இந்திய வான்படை அல்லது இந்திய விமானப் படை (Devanāgarī: भारतीय वायु सेना; Indian Air Force) இந்தியப் பாதுகாப்பு படைகளின் ஒரு அங்கமாகும்.
இந்தியாவின் வான் எல்லையை பாதுகாப்பதே இதன் தலையாய கடமையாகும். இது இந்தியாவை எதிரிகளின் வான்வழித் தாக்குதலில் இருந்து பாதுகாத்தலையும், வான்வழித் தாக்குதலை முன்னின்று நடத்துதலையும் குறிக்கோளாகக் கொண்டது.
இந்திய வான்படை Indian Air Force | |
---|---|
உருவாக்கம் | 26 சனவரி 1950 8 அக்டோபர் 1932 | (இந்திய வான்படையாக)
நாடு | India |
வகை | வான்படை |
பொறுப்பு | வான்வழிப் போர் |
அளவு | 170,576 செயல் வீரர்கள் 140,000 இருப்பு வீரர்கள் 1926+ வானூர்திகள் |
பகுதி | இந்தியப் பாதுகாப்புப் படைகள் |
தலைமையகம் | ஒருங்கிணைந்த பாதுகாப்பு தலைமையகம், பாதுகாப்பு அமைச்சகம், புது டெல்லி |
குறிக்கோள்(கள்) | Nabhaḥ Spr̥śaṁ Dīptam ("விண்ணைத் தொடும் மகிமை") (பகவத் கீதையிலிருந்து எடுக்கப்பட்டது) |
நிறம் | |
ஆண்டு விழாக்கள் | 8 அக்டோபர் (வான்படை தினம்) |
சண்டைகள் | குறிப்பிடத்தக்க செயல்பாடுகள் |
இணையதளம் | indianairforce |
படைத்துறைச் சின்னங்கள் | |
சிறுவட்டு | |
துடுப்பு சின்னம் | |
கொடி |
இந்திய வான்படை 1932ஆம் ஆண்டு அக்டோபர் 8 ஆம் நாள், இந்தியாவை ஆண்ட பிரித்தானியர்களால் உருவாக்கப்பட்டது. தற்பொழுது ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 8 ஆம் தேதி இந்திய வான்படை நாள் கொண்டாடப்படுகிறது. இந்திய விடுதலைக்கு பின் இந்தியப் பாதுகாப்பு படையின் ஒரு பிரிவானது.
இப்படைக்கு இந்தியக் குடியரசுத் தலைவர் முதற் பெரும் படைத்தலைவர் ஆவார். இந்திய வான்படையின் நிறுவன அமைப்பின் தலைவராக ஒரு வான்படைப் பணியாளர்களின் முதன்மை அதிகாரி (Chief of Air Staff) நியமிக்கப்படுகிறார். இந்திய வான்படை ஏறத்தாழ 170,000 வீரர்களைக் கொண்டுள்ளது. ஏறத்தாழ 1,130 போர்விமானங்களும் 1,700 மற்ற பயன்பாட்டு விமானங்களும் கொண்டுள்ள இந்திய வான்படை உலகில் நான்காவது பெரிய வான்படையாகத் திகழ்கிறது.
இந்திய வான் படை 8 அக்டோபர் 1932 இல் பிரித்தானிய இந்தியாவில் ஒரு துணை விமானப்படையாக நிறுவப்பட்டது.
இந்திய வான்படை சட்டம் 1932 இயற்றப்பட்டது, இது வான் படையின் சீருடைகள் மற்றும் சின்னங்களை அமல்படுத்தியது. 1 ஏப்ரல் 1933 இல், இந்திய வான்படை அதன் முதல் படைப்பிரிவை நான்கு வெஸ்ட்லேண்ட் வாபிடி வானூர்திகள் மற்றும் ஐந்து இந்திய விமானிகளுடன் நியமித்தது. இந்தப் பிரிவு பிரித்தானிய விமானப்படை அதிகாரி சீசல் பௌசீர் வழிகாட்டுதலில் இயங்கியது.
