இராமர் கோயில் இந்து சமயத்தின் மும்மூர்த்திகளில் ஒருவரான விஷ்ணுவின் அவதாரமான குழந்தை இராமர், அயோத்தியில் பிறந்த இடமாக கருதப்படும் ராம ஜென்ம பூமியில் கட்டப்பட்டு வரும் ஒரு இந்துக் கோயில் ஆகும்.
இது இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநிலத்தில், அயோத்தி மாவட்டத்தின் அயோத்தி நகரத்தில் அமைந்துள்ளது.
அயோத்தி இராமர் கோயில் | |
---|---|
இராம ஜென்ம பூமி கோயில் | |
அமைவிடம் | |
நாடு: | இந்தியா |
மாநிலம்: | உத்தரப் பிரதேசம் |
அமைவு: | ராம ஜென்ம பூமி, அயோத்தி |
ஆள்கூறுகள்: | 26°47′44″N 82°11′39″E / 26.7956°N 82.1943°E |
கோயில் தகவல்கள் | |
வரலாறு | |
கட்டடக் கலைஞர்: | சோமபுரா குடும்பம் |
கோயில் அறக்கட்டளை: | ஸ்ரீராம ஜென்மபூமி தீர்த்தச் சேத்திர அறக்கட்டளை |
இணையதளம்: | Shri Ram Janmbhoomi Teerth Kshetra |
இராமாயண காவியத்தின்படி, இராமர் அயோத்தியில் பிறந்தார். எனவே அயோத்தி இந்துக்களுக்கு ஏழு மிகவும் புனிதமான நகரங்களில் (சப்த புரி) ஒன்றாகும். பொ.ஊ. 1528 ஆம் ஆண்டில், முகலாயப் பேரரசர் பாபரின் ஆணையின்படி, இராமர் பிறந்த இடம் என்று கூறப்படும் இராம ஜென்ம பூமியின் தளத்தில் இருந்த குழந்தை இராமர் கோயில் இடிக்கப்பட்டு பாபர் மசூதி கட்டப்பட்டதாக நம்பப்படுகின்றது. இராம ஜென்ம பூமி தொடர்பாக 1850களில் சர்ச்சை எழுந்தது மற்றும் 1980-களில் சங்கப் பரிவாரைச் சேர்ந்த விசுவ இந்து பரிசத் அமைப்பினர், இந்துக்களுக்காக ராம ஜென்ம பூமியை மீட்டெடுக்கவும், குழந்தை இராமருக்கு (ராம் லல்லா) கோயிலைக் கட்டவும் ஒரு புதிய இயக்கத்தைத் தொடங்கியது, 9 நவம்பர் 1989-இல், சர்ச்சைக்குரிய மசூதியை ஒட்டிய நிலத்தில் இராமர் கோவிலுக்கு அடிக்கல் நாட்டியது. 6 டிசம்பர் 1992 அன்று, விசுவ இந்து பரிசத் மற்றும் பாரதிய ஜனதா கட்சி ஏற்பாடு செய்த, கரசேவர்கள் என்றழைக்கப்பட்ட ஏறத்தாழ ஒன்றரை இலட்சம் தன்னார்வலர்களை உள்ளடக்கிய ஒரு பேரணி பாபர் மசூதியை இடித்தது.
இந்தியத் தொல்லியல் துறையின் அகழ்வாராய்ச்சிகளில், பாபர் மசூதி இருந்த இடத்தில் இந்துக் கோயில் இருந்ததற்கான ஆதாரம் கிடைத்தது. பல ஆண்டுகளாக குறிப்பிட்ட பகுதியை கையகப்படுத்துதல் தொடர்பான பல்வேறு உரிமை மற்றும் சட்ட மோதல்களும் நடந்தன. 2010 இல், அலகாபாத் உயர் நீதிமன்றம், சர்ச்சைக்குரிய நிலத்தை மூன்றாகப் பிரிக்கப்பட வேண்டும் என்று தீர்ப்பளித்தது. ராமர் கோவில் கட்டுவதற்காக இந்து மகாசபாவிற்கு ஒரு பங்கு, மசூதி அமைப்பதற்காக இசுலாமிய வக்ஃப் வாரியதுக்கு ஒரு பகுதி மற்றும் இந்து மதப் பிரிவினர் நிர்மோகி அகாராவிற்கு ஒரே பங்கு எனக் கூறியது. இதை எதிர்த்து இந்திய உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.2019-ஆம் ஆண்டு அயோத்தி பிரச்சினை இந்திய உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பிற்குப் பிறகுதான், சர்ச்சைக்குரிய நிலமானது இந்திய அரசால் நிறுவப்பட்ட ஸ்ரீராம ஜென்மபூமி தீர்த்தச் சேத்திர அறக்கட்டளையிடம் ஒப்படைக்கப்பட்டது. இசுலாமிய வக்ஃப் வாரியதுக்கு புதிய மசூதி கட்டுவதற்கு அயோத்தியிலிருந்து 22 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள தன்னிபூர் கிராமத்தில் ஐந்து ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டது.
