திருவானைக்காவல், அல்லது திருஆனைக்கா எனப்படும் திருவானைக்கோவில் திருச்சி மாநகரில் அமைந்துள்ள காவேரி ஆற்றின் ஆற்றங்கரையில் அமைந்திருக்கும் மாபெரும் சிவன் கோவில் நகரமாகும்.
இதனைத் திருவானைக்காவல் என்றும் அழைப்பர். சிலர் திருவானைக்கா என்றும் அழைக்கின்றனர். அப்பர், திருஞானசம்பந்தர், சுந்தரர், அருணகிரிநாதர், தாயுமானவர், ஐயடிகள் காடவர்கோன் ஆகியோரால் பாடல் பெற்றதால் இதைப் பாடல் பெற்ற தலம் என்பர். இச்சிவாலயம் சிவனின் பஞ்சபூத தலங்களில் ஒன்றான நீருக்கு உரியது. தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் சோழ நாடு காவிரி வடகரைத் தலங்களில் அமைந்துள்ள 60-ஆவது சிவஸ் தலமாகும்.
தேவாரம் பாடல் பெற்ற திருவானைக்காவல் ஜம்புகேசுவரர் திருக்கோயில் | |
---|---|
புவியியல் ஆள்கூற்று: | 10°51′11″N 78°42′20″E / 10.853020°N 78.705610°E |
பெயர் | |
புராண பெயர்(கள்): | திருஆனைக்காவல், திருஆனைக்கா |
பெயர்: | திருவானைக்காவல் ஜம்புகேசுவரர் திருக்கோயில் |
அமைவிடம் | |
ஊர்: | திருவானைக்காவல் |
மாவட்டம்: | திருச்சிராப்பள்ளி |
மாநிலம்: | தமிழ்நாடு |
நாடு: | இந்தியா |
கோயில் தகவல்கள் | |
மூலவர்: | திருவானைக்கா உடையார், திருவானைக்கா உடைய நாயனார் |
உற்சவர்: | சந்திரசேகரர், சோமாஸ்கந்தர் |
தாயார்: | உலக ஆண்ட நாயகி (அகிலாண்டேஸ்வரி) |
தல விருட்சம்: | வெண்நாவல் |
தீர்த்தம்: | நவ தீர்த்தங்கள், காவிரி தீர்த்தம், இந்திர தீர்த்தம், சந்திர தீர்த்தம் |
ஆகமம்: | சைவாகமம் |
பாடல் | |
பாடல் வகை: | தேவாரம் |
பாடியவர்கள்: | திருநாவுக்கரசர், சுந்தரர், திருஞானசம்பந்தர், தாயுமானவர் |
கட்டிடக்கலையும் பண்பாடும் | |
கட்டடக்கலை வடிவமைப்பு: | தென்னிந்தியக் கட்டடக்கலை |
வரலாறு | |
அமைத்தவர்: | கோ செங்கோட் சோழன் |
வலைதளம்: | http://www.thiruvanaikkavaltemple.org/ |
புராண காலத்தில் வெண் நாவல் மரங்கள் நிறைந்த காடாக இத்தலம் இருந்தது. அங்கே ஒரு வெண் நாவல் மரத்தடியில் ஒரு சிவலிங்கம் இருந்தது. சிவகணங்களில் இருவர் தாங்கள் பெற்ற சாபம் காரணமாக இக்காட்டில் ஒரு யானையாகவும், சிலந்தியாகவும் பிறந்தனர்.
சிவலிங்கம் கூரையில்லாமல் வெயில், மழையில் கிடந்தது. சிலந்தி சிவலிங்கத்தின் மேல் வலை பின்னி வெய்யில், மழை மற்றும் மரத்தின் சருகுகள் லிங்கத்தின் மேல் விழாமல் காத்தது. யானை காவிரியில் இருந்து தன் துதிக்கை மூலம் நீரும் பூவும் கொண்டுவந்து வழிபட்டது. யானை சிலந்தி பின்னிய வலையைத் தேவையற்றதாகக் கருதி அதை அழித்துவிட்டுச் செல்லும். சிலந்தி மறுபடியும் வலைபின்னி தன் வழிபாட்டைத் தொடரும். தினந்தோறும் இது தொடர, யானையைத் தண்டிக்க எண்ணிய சிலந்தி யானையின் துதிக்கையில் புக, யானையும், சிலந்தியும் போராட கடைசியில் இரண்டும் மடிந்தன. இவைகளின் சிவபக்திக்கு மெச்சி சிவபெருமான் யானையைச் சிவகணங்களுக்குத் தலைவனாக ஆக்கினார்.