இரண்டாம் உலகப் போரின் போது, சப்பானிய இராணுவத்தின் முன்னேற்றத்தை தடுத்து நிறுத்துவதில் இது ஒரு கருவியாக பயன்பட்டது. பர்மா தவிர வட ஆப்பிரிக்கா மற்றும் ஐரோப்பா ஆகிய இடங்களில் இந்திய விமானிகள் வான் தாக்குதல் நடவடிக்கைகளில் பங்கேற்றனர். இரண்டாம் உலகப்போரின் போது இந்திய வான்படை விமானங்கள் தாக்குதல்,நெருங்கிய வான் உதவி, வேவு பார்த்தல்,வெடிகுண்டு வீசும் விமானங்களுக்கு பாதுகாப்பு அளித்தல் போன்ற பணிகளில் பெருமளவு ஈடுபடுத்தப்பட்டன.
சுதந்திரத்திற்குப் பிறகு புவியியல் ரீதியாக வான்படை இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே இரண்டாகப் பிரிக்கப்பட்டது. 10ல் மூன்று படைப்பிரிவுகள் பாகிஸ்தான் எல்லையினுள் அமைந்திருந்ததால் அவை பாகிஸ்தான் வான்படைக்கு வழங்கப்பட்டன. 1947 ஆம் ஆண்டு பாக்கித்தானுடன் நடந்த போரில் இந்திய வான்படை பெரும்பாலும் சிப்பாய் போக்குவரத்துக்கு மட்டுமே பயன்படுத்தப்பட்டது. 1950 இல் இந்தியா குடியரசாக மாறியபோது, இந்திய வான்படையிலிருந்து 'ராயல்' என்ற முன்னொட்டு கைவிடப்பட்டது. அதே நேரத்தில், தற்போதைய சிறுவட்டு ஏற்றுக்கொள்ளப்பட்டது.
1960 இல் பெல்ஜியத்தின் 75 ஆண்டுகால ஆட்சி காங்கோவில் திடீரென முடிவுக்கு வந்தது, இதனால் காங்கோவில் பரவலாக வன்முறை மற்றும் கிளர்ச்சி வெடித்தது. ஐக்கிய நாடுகளின் தலையீட்டின் ஒரு பகுதியாக அமைதியை நிலைநாட்டுவதில் இந்திய வான்படையின் எண். 5 படைப்பிரிவு செயல்பட்டது.
1961 இன் பிற்பகுதியில், இந்தியா மற்றும் போர்த்துக்கல் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்ட பிறகு போர்த்துகீசிய கோவா மீது தாக்குதல் நடத்த இந்திய அரசாங்கம் முடிவு செய்தது. இதற்காக ஆபரேஷன் விஜய் செயல்படுத்தப்பட்டது. இந்தியத் தரைப்படைக்கு ஆதரவாக இந்திய வான்படை செயல்பட்டது. தபோலிம் வானூர்தி நிலையத்தின் ஓடுபாதையை இந்திய வான்படை குண்டுவீசித் தாக்கியது மற்றும் பாம்போலிமில் உள்ள தொலைத்தொடர்பு நிலையங்களைத் தாக்கியது. பின்னர் டியூவில் இல் உள்ள ஓடுபாதைகளை குண்டுவீசி தாக்கி, கட்டுப்பாட்டு கோபுரம், தொலைத்தொடர்பு நிலையம் மற்றும் வானிலை ஆய்வு நிலையம் ஆகியவற்றை அழித்தது. போர்த்துகீசியர்கள் சரணடைந்த பிறகு, கோவா இந்தியாவுடன் இணைக்கப்பட்டது.
1962 ஆம் ஆண்டில், இந்திய எல்லையில் சீனா தனது படைகளைத் திரட்டியபோது, சீனாவிற்கும் இந்தியாவிற்கும் இடையிலான எல்லைத் தகராறு போராக மாறியது. சீன-இந்தியப் போரின் போது, படையெடுக்கும் சீனப் படைகளுக்கு எதிராக வான்படையை நிலைநிறுத்தவும் திறம்பட பயன்படுத்தவும் இந்தியா தவறிவிட்டதன் விளைவாக, சீனாவிடம் இந்தியா சில பிரதேசங்களை இழந்தது.
1965ஆம் ஆண்டு இந்திய-பாகிஸ்தான் போரின் போது இந்திய வான்படை பாக்கித்தான் விமான தளங்களுக்கு எதிராக தாங்குதல்களை நடத்தியது. இந்த தளங்கள் பாகிஸ்தானின் எல்லைக்குள் ஆழமாக அமைந்திருந்ததால், இந்திய வான்படை போர் விமானங்கள் விமான எதிர்ப்புத் தாக்குதலுக்கு ஆளாக நேரிட்டது. மோதல் முடிவுக்கு வந்த நேரத்தில், இந்திய வான்படை 60-70 வானூர்திகளை இழந்தது, அதே நேரத்தில் பாக்கித்தான் 43 விமானங்களை இழந்தது. இருந்த போதிலும் இந்திய வான்படை மூன்று நாட்களுக்குள் வான்வழி மேன்மையை அடைந்தது.