5 பிப்ரவரி 2020 அன்று அயோத்தி இராமர் கோயிலைக் கட்டும் திட்டத்தை நரேந்திர மோதி தலைமையிலான அரசு ஏற்றுக்கொண்டதாக நாடாளுமன்றத்தில் அறிவிக்கப்பட்டது. பகவான் விஷ்ணுவின் அவதாரமான இராமரின் குழந்தை வடிவமான ராம் லல்லா கோயிலின் மூலவர் ஆவார். இக்கோயில் ஸ்ரீராம ஜென்மபூமி தீர்த்தச் சேத்திர அறக்கட்டளை சார்பாக லார்சன் அன்ட் டூப்ரோ நிறுவனத்தால் கட்டுமானம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கோயில் வளாகத்தின் நடுவில் குழந்தை இராமர் வீற்றிருக்கும் கருவறை மற்றும் அதை சுற்றி சூரியன், விநாயகர், சிவன், துர்க்கை, அன்னபூரணி மற்றும் அனுமன் ஆகிய தெய்வங்களுக்கு அர்ப்பணிக்கப்பட்ட சிறிய சன்னதிகள் இருக்கும். இக்கோயில் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா 5 ஆகத்து 2020 அன்று இந்தியப் பிரதமர் நரேந்திர மோதி பங்குபெற்ற ஒரு நிகழ்ச்சியில் நடைபெற்றது. மேலும் 22 ஜனவரி 2024 அன்று பிராண பிரதிஷ்டை (கும்பாபிஷேகம்) செய்து கோவில் திறக்கப்பட்டது.
இராமர் ஒரு இந்து தெய்வம் மற்றும் இந்துக்களால் விஷ்ணுவின் அவதாரம் என்று கருதப்படுகிறார். இந்து கலாச்சாரம் மற்றும் மதம் ஆகியவற்றில் ராமர் பெரும் முக்கியத்துவத்தைப் பெற்றுள்ளார். இராம அவதாரத்தில் விஷ்ணு தனது தெய்வீக ஆற்றல்கள் எதையும் வெளிப்படுத்தாமல், ஒரு மனிதனாக வாழ்க்கையை நடத்தினார். இராமாயணம் எழுதிய வால்மீகிக்கு நாரதர் குறிப்பிட்டுள்ள ராமரின் பதினாறு குணங்களின் அடிப்படையில், இந்துக்கள் இராமரை புருஷோத்தமர் (சிறந்த மனிதன்) என வழிபடுகின்றனர்.
இராமாயண காவியத்தின்படி, இராமர் அயோத்தியில் பிறந்தார். எனவே அயோத்தி இந்துக்களுக்கு ஏழு மிகவும் புனிதமான நகரங்களில் (சப்த புரி) ஒன்றாகும். பொ.ஊ. 1528 ஆம் ஆண்டில், முகலாயப் பேரரசர் பாபரின் ஆணையின்படி, இராமர் பிறந்த இடம் என்று கூறப்படும் இராம ஜென்ம பூமியின் தளத்தில் இருந்த குழந்தை இராமர் கோயில் இடிக்கப்பட்டு பாபர் மசூதி கட்டப்பட்டதாக நம்பப்படுகின்றது.
