கொட்டியூர் கோயில் (Kottiyoor Temple) என்பது கேரளத்தில் உள்ள ஒரு முக்கிய சிவன் கோயிலாகும்.
பழங்காலத்தில் இருந்து இக்கோயிலுக்கு பொதுவான பெயராக வடக்கேசுவரம் கோயில் என்று இருந்தது. ஆனால் உள்ளூர்வாசிகளில் சிலர் கொட்டியூர் கிராமத்திற்கு அருகிலுள்ள ஆற்றின் கரையில் இருப்பதால் கோயிலை இக்கரைக் கொட்டியூர் என்று அழைக்கின்றனர்: காரணம் ஆற்றின் மறுபுறம் உள்ள சன்னதியிலிருந்து இதை வேறுபடுத்துவதற்காக இவ்வாறு அழைக்கின்றனர். கொட்டியூர் கோயிலின் சரியான பெயர் திருச்செருமண சேத்திரம் என்பதாகும். இந்த கோயில் மலபார் தேவசம் வாரியத்தின் கீழுள்ள ஒரு சிறப்பு நிலை கோயிலாகும்.
கொட்டியூர் கோயில் | |
---|---|
விழா காலத்தில் கோயில் | |
அமைவிடம் | |
நாடு: | இந்தியா |
மாநிலம்: | கேரளம் |
மாவட்டம்: | கண்ணூர் மாவட்டம் |
ஆள்கூறுகள்: | 11°52′22.29″N 75°51′39.18″E / 11.8728583°N 75.8608833°E |
கோயில் தகவல்கள் | |
கட்டிடக்கலையும் பண்பாடும் | |
கட்டடக்கலை வடிவமைப்பு: | ஓரளவு கேரள பாணி |
வரலாறு | |
அமைத்தவர்: | தெரியவில்லை |
கோயில் அறக்கட்டளை: | மலபார் தேவசம் வாரியம் |
இணையதளம்: | http://kottiyoordevaswom.com/ |
கொட்டியூரில் இரண்டு கோயில்கள் உள்ளன - ஒன்று வாவலி ஆற்றின் மேற்குக் கரையிலும் - மற்றொன்று வாவலி ஆற்றின் கிழக்குக் கரையிலும் அமைந்துள்ளன. கிழக்குக் கரையில் உள்ள சன்னதியானது (கிழக்கேசுவரம் அல்லது அக்கரை கொட்டியூர்) என்பது கொட்டியூர் வைகாசி மகோத்சவத்தின் போது மட்டுமே திறக்கப்பட்டும் ஒரு தற்காலிக பர்ணசாலை (யாக சன்னதி) ஆகும். ஆற்றின் மேற்குக் கரையில் உள்ள வடக்கேசுவரம் அல்லது இக்கரைக் கொட்டியூர் ( திருச்செருமனை கோயில் ) பிற கோயில்களைப் போலவே நிரந்தரமாக செயல்படும் கோயில் வளாகமாகும். வைகாசி பண்டிகையின் 27 நாட்கள் தவிர ஆண்டு முழுவதும் இது மூடப்பட்டிருக்கும். சுமார் 80 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள கோயில் அடர்ந்த காடுகள் நிறைந்த பகுதியில் அதன் மையத்தில் கோயில் அமைந்துள்ளது. தொன்மங்களின் கூற்றின்படி, ஆற்றின் கிழக்குக் கரையில் உள்ள அக்கரை கொட்டியூரானது, தட்சன் யாகம் செய்த இடமாகும். யாகத்தின் முடிவில், சதி தேவி இந்த இடத்தில் தீப்பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார்.
சுயம்புலிங்கம் கண்டுபிடிக்கப்பட்ட பின்னர் திருச்செருமனை கோயில் கட்டப்பட்டது; என்றாலும் கோயில் கட்டிய சரியான காலம் தெரியவில்லை, பல நூற்றாண்டுகளாக இங்கு யாத்திரை நடந்து வருகிறது.
கொட்டியூர் கோயிலானது கேரளம் மற்றும் அண்டை மாநிலப் பகுதிகளில் மிகவும் மதிக்கப்படுகிறது. மும்மூர்த்திகள் (பிரம்மன் - விஷ்ணு - சிவன்) மற்றும் ஆதி தாய் தெய்வம் ( பகவதி ) ஆகியோரின் தெய்வீக இருப்பிடமாக இந்தக் கோயில் ஆசீர்வதிக்கப்பட்டதாக தொன்மம் கூறுகிறது.