1965 போருக்குப் பிறகு, இந்திய வான்படை அதன் திறன்களை மேம்படுத்த தொடர்ச்சியான மாற்றங்களைச் செய்தது. 1966 இல், புதிய சிறப்பு படைப்பிரிவுகள் உருவாக்கப்பட்டது. புதிதாக 72 வானூர்திகள் அறிமுகப்படுத்தப்பட்டது. மேலும் உள்நாட்டிலேயே போர் விமானங்களை தயாரிப்பதில் இந்தியா ஆர்வம் காட்டத் தொடங்கியது. அதே நேரத்தில், சோவியத் நாட்டைச் சேர்ந்த நவீன போர் விமானங்களான மிக்-21 மற்றும் சகோய் சு-7 போர் விமானங்களையும் அறிமுகப்படுத்தத் தொடங்கியது.
1971 இந்திய-பாகிஸ்தான் போரின் முதல் இரண்டு வாரங்களில், இந்திய வான்படை கிட்டத்தட்ட 12,000 தாக்குதல்களை கிழக்கு பாகித்தானில் நடத்தியது. மேலும் முன்னேறி சென்ற இந்திய தரைப்படைக்கு நெருக்கமான ஆதரவை வழங்கியது. வங்காள விரிகுடா மற்றும் அரபிக் கடல் ஆகியவற்றில் இந்தியக் கடற்படை நடவடிக்கைகளில் வான்படை உதவியது. மேற்குப் பகுதியில், 20க்கும் மேற்பட்ட பாகித்தானிய கவச வாகனங்களை அழித்தது. எதிரி நாடு ஆயுதத் தொழிற்சாலைகள், ஓடுபாதைகள் மற்றும் பிற முக்கியப் பகுதிகளை இந்திய வான் படை குண்டுவீசி தாக்கியது. பாகித்தான் படைகள் சரணடைந்த நேரத்தில், இந்திய வான்படை 94 எதிரி விமானங்களை சுட்டு வீழ்த்தியிருந்தது.
1984 இல், இந்தியா காஷ்மீர் பிராந்தியத்தில் சியாச்சின் பனிப்பிரதேசத்தை கைப்பற்ற ஆபரேஷன் மேக்தூத்தை தொடங்கியது. இந்திய வான்படையின் மில் எம்.ஐ.-8, சேத்தக் மற்றும் சீத்தா உலங்கு வானூர்திகள் நூற்றுக்கணக்கான இந்திய துருப்புக்களை சியாச்சினுக்கு கொண்டு சென்றன. 13 ஏப்ரல் 1984 இல் தொடங்கப்பட்ட இந்த இராணுவ நடவடிக்கையானது வெற்றிகரமாக இருந்தது, இந்தியா சியாச்சின் பனிப்பாறையின் கட்டுப்பாட்டைப் பெற்றது.
இலங்கை உள்நாட்டுப் போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்கு நடத்த பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்ததை அடுத்து மனிதாபிமான உதவிகளை வழங்க இந்திய அரசு 1987 சூன் 4 அன்று உதவி பொருட்களை இந்திய வான்படை விமானங்கள் மூலம் அனுப்பியது. 1987 இல், இந்திய வான்படை வடக்கு மற்றும் கிழக்கு இலங்கையில் இந்திய அமைதி காக்கும் படையின் ஒரு பகுதியாக பங்கெடுத்தது.
11 மே 1999 அன்று, நடந்துகொண்டிருக்கும் கார்கில் போரின் உச்சக்கட்டத்தில் இந்திய ராணுவத்திற்கு நெருக்கமான வான்வழி ஆதரவை வழங்க இந்திய வான்படை அழைக்கப்பட்டது. இந்திய விமானப்படை போர் விமானங்கள் ஊடுருவல் நிலைகளை தாக்கியபோது, மே 26 அன்று முதல் தாக்குதல்கள் தொடங்கப்பட்டன. ஆரம்பத்தில் இதில் மிக்-27, மிக்-21 மற்றும் பின்னர் மிக்-29 ரக போர் விமானங்கள் பயன்படுத்தப்பட்டன.
