திராவிடர் என்னும் சொல், திராவிட மொழிக் குடும்பத்தைச் சேர்ந்த மொழியொன்றைத் தாய் மொழியாகக் கொண்ட மக்களைக் குறிக்கும்.
தற்காலத்தில் திராவிடர்கள் செறிந்து வாழும் பகுதி, தென்னிந்தியாவில் விந்திய மலைக்குத் தெற்கேயுள்ள பகுதியாகும். இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்குப் பகுதிகளும் திராவிடர்களின் தாயகங்களில் ஒன்றாகத் திகழ்கின்றது. மத்திய இந்தியா, வட இந்தியா, பாகிஸ்தான், நேபாளம் போன்ற பகுதிகளிலும் சிறிய அளவில் பாரம்பரியமாக வாழும் திராவிடர் காணப்படுகின்றனர்.
தென்னிந்தியாவில் திராவிட மொழிகள் தற்போது பேசப்படும் இடங்கள் | |
மொத்த மக்கள்தொகை | |
---|---|
ஏறக்குறைய 217 மில்லியன் | |
குறிப்பிடத்தக்க மக்கள்தொகை கொண்ட பகுதிகள் | |
மொழி(கள்) | |
திராவிட மொழிகள் | |
சமயங்கள் | |
இந்து, சமணம், பௌத்தம், இசுலாம், யூதம், கிறித்தவம் | |
தொடர்புள்ள இனக்குழுக்கள் | |
பிராகுயி மக்கள் · கோண்டு மக்கள் · கன்னடர் · கொடவர் · மலையாளிகள் · தெலுங்கர் · பஞ்ச திராவிடப் பிராமணர் · தமிழர் · துலுவர் · |
திராவிடம் என்பது தமிழைக் குறிக்கும் சொல்லாக பழங்காலத்திலிருந்தே பயன்படுத்தப்பட்டு வருகிறது. ஆழ்வார்கள் பாடிய பாசுரங்கள் 'திராவிட வேதம்' ('தமிழ் வேதம்') என்று அழைக்கப்படுகின்றன. திருவாய்மொழியை 'திராவிட வேத சாகரம்' ('தமிழ் வேதக்கடல்') என்று நாதமுனிகள் சிறப்பித்துள்ளார். திராவிடம் என்ற சொல் சமஸ்கிருதச் சொல் என்றும் அச்சொல் திரிபடைந்தே தமிழ் என்ற சொல் உருவானதென்றும் தொடக்கத்தில் ஆய்வாளர்கள் கருதினர். பெரும்பாலும் வெளிநாட்டவரான அக்கால ஆய்வாளர்கள், சமஸ்கிருதப் பின்னணியுடனேயே திராவிட மொழி ஆராய்ச்சியில் இறங்கியவர்கள் ஆதலால், இந்த கருதுகோள் அவர்களுக்கு இயல்பாக இருந்தது. வேறு சில ஆய்வாளர்கள், முக்கியமாகத் தமிழ் நாட்டினர், தமிழ் என்ற சொல் மருவியே திரவிட என்னும் சமஸ்கிருதச் சொல் உருவானதாக வாதிடுவர். இவ் விடயத்தில் ஒத்த கருத்து ஏற்படுவதற்கு ஏதுவாகத் தக்க சான்றுகள் எதுவும் இன்னும் கிடைக்கவில்லை. இரண்டு சொற்களும் ஒன்றுக்கொன்று தொடர்பில்லாதவை என்றும் வெவ்வேறு சாராரைக் குறிப்பன என்றும் கனகசபைப்பிள்ளை போன்றவர்கள் கருதினார்கள். எனினும் இக்கொள்கைக்குப் போதிய ஆதரவு இல்லை.