இராம ஜென்ம பூமி தொடர்பாக 1850களில் சர்ச்சை எழுந்தது. திசம்பர் 1858 இல், தற்போதைய பிரித்தானிய நிர்வாகம் இந்துக்கள் அந்த இடத்தில் சடங்குகள் நடத்துவதைத் தடை செய்தது. மேலும் மசூதிக்கு வெளியே சடங்குகள் நடத்த ஒரு மேடை உருவாக்கப்பட்டது. இராமர் மற்றும் சீதை ஆகியோரின் சிலைகள் 22-23 டிசம்பர் 1949 இரவு பாபர் மசூதிக்குள் நிறுவப்பட்டது. 1950 வாக்கில், மசூதியின் கட்டுப்பாட்டை அரசு எடுத்துக்கொண்டது, மேலும் அந்த இடத்தில் தங்கள் வழிபாடுகளைச் செய்ய இந்துக்கள் அனுமதிக்கப்பட்டனர்.
1980-களில் சங்கப் பரிவாரைச் சேர்ந்த விசுவ இந்து பரிசத் அமைப்பினர், இந்துக்களுக்காக ராம ஜென்ம பூமியை மீட்டெடுக்கவும், குழந்தை இராமருக்கு (ராம் லல்லா) கோயிலைக் கட்டவும் ஒரு புதிய இயக்கத்தைத் தொடங்கியது. தற்போதைய பிரதமர் ராஜீவ் காந்தி அனுமதி வழங்கியதில் பேரில், 9 நவம்பர் 1989-இல், சர்ச்சைக்குரிய மசூதியை ஒட்டிய நிலத்தில் விசுவ இந்து பரிசத் இராமர் கோவிலுக்கு அடிக்கல் நாட்டியது. 6 டிசம்பர் 1992 அன்று, விசுவ இந்து பரிசத் மற்றும் பாரதிய ஜனதா கட்சி கரசேவர்கள் என்றழைக்கப்பட்ட ஏறத்தாழ ஒன்றரை இலட்சம் தன்னார்வலர்களை உள்ளடக்கிய ஒரு பேரணியை ஏற்பாடு செய்தது. இந்த பேரணி வன்முறையாக மாறியது, மேலும் இந்த கூட்டம் பாதுகாப்புப் படையினரை முற்றுகையிட்டு பாபர் மசூதியை இடித்தது.
பாபர் மசூதி இடிக்கப்பட்டதன் விளைவாக இந்தியாவில் இந்து மற்றும் இசுலாமிய சமூகங்களுக்கு இடையே ஏற்பட்ட வகுப்புவாத கலவரங்களில் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். மேலும் இந்தியத் துணைக்கண்டம் முழுவதும் கலவரங்கள் நடந்தன. மசூதி இடிக்கப்பட்ட ஒரு நாளுக்குப் பிறகு, 7 டிசம்பர் 1992 அன்று, த நியூயார்க் டைம்ஸ் செய்தித்தாள், பாகிஸ்தான் முழுவதும் 30க்கும் மேற்பட்ட இந்துக் கோயில்கள் தாக்கப்பட்டன, தீவைக்கப்பட்டன மற்றும் இடிக்கப்பட்டன என்று செய்தி வெளியிட்டது. பாககிஸ்தான் அரசாங்கம் போராட்டத்தின் போது பள்ளிகள் மற்றும் அலுவலகங்களை மூடியது. வங்காளதேசத்திலுள்ள இந்துக் கோவில்களும் தாக்கப்பட்டன. பாபர் மசூதி இடிப்புக்கு பழிவாங்கலின் போது பகுதியளவு அழிக்கப்பட்ட இந்த இந்துக் கோவில்களில் சில பின்னர் அப்படியே உள்ளன.
5 சூலை 2005 அன்று அயோத்தியில் பாபர் மசூதி அழிக்கப்பட்ட இடத்தில் உள்ள தற்காலிக கூடாரத்தில் அமைக்கப்பட்ட குழந்தை ராமர் கோவிலை ஐந்து பயங்கரவாதிகள் தாக்கினர். மத்திய சேமக் காவல் படையுடன் (CRPF) நடந்த துப்பாக்கிச் சண்டையில் ஐந்து பேரும் சுட்டுக் கொல்லப்பட்டனர். அதே சமயம் சுற்றி வளைக்கப்பட்ட சுவரை உடைப்பதற்காக தாக்குதல் நடத்தியவர்கள் நடத்திய கையெறி குண்டு தாக்குதலில் பொதுமக்கள் ஒருவர் மற்றும் காவல் படையினர் மூவர் பலியாகினர். இருவர் பல துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுடன் படுகாயமடைந்தனர்.