மே 30 அன்று, மிராஜ் 2000கள் அறிமுகப்படுத்தப்பட்டன, ஏனெனில் அவை போரின் நிலைமைகளின் கீழ் சிறப்பான செயல்திறன் கொண்டவையாகக் கருதப்பட்டன. மிராஜ் 2000கள் இந்திய வான்படைக்கு இரவில் வான்வழித் தாக்குதல்களை நடத்தும் திறனை அளித்தன. இந்த தாக்குதல்கள் எதிரி முகாம்கள் மற்றும் தளவாட தளங்களை வெற்றிகரமாக குறிவைத்து, அவற்றின் விநியோக பாதைகளை கடுமையாக சீர்குலைத்தது. சூலை 26 இல், இந்தியப் படைகள் கார்கிலில் இருந்து பாகித்தான் படைகளை வெற்றிகரமாக விரட்டியடித்தது. ஆகத்து 10, 1999 அன்று, சர்ச்சைக்குரிய பிரதேசமான சர் க்ரீக் மீது பறந்து கொண்டிருந்த பாகித்தான் கடற்படையின் பிரெகுட் அட்லாண்டிக் விமானம் இந்திய வான்படையால் சுட்டு வீழ்த்தப்பட்டது. அதில் இருந்த 16 பாகிஸ்தான் கடற்படை வீரர்களும் கொல்லப்பட்டனர்.
2000 களில் இருந்து, புதிய நூற்றாண்டில் சவால்களை எதிர்கொள்ள இந்திய வான்படை தனது படையை நவீனமயமாக்கி வருகிறது. இந்த காலகட்டத்தில் வான்படைப்பிரிவுகளின் எண்ணிக்கை 33 படைப்பிரிவுகளாகக் குறைந்துள்ளது, எனினும் இந்தியா உலகின் நான்காவது பெரிய விமானப்படையை பராமரிக்கிறது. 2 ஆகத்து 2002 அன்று, காஷ்மீரின் கெல் அருகே எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டின் அருகே உள்ள பாகித்தான் ராணுவ நிலைகளை இந்திய விமானப்படை குண்டுவீசித் தாக்கியது. 20 ஆகத்து 2013 அன்று, இந்திய விமானப்படையானது தனது சி-130 வானூர்தியை லடாக் விமான ஓடுதளத்தில் 5065 மீ உயரத்தில் தரையிறக்கி உலக சாதனை படைத்தது.
பாகிஸ்தானை தளமாகக் கொண்ட பயங்கரவாதிகளால் நடத்தப்பட்ட 2019 புல்வாமா தாக்குதலில் நாற்பது இந்திய படைவீரர்கள் கொல்லப்பட்டதையடுத்து இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையே பதட்டங்கள் அதிகரித்தது. இதைத் தொடர்ந்து இந்திய விமானப்படையின் பன்னிரண்டு மிராஜ் 2000 விமானங்கள் பாகிஸ்தானால் நிர்வகிக்கப்படும் காஷ்மீரில் உள்ள சகோதி மற்றும் முசாபராபாத் ஆகிய இடங்களில் உள்ள தீவிரவாத தளங்கள் மீது வான்வழித் தாக்குதல்களை நடத்தியது. மேலும், இந்த விமானங்கள் பாலகோட்டில் உள்ள பயங்கரவாத பயிற்சி முகாமை குறிவைத்து தாக்கின.
27 பிப்ரவரி 2019 அன்று, பாலகோட்டில் பயங்கரவாதிகளின் மறைவிடத்தின் மீது இந்திய வான்படை நடத்திய குண்டுவீச்சுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், பாக்கித்தான் வான்படையின் விமானங்கள் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டின் அருகே வான்வழித் தாக்குதலை நடத்தியதாகக் கூறப்படுகிறது. எஸ்.யு-30எம்.கே.ஐ மற்றும் மிக்-21 விமானங்களைக் கொண்ட இந்திய போர் விமானங்களின் குழுவால் தடுத்து நிறுத்தப்பட்டனர். அபிநந்தன் வர்தமான் இயக்கிய மிக்-21 விமானத்தால் ஒரு பாக்கித்தானிய எப்-16 சுட்டு வீழ்த்தப்பட்டது. அதே நேரத்தில் அந்த மிக்-21 விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டதைத் தொடர்ந்து, அபிநந்தன் பாகித்தானால் கைப்பற்றப்பட்டார். பின்னர் சிரித்து நாட்களுக்கு பிறகு விடுவிக்கப்பட்டார்.