திராவிட மொழிகளில் முக்கியமானவை தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், துளு என்பனவாகும். இவை தவிர இன்னும் பல சிறிதும் பெரிதுமான திராவிட மொழிகள் தென்னிந்தியாவிலும், அதற்கு வெளியேயும் பேசப்பட்டு வருகின்றன. இவற்றுள் தமிழ் தவிர்ந்த ஏனையவை பெருமளவு வடமொழிச் செல்வாக்குக்கு உட்பட்டு மாற்றம் அடைந்துவிட்டன. தமிழ் மட்டுமே பெருமளவுக்குத் திராவிடச் சொற்களுடன் பேசப்படக்கூடிய மொழியாக இன்னும் இருந்து வருகிறது. இன்று திராவிட மொழிக் குடும்பத்தில், சுமார் 85 மொழிகள் வரை இருப்பது அறியப்பட்டுள்ளது.
19 ஆம் நூற்றாண்டில், வட இந்தியாவில் வாழும் மக்கள் பேசும் இந்தோ-ஆரிய மொழிகளுக்குப் புறம்பாக அம் மொழிகளுடன் அடிப்படையில் தொடர்புகளற்ற மொழிக்குடும்பம் ஒன்றைச் சேர்ந்த மொழிகள் தென்னிந்தியாவில் பேசப்பட்டு வருவதை அறிந்தார்கள். இதனால், பொதுவாகக் கரு நிறத் தோல் கொண்டவர்களான திராவிட மொழி பேசுவோர், பரம்பரையியல் அடிப்படையில் தனியான இனம் எனக் கருதினார்கள். அதற்கு இணங்கத், திராவிடர் இந்தியாவின் ஆதிக்குடிகள் என்றும், அவர்கள் ஆரியர் வருகையினால் ஒரு பகுதியினர் தெற்கு நோக்கி இடம் பெயர, ஏனையோர் ஆரிய மொழி பேசுவோருடன் கலந்துவிட்டதாகவும் கருதினர்.
திராவிடம் என்ற சொல் சமஸ்கிருதச் சொல்லான திரவிட என்பதிலிருந்து பெறப்பட்டது. திராவிட மொழிகளைப் பற்றி ஆராய்ந்த ராபர்ட் கால்டுவெல் (Robert Caldwell), எழுதிய திராவிட அல்லது தென்னிந்தியக் குடும்ப மொழிகளின் ஒப்பியல் இலக்கணம் (Comparative grammar of the Dravidian or South-Indian family of languages)என்னும் ஆங்கில நூல் 1856 இல் வெளியிடப்பட்ட பின்னரே இச் சொல், தற்காலப் பொருளுடன் பரவலான பயன்பாட்டுக்கு வந்தது. மேற்படி நூலே திராவிட மொழிகளை உலகின் முக்கிய மொழிக் குடும்பங்களில் ஒன்றாக நிலை நிறுத்தியது.
திராவிட இனம் பொதுவாக காகசாய்டு இனத்தின் ஒரு பகுதியாக கருதப்படுகிறது.
திராவிட இனத்தின் தோற்றம் பற்றித் தெளிவான முடிவுக்கு வரக்கூடிய சான்றுகள் இல்லாததால், இது தொடர்பான சர்ச்சைகள் முடிவில்லாது தொடர்கின்றன. இந்தப் பின்னணியில் பல்வேறு வகையான கருத்துக்களை ஆய்வாளர்கள் முன்வைத்துள்ளனர். திராவிடரும், வெளியிலிருந்தே இந்தியாவுக்குள் வந்தனர் என்பது ஒரு வகையான கருத்து. இது, பெரும்பாலும் வெளிநாட்டு ஆய்வாளர்களால் முன்வைக்கப்பட்டது. இவர்களுட் சிலர் திராவிடர் மத்தியதரைக் கடற் பகுதிகளிலிருந்தே இந்தியாவுக்குள் வந்ததாகக் கூறுகின்றனர். வேறு சில ஆய்வாளர்கள், தென்னிந்தியா அல்லது அதற்குத் தெற்கே இருந்து கடல் கோளினால் அழிந்துபோன ஒரு நிலப்பகுதியே திராவிடர்களின் தாயகம் என்கின்றனர். பெரும்பாலும் தமிழ் ஆய்வாளர்கள் சிலரே இக் கருத்தைத் தீவிரமாக ஆதரித்தார்கள். இந்தியாவுக்குத் தெற்கே, பல மில்லியன் ஆண்டுகளுக்கு முன் இருந்து அழிந்து போனதாகக் கருதப்படுகின்ற இலெமூரியா