எசுக்கிலசு (Aeschylus, அண்.
525/524 - அண். கிமு 456/455 ) என்பவர் ஒரு பண்டைய கிரேக்க கவிஞர், நாடக ஆசிரியர் ஆவார். இவர் பெரும்பாலும் துன்பியல் நாடத்தின் தந்தை என்று விவரிக்கப்படுகிறார். இவரது எஞ்சியிருக்கும் நாடகங்களைப் படிப்பதன் மூலம் முந்தைய கிரேக்க துன்பியல் நாடகங்களைப் பற்றிய புரிதல் கிடைக்கிறது. அரிசுடாட்டிலின் கூற்றுப்படி, இவர் நடக அரங்கில் உள்ள கதாபாத்திரங்களின் எண்ணிக்கையை விரிவுபடுத்தினார் மேலும் அந்த பாத்திரங்களுக்குள்ளே சிக்கல்களை உருவாக்கினார்.
எசுக்கிலசு | |
---|---|
கிமு 30, இது கிமு 340-320 காலக்கட்டத்திய கிரேக்க எசுக்கிலசு எர்ம் சிற்பத்தை அடிபடையாக கொண்ட அதன் நகலான கிமு. 30 ஐச் சேர்ந்த உரோமானிய பளிங்கு எர்ம் (சிற்பம்)எர்ம் சிற்பம். | |
தாய்மொழியில் பெயர் | Αἰσχύλος |
பிறப்பு | அண். கிமு 525/524 எலியூசிஸ் |
இறப்பு | அண். கிமு 456 (சுமார் 67 வயதில்) Gela |
பணி | நாடக ஆசிரியர், போர் வீரர் |
பெற்றோர் | Euphorion (தந்தை) |
பிள்ளைகள் |
|
உறவினர்கள் |
|
இவர் எழுபது முதல் தொண்ணூறு வரையிலான நாடகங்களை எழுதியதாக அறியப்படுகிறது. அவற்றில் ஏழு மட்டுமே எஞ்சியிருக்கின்றன. அவற்றில் ஒன்றான பிரோமிதியஸ் படைப்புரிமை குறித்து நீண்டகால விவாதம் உள்ளது, சில அறிஞர்கள் இது இவரது மகன் யூபோரியனின் படைப்பாக இருக்கலாம் என்று வாதிடுகின்றனர். மற்ற நாடகங்களின் துணுக்குகள் நூல்களில் உள்ள மேற்கோள்களில் தப்பிப்பிழைத்துள்ளன. மேலும் எகிப்திய பாபிரசில் இன்னும் சிலபகுதிகள் தொடர்ந்து கண்டுபிடிக்கப்பட்டன. இந்த துண்டுகள் பெரும்பாலும் எசுக்கிலசுவின் படைப்பு பற்றிய கூடுதல் தகவல்களை அளிக்கின்றன. நாடகங்களை முத்தொகுப்பாக (மூன்று பாகங்களாக) வழங்கிய முதல் நாடக ஆசிரியராக இவர் இருக்கலாம். இவரது ஒரெஸ்டியா முத்தொகுப்பு நாடகம் மட்டுமே தற்போதுள்ள பண்டைய எடுத்துகாட்டு. கிரேக்கத்தின் மீதான பாரசீகர்களின் இரண்டாவது படையெடுப்பானது (கிமு 480-479) இவரது நாடகங்களில் குறைந்தது ஒன்றில் தாக்கத்தை ஏற்படுத்தியது. இந்த படைப்பு, தி பெர்சியன்ஸ், சமகால நிகழ்வுகள் தொடர்பான மிக சில செவ்வியல் கிரேக்க துன்பியல் நாடகங்களிலில் தற்போதுள்ள ஒரே ஒரு படைப்பு ஆகும்.