இப்படைக்கு இந்தியக் குடியரசுத் தலைவர் முதற் பெரும் படைத்தலைவர் ஆவார். இந்திய வான்படையின் நிறுவன அமைப்பின் தலைவராக ஒரு வான்படைப் பணியாளர்களின் முதன்மை அதிகாரி (Chief of Air Staff) நியமிக்கப்படுகிறார். இந்திய விமானப் படைத் தளபதிக்கு உதவியாக ஆறு அதிகாரிகள் உள்ளனர். இந்திய வான்படையானது ஏழு செயல்பாட்டுக் கடலை பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு கட்டளை பிரிவுக்கும் ஒரு வான்படை அதிகாரி தலைமை தாங்குகிறார். ஒரு செயல்பாட்டுக் கட்டளையின் நோக்கம், அதன் பொறுப்பின் எல்லைக்குள் வானூர்திகளைப் பயன்படுத்தி இராணுவ நடவடிக்கைகளை மேற்கொள்வதாகும்.
2017ஆம் வருடப்படி, இந்திய வான்படையில் 12,550 அதிகாரிகள் மற்றும் 142,529 விமானப்படையினர் உள்ளனர்.
பிரிவு | தலைமையகம் |
---|---|
மத்திய | பிரயாக்ராஜ் |
கிழக்கு | ஷில்லாங் |
தெற்கு | திருவனந்தபுரம் |
தென்மேற்கு | காந்திநகர் |
மேற்கு | புது டெல்லி |
பயிற்சி | பெங்களூரு |
பராமரிப்பு | நாக்பூர் |
ஒவ்வொரு செயல்பாட்டுக் கட்டளையிலும் ஒன்பது முதல் பதினாறு வான்படை தளங்கள் அல்லது நிலையங்கள் உள்ளன. இந்த தளங்கள் ஒரு வான்படை குரூப் கேப்டன் மூலம் நிர்வகிக்கப்படுகின்றன. ஒரு நிலையத்திற்கு பொதுவாக ஒன்று அல்லது இரண்டு படைப்பிரிவுகள் ஒதுக்கப்படும். படைப்பிரிவுகள் என்பது குறிப்பிட்ட வான் படை தளங்களுடன் இணைக்கப்பட்ட அமைப்புகளாகும். ஒரு பறக்கும் படைப்பிரிவு என்பது வான்படையின் முதன்மைப் பணியை மேற்கொள்ளும் ஒரு துணைப் பிரிவாகும். ஒரு போர்ப் படைப்பிரிவு 18 வானூர்திகளைக் கொண்டது. ஒரு படைப்பிரிவு விங் கமாண்டர் நிலையில் உள்ள விமான படை அதிகாரியால் தலைமை தாங்கப்படுகிறது.
இந்த உருவாக்கக் கட்டமைப்பிற்குள், இந்திய வான்படை பல சேவைக் கிளைகளைக் கொண்டுள்ளது. அவை பின்வருமாறு:
பறக்கும் கிளை
| தொழில்நுட்பக் கிளை
| நிலவழிக் கிளை
|
கருட் இந்திய விமானப்படையின் சிறப்புப் படைப்பிரிவாகும். இந்த படையானது பயங்கரவாத எதிர்ப்பு, பணயக்கைதிகள் மீட்பு, வான்படையின் முக்கிய தளங்களுக்கு பாதுகாப்பை வழங்குதல் மற்றும் பல்வேறு விமானப்படை சார்ந்த சிறப்பு நடவடிக்கைகள் ஆகிய பணிகளில் ஈடுபடுகின்றது. முதன்முதலில் 2002 இல் உருவாக்கப்பட்ட இந்தபிரிவு பிப்ரவரி 6, 2004 அன்று அதிகாரப்பூர்வமாக நிறுவப்பட்டது.
