நிலத்தை அடிப்படையாக வைத்துக்கொண்டு பகுக்கப்பட்ட பாகுபாடு நிலத்திணை.
தமிழ்நாட்டு நிலம் குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல் என்னும் நான்கு வகை நிலத் திணைகளைக் கொண்டது. முல்லையும் குறிஞ்சியும் முறைமையில் திரிந்து பாலை என்பதோர் படிமம் கொள்ளும்போது அது ஐந்தாக எண்ணப்பட்டது. இவையே தமிழர் நிலத்திணைகள்.
குறிஞ்சி, முல்லை, மருதம், பாலை, நெய்தல் என்பனவே தமிழர் நிலத்திணைகள் ஆகும்.
இது வெறுமனே இயல்பியல் அடிப்படையிலான பகுப்புக்களாக இல்லாது, மக்கள் வாழ்வியலோடு இணைந்தவையாக அமைந்திருந்தன.
திணை என்பது ஒழுக்கம். அகத்திணை என்பது அகவொழுக்கம். புறத்திணை என்பது புறவொழுக்கம். தமிழில் உள்ள அகத்திணைப் பாடல்களுக்கு ஐந்திணைப் பாகுபாடு கொள்ளப்படுகிறது.
இந்தப் பாகுபாடு ஐந்து வகைப்பட்ட திணை-ஒழுக்கங்களை மையமாக வைத்துக் கொள்ளப்படுகிறது. புணர்தல், தலைவன் புறவொழுக்கத்தில் பிரியும்போது தன்னை ஆற்றிக்கொண்டு இருத்தல், தலைவன் தன்னை விட்டு அகவொழுக்கத்தில் பிரியும்போது ஊடுதல், கடலில் சென்றவருக்காக இரங்கல், புறப்பொருளுக்காகப் பிரிதல் என்பன அகத்திணைக்கு அகத்திணை உரிப்பொருள்கள். இவற்றில் திணை மயக்கம் நிகழ்வது இல்லை. எனவே மயங்காத உரிப்பொருளின் அடிப்படையில் இன்ன பாடல் இன்ன திணை எனக் கொள்ளப்படும். எனவே குறிஞ்சித் திணை என்பது 'புணர்தலும் புணர்தல் நிமித்தமும்' பற்றிய செய்திகளைக் கூறுவது என்பது பொருள். பிற திணைகளுக்கும் இவ்வாறே பொருள் கொள்ள வேண்டும். இது தமிழ் நெறி. காண்க; அகத்திணை - புறத்திணை, திணை விளக்கம்
திணை | உரிப்பொருள் | துறைகள் அல்லது அடையாள நிகழ்ச்சிகள் |
---|---|---|
குறிஞ்சி | புணர்தலும், புணர்தல் நிமித்தமும் | (1) தலைவனும் தலைவியும் முதன் முதலாகச் சந்திக்கை (புணர்தல்) (2) மீண்டும் மீண்டும் சந்திக்கை (3) சிறுபான்மை அவர்களிடையே மெய்யுறு புணர்ச்சி என்னும் உடல்நிலை உறவு நிகழ்தல் (4) தலைவன் தலைவியைச் சந்திக்க ஏற்பாடுகள் செய்தல் |
முல்லை | (பிரிவை மனத்தில் ஆற்றிக்கொண்டு) இருத்தலும், இருத்தல் நிமித்தமும் * ஆனிரையோடு மீளும் வரையில் பிரிவை மனத்தில் ஆற்றிக்கொண்டு இருத்தலும், இருத்தல் நிமித்தமும். இது நிலத்தியல்பு. * பொருள் தேடச் சென்றவர் மீளும் வரையில் (பிரிவை மனத்தில் ஆற்றிக்கொண்டு) இருத்தலும், இருத்தல் நிமித்தமும். இது வாழ்க்கை இயல்பு * போருக்குச் சென்றவர் மீளும் வரையில் பிரிவை மனத்தில் ஆற்றிக்கொண்டு இருத்தலும், இருத்தல் நிமித்தமும். இது நாட்டின் இயல்பு * ஓதல் முதலான பிற பிற பிரிவுகளையும் இங்கு எண்ணிக்கொள்ள வேண்டும். ஓதற்பிரிவு என்பது கல்வி கற்கச் செல்லுதல். | புறப்பொருள் நிமித்தம் பிரிந்த தலைவன் வருகைக்காகத் தலைவி காத்திருத்தல் |
மருதம் | ஊடலும், ஊடல் நிமித்தமும். | அகவொழுக்கப் பிரிவு * வேறொருத்தியோடு வாழ்ந்த தலைவனிடம் தலைவி பிணக்கிக் கொள்ளுதல் |
நெய்தல் | இரங்கலும் இரங்கல் நிமித்தமும். | முல்லை நிலத்தில் கணவன் திரும்பி வருவது உறுதி என்பதனால் ஆற்றிக்கொண்டு இருத்தல் உரிப்பொருள் ஆயிற்று * கடலுக்குள் மீன் பிடிக்கச் செல்வோரது நிலை அதுவன்று. எனவே மனைவி கவலைப்படுவது இரங்கலாயிற்று. |
பாலை | பிரிதலும், பிரிதல் நிமித்தமும் | பொருள், போர், கல்வி முதலான புறப்பொருள் நிமித்தம் தலைவன் பிரிதலும், தலைவி வாடுதலும் |
திணை | நிலம் |
---|---|
குறிஞ்சி | மலையும் மலை சார்ந்த நிலமும் |
முல்லை | காடும் காடு சார்ந்த நிலமும் |
மருதம் | வயலும் வயல் சார்ந்த நிலமும் |
நெய்தல் | கடலும் கடல் சார்ந்த நிலமும் |
தமிழ்நாட்டில் பாலை என்று ஒரு நிலம் இல்லை. கோடை வெப்பத்தால் திரிந்து காணப்பட்ட நிலையில் அவற்றைப் பாலை என்றனர்.