எனக் குறிப்பிடப்படும் ஒரு நிலப் பகுதியையும், தமிழ் இலக்கியங்கள் சிலவற்றில் பேசப்படும் குமரிக்கண்டம் என்பதையும் ஒன்றாக்கி, அப்பகுதியே தமிழர் (திராவிடர்) தோன்றிய இடம் என இவர்களில் சிலர் வாதிட்டனர். சிலர், மனித இனமே இங்கேதான் தோன்றியது என்றும், முதல் மனிதன் திராவிடனே என்றும் காட்டமுயன்றனர். தமிழ் நாட்டில் தமிழ்த் தேசிய உணர்வுகள் வலுவடைந்திருந்த ஒரு காலத்தில், இவ்வாறான கருத்துக்கள் தமிழ் மக்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றன எனினும், இத்தகைய முன்மொழிவுகள் பிற ஆய்வாளர் மத்தியில் போதிய ஆதரவைப் பெறவில்லை. ஆரியர் வருகைக்குமுன் இந்தியா முழுவதிலும் திராவிடர் பரவியிருந்தார்கள் என்னும் கொள்கை பல ஆய்வாளர்களால் ஏற்றுக்கொள்ளப்படுகின்றது.
நவீன, ஈரானில் உள்ள ஜாக்ரோஸ் மலைகளில் இருந்து வந்த கற்கால விவசாயிகளுடன் புரோட்டோ-திராவிடர்கள் நெருங்கிய தொடர்பு கொண்டிருந்ததாக மரபணு, மொழியியல் மற்றும் தொல்பொருள் ஆய்வுகள் தெரிவிக்கின்றன. மற்றொரு ஆய்வின்படி, கற்கால விவசாயிகளின் வம்சாவளி நவீன தெற்காசியர்களின் முக்கிய வம்சாவளியை உருவாக்குகிறது.
மானிடவியலாளர், இந்தியர்களை, குறிப்பாக, திராவிடர்களை, இன அடிப்படையில் வகைப்படுத்துவது தொடர்பில் நீண்ட விவாதங்களை நடத்தியுள்ளனர். ஒரு வகைப்பாட்டின்படி, திராவிடர்கள், ஆஸ்திரலோயிட் அல்லது வெத்தோயிட் என்னும் இனப்பிரிவைச் சேர்ந்தவர்களாகக் கருதப்பட்டது.எனினும் அநேகர் காக்கசொயிட் இனத்தின் தென்கோடியில் உள்ள பிரதிநிதிகளாகத் திராவிட இனத்தைக் கருதி வருகின்றார்கள் (பரம்பரையியல் ஆய்வுகளின் அடிப்படைகளும் இதனையே சுட்டி நிற்கின்றன). திராவிட இனம் பொதுவாக காகசாய்டு இனத்தின் ஒரு பகுதியாக கருதப்படுகிறது.
மக்களை இனங்களாக வகைப்படுத்துவது தொடர்பான பரம்பரையியல் நோக்குப் பெருமளவு வேறுபாடுகளைக் கொண்டுள்ளது. பெரும்பாலான தற்கால மானிடவியலாளர், பரம்பரையியல் அடிப்படையில் இனங்கள் இருப்பதை ஏற்றுக்கொள்வதில்லை. ரிச்சர்ட் லெவொண்டின் (Richard Lewontin) என்பவர், ஒவ்வொரு மனித மரபணுவும் இன்னொன்றிலிருந்து வேறுபடுவதை எடுத்துக்காட்டி, இனங்களை வரையறை செய்வதில் பரம்பரையியல் பயன்படாது என்று கூறுகிறார். எனினும் பல ஆய்வாளர்கள், பரம்பரையியல் முறைகளைப் பயன்படுத்தி இனங்களை வேறுபடுத்திப் பார்ப்பதற்கு முயன்றுள்ளனர். கவல்லி-ஸ்ஃபோர்சா (L.L. Cavalli-Sforza) என்பவர், எல்லா இந்தியர்களுமே பரம்பரையியலின் அடிப்படையில் காக்கேசியர்களே (Caucasian) என்றார். லின் பி. ஜோர்டே (Lynn B Jorde), ஸ்டீபன் பி. வூடிங் (Stephen P Wooding) போன்றவர்கள், தென்னிந்தியர்களைப் பரம்பரையியல் அடிப்படையில், ஐரோப்பியர்களுக்கும், கிழக்கு ஆசியர்களுக்கும் இடையில் வைத்தார். அண்மையில் செய்யப்பட்ட ஆய்வுகள் சில, உயிரியல் ரீதியான திராவிட இனம் என்ற கருத்துரு தொடர்பில் ஐயப்பாடுகளை உண்டாக்குவதாகக் கூறப்படுகிறது.