அனைத்து கருட் வீரர்களுக்கும் 52 வார அடிப்படைப் பயிற்சி வழங்கப்படுகின்றது, இதில் சிறப்பு நடவடிக்கை பயிற்சி, அடிப்படை வான்வழிப் பயிற்சி மற்றும் பிற போர் மற்றும் உயிர்வாழும் திறன்களைக் கற்பித்தல் ஆகியவை அடங்கும். அடிப்படைப் பயிற்சியின் கடைசிக் கட்டத்தில், கருட் வீரர்கள் போர் நுட்பங்களைக் கற்கிறார்கள். இதில் சிறப்பு ஆயுதப் பயிற்சியும் அடங்கும்.
நாட்டின் விண்வெளி அடிப்படையிலான சொத்துக்களை திறம்பட பயன்படுத்த இந்தியப் பாதுகாப்புப் படைகள், இந்திய அரசின் விண்வெளித் துறை மற்றும் இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் (இஸ்ரோ) ஆகிய மூன்று சேவைகளும் இணைந்து ஒரு ஒருங்கிணைந்த விண்வெளி பிரிவை செயல்படுத்துகின்றன. புவி வட சுற்றுப்பாதையில் தற்போது 10 இந்திய செயற்கைக்கோள்கள் உள்ளன. இதில் பெரும்பாலானவை இராணுவ செயற்கைக்கோள்களாக இல்லை என்றாலும், இவற்றில் சிலவற்றை இராணுவப் பயன்பாடுகளுக்கும் பயன்படுத்தப்படலாம்.
சூர்ய கிரண் என்பது இந்திய வான்படையின் வானூர்தி செயல்விளக்கக் கலைக் குழு ஆகும். சூர்யா கிரண் வானூர்திக் கலைக்குழு 1996 ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டது. இது இந்திய விமானப்படையின் 52ஆம் படைப்பிரிவின் ஒரு பகுதியாகும்.
இந்தக் குழு கருநாடக மாநிலத்தில் உள்ள பீதர் விமானப்படை நிலையத்தை தளமாக கொண்டு செயல்படுகின்றது. இந்த படைப்பிரிவு ஆரம்பத்தில் எச்.ஏ.எல். கிரண் எம்கே 2 பயிற்சி வானூர்திகளைப் பயன்படுத்தியது. பின்னர் 2015 இல் ஆக் எம்கே 132 வானூர்திகளைப் பயன்படுத்தத் தொடங்கியது.
சாரங் என்பது இந்திய வான்படையின் உலங்கு வானூர்தி செயல்விளக்கக் கலைக் குழு ஆகும். இந்தக் குழு மாற்றியமைக்கப்பட்ட ஐந்து எச்.ஏ.எல். துருவ் உலங்கு வானூர்திகளை பயன்படுத்துகின்றது. இந்த பிரிவு தமிழ்நாட்டின் கோயம்புத்தூர் அருகே உள்ள சூலூர் விமான படை நிலையத்தை தளமாக கொண்டு செயல்படுகின்றது.
சாரங் என்ற வார்த்தைக்கு சமசுகிருதத்தில் மயில் என்று பொருள். மயில் இந்தியாவின் தேசியப் பறவை ஆகும். இந்தக்குழுவானது சிறப்பு மயில் படம் மற்றும் வண்ணங்கள் தீட்டப்பட்ட உலங்கு வானூர்திகளைப் பயன்படுத்துகிறது.
இந்திய வான்படையில் வெளிநாடு மற்றும் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட வானூர்திகள் மற்றும் உபகரணங்கள் உள்ளன. பகிரப்பட்ட உரிமத்தின் கீழ் இந்தியாவில் சில வெளிநாட்டு வானூர்திகளை இந்துஸ்தான் ஏரோனாடிக்ஸ் நிறுவனம் உற்பத்தி செய்கிறது. 900 சண்டை வானூர்திகள் உட்பட ஏறத்தாழ 1750 முதல் 1850 வானூர்திகள் இந்திய வான்படையிடம் சேவையில் உள்ளன.