சிலந்தி மறு பிறவியில் கோச்செங்கட் சோழன் என்ற அரசனாகப் பிறந்தது. பூர்வஜென்ம வாசனையால் கோச்செங்கட் சோழன் யானை ஏற முடியாதபடி குறுகலான படிகளைக் கொண்ட கட்டுமலைமீது சிவலிங்கம் ஸ்தாபித்து 70 கோவில்கள் கட்டினான். அவை யாவும் மாடக்கோவில் என்று அழைக்கப்படுகின்றன. கோச்செங்கட் சோழன் கட்டிய முதல் மாடக்கோவில் திருவானைக்கா ஜம்புகேஸ்வரர் ஆலயமாகும்.
இத்தலத்தின் நான்காவது திருச்சுற்று மதிலை இறைவனே நேரில் ஒரு சித்தரைப் போல் வந்து மதில் சுவர் எழுப்பிய பணியாளர்களுக்குத் திருநீறை கூலியாகக் கொடுத்ததாகத் தலவரலாறு கூறுகிறது. பணியாளர்களின் உழைப்புக்கேற்ப திருநீறு தங்கமாக மாறியதாகவும் தலவரலாறு கூறுகிறது. இதனால் இம்மதிலைத் திருநீற்றான் மதில் என்று அழைக்கிறார்கள்.
இங்கு இருக்கும் ஜம்பு லிங்கம் அன்னையால் செய்யப்பட்டது. ஒரு முறை பூமிக்கு வந்த அம்பிகை சிவனை வழிபட சித்தம் கொண்டார். அழகிய காவேரியில் சிறிது நீர் எடுத்து லிங்கம் வடித்தார். அம்பிகையின் திருக்கரங்களிலிருந்த நீர் லிங்கமாக மாறியது. அம்பிகை அந்த லிங்கத்தை வழிபட்டு ஆனந்தம் அடைந்தார். நீரால் செய்யப்பட்டதால், லிங்கம் ஜம்புகேஸ்வரர் என வழங்கப்படுகிறது.
மற்றொரு சந்நிதியில் குபேர லிங்கம் உள்ளது. மிகப்பெரிய வடிவாகவும், பலமுக ருத்திராட்சம் தாங்கியும் உள்ளது. இந்தக் குபேர லிங்கத்தைக் குபேரன் வழிபட்டதால்தான் சிவன் அருள் பெற்று செல்வந்தன் ஆனார் என்ற வரலாறு எல்லோருக்கும் தெரிந்ததே. இப்போது மக்கள் அதிகம் வழிபாடு செய்யும் இடங்களில் ஒன்றாகக் குபேர லிங்க சன்னிதி ஆகிப்போனது.
பல அரிய சிற்பங்களும் இத்தலத்தில் காணக் கிடைக்கின்றன. அதில் முக்கியமானது மூன்று கால் முனிவர் சிலை. சிவலிங்க சன்னிதிக்கு இடப்புறம் அமைந்துள்ள வெளிப்பிரகாரத் தூண்களில் இந்தச் சிற்பம் காணக் கிடைக்கின்றது. அது மட்டுமின்றி ஏகநாதர் திருவுருவம் அன்னையின் சன்னிதிக்கு வெளியே உள்ள தூணில் காணக் கிடைக்கிறது. ஏகநாதர் என்பது மும்மூர்த்திகளும் சமமானவர் என்றும், எல்லோரும் ஒருவரே என்ற மாபெரும் தத்துவத்தை விளக்கவும் வல்லது.
அது மட்டுமின்றி நான்கு கால் தூணில் உள்ள மங்கைகள் எல்லோர் மனதையும் கவருகின்றார்கள். அவர்களின் கூந்தல் அலங்காரம் பிரம்மிக்க வைப்பதாக உள்ளது. அதிலும் ஒரு சிறு குழந்தையை ஏந்திக்கொண்டு இருக்கும் பெண் மிக தத்ரூபமாகச் செதுக்கப்பட்டுள்ளாள்.
கோவிலை கட்டியவர்கள் முத்தரையர் மன்னர்கள்.பல்வேறு சோழ மன்னர்கள் இக்கோயிலுக்குப் பல கொடைகளை வழங்கியுள்ளனர், இதை இதுவரை இங்குக் கிடைத்துள்ள 156 கல்வெட்டுகள் மூலம் அறியலாம். இவற்றுள் பராந்தக சோழன் பற்றிய கல்வெட்டுகளே மிக தொன்மையானவை.
இத்தலப் பெருமை அறிந்து தமிழ் நாட்டைச் சார்ந்த சோழ பாண்டியர்கள்,முத்தரையர் மட்டுமன்றிப் போசளப் பேரரசர்கள், விஜயநகர அரசர்கள், மதுரை நாயக்கர்கள் போன்றோரும் ஆற்றிய திருப்பணிகளைச் சுமார் நூற்று ஐம்பத்து நான்கு கல்வெட்டுகள் அறிவிக்கின்றன.