எசுக்கிலசு சுமார் கி.மு. 525 இல் ஏதென்சுக்கு வடமேற்கே 27 கிமீ தொலைவில் உள்ள எலியூசிஸ் என்ற சிறிய நகரத்தில் பிறந்தார். இவருடைய குடும்பம் செல்வச் செழிப்பு மிக்கதாக இருந்தது. இவரது தந்தை, யூபோரியன், அட்டிகாவின் பண்டைய பிரபுக்களான யூப்பாட்ரிட்டுகள் வகுப்பைச் சேர்ந்தவராக இருந்தார். ஆனால் இது இவரின் நாடகங்களின் பிரம்மாண்டத்தைக் கொண்டு பழங்காலத்தவர்களால் எண்ணப்பட்ட கற்பனையாக இருக்கலாம்.
இளம்வயதில் எசுக்கிலசு ஒரு திராட்சைத் தோட்டத்தில் பணிபுரிந்தார். கி.பி. 2 ஆம் நூற்றாண்டின் புவியியலாளர் பௌசானியாசின் கருத்துப்படி, கடவுளான டயோனிசசு தூக்கத்தில் இவரைச் சந்தித்து, துன்பியல் நடகக் கலையின் மீது இவரது கவனத்தை செலுத்தும்படி கட்டளையிட்டார். இவர் உறக்கத்தில் இருந்து எழுந்தவுடன், ஒரு துன்பியலை எழுதத் தொடங்கினார், மேலும் அவரது முதல் நாடக அரங்கேற்றம் கிமு 499 இல் இவரது 26 வயதில் நடந்தது. இவர் குமு 484 இல் சிட்டி டியோனிசியா விழாவின்போது நடந்த நாடகப் போட்டியின்போது இவரது நாடகம் முதலில் பரிசு பெற்றது.
பாரசீகப் போர்கள் எசுக்கிலசுவின் வாழ்க்கையில் பெரும் பங்கு வகித்தன. கிமு 490 இல், மராத்தான் சமரில் பாரசீகத்தின் முதலாம் டேரியசின் படையெடுப்புப் படைக்கு எதிராக ஏதென்சைப் பாதுகாக்க இவரும் இவரது சகோதரர் சினேகிரசும் போரில் கலந்துகொண்டனர். போரில் ஏதெனியர்கள் வெற்றிபெற்றனர். இந்த வெற்றியை கிரேக்கத்தின் நகர அரசுகள் அனைத்தும் கொண்டாடின. பாரசீகக் கப்பல் ஒன்று கரையிலிருந்து பின்வாங்குவதைத் தடுக்க முயன்றபோது சினேஜிரஸ் கொல்லப்பட்டார், அதற்காக அவரது நாட்டு மக்கள் அவரை ஒரு நாயகனாகப் போற்றினர்.
கிமு 480 இல், எஸ்கிலஸ் தன் தம்பி அமீனியாசுடன் சேர்ந்து, சலாமிஸ் சமரில் செர்க்கசுக்கு எதிராக மீண்டும் போரிட இராணுவ சேவைக்கு அழைக்கப்பட்டார். கிமு 479 இல் பிளாட்டீயா சமரில் எசுக்கிலசு போரிட்டார். கிமு 472 இல் அரங்கேற்றப்பட்டு டியோனிசியாவில் முதல் பரிசை வென்ற இவரது மிகப் பழமையான நாடகமான தி பெர்சியன்ஸ் நாடகத்தில் சலாமிஸ் சமர் ஒரு முக்கிய இடத்தைப் பிடித்தது.
கிமு 470 களில், தீவின் கிழக்குப் பகுதியில் உள்ள ஒரு முக்கிய கிரேக்க நகரமான சிரக்கூசாவின் சர்வாதிகாரியான முதலாம் ஹிரோவின் அழைப்பின்பேரில் எசுக்கிலசு சிசிலிக்கு ஒன்று அல்லது இரண்டு முறை பயணம் மேற்கொண்டார். அந்த பயணங்களில் ஒன்றின் போது (ஹைரோனால் நிறுவப்பட்ட நகரத்தின் நினைவாக) தி வுமன் ஆஃப் ஏட்னா நாடகத்தை இவர் எழுதினார். மேலும் இவரது பெர்சியன்ஸ் நாடகத்தை மீண்டும் அரங்கேற்றினார். கிமு 473 இல் துன்பியல் நாடகங்களில் இவரது முக்கிய போட்டியாளர்களில் ஒருவரான ஃபிரினிச்சஸ் இறந்த பிறகு, டியோனிசியா விழாவில் நடந்த துன்பியல் நாடகப் போட்டிகளில் ஆண்டுதோறும் பரிசு பெற்றார். ஏறக்குறைய ஒவ்வொரு போட்டியிலும் முதல் பரிசை வென்றார். கிமு 472 இல் எஸ்கிலஸ் பெர்சியன்ஸ் நடகம் உள்ளிட்ட நாடகங்களை அரங்கேற்றினார். அப்போது நாடகங்களை அரங்கேற்றும் புரவலராக பெரிக்கிளீசு இருந்தார்.
