கடந்த நூற்றாண்டு கண்ட தனிப்பெரும் சாதனையான படியெடுப்பு இனப்பெருக்க முறையின் வெற்றியைத் தொடர்ந்து ஆழமான ஆய்வுகளுக்கு உட்படுத்தப்பட்டிருக்கும் துறையே குருத்தணு (Stem Cell) தொடர்பான துறையாகும்.
இத்துறையில் மேற்கொள்ளப்பட்டு வரும் ஆய்வுகளால் மனிதன் எதிர்நோக்கும் சகல நோய்களுக்கும் தீர்வு கண்டுவிட முடியும் என எதிர் பார்க்கப்படுகிறது.
குருத்தணு எனப்படுவது அனைத்துப் பல்கல உயிரினங்களிலும் காணப்படும், மேம்பாடு அடையாத மற்றும் வகைப்பாட்டிற்கு உட்படாத (unspecilaized and undifferentiated), ஆனால் கலப்பிரிவு, மற்றும் உயிரணு வேற்றுமைப்பாடு மூலம் புதிய உயிரணுக்களை உருவாக்குவதுடன் மேம்பட்ட உயிரணுக்களை (specialized cells) உருவாக்கி வகைப்படுத்தப்பட்டு வெவ்வேறு இழையங்களையும் உருவாக்கும் தன்மை கொண்ட உயிரணுக்களாகும். டொரன்ரோ பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த எர்னஸ்ட் மெக்குல்லோச் (Ernest McCulloch), ஜேம்சு டில்(James Till) ஆகிய இருவரும் 1960 களில் செய்த கண்டுபிடிப்புக்களின் அடிப்படையில் இந்த குருத்தணு ஆய்வு வளர்ச்சியடைந்தது.
குருத்தணுக்கள் தொடர்ந்து கலப்பிரிவுக்கு உட்படும் தன்மை உடையவையாக இருப்பதனால் இறக்கும் உயிரணுக்களை ஈடு செய்யவும், பாதிப்புக்குட்படும் உயிரணுக்களை பிரதியீடு செய்யவும் பயன்படும். ஒரு குருத்தணு பிரிவுக்கு உள்ளாகும்போது, அது புதிய குருத்தணுக்களாக தொடர்ந்து தொழிற்படக் கூடியவையாகவோ, அல்லது வகைப்படுத்தப்பட்டு தசை உயிரணு, குருதிக்கலங்கள் போன்ற பல்வேறுபட்ட உயிரணுக்களாக விருத்தியடைபவையாகவோ இருக்கலாம்.
இக்குருத்தணுக்கள் முக்கியமாக இரண்டு வகையாக இனம் பிரிக்கப்பட்டுள்ளது.
தற்போது உயிரணு வளர்ப்பு மூலம் இந்த குருத்தணுக்கள் வளர்க்கப்பட்டு, பின்னர் மாற்றங்கள் மூலம் தசை, நரம்பு போன்ற வகைப்படுத்தப்படும் உயிரணுக்கள் உருவாக்கப்படும். குருத்தணுக்கள் எலும்பு மச்சை, குழந்தை பிறந்த பின்னர் தொப்புட்கொடி சூல்வித்தகம் (placenta) போன்றவற்றில் காணப்படும் குருதி போன்ற வேறுபட்ட மூலங்களில் இருந்து பெறப்பட்டு மருத்துவ சிகிச்சைகளுக்காக பயன்படுத்தப்படும்.
குருத்தணுவிற்கான ஏற்கப்பட்ட வரைவிலக்கணத்தின்படி, குருத்தணு இரு முக்கியமான இயல்புகளைக் கொண்டிருக்கும்.
வகைப்படுத்தப்படாத (undifferentiated) நிலையை தக்க வைத்தபடி, பல சுற்று கலப்பிரிவுக்கு உள்ளாகும் தன்மையைக் கொண்டிருத்தல். இதற்காக இரண்டு பொறிமுறைகள் இருப்பது அவதானிக்கப்பட்டது.
விசேடமான முதிர்ந்த உயிரணு வகைகளை உருவாக்கும் திறனைக் கொண்டிருத்தல். இவற்றில் ஐந்து வகைகள் உண்டு.