அதே சமயம், தென்னிந்தியாவில்தான் முதல் முறையாக இந்தியர்கள் உருவானார்கள். அதன் பின்னரே வட இந்தியாவில் மக்கள் குடியேறத் தொடங்கினர் என்று புதிய மரபியல் ரீதியிலான ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது.
இந்திய மூதாதையர்கள் குறித்த ஆய்வு ஒன்றை ஹைதராபாத்தில் உள்ள மூலக்கூறு மற்றும் மூலக்கூறு உயிரியல் ஆய்வு மையமும் (), அமெரிக்காவின் ஹார்வர்டு மருத்துவப் பள்ளி, ஹார்வர்ட் பொது சுகாதார கல்லூரி, ஹார்வர்ட் பிராட் கழகம், மாசசூசட்ஸ் தொழில்நுட்பக் கழகம் (எம்.ஐ.டி) ஆகியவை இணைந்து நடத்தி வருகின்றன. இந்த ஆய்வு குறித்த மிகப் புதிய, அதேசமயம், பல வித்தியாசமான தகவல்களை இவர்கள் வெளியிட்டுள்ளனர். இந்த ஆய்வு முடிவுகள் நேச்சர் இதழில் வெளியாகியுள்ளது.
இதுகுறித்து ஹைதராபாத் மையத்தின் முன்னாள் இயக்குநரும், இந்த ஆய்வறிக்கையின் இணை ஆசிரியருமான லால்ஜி சிங் மற்றும் ஹைதராபாத் மையத்தின் மூத்த விஞ்ஞானியான குமாரசாமி தங்கராஜனும் கூறுகையில், இது வரலாற்றைத் திருத்தி எழுத உதவும் ஆய்வாகும்.
13 மாநிலங்களைச் சேர்ந்த 25 வித்தியாசமான இனக் குழுக்களைச் சேர்ந்த 132 பேரின் ஜீனோம்களிலிருந்து 5 லட்சம் மரபனு குறியீடுகளை ஆய்வு செய்தோம். அனைவருமே இந்தியாவின் பிரதான ஆறு மொழிகளைப் பேசும் இனக்குழுக்களைச் சேர்ந்தவர்கள் ஆவர். பழங்குடியினர், பல் வகை ஜாதி என அனைத்துப் பிரிவினரையும் உள்ளடக்கிய வகையில் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
இந்த ஆய்வுகளின்படி, இந்தியாவில், மிகவும் தொன்மையான 2 பிரிவினர் இருந்திருக்கக் கூடும் என்று கருதப்படுகிறது. இந்தத் தொன்மையான பிரிவினரை, தொன்மையான வட இந்திய மூதாதையர் என்றும் தொன்மையான தென்இந்திய மூதாதையர் என்றும் கூறலாம். தற்போது இந்தியாவில் உள்ள 4,635 மக்கள் இனங்கள் அனைத்தும் இந்த 2 தொன்மையான மூதாதையர்களிடம் இருந்து தனித்தனியாகவோ அல்லது இரண்டும் கலப்புற்றோ தோன்றி இருக்கலாம்.