பாடியது | பன்னிரு திருமுறை | பண் | பாடல் |
---|---|---|---|
சம்பந்தர் | இரண்டாம் திருமுறை | இந்தளம் | மழையார் மிடறா |
மூன்றாம் திருமுறை | கெளசிகம் | வானைக்காவில் | |
மூன்றாம் திருமுறை | பழம் பஞ்சுரம் | மண்ணது | |
அப்பர் | ஐந்தாம் திருமுறை | திருகுறுந்தொகை | கோனைக் காவிக் |
ஆறாம் திருமுறை | திருதாண்டகம் | எத்தாயர் எத்தந்தை | |
ஆறாம் திருமுறை | திருதாண்டகம் | முன்னானைத் தோல்போர்த்த | |
சுந்தரர் | ஏழாம் திருமுறை | காந்தாரம் | மறைகள் ஆயின |
திருவானைக்கா நாயன்மார்கள் மற்றும் தாயுமானவரின் பாடல் பெற்ற ஒரு தலம். திருநாவுக்கரசர் அருளிய ஒரு தேவாரப் பதிகம் கீழே:
துன்பம் இன்றித் துயரின்றி என்றும்நீர்
இன்பம் வேண்டில் இராப்பகல் ஏத்துமின்
எம்பொன் ஈசன் இறைவன் என்று உள்குவார்க்கு
அன்பன் ஆயிடும் ஆனைக்கா அண்ணலே.
காவேரி நதியோடு சென்று விட்ட சோழனின் மணியாரம், திருமஞ்சனக் குடத்தில் சிக்கிக் கொண்டு எம்பிரானுக்கு ஆபரணமாக விளைந்த அற்புதத்தைச் சுந்தரமூர்த்தி நாயனார் இவ்வாறு வடிக்கிறார்:
தாரமாகிய பொன்னித் தண்டுறையாடி விழுத்து
நீரினின்றடி போற்றி நின்மலாக் கொள்ளென வாங்கே
ஆரங்கொண்ட வெம்மானைக் காவுடையாதியைநாளும்
எனவும், திருஞானசம்பந்தப்பெருமான்
ஆரம் நீரோ டேந்தினா னானைக்காவு சேர்மினே
சைவ ஆகமமாம் பெரிய புராணத்தில் ஏயர்கோன் கலிக்காமநாயனார் வரலாற்றினில், சேக்கிழார் தலத்தின் பெருமையை இவ்வாறு உரைக்கிறார்:
வளவர் பெருமான் திருவாரஞ் சாத்திக் கொண்டு வரும் பொன்னிக்
கிளருந் திரைநீர் மூழ்குதலும் வழுவிப் போகக் கேதமுற
அளவில் திருமஞ் சனக்குடத்தி லதுபுக்காட்ட வணிந்தருளி
தளரு மவனுக் கருள்புரிந்த தன்மை சிறக்கச் சாற்றினார்
தலப் பெருமையைப் பறைசாற்றும் பழந்தமிழ்ப் பாடலொன்று:
மேதகைய பயன்விழைவோர் ஞானதலத் துறைகுவது மேவாதாயின்
ஓதுக அத்தலப்பெயரை யாங்கதுவு முற்றாதே லுரைப்பக்கேட்க
காதலொடு கேட்டவரு மூவகைய பாதகமுங் கடந்துமேலாம்
போதமுணர்ந் தெமதடியிற் புக்கிருப்ப ரிஃதுண்மை பொலங்கொம்பன்னாய்
குடமுழுக்கு நடைபெற்று 16 ஆண்டுகளான நிலையில், இரண்டு கட்டமாகக் குடமுழுக்கு செய்ய ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுப் பாலாலயம் அமைக்கப்பட்டது. முதற்கட்ட குடமுழுக்கு கோயிலில் உள்ள ராஜகோபுர விநாயகர், மல்லப்பா கோபுரம் அருகிலுள்ள விநாயகர் சுப்பிரமணியர், தட்சிணாமூர்த்தி சன்னிதி, 108 சிவலிங்க சன்னிதி ஆகிய 45 சன்னிதிகளின் விமானங்கள், உற்சவமூர்த்திகளுக்கு 9 டிசம்பர் 2018-இல் நடைபெற்றது. இரண்டாவது கட்ட குடமுழுக்கு இராச கோபுரங்களுக்கு 12 டிசம்பர் 2018-இல் நடைபெற்றது.
This article uses material from the Wikipedia தமிழ் article திருவானைக்காவல் ஜம்புகேசுவரர் கோயில், which is released under the Creative Commons Attribution-ShareAlike 3.0 license ("CC BY-SA 3.0"); additional terms may apply (view authors). வேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 4.0 இல் கீழ் கிடைக்கும். Images, videos and audio are available under their respective licenses.
®Wikipedia is a registered trademark of the Wiki Foundation, Inc. Wiki தமிழ் (DUHOCTRUNGQUOC.VN) is an independent company and has no affiliation with Wiki Foundation.