குருத்தணுவிற்கான நடைமுறை வரவிலக்கணமானது அதனது தொழிற்பாடு தொடர்பானதாகும். அதன்படி குருத்தணு என்பது தனது வாழ்க்கைக்காலம் முழுமைக்கும், இழையங்களை மீளப் புதுப்பிக்கும் வல்லமையுடைய உயிரணுவாகும். குருத்தணுவின் இயல்புகளை செயற்கைக் கல முறையில் வைத்து இனம்கண்டு விளக்கம் கொடுக்கப்பட முடியும். ஆனாலும் உயிருக்கு வெளியேயான சூழலில் அவற்றில் மாற்றம் ஏற்படக் கூடுமாதலால், அவை உயிர்களினுள்ளே தொழிற்படும் அதே முறையில் உயிருக்கு வெளியே தொழிற்படும் என்று கூற முடியாது. மேலும் உயிரணு மேற்பரப்பு அடையாளம்காட்டிகளைப் (Cell surface markers) பயன்படுத்தி குருத்தணுக்களைத் தனிப்படுத்தி பிரித்தெடுக்க முடியும். சில வளர்ந்த குருத்தணுக்களாக அறிமுகப்படுத்தப்பட்டிருப்பவை உண்மையான குருத்தணுக்கள்தானா என்பதிலும் முரண்பாடான கருத்துக்கள் நிலவுகின்றன.
மனிதரில் காணப்படும் பல வகையான நோய்களைக் குணப்படுத்த குருத்தணு சிகிச்சை செய்வது மருத்துவ வரலாற்றில் மிகப்பெரிய மாற்றத்தை கொண்டுவரும் என நம்பப்படுகின்றது. ஏற்கனவே வளர்ந்த குருத்தணு மூலமாக சில வகை சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இரத்தப் புற்றுநோயைக் குணப்படுத்த எலும்பு மச்சை மாற்று உறுப்பு ஊன்றல் (transplantation) நடைமுறையிலுள்ளது. எதிர்காலத்தில் புற்றுநோய், நடுக்குவாதம், முண்ணாண் காயங்கள் தசையில் ஏற்படும் சேதங்கள் போன்ற பல்வேறு நோய்களை குருத்தணுச் சிகிச்சையால் இலகுவில் குணப்படுத்தலாம் என மருத்துவ ஆய்வுகள எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளன. ஆனாலும் இந்த குருத்தணு சிகிச்சை தொடர்பான ஆய்வுகளில் சமூக, அறிவியல் நம்பகமற்ற தன்மை இன்னமும் நிலவவே செய்கின்றது. ஆனால் அவை எதிர்காலத்தில் செய்யப்படும் ஆய்வுகள், பொது விவாதங்கள், பொது மக்களுக்கான கல்வி மூலம் நிவர்த்தி செய்யப்படலாம். முக்கியமான ஒரு இடையூறாகக் கருதப்படுவது, புதிதாக மாற்று உறுப்பாக ஊன்றப்படும் குருத்தணுக்கள், கட்டுப்பாடின்றி தொடர்ந்து கலைப்பிரிவுக்கு உட்படுமாயின், அதுவே புற்றுநோய்க்கான ஒரு தோற்றுவாயாக மாறிவிடலாம் என்பதாகும். ஆனாலும் குருத்தணு ஆய்வுகள் மிகப் பரந்தளவில் நிகழ்ந்துகொண்டே இருக்கின்றது. சில ஆய்வாளர்கள் மருத்துவ சிகிச்சையில் பயன்படுத்துவதற்கு தயக்கம் காட்டிய போதிலும், ஆய்வுகள் மிகவும் பயன் தரக்கூடியவை என்பதனை ஏற்றுக் கொள்கின்றனர். பல முளைய குருத்தணு ஆய்வாளர்கள் பலர் சிகிச்சையில் பயன்பாடு மிகவும் பலனளிக்கக் கூடியது என்பதால் அதனை பயன்படுத்துவதே நல்லது என்ற கருத்தைக் கொண்டுள்ளனர். வெளிச் சோதனை முறை கருக்கட்டலில் பெறப்படும் மேலதிக முளையங்கள் இவ்வகை ஆய்வுகளுக்கு வழங்கப்பட வேண்டும் எனவும் கருத்து நிலவுகின்றது. பிறவி வீக்கப் பெருங்குடல் (ஹிர்ஸ்பரங்க்) என்னும் நோய் குழந்தைகளுக்கு வரும் ஒரு அரிதான நோய் ஆகும். இதன் மூலம் குடல் சரியான முறையில் உணவை ஒரு பகுதியிலிருந்து மற்ற பகுதிக்குக் கடத்தத்தாது, ஏனேனில் அப்பகுதியில் அதற்குத் தேவையான நரம்புகள் இருக்காது அல்லது சில நரம்புகள் சரியான முறையில் செயல்படுவதில்லை. இந்த வகையான நோயையும் குருத்தணு சிகிச்சையால் குணப்படுத்தலாம் என சென்னை அரசு மருத்துவமனையில் நிருபிக்கப்பட்டுள்ளது.