வட இந்தியர்கள் ஐரோப்பியர்களுடன் ஒத்துப் போகிறார்கள்... இந்த இரு தொன்மையான இந்தியர்களில், தொன்மையான வட இந்தியர்கள் தற்போதைய மேற்கு ஆசிய மற்றும் ஐரோப்பிய மக்கள் இனத்தை மரபியல் ரீதியாக 40 முதல் 80 சதவீதம் வரை ஒத்து இருக்கிறார்கள்.
ஆனால் தொன்மையான தென் இந்தியர்கள் உலகில் எந்த இன மக்களோடும் மரபியல் ரீதியான தொடர்பு அற்றவர்களாக இருக்கிறார்கள். இதன் மூலம் தென் இந்தியர்கள்தான், தொன்மையான இந்தியாவின் முதல் குடிமக்கள் என்பது தெள்ளத் தெளிவாக விளங்குகிறது.
அதேபோல, அந்தமானில் வசிக்கும் மிகப் பழங்குடியினரான `ஓன்கே' என்று அழைக்கப்படும் பிரிவினர் தொன்மையான வட இந்தியர்கள் மற்றும் தென் இந்தியர்களிடம் இருந்து தனித்து காணப்பட்டாலும், தொன்மையான தென் இந்தியர்களோடு சிறிது இணக்கமாக உள்ளனர் என்பது இவர்களுடைய ஆய்வின் முடிவு ஆகும்.
இதன் மூலம், தொன்மையான தென் இந்தியர்களும், அந்தமான் பழங்குடியின மக்களும் ஒரே மூதாதையரிடம் இருந்து பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு பிரிந்து இருக்கக் கூடும் என்பதும் இந்த ஆராய்ச்சியாளர்களின் கருத்து. அந்தமான் பழங்குடியினர்தான் முதன் முதலில் ஆதிமனிதன் தோன்றிய இடமான ஆப்பிரிக்க கண்டத்தில் இருந்து தெற்கு கடற்கரை வழியாகச் சுமார் 65 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் வெளியேறிவர்கள். அதே காலகட்டத்தில்தான் தொன்மையான தென்னிந்தியர்களும் உருவாகியுள்ளனர்.
அதேபோல 40 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்புதான் வட இந்தியர்கள் உருவெடுக்க ஆரம்பித்துள்ளனர். பழங்காலத்தில் இருந்தே இந்தியாவில் ஒவ்வொரு மனித இனப்பிரிவினரும் அவரவர் இனத்துக்குள்ளேயே திருமணம் செய்து கொள்வதாலும், தமக்கே உரிய கலாசார பழக்க வழங்கங்களை ஏற்படுத்திக் கொண்டதாலும், ஒவ்வொரு பிரிவினரும் மரபியல் மற்றும் கலாசார ரீதியாகத் தனித்தன்மை கொண்டு உள்ளனர்.
இதன் மூலம், பழங்காலத்தில் இருந்தே இந்திய மக்கள் இனம் தனித்தனி குழுக்களாகப் பிரிந்து கலப்பின்றி தனித்தன்மையுடன் வாழ்ந்து இருக்கிறார்கள் என்பது தெரிய வந்து உள்ளது. இந்தப் பிரிவினைதான் கலாசார பரிமாணங்களின் விளைவாகத் தற்காலத்தில் சாதி பாகுபாடாக உருவெடுத்துள்ளது.
பழங்காலத்தில் இருந்தே ஒவ்வொரு இனத்தினரும் தங்களுக்குள்ளேயே திருமணம் செய்து கொள்வதால் ஒவ்வொரு இனத்தவருக்கும் ஏற்படும் வெவ்வேறு மரபியல் மாற்றங்கள் அவரவர் சந்ததிகளின் வழியாக அந்தந்த இனத்தினரிடையே நிலைபெற்று, அதன் விளைவாக மரபியல் ரீதியிலான பல நோய்கள் வர வாய்ப்பு உள்ளது என்ற உண்மையையும் எடுத்துரைத்து இருக்கிறார்கள். கிட்டத்தட்ட 70 சதவீத இந்தியர்கள் மரபியல் ரீதியிலான நோய்களைக் கொண்டவர்களாக உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
பார்சி இனத்தவரிடையே மார்பகப் புற்றுநோய் அதிகம் உள்ளது. திருப்பதி, சித்தூர் பகுதிகளில் மோட்டார் நியூரான் நோய்கள் அதிகம் உள்ளன. மத்திய இந்தியாவில் ரத்த சோகை அதிகம் உள்ளது. வட கிழக்கிலும் இதே பிரச்சினை உள்ளது.
