திருநங்கை (Trans woman) எனப்படுவோர் பிறப்புறுப்பால் ஆண் என்று அடையாளப்படுத்தப்பட்டு பின்னர் தம்மை பெண்ணாக உணர்ந்து பெண்களாக வாழ முற்படுவோர்களைக் குறிக்கும்.
இவர்கள் அலி, பேடி, அரவாணி போன்ற பெயர்களில் கேலியாக அழைக்கப்படுவதுடன் சமூகத்தில் ஒதுக்கப்பட்டவர்களாகவும் இருக்கின்றனர்.
"ஐயாயியரம் ஆண்டுகள் தொடர்ச்சியான இந்த பண்பாட்டில் மட்டும்தான் உடல்சார்ந்த பாலினம் சார்ந்த பண்பாட்டு ஆன்மிக மரபுகள் உருவாக்கப்பட்டுள்ளன. பாலினச்சிறுபான்மையினருக்கு மையத்துவம் அளிக்கும் உயிர் சடங்குகள், ஆன்மிக நெறிகள், தெய்வங்கள், திருவிழாக்கள் இங்குதான் உள்ளன. மாற்றுப் பாலினங்களைச் சேர்ந்தவர்கள் இங்கு அரசர்களாக இருந்திருக்கின்றனர். மாற்றுப்பாலினங்களைச் சார்ந்தவர்கள் இங்கு சமய மரபுகளை உருவாக்கியவர்களாக இருந்திருக்கின்றனர். அவர்கள் மதபீடங்களை நிறுவியிருக்கிறார்கள். சம்பிரதாய மத எல்லைகளை கடந்த ஆன்மிகப் பண்பாட்டை கட்டி எழுப்பியிருக்கிறார்கள். பூசகர்களாக இருந்திருக்கிறார்கள். இருக்கிறார்கள். ஆன்மிக வழிகாட்டிகளாக இருக்கிறார்கள். இவற்றை காப்பாற்றுவது நம் பெரும் பொறுப்பு"
—கோபி ஷங்கர்,ஸ்ருஷ்டி மதுரை
விரைத் தறிப்புச் செய்யப்பட்ட ஒரு நபர் தன்னைப் பெண்ணாக, அல்லது ஆணாக அடையாளப்படுத்தலாம். எதிர்பால் உடையணிபவர்களையும் அலி என அழைப்பதுண்டு. முன்னைய காலத்தில் சேவகர்கள் விரைத் தறிப்புச் செய்யப்பட்டு சேவைக்கு அமர்த்தப்படுவதுண்டு. குறிப்பாக அந்தப்புரத்தில் சேவைக்கு இவர்கள் அமர்த்தப்படுவதுண்டு. மகாபாரதத்தில் அர்ச்சுனன் அலியாக வேடமிட்டதாகவும், சிகண்டி என்ற அலி பற்றியும் கூறப்பட்டுள்ளது.
பல காலமாக அலி, அரவாணி போன்ற சொற்களால் கேலியுடன் அழைக்கப்பட்டு சமூகத்தில் ஆண்களாகவோ அல்லது பெண்களாகவோ வாழ முடியாமல் மன உளைச்சலுடன் சமூக மதிப்பு எதுவுமில்லாமல் தனிப்பட்ட சமுதாயமாக எந்தத் தொழிலும் செய்ய முடியாமல் கேளிக்கை நடனம் மற்றும் பாலியல் தொழிலில் கட்டாயப்படுத்தப்பட்டு வாழ்க்கையின் அர்த்தம் தெரியாமல் அவலத்தில் வாழ்ந்து வருபவர்கள். இவர்கள் பொதுவாகத் தமது குடும்பச் சூழலை விட்டு விலகி, திருநங்கைகள் எனும் குழுமத்தில் கலந்து விடுகிறார்கள். திருநங்கைகள் தங்களின் உரிமைகளை பெற தற்போது பெரிதளவில் முயன்று வருகின்றனர். இதுவே இவர்கள் சமூக நிலையாக இருக்கிறது. திருநங்கைகளை 2015ஆம் ஆண்டில் தமிழ்நாடு அரசு மிகவும் பிற்படுத்தப்பட்டவர்கள் பட்டியலில் சேர்த்துள்ளது.
