பிரேந்திரா பீர் விக்ரம் சாஹ் தேவ் (Birendra Bir Bikram Shah Dev, वीरेन्द्र वीर विक्रम शाहदेव) (டிசம்பர் 28, 1945 – ஜூன் 1, 2001) என்பவர் 1972 முதல் 2001 இல் இறக்கும் வரை நேபாளத்தின் மன்னராக இருந்தவர்.
இவருக்கும் முதல் இவரது தந்தையார் மகேந்திரா மன்னராக இருந்தார். உலக நாடுகள் அனைத்திலும் பெயர் பெற்றிருந்த நேபாள மன்னராக பிரேந்திரா இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. ஜூன் 1, 2001 இல் மன்னர் மாளிகையில் இடம்பெற்ற ஒரு துப்பாக்கிச் சூட்டு நிழழ்வில் மன்னர் பிரேந்திரா, அவரது மனைவி, பிள்ளைகள் இருவர் மற்றும் சில குடும்ப உறுப்பினர்கள் உட்பட ஒன்பது பேரை இளவரசர் திபெந்திரா சுட்டுக் கொன்றார்.
பிரேந்திரா वीरेन्द्र वीर विक्रम शाहदेव | |
---|---|
நேபாள மன்னர் | |
ஆட்சி | ஜனவரி 31, 1972 - ஜூன் 1, 2001 |
முன்னிருந்தவர் | மகேந்திரா |
Heir-Apparent | தீபேந்திரா |
மரபு | ஷா பரம்பரை |
தந்தை | மகேந்திரா |
இளவரசர் (1955 இல் இருந்து மன்னர்) மகேந்திரா, இளவரசி இந்திரா ராஜ்யலக்ஷ்மி ஆகியோரின் புதல்வர். இந்தியாவில் டார்ஜீலிங், புனித ஜோசப் கல்லூரியில் ஆரம்பக் கல்வியையும், பின்னர் நாட்டின் ஈடன் கல்லூரி (1959-64), டோக்கியோ பல்கலைக்கழகம் (1967), மற்றும் ஹார்வர்ட் பல்கலைக்கழகம் (1967-68) ஆகியவற்றில் உயர்கல்வியையும் கற்றார்.
பிரேந்திரா ராணா குடும்பத்தைச் சேர்ந்த ஐஷ்வர்யா என்பவரை பெப்ரவரி 27 1970 இல் திருமணம் புரிந்தார். இவர்களுக்கு மூன்று பிள்ளைகள் இருந்தார்கள்.
தந்தை மகேந்திரா 1960 இல் நாட்டின் அனைத்து அரசியல் கட்சிகளையும் தடை செய்து நாடாளுமன்றத்தையும் கலைத்திருந்தார். பிரேந்திராவும் தனது தந்தையின் அடிச்சுவட்டிலேயே நாட்டை அரசாண்டார். சோவியத் ஒன்றியம், சீனா ஆகியவற்றின் தலையீடுகளை முறியடித்து நேபாளத்தின் சுதந்திரத்தைப் பாதுகாத்துக் கொண்டார்.
பின்னர், பிரேந்திரா நாடாளுமன்ற மக்காளாட்சி முறைக்கு ஆதாராவாளரானார். 1990 இல் நாட்டில் கிளர்ந்த மக்கள் எழுச்சியை அடுத்து ஏப்ரல் 8 இல் அரசியல் கட்சிகளின் மீதான தடைகளை நீக்கினார். நவம்பர் 9 இல் அரசியல் அமைப்புக்கு திருத்தங்களை அறிவித்தார். அதன்படி, மன்னராட்சியின் கீழ் பலகட்சி அரசியலுக்கு இடமளித்தார். மனித உரிமைக்கு முக்கியத்துவம் கொடுத்தார். ஆனாலும், பல கட்சிகளுக்கும் இடையில் எழுந்த கருத்து வேறுபாடுகள், மற்றும் சமூக ஏற்றத்தாழ்வுகள் நாட்டில் உள்நாட்டுப் போருக்கு வழிவகுத்தன. 1996 முதல் 2006 வரையில் மாவோயிஸ்டுகளுக்கும் அரசப் படைகளுக்கும் இடையில் இப்போர் இடம்பெற்றது.
ஜூன் 1, 2001 இல் நாராயணன்ஹிட்டி அரண்மனையில் நடைபெற்ற அரச விருந்து ஒன்றின் போது, மன்னர் பிரேந்திராவும் அவரது முழுக்குடும்ப உறுப்பினர்களும் பிரேந்திராவின் மகன் இளவரசர் திபெந்திராவினால் சுட்டுக் கொல்லப்பட்டபோது நேபாளத்தின் உறுதிநிலை கேள்விக்குள்ளானது. இளவரசர் திபெந்திரா தன்னைத் தானே சுட்டுப் படுகாயமுற்றார். இப்படுகொலைகளுக்கு பிரேந்திராவின் சகோதரர் இளவரசர் ஞானேந்திராவே காரணம் என நேபாள பொதுமக்கள் நம்புகின்றனர்,,. இக்கொலைக்கான முழுக்காரணமும் இதுவரையில் அறியப்படவில்லை என்றாலும் இளவரசர் தீபேந்திரா தனது காதலியான தேவயானி ராணாவை திருமணம் புரிவதில் அவரது தாயாருடன் ஏற்பட்ட பிணக்கே காரணம் என நம்பப்படுகிறது. அத்துடன் தீபேந்திரா மதுவுக்கு அடிமையாகியிருதார் எனவும் அதனால் மன அழுத்தம் அதிகம் கொண்டவராகவும் இருந்தார் எனவும் செய்திகள் தெரிவிக்கின்றன. பிரேந்திராவின் இறப்புக்குப் பின்னர் திபெந்திரா நேபாள மன்னராக அறிவிக்கப்பட்டாலும் இவரும் 4 நாட்களின் பின்னர் ஜூன் 4, 2001 இல் தன்னைத்தானே சுட்டதினால் ஏற்பட்ட காயங்களின் பின்னர் இறந்தார். பிரேந்திராவின் சகோதரர் இளவரசர் ஞானேந்திரா நேபாள மன்னரானார்.
This article uses material from the Wikipedia தமிழ் article பிரேந்திரா, which is released under the Creative Commons Attribution-ShareAlike 3.0 license ("CC BY-SA 3.0"); additional terms may apply (view authors). வேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 4.0 இல் கீழ் கிடைக்கும். Images, videos and audio are available under their respective licenses.
®Wikipedia is a registered trademark of the Wiki Foundation, Inc. Wiki தமிழ் (DUHOCTRUNGQUOC.VN) is an independent company and has no affiliation with Wiki Foundation.