மேலே கண்ட நான்கு வகை நிலப் பாகுபாட்டுடன் பருவ மாற்றத்தால் தோன்றும் பாலை நிலத்தையும் சேர்த்து ஐந்நிலம் எனக் கொண்டனர். தமிழ்நாட்டில் பாலை நிலம் இல்லை. பாலை நிலம் என்பது குறிஞ்சி-நிலத்திலும், முல்லை-நிலத்திலும் தோன்றும் பருவநிலை மாற்றம். ஐந்நிலம் என்பது ஐந்து வகைப்பட்ட நிலம். ஐந்திணை என்பது ஐந்து வகைப்பட்ட ஒழுக்கம்.
ஐந்து வகைப்படுத்தப்பட்ட நிலத்தின் வழித்தடப் பாங்கைப் பதிற்றுப்பத்து பாடல் விளக்குகிறது. தொல்காப்பியம், நம்பியகப்பொருள் ஆகிய இலக்கண நூல்களும் அவற்றின் உரைகளும் இந்த நிலப்பாகுபாடுகளை விரிவாக எடுத்துரைக்கின்றன.
சிறுபொழுது | மணி (24 மணி கணக்கீடு)(60 நாழிகை என்பது ஒரு நாள்) (24 நிமிடம் என்பது ஒரு நாழிகை) |
---|---|
காலை | 6 முதல் 10 மணி |
நண்பகல் | 10 முதல் 14 மணி |
எற்பாடு | 14 முதல் 18 மணி |
மாலை | 18 முதல் 22 மணி |
யாமம் | 22 முதல் 2 மணி |
வைகறை | 2 முதல் 6 மணி |
பெரும்பொழுது | கால எல்லையைக் குறிக்கும் வழக்கிலுள்ள தமிழ்மாதப் பெயர்கள் |
---|---|
இளவேனில் | சித்திரை, வைகாசி |
முதுவேனில் | ஆனி, ஆடி |
கார் | ஆவணி, புரட்டாசி |
கூதிர் (குளிர்) | ஐப்பசி, கார்த்திகை |
முன்பனி | மார்கழி, தை |
பின்பனி | மாசி, பங்குனி |
திணை | பெரும்பொழுது | சிறுபொழுது | தொல்காப்பிய நூற்பா |
---|---|---|---|
குறிஞ்சி | கூதிர், முன்பனி | யாமம் | 952 |
முல்லை | கார், முன்பனி | மாலை | 952 |
மருதம் | - | வைகறையாகிய விடியல் | 954 |
நெய்தல் | - | எற்பாடு (ஏற்பாடு) | 954 |
பாலை (நடுவுநிலைத் திணை) | இளவேனில், முதுவேனில், பின்பனி | நண்பகல் | 955, 956 |
தமிழர் நிலத்திணைகள் |
---|
குறிஞ்சி | முல்லை | மருதம் | நெய்தல் | பாலை |
This article uses material from the Wikipedia தமிழ் article தமிழர் நிலத்திணைகள், which is released under the Creative Commons Attribution-ShareAlike 3.0 license ("CC BY-SA 3.0"); additional terms may apply (view authors). வேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 4.0 இல் கீழ் கிடைக்கும். Images, videos and audio are available under their respective licenses.
®Wikipedia is a registered trademark of the Wiki Foundation, Inc. Wiki தமிழ் (DUHOCTRUNGQUOC.VN) is an independent company and has no affiliation with Wiki Foundation.