கொட்டியூர் சக்தியின் மிகப் புனிதமான ஆலயங்களில் ஒன்றாகும். சதி தேவிக்கு இந்தியாவில் மிகக் குறைவான ஆலயங்களே உள்ளன, அவற்றில் கொட்டியூரும் ஒன்றாகும். மதக் கோட்பாடுகளுக்கு இணங்க இங்கு எந்தவொரு நிரந்தர கட்டமும் கட்டுவது தடைசெய்யப்பட்டுள்ளதால், விழாவின் தேவைக்கு தற்காலிக ஆபரண அறை, வாள் வைக்கும் அறை, மடபள்ளி போன்றவற்றிர்கு எளிமையான ஓலையிலான குடில்கள் மட்டுமே அமைக்கப்படுகின்றன. அவை பர்ணசாலைகள் போல தோற்றமளிக்கும். கருவறைக்கு கட்டடம் இல்லாததால், சதி தேவி தற்கொலை செய்து கொண்டதாக நம்பப்படும் சுயம்பு லிங்கத்தை ஒட்டியுள்ள உயரமான தளமான 'அம்மாரக்கலு தரா'வில் சக்தியை வணங்குகிறார். இது சக்தி பீடங்கள் தோற்றம் கொண்ட கோயில் என்று நம்பப்படுகிறது. அறியப்பட்ட அனைத்து இந்து தெய்வங்களின் சங்கமமாக இந்த இடம் இருப்பதால், இந்த தலம் கூடியூர் என்று அழைக்கப்பட்டு காலப்போகில் கொட்டியூர் என்று ஆனதாக கூறுகிறார்கள்.
இந்தக் கோயிலின் பழைய பழக்கவழக்கங்களுக்கும் மரபுகளுக்கும் இடையூறு ஏற்படாத வகையில் இக்கோயில் புதுப்பித்துக் கட்டப்படவில்லை.
கொட்டியூர் யாத்திரையானது அனைத்து சமூகத்தினரின் பங்களிப்பையும் கொண்டதாக உள்ளது. இப்பகுதியில் உள்ள இந்து சமூகங்கள் ஒவ்வொரு ஆண்டும் நூறு கிலோமீட்டருக்கும் அதிகமான தொலைவில் இருந்து மூலப்பொருட்களை ஒரு சடங்காக கொண்டு வருகின்றனர். ஒவ்வொரு சமூகத்துக்கும் கோட்டயம் (பழசி) அரச குடும்பத்தினரால் குறிப்பிட்ட பணி ஒப்படைக்கப்பட்டுள்ளது. பின்னர் அவை மீண்டும் மாற்றியமைக்கப்படவில்லை. இவை தங்களுக்கு வழங்கப்பட்ட உரிமையாக அவர்கள் கருதுகின்றனர். மேலும் தங்களுக்கு ஒதுக்கபட்ட பணியை ஒரு கடமையாக கருதி செய்கின்றனர். இது பல நூற்றாண்டுகள் பழமையான பாரம்பரியமாகும். யாத்திரை அவர்களின் கலாச்சாரத்தின் ஒரு பகுதியாக மாறிவிட்டது. அமைதியான அடர்ந்த காட்டில் இந்த கோயில் அமைந்துள்ளது. இது இப்போது கேரள அரசால் வனவிலங்கு சரணாலயமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
திருவிழாவின் உரிமைகள், சடங்குகள் போன்றவை சைவ-வைணவ-சாக்த்த சமயங்களின் நல்லிணக்கத்தின் அடையாளமாக உள்ளது. ரோகினி ஆராதணை வைசக மகோத்சவத்தின் போது புனித சடங்குகளில் ஒன்றாக கருதப்படுகிறது, 'குருமத்தூர்' என்ற பெயரிலான வைணவ குடும்பத்தின் தலைமையில் நடக்கிறது. சுயம்புலிங்கத்திற்கு 'ஆலிங்கண புஷ்பஞ்சலி' நடத்துகிறனர், இது சிவன் தனது அன்பு மனைவி சதி தேவியின் எரிந்த சடலத்தைக் கண்டு ஆழ்ந்த துக்கத்தில் இருந்தபோது அவரை சமாதானப்படுத்திய விஷ்ணுவை நினைவுகூருவதாகும்.
This article uses material from the Wikipedia தமிழ் article கொட்டியூர் கோயில், which is released under the Creative Commons Attribution-ShareAlike 3.0 license ("CC BY-SA 3.0"); additional terms may apply (view authors). வேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 4.0 இல் கீழ் கிடைக்கும். Images, videos and audio are available under their respective licenses.
®Wikipedia is a registered trademark of the Wiki Foundation, Inc. Wiki தமிழ் (DUHOCTRUNGQUOC.VN) is an independent company and has no affiliation with Wiki Foundation.