற்ற பொருளியலுக்கு மாற்றி முன்னேற்றம் கண்டுள்ளன.
நியூசிலாந்து பன்னாட்டு வணிகத்தை மிகவும் நம்பியுள்ளது; குறிப்பாக அதன் வேளாண் பொருட்களின் ஏற்றுமதியை சார்ந்துள்ளது. தேசிய உற்பத்தியில் 24% ஏற்றுமதியால் கிட்டுகின்றது; இதனால் பன்னாட்டு பொருட்சந்தை மற்றும் விலை மாற்றங்களும் உலகளாவிய பொருளியல் பின்னடைவுகளும் நியூசிலாந்தை பெரிதும் பாதிக்கின்றன. நியூசிலாந்தின் ஏற்றுமதிப் பொருட்களில் வேளாண்மை, தோட்டப்பயிர், மீன்பிடித் தொழில், வனத்துறை மற்றும் சுரங்கத்துறை ஆகியவை பாதிக்கும் மேலாக பங்கேற்கின்றன. ஏற்றுமதியில் ஆத்திரேலியா, ஐக்கிய அமெரிக்கா, ஐக்கிய இராச்சியம், சப்பான், சீனா முதன்மைப் பங்கேற்கின்றன. பொருளியலில் சேவைத்துறை முதன்மை வகிக்கின்றது; தயாரிப்பு, கட்டமைப்பு, வேளாண்ண்மை, கனிமத்துறை அடுத்தநிலைகளில் உள்ளன.$15.0 பில்லியன் பெறுமதியுள்ள சுற்றுலாத்துறை 2010இல் நியூசிலாந்தின் மொத்த பணிவாய்ப்புகளில் 9.6 விழுக்காடாக உள்ளது. 19ஆவது நூற்றாண்டின் பிற்பகுதியில் கம்பளி நாட்டில் ஏற்றுமதியாகும் முதன்மை வேளாண் பொருளாக இருந்தது. 1960கள் வரைகூட அனைத்து ஏற்றுமதி வருமானத்தில் மூன்றில் ஒரு பங்காக இருந்தது. ஆனால் தொடர்ந்து உலகச்சந்தையில் இதன் விலை வீழ்ச்சியடைந்து வந்துள்ளது; இதனால் தற்காலத்தில் இது இலாபகரமானத் தொழிலாக இல்லை. மாறாக பால்பொருட்களின் ஏற்றுமதி கூடியுள்ளது. 2009ஆம் ஆண்டு தரவுகளின்படி பாற்பொருட்களின் ஏற்றுமதி மொத்த ஏற்றுமதியில் 21 விழுக்காடாக ($9.1 பில்லியன்) இருந்தது. திராட்சைத்தோட்டங்களும் மது உற்பத்தியும் ஏற்றுமதியில் குறிப்பிடத்தக்க வளர்ச்சி கண்டுள்ளன.
2008இல், நியூசிலாந்தின் ஆற்றல் தேவையில் 69% எண்ணெய், எரிவாயு மற்றும் நிலக்கரி மூலமாகப் பெறப்பட்டது. மீதம் நீர் மின் ஆற்றல் புவிவெப்ப மின்சாரம் போன்ற புதுப்பிக்கத்தக்க ஆற்றல் மூலங்களைக் கொண்டு பெறப்பட்டது.
நியூசிலாந்தின் போக்குவரத்துப் பிணையம் 199 கிலோமீட்டர்கள் (124 mi) நீளமுள்ள விரைவுச்சாலைகள் உட்பட 93,805 கிலோமீட்டர்கள் (58,288 mi) நீளமுள்ள சாலைகளாலும் 4,128 கிலோமீட்டர்கள் (2,565 mi) நீளமுள்ள தொடர்வண்டித் தடங்களாலும் ஆனது. முதன்மை நகரங்களும் ஊர்களும் பேருந்துச் சேவையால் இணைக்கப்பட்டுள்ளன; இருப்பினும் தனிநபர் தானுந்து முதன்மை போக்குவரத்தாக விளங்குகின்றது. தொடர்வண்டித் தடங்கள் 1993இல் தனியார்மயமாக்கப்பட்டன; ஆனால் 2004க்கும் 2008க்கும் இடையே படிப்படியாக இவை மீண்டும் அரசுடமையாக்கப்பட்டன. இத்தடங்களில் பெரும்பாலும் பயணியர் போக்குவரத்தை விட சரக்கு போக்குவரத்தே முதன்மையாக உள்ளது. நியூசிலாந்தில் ஆறு பன்னாட்டு வானூர்தி நிலையங்கள் உள்ளன.
1989 வரை நியூசிலாந்தின் அஞ்சல் அலுவலகம் தொலைத்தொடர்பு தன்னுரிமையாக இயக்கி வந்தது; 1990இல் தனியார் மயமாக்கப்பட்டது. ஐக்கிய நாடுகளின் பன்னாட்டுத் தொலைத்தொடர்பு ஒன்றியம் நியூசிலாந்தை தொலைத்தொடர்புக் கட்டமைப்பில் 12வது இடத்தில் தரப்படுத்தியுள்ளது.
This article uses material from the Wikipedia தமிழ் article நியூசிலாந்து, which is released under the Creative Commons Attribution-ShareAlike 3.0 license ("CC BY-SA 3.0"); additional terms may apply (view authors). வேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 4.0 இல் கீழ் கிடைக்கும். Images, videos and audio are available under their respective licenses.
®Wikipedia is a registered trademark of the Wiki Foundation, Inc. Wiki தமிழ் (DUHOCTRUNGQUOC.VN) is an independent company and has no affiliation with Wiki Foundation.