ஆப்பிரிக்கர்களின் இடப் பெயர்ச்சி... 1 லட்சத்து 35 ஆயிரம் மற்றும் 75 ஆயிரம் ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில் கிழக்கு ஆப்பிரிக்காவில் மிகப் பெரிய பஞ்சம் ஏற்பட்டுள்ளது. மாலவி ஏரி வற்றிப் போனதால் பெரும் பஞ்சம் ஏற்பட்டு ஆப்பிரிக்கக் கண்டத்தைச் சேர்ந்த கிட்டத்தட்ட 95 சதவீதம் பேர் அங்கிருந்து இடம் பெயர்ந்துள்ளனர்.
அவர்கள் அந்தமான் நிக்கோபார் வழியாகத்தான் இடம் பெயர்ந்து சென்றுள்ளனர் என்று தெரிய வந்துள்ளது. அதாவது அந்தமான், நிக்கோபார் மற்றும் தென்னிந்தியாவின் மூலமாக அவர்கள் பல்வேறு நாடுகளுக்கும் இடம் பெயர்ந்து சென்றுள்ளனர் என்றும் ஆய்வாளர்கள் கூறியுள்ளனர். இந்தியர்களின் மூதாதையர்கள் குறித்த இந்த ஆய்வின் புதிய முடிவுகள் வரலாற்றை மாற்றி எழுதக் கூடியவை என்பதால் விஞ்ஞானிகளின் முக்கிய விவாதப் பொருளாகியிருக்கிறது
புதிய ஆய்வுகள் இனம் தோல் நிறத்துடன் எந்த தொடர்பும் இல்லை என்று கூறுகின்றன. பல்வேறு மரபணு மற்றும் மானுடவியல் ஆய்வுகள் மூன்று மனித மக்கள் குழுக்கள் இருப்பதாக முடிவு செய்தன. "காகசாய்டு" (மேற்கு-யூரேசியன் தொடர்பான) மானுடவியல் குழு கோகோயிட் இனம் என்ற கருத்துடன் ஒத்துப்போகின்ற தனித்துவமான மரபணு பண்புகளைக் கொண்டுள்ளது என்பதை யுவான் 2019 கண்டறிந்துள்ளது. இந்திய மற்றும் ஐரோப்பிய நாடுகள் நெருங்கிய தொடர்பு கொண்டவை என்று அவர் முடித்தார். சென் 2020 இந்தியர்கள், அரேபியர்கள், பெர்பர்கள் மற்றும் ஐரோப்பியர்கள் இடையே நெருங்கிய உறவுக்கு கூடுதல் ஆதாரங்களைக் கண்டறிந்தது. புதிய மரபணு பொருள் ஒரு எளிய "ஆப்பிரிக்காவிற்கு வெளியே குடியேற்றத்திற்கு" முரணானது என்று அவர் முடிக்கிறார். இந்தியாவிற்கும் மத்திய கிழக்கிற்கும் இடையிலான பிராந்தியத்தில் உள்ள காகசாய்டு இனத்திற்கு ஒரு வேரை அவர்கள் முன்மொழிகின்றனர்.
This article uses material from the Wikipedia தமிழ் article திராவிடர், which is released under the Creative Commons Attribution-ShareAlike 3.0 license ("CC BY-SA 3.0"); additional terms may apply (view authors). வேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 4.0 இல் கீழ் கிடைக்கும். Images, videos and audio are available under their respective licenses.
®Wikipedia is a registered trademark of the Wiki Foundation, Inc. Wiki தமிழ் (DUHOCTRUNGQUOC.VN) is an independent company and has no affiliation with Wiki Foundation.