இந்தியத் தொல்லியல் துறையின் (ASI) 1978 மற்றும் 2003ம் ஆண்டு அகழ்வாராய்ச்சிகளில், பாபர் மசூதி இருந்த இடத்தில் இந்துக் கோயில் இருந்ததற்கான ஆதாரம் கிடைத்தது. பல தொல்பொருள் ஆய்வாளர்கள் மற்றும் வரலாற்றாசிரியர்கள் கண்டுபிடிப்புகளை குறைமதிப்பிற்கு உட்படுத்துவதாக குற்றம் சாட்டினார். பல ஆண்டுகளாக குறிப்பிட்ட பகுதியை கையகப்படுத்துதல் தொடர்பான பல்வேறு உரிமை மற்றும் சட்ட மோதல்களும் நடந்தன. 2010 இல், அலகாபாத் உயர் நீதிமன்றம், சர்ச்சைக்குரிய நிலத்தை மூன்றாகப் பிரிக்கப்பட வேண்டும் என்று தீர்ப்பளித்தது. ராமர் கோவில் கட்டுவதற்காக இந்து மகாசபாவிற்கு ஒரு பங்கு, மசூதி அமைப்பதற்காக இசுலாமிய வக்ஃப் வாரியதுக்கு ஒரு பகுதி மற்றும் இந்து மதப் பிரிவினர் நிர்மோகி அகாராவிற்கு ஒரே பங்கு எனக் கூறியது. இதை எதிர்த்து இந்திய உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
2019-ஆம் ஆண்டு அயோத்தி பிரச்சினை இந்திய உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பிற்குப் பிறகுதான், சர்ச்சைக்குரிய நிலமானது இந்திய அரசால் நிறுவப்பட்ட ஸ்ரீராம ஜென்மபூமி தீர்த்தச் சேத்திர அறக்கட்டளையிடம் ஒப்படைக்கப்பட்டது. இசுலாமிய வக்ஃப் வாரியதுக்கு புதிய மசூதி கட்டுவதற்கு அயோத்தியிலிருந்து 22 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள தன்னிபூர் கிராமத்தில் ஐந்து ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டது. 5 பிப்ரவரி 2020 அன்று அயோத்தி இராமர் கோயிலைக் கட்டும் திட்டத்தை நரேந்திர மோதி தலைமையிலான அரசு ஏற்றுக்கொண்டதாக நாடாளுமன்றத்தில் அறிவிக்கப்பட்டது.
பகவான் விஷ்ணுவின் அவதாரமான இராமரின் குழந்தை வடிவமான ராம் லல்லா கோயிலின் மூலவர் ஆவார். ராம் லல்லா 1989ம் ஆண்டு முதல் சர்ச்சைக்குரிய இடத்தின் மீதான நீதிமன்ற வழக்கில் ஒரு வாதியாக இருந்தார். சட்டத்தால் "நீதிசார்ந்த நபராக" கருதப்படுகிறார். அவர் ராம் லல்லாவின் அடுத்த 'மனித' நண்பராகக் கருதப்பட்ட விசுவ இந்து பரிசத்த்தின் மூத்த தலைவரான திரிலோகி நாத் பாண்டே அவர்களால் பிரதிநிதித்துவப்படுத்தப்பட்டார்.
கோவிலில் ராம் லல்லாவின் மூன்று தனித்துவமான சிலைகள் வைக்கப்பட்டுள்ளன. மைசூரைச் சேர்ந்த அருண் யோகிராசால் செதுக்கப்பட்ட 51 அங்குல கருப்பு கருங்கல் சிலை, கோவிலின் கருவறையில் வைக்கப்பட்டுள்ளது. பழங்கால கிருஷ்ண சீலா கல்லில் இருந்து செதுக்கப்பட்ட இந்த சிலை பாரம்பரிய உடைகள் மற்றும் ஆபரணங்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. ராம் லல்லாவின் ஆடை தையல் கலைஞர்களான பகவத் பிரசாத் மற்றும் ஷங்கர் லால் ஆகியோரால் தைக்கப்பட்டது. இது தவிர இரண்டு நேர்த்தியான சிலைகள் உள்ளன கோவில் வளாகத்திற்குள் வைக்கப்பட்டுள்ளன. ஒன்று, ராஜஸ்தானைச் சேர்ந்த சத்யநாராயண் பாண்டேவின் வெள்ளைப் பளிங்குக் கல் சிலை, தங்க வில் மற்றும் அம்புகளுடன் ராம் லல்லாவை சித்தரிக்கிறது. மற்றொன்று, கர்நாடகாவைச் சேர்ந்த கணேஷ் பட் என்பவரால் கிரீடத்தில் சூரியன் உட்பட சூரிய வம்சத்தின் சின்னங்களுடன் நிர்ணயிக்கப்பட்ட சிலையாகும்.