எசுக்கிலசு திருமணம் செய்து கொண்டு யூபோரியன், யூயோன் என்ற இரண்டு மகன்களைப் பெற்றார். அவர்கள் இருவரும் துன்பியல் கவிஞர்கள் ஆனார்கள். கிமு 431 இல் சாஃபக்கிளீசு மற்றும் யூரிபிடிஸ் ஆகிய இருவருக்குமான போட்டியில் யூபோரியன் முதல் பரிசை பெற்றார். எசுக்கிலசுவின் மருமகன், ஃபிலோக்கிள்ஸ் (இவரது சகோதரியின் மகன்), சோபோக்கிள்ஸின் ஓடிபஸ் ரெக்சுக்கு எதிரான போட்டியில் முதல் பரிசை வென்றார். எசுக்கிலசுக்கு குறைந்தது சினேகிரஸ், அமீனியாஸ் என்ற இரண்டு சகோதரர்கள் இருந்தனர்.
கிமு 458 இல், எசுக்கிலசு கடைசியாக சிசிலிக்குச் சென்று, கெலா நகரத்திற்குச் சென்றார், அங்கு இவர் கிமு 456 அல்லது கிமு 455 இல் இறந்தார். இது குறித்து எழுதிய வலேரியஸ் மாக்சிமஸ், நகருக்கு வெளியே கழுகு வீசிய ஆமையால் இவர் கொல்லப்பட்டதாக எழுதினார் ( எலும்புண்ணிக் கழுகு அல்லது சாம்பல் பாறு போன்றவை ஆமைகளை பிடித்து வானில் பறந்து கடினமான பொருட்களின் மீது போட்டு உடைத்து உண்ணும் ) ஒருகால் கழுகு இவரது தலையை ஒரு பாறையாக தவறாகக் கருதி ஆமையை உடைக்க போட்டிருக்கலாம். பிளினி, தனது நேச்சுரலிஸ் ஹிஸ்டோரியில், எஸ்கிலஸ், நூலில் கீழே விழும் பொருளால் கொல்லப்படுவார் என்ற தீர்க்கதரிசனத்தைதிலிருந்து தப்புவதற்காக இவர் வெட்டவெளியில் தங்கியிருந்ததாகக் கூறுகிறார். ஆனால் இந்தக் கதை செவிவழிக்கதையாக இருக்கலாம். எசுக்கிலசுவின் படைப்புகள் ஏதெனியர்களால் மிகவும் மதிக்கப்பட்டது. இவரது மரணத்திற்குப் பிறகும் இவரது துன்பியல் நாடகங்கள் மட்டுமே அடுத்தடுத்த போட்டிகளில் பரிசீலனைக்கு அனுமதிக்கப்பட்டன. இவரது மகன்கள் யூபோரியன், யூயோன் மற்றும் அவரது மருமகன் பிலோக்லெஸ் ஆகியோரும் நாடக ஆசிரியர்களாக ஆனார்கள்.
This article uses material from the Wikipedia தமிழ் article எசுக்கிலசு, which is released under the Creative Commons Attribution-ShareAlike 3.0 license ("CC BY-SA 3.0"); additional terms may apply (view authors). வேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 4.0 இல் கீழ் கிடைக்கும். Images, videos and audio are available under their respective licenses.
®Wikipedia is a registered trademark of the Wiki Foundation, Inc. Wiki தமிழ் (DUHOCTRUNGQUOC.VN) is an independent company and has no affiliation with Wiki Foundation.