செயற்கை கருத்தரிப்பு முறைகளின் வளர்ச்சி நிலைகளின் தொடர் வெற்றிகளே குருத்தணு ஆய்வுகளுக்கு வழியமைத்துள்ளது. இன்றைய பிரபல அறிவியல் ஏடுகள் அனைத்தும் இவ்வாய்வுகள் பற்றிய செய்திகளின் சிறு தகவலையேனும் சுமந்தே வருகின்றன என்பதிலிருந்து உலகம் எதிர்பார்த்திருக்கும் இவ்வாய்வின் முக்கியத்துவத்தை அறியலாம். இருந்தும் உலக அரசியல் தலையீடுகள் இவ்வாராய்ச்சிக்கு பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன. அமெரிக்க புஷ் நிர்வாகம் கடுமையாக எதிர்த்து ஆராய்ச்சிக்கான நிதிகளை முடக்கியதும், பிரித்தானிய அரசு இவ்வாராய்ச்சிக்கு முழு ஆதரவை கொடுத்துவருதும் குறிப்பிடத்தக்கது
மனிதனை நகலெடுப்பதால் சமூக வளர்ச்சிக்கு வேண்டிய முக்கிய திறமையுள்ள, அறிவாற்றலுள்ளவர்களை நகலெடுத்து சிறப்பான மனித சமூகங்களை உருவாக்க இயலும் என்று மனித நகலெடுப்பு ஆதரவாளர்கள் வாதிடுகிறார்கள். உலகின் அனைத்து உயிர்களும் ஒரே அளவில் முக்கியத்துவம் பெற்றவை; ஆகவே இப்படி திட்டமிட்டுத் தீர்மானிக்கப் படும் சமூகத்தால் ஏற்படப் போகும் சீர்கேடுகளையும், இயற்கையை மாற்றியமைப்பதால் விளையக் கூடிய அழிவுகளையும் இன்னொரு தரப்பினர் சுட்டிக்காட்டி கடுமையாக எதிர்க்கிறார்கள். உலகில் மனித நகலெடுப்பிற்கு அதிக எதிர்ப்பு கிளம்பியிருக்கிறது.
சிகிச்சைக்காக குருத்தணுக்களைப் பயன்படுத்தும் ஆராய்ச்சிகளும் ஏன் எதிர்க்கப்படுகிறது குருத்தணுக்களைச் சினை முட்டையிலிருந்து எடுக்கும் போது சினைமுட்டை அழிக்கப்படும். அப்படி அழியும் போது அது ஒரு உயிரையே அழிப்பதற்குச் சமானம் என்பது இந்த எதிர்ப்பை முன் வைப்பவர்கள் வாதம். அப்படிப் பார்க்கப் போனால் இயற்கை முறையில் கருத்தரிக்க இயலாதவர்களுக்கு கருத்தரிக்க வைக்க இப்போது மருத்துவர்கள் கருப்பையிலிருந்து பல சினைமுட்டைகளை வெளியே எடுத்து மருத்துவம் செய்கிறார்கள். அதில் உபயோகமாகும் சினைமுட்டைகளைத் தவிர மற்றவை அழிக்கப்படுகின்றன. இதை மட்டும் ஒத்துக் கொள்ளலாமா என்று எதிர் கேள்வி கேட்கின்றனர் மற்றொரு தரப்பினர்.
This article uses material from the Wikipedia தமிழ் article குருத்தணு, which is released under the Creative Commons Attribution-ShareAlike 3.0 license ("CC BY-SA 3.0"); additional terms may apply (view authors). வேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 4.0 இல் கீழ் கிடைக்கும். Images, videos and audio are available under their respective licenses.
®Wikipedia is a registered trademark of the Wiki Foundation, Inc. Wiki தமிழ் (DUHOCTRUNGQUOC.VN) is an independent company and has no affiliation with Wiki Foundation.