அயோத்தி இராமர் கோயிலுக்கான அசல் வடிவமைப்பு 1988ம் ஆண்டு அகமதாபாத்தைச் சேர்ந்த சோம்புரா குடும்பத்தின் சந்திரகாந்த் சோம்புராவால் தயாரிக்கப்பட்டது. சோம்புரா குடும்பத்தினர் 15 தலைமுறையாக கோயில் கட்டுமானத் தொழிலைச் செய்பவர்கள் மற்றும் சோமநாதர் கோயில், தில்லி அக்சர்தாம் கோயில் உட்பட நூற்றுக்கும் மேற்பட்ட கோவில்களை வடிவமைத்தவர்கள்.
அசல் கட்டுமான வரைபடத்திலிருந்து சில மாற்றங்களுடன் புதிய வடிவமைப்பு, வாஸ்து சாத்திரம் மற்றும் சிற்ப சாத்திரங்களின்படி, 2020 இல் தயாரிக்கப்பட்டது. அயோத்தி இராமர் கோயில் 235 அடி அகலமும், 360 அடி நீளமும், 161 அடி உயரமும் கொண்டதாக அமையும். கோயில் கட்டுமானப் பணி முழுமையடைந்தவுடன் இராமர் கோயில் வளாகம் உலகின் மூன்றாவது பெரிய இந்து ஆலயமாக இருக்கும். இது வட இந்தியக் கோவில் கட்டிடக்கலையின் நகரா பாணியில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
கோவிலின் பிரதான அமைப்பு ஒரு உயர்ந்த மேடையில் கட்டப்பட்டு மூன்று மாடிகளைக் கொண்டிருக்கும். இதன் நடுவில் உள்ள கருவறையைச் சுற்றி ஐந்து மண்டபங்களைக் கொண்டிருக்கும். கருவறைக்கு மேல் 161 அடி உயர கோபுரம் இருக்கும். கட்டிடத்தில் மொத்தம் 366 நெடுவரிசைகள் மற்றும் 16 அடி படிக்கட்டுகள் கொண்டுள்ளது. கோயில் வளாகத்தின் நடுவில் குழந்தை இராமர் வீற்றிருக்கும் கருவறை கோயில் மற்றும் அதை சுற்றி சூரியன், விநாயகர், சிவன், துர்க்கை, அன்னபூரணி மற்றும் அனுமன் ஆகிய தெய்வங்களுக்கு அர்ப்பணிக்கப்பட்ட சிறிய சன்னதிகள் இருக்கும். சிவனின் அவதாரங்கள், விஷ்ணுவின் தசாவதாரங்கள், 64 சௌசத் யோகினிகள் மற்றும் சரசுவதி தேவியின் 12 அவதாரங்கள் ஆகிய சிலைகள் இருக்கும். விஷ்ணுவுக்கு அர்ப்பணிக்கப்பட்ட கோயில்களின் வடிவமைப்பிற்கு அர்ப்பணிக்கப்பட்ட வேதங்களின்படி, கருவறை எண்கோண வடிவில் இருக்கும். கோவில் 10 ஏக்கரில் கட்டப்பட்டு ஏறத்தாழ 7 ஏக்கர் நிலப்பரப்பில் ஒரு பிரார்த்தனை கூடம், விரிவுரை கூடம், கல்வி மற்றும் அருங்காட்சியகம் மற்றும் சிற்றுண்டிச்சாலை போன்ற பிற வசதிகளுடன் கூடிய வளாகமாக உருவாக்கப்படுகிறது.