வானூர்தி | உற்பத்தியாளர் | நாடு | எண்ணிக்கை |
---|---|---|---|
சண்டை, தாக்குதல் மற்றும் இடைமறிப்பு | |||
மிக்-21 | மிக்கோயன் குருவிச் | சோவியத் ஒன்றியம் | 40 |
மிக்-29 | மிக்கோயன் | உருசியா | 75 |
தேசசு | எச்ஏஎல் | இந்தியா | 33 |
மிராஜ் 2000 | தசால்ட் | பிரான்சு | 50 |
எஸ்யு-30எம்கேஐ | சுகோய் | உருசியா | 260 |
ரபேல் | தசால்ட் | பிரான்சு | 36 |
ஜாகுவார் | செபிகேட் | ஐக்கிய இராச்சியம் | 160 |
வான்வழி முன்னறிவிப்பு மற்றும் கட்டுப்பாடு | |||
ஆர்-99 | எம்பிராயெர் | பிரேசில் | 3 |
ஏ -50 | பெரிஇவ் | சோவியத் ஒன்றியம் | 3 |
கண்காணிப்பு | |||
707 | போயிங் | ஐக்கிய அமெரிக்கா | 1 |
குளோபல் 5000 | பாம்பார்டியர் | கனடா | 2 |
ஜி 100 | கல்ப் ஸ்திரீம் | இஸ்ரேல் | 2 |
ஜி III | கல்ப் ஸ்திரீம் | ஐக்கிய அமெரிக்கா | 3 |
வான்வழி எரிபொருள் நிரப்புதல் | |||
இல்-78 | இல்யூசின் | சோவியத் ஒன்றியம் | 6 |
போக்குவரத்து | |||
737 | போயிங் | ஐக்கிய அமெரிக்கா | 3 |
777 | போயிங் | ஐக்கிய அமெரிக்கா | 2 |
லேகசி 600 | எம்பிராயெர் | பிரேசில் | 4 |
சி-17 | போயிங் | ஐக்கிய அமெரிக்கா | 11 |
இல்-76 | இல்யூசின் | சோவியத் ஒன்றியம் | 17 |
ஏ320 | ஏர்பஸ் | ஐரோப்பா | 4 |
ஏஎன்-32 | அன்டனோவ் | உக்ரைன் | 103 |
டிஓ 228 | டோர்னியர் | சேர்மனி | 58 |
சி-295 | ஏர்பஸ் | ஐரோப்பா | 1 |
சி-130ஜெ | லாக்கீட் மார்ட்டின் | ஐக்கிய அமெரிக்கா | 12 |
எச்எஸ்-748 | ஹாக்கர் சிட்லி | ஐக்கிய நாடுகள் | 57 |
உலங்கு வானூர்தி | |||
எம்.ஐ.-17 | மில் | உருசியா | 222 |
எம்.ஐ.-24 | மில் | உருசியா | 15 |
ருத்ரா | எச்ஏஎல் | இந்தியா | 16 |
துருவ் | எச்ஏஎல் | இந்தியா | 95 |
சேத்தக் | ஏரோ ஸ்பாட்டியாலே/எச்ஏஎல் | பிரான்சு/இந்தியா | 77 |
சீத்தா | ஏரோ ஸ்பாட்டியாலே/எச்ஏஎல் | பிரான்சு/இந்தியா | 17 |
ஏஎச்-64 | போயிங் | ஐக்கிய அமெரிக்கா | 22 |
சிஎச்-47 | போயிங் | ஐக்கிய அமெரிக்கா | 15 |
பிரசந்த் | எச்ஏஎல் | இந்தியா | 10 |
பயிற்சி | |||
ஹாவ்க் | பிஏஇ | ஐக்கிய நாடுகள் | 101 |
கிரண் | எச்ஏஎல் | இந்தியா | 77 |
எச்டிடி-40 | எச்ஏஎல் | இந்தியா | |
பிசி-7 | பிலாடசு | சுவிட்சர்லாந்து | 75 |
வைரஸ் | பிபிஸ்ட்ரல் | ஸ்லோவேனியா | 72 |
ஆளில்லாத வானூர்தி | |||
ஹெரான் | ஐஏஐ | இஸ்ரேல் | 49 |
ஹெரான் 2 | ஐஏஐ | இஸ்ரேல் | 4 |
சேர்ச்சேர் | ஐஏஐ | இஸ்ரேல் | 1 |
ஏஎல்எஸ்-50 | டிஆர்டிஓ | எல்எஸ் | 100 |
This article uses material from the Wikipedia தமிழ் article இந்திய வான்படை, which is released under the Creative Commons Attribution-ShareAlike 3.0 license ("CC BY-SA 3.0"); additional terms may apply (view authors). வேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 4.0 இல் கீழ் கிடைக்கும். Images, videos and audio are available under their respective licenses.
®Wikipedia is a registered trademark of the Wiki Foundation, Inc. Wiki தமிழ் (DUHOCTRUNGQUOC.VN) is an independent company and has no affiliation with Wiki Foundation.