இந்தியாவில் இவர்களுக்கான சமுதாய மதிப்பு கல்வி பெருவதிலும் வேலைவாய்ப்பை வழங்குவதிலும் இருக்கிறது என்று கருதிய அரசு வேலை வழங்கிவருகிறது.
ஆயிஷா பாரூக் அவர்களின் வரிகளில் திருநங்கை என்பவள்.. "மங்கையானவள் திருநங்கையானவள் நிழலின் இருளில் சிரிப்பவள் அன்பின் ஊற்றாய் பிறந்தவள் வலியின் வலியை தாங்கியவள் திறமைகளை தீர்க்கமாய் பெற்றவள் ஆணாகி பெண்ணாகி யாதுமானவள்"
திருநங்கைகள் சட்டப்படி முழு உரிமையும் பெற்ற, ஏற்றுக் கொள்ளப்பட்டவர்களாக வாழ்கின்றார்கள்.
மரபு ரீதியான இனப் பெருக்கத்தின் அடிப்படையிலான தொடர்ச்சி எதுவும் இல்லாமலேயே அரவாணிகள் சமூகம், தமது பாரம்பரியத்தை வரலாற்றோடு இனம் கொண்டு ஒரு சமூகத்தையும், தனித்துவமான குடும்ப அமைப்புகளையும், தனித்துவமான சடங்குகளையும், வாய்மொழி மரபுகளையும் பேணி வருகிறது. பல்வேறு தனித்துவம் கொண்ட வேறுபட்ட கூறுகளையும், பண்பாட்டையும், கலாச்சாரத்தையும் கொண்ட தேசமாய் விளங்கும் இந்தியா முழுக்க அரவாணிகள் சமூகம் தனக்கென ஒரு பொதுப் பண்பாட்டையும், பொது கலாச்சார சடங்குகளையும், பொது வழக்காற்றையும் கொண்டுள்ளது. பொதுவான நாட்டார் வழக்காற்றிலிருந்து அரவாணிகள் வழக்காறு முற்றிலும் வேறுபட்டது.
திருநங்கையர்களின் சமூக பாதுகாப்பு கருதியும், அவர்களின் சிறப்பை வலியுறுத்தும் வகையில் ஏப்ரல் 15, 2008 ஆம் ஆண்டு தமிழக அரசு திருநங்கையர்களுக்கு தனி நலவாரியம் அமைத்தது.இந்த நலவாரியம் அமைக்கப்பட்ட அந்த நாளை திருநங்கையர் தினமாக ஒவ்வொரு வருடமும் கொண்டாட தமிழக அரசு, மார்ச் 1, 2011 அன்று அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
ஒரு திருநங்கையின் வாழ்வில் மிக முக்கியமான தருணம் அல்லது நிகழ்வு கூத்தாண்டவர் திருவிழா. அந்த அளவிற்கு திருநங்கைகளின் உணர்வோடு பின்னிப் பிணைந்த ஒரு சமுதாயச் சடங்கு அது. திருநங்கைகள் சமூகத்திற்கென்றே தனித்துவ அடையாளமாக விளங்கும் இந்த திருவிழா ஒவ்வோர் ஆண்டும் சித்திரை மாதம் பௌர்ணமி நாளன்று கொண்டாடப்படுகிறது.
This article uses material from the Wikipedia தமிழ் article திருநங்கை, which is released under the Creative Commons Attribution-ShareAlike 3.0 license ("CC BY-SA 3.0"); additional terms may apply (view authors). வேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 4.0 இல் கீழ் கிடைக்கும். Images, videos and audio are available under their respective licenses.
®Wikipedia is a registered trademark of the Wiki Foundation, Inc. Wiki தமிழ் (DUHOCTRUNGQUOC.VN) is an independent company and has no affiliation with Wiki Foundation.