ஸ்ரீராம ஜென்மபூமி தீர்த்தச் சேத்திர அறக்கட்டளை 2020ம் ஆண்டு மார்ச் மாதம் ராமர் கோயிலின் முதல் கட்ட கட்டுமானத்தை தொடங்கியது. கோவிட்-19 பெருந்தொற்று பரவலைத் தொடர்ந்து கட்டுமானப் பணிகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டன. கோயிலுக்கு அஸ்திவாரம் தோண்டும் போது ஒரு சிவலிங்கம், தூண்கள் மற்றும் உடைந்த சிலைகள் கண்டுபிடிக்கப்பட்டன. 25 மார்ச் 2020ல் தற்போதைய உத்திர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் முன்னிலையில் குழந்தை ராமர் சிலை தற்காலிக இடத்திற்கு மாற்றப்பட்டது. லார்சன் அன்ட் டூப்ரோ நிறுவனம் கோயில் கட்டுமானத்திற்கு பொறுப்பேற்றது.
இராஜஸ்தான் மாநிலத்தின் பரத்பூர் மாவட்டத்திலுள்ள பன்சி கிராமத்தில் இருந்து பெறப்பட்ட 600 ஆயிரம் கன அடி மணற்கற்களைக் கொண்டு கட்டுமானப் பணிகள் நிறைவேற்றப்படுகின்றன. முப்பது ஆண்டுகளுக்கு முன்பு, நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து பல மொழிகளில் இராமர் பெயர் பொறிக்கப்பட்ட இருநூறாயிரத்திற்கும் மேற்பட்ட செங்கற்கள் அடித்தளத்தில் பயன்படுத்தப்பட்டன. கோயிலை உருவாக்க பாரம்பரிய நுட்பங்கள் மற்றும் பூகம்பம் போன்ற இயற்கை பேரழிவுகளைத் தாங்கும் நவீன தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படுகின்றன. கோவில் கட்டும் பணியில் கல் தொகுதிகளை இணைக்க பத்தாயிரம் செப்பு தகடுகள் உபயோகப்படுத்தப்படுகின்றன. இக்கோவில் கும்பாபிஷேகத்துக்குத் தேவைப்படும் 12 ஆலயமணிகளும் 36 பிடிமணிகளும் நாமக்கல்லில் தயாரித்து அனுப்பப்ப்பட்டன. தூத்துக்குடி மாவட்டம் ஏரலிலிருந்து இக்கோவிலுக்கு 650 கிலோ கொண்ட வெண்கலமணி அனுப்பப்பட்டது.
5 ஆகத்து 2020 அன்று அயோத்தி இராமர் கோயிலுக்கான பூமி பூஜை இந்தியப் பிரதமர் நரேந்திர மோதி மற்றும் மோகன் பாகவத் பங்குபெற்ற ஒரு நிகழ்ச்சியில் நடைபெற்றது. பிறகு அதிகாரப்பூர்வமாக கோவில் கட்டுமானம் மீண்டும் தொடங்கியது. அடிக்கல் நாட்டு விழாவிற்கு முன்னதாக மூன்று நாள் நீண்ட வேத சடங்குகள் நடைபெற்றன, இது 40 கிலோ (88 பவுண்டுகள்) வெள்ளி செங்கல்லை அடித்தளமாக நிறுவப்பட்டது. ஆகத்து 4 ஆம் தேதி, ஸ்ரீராமரின் பாத பூஜை செய்யப்பட்டது மற்றும் அனைத்து முக்கிய கடவுள் மற்றும் தேவியை அழைக்கும் பூஜை செய்யப்பட்டது. மேலும் 22 ஜனவரி 2024 அன்று பிராண பிரதிஷ்டை (கும்பாபிஷேகம்) செய்து கோவில் திறக்கப்பட்டது.
This article uses material from the Wikipedia தமிழ் article அயோத்தி இராமர் கோயில், which is released under the Creative Commons Attribution-ShareAlike 3.0 license ("CC BY-SA 3.0"); additional terms may apply (view authors). வேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 4.0 இல் கீழ் கிடைக்கும். Images, videos and audio are available under their respective licenses.
®Wikipedia is a registered trademark of the Wiki Foundation, Inc. Wiki தமிழ் (DUHOCTRUNGQUOC.VN) is an independent company and has no affiliation with Wiki Foundation.