தமிழகத்தில் சங்கம் மருவிய காலத்தில் இயற்றப்பட்ட 18 நூல்களைச் சேர்த்து பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் என வழங்கப்படுகின்றன.
இவை ஒவ்வொன்றும் தனித்தனியான வெவ்வேறு புலவர்களால் பாடப்பட்டவை.
பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள் குறித்த வாய்பாட்டுப் பாடல்:
"நாலடி நான்மணி நானாற்ப தைந்திணைமுப்
பால்கடுகம் கோவை பழமொழி மாமூலம்
இன்னிலைய காஞ்சியோ டேலாதி என்பவே
கைந்நிலைய வாம்கீழ்க் கணக்கு."
இந்தப் பாடலில் கைந்நிலை என்பது ஒழுக்கத்தைக் குறிக்கும்.
நாலடி நான்மணி நானாற்ப தைந்திணைமுப்
பால்கடுகம் கோவை பழமொழி மாமூலம்
இன்னிலைய காஞ்சியுட னேலாதி யென்பதூஉம்,
கைந்நிலையு மாங்கீழ்க் கணக்கு
இந்தப் பாடலில் இனிய நிலையை உடைய காஞ்சி என்று அடைமொழியாகக் கொள்ளப்பட்டுக் கைந்நிலை என்பது தனி நூலாகக் கொள்ளப்படும்.
இன்னுரை நூலுக்கு உரை எழுதும் சங்குப் புலவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
வேறுபாடு | இன்னிலை | கைந்நிலை |
---|---|---|
பொருள் | புறம் | அகம் |
ஆசிரியர் | பொய்கையார் | மாறோக்கத்து முள்ளிநாட்டு நல்லூர்க் காவிதியார் மகனார் புல்லங்காடனார் |
பாடல்கள் | 45 | 60 |
இன்னிலை சேர்க்கப்பட்டுள்ள நிலையில் இத்தொகுதியில் அடங்கியுள்ள நூல்களுள் பெரும்பாலானவை நீதி நூல்களாகும். பதினொன்று நூல்கள் இவ்வகையைச் சார்ந்தவை. ஆறு நூல்கள் அகத்திணை சார்பானவை. ஒன்று புறத்திணை நூல். இந் நூல்கள் அனைத்தும் சிறு பாடல்களால் ஆனவை. கூடிய அளவாக நான்கு அடிகளை மட்டுமே கொண்டவை.
வரிசைஎண் | நூல்பெயர் | பாடல் எண்ணிக்கை | பொருள் | ஆசிரியர் |
---|---|---|---|---|
1. | நாலடியார் | 400 | அறம்/நீதி | சமண முனிவர்கள் |
2. | நான்மணிக்கடிகை | 101 | அறம்/நீதி | விளம்பி நாகனார் |
3. | இன்னா நாற்பது | 40+1 (கடவுள் வாழ்த்து) | அறம்/நீதி | கபிலர் |
4. | இனியவை நாற்பது | 40+1 | அறம்/நீதி | பூதஞ்சேந்தனார் |
5. | திருக்குறள் | 1330 | அறம்/நீதி | திருவள்ளுவர் |
6. | திரிகடுகம் | 100 | அறம்/நீதி | நல்லாதனார் |
7. | ஏலாதி | 80 | அறம்/நீதி | கணிமேதாவியார் |
8. | பழமொழி நானூறு | 400 | அறம்/நீதி | முன்றுரை அரையனார் |
9. | ஆசாரக்கோவை | 100+1 | அறம்/நீதி | பெருவாயின் முள்ளியார் |
10. | சிறுபஞ்சமூலம் | 104 | அறம்/நீதி | காரியாசான் |
11 | முதுமொழிக்காஞ்சி | 10*10 | அறம்/நீதி | கூடலூர்க்கிழார் |
12. | ஐந்திணை ஐம்பது | 50 | அகம் | பொறையனார் |
13. | ஐந்திணை எழுபது | 70 | அகம் | மூவாதியார் |
14. | திணைமொழி ஐம்பது | 50 | அகம் | கண்ணன் சேந்தனார் |
15. | திணைமாலை நூற்றைம்பது | 150 | அகம் | கணிமேதையார் |
16. | கைந்நிலை | 60 | அகம் | புல்லங்காடனார் |
17. | கார்நாற்பது | 40 | அகம் | கண்ணங் கூத்தனார் |
18. | களவழி நாற்பது | 40+1 | புறம் | பொய்கையார் |
ஆரெயில் மூன்றும் அழித்தான் அடிவணங்கி
அரிடத்துத் தான்றிந்த மாத்திரையான் ஆசாரம்
ஆரும் அறிய அறனாய மற்றவற்றை
ஆசாரக் கோவை எனத்தொகுத்தான் தீராத்
திருவாயி லாய திறல்வண் களத்தூர்ப்
பொருவாயில் முள்ளியென் பான்.
This article uses material from the Wikipedia தமிழ் article பதினெண் கீழ்க்கணக்கு, which is released under the Creative Commons Attribution-ShareAlike 3.0 license ("CC BY-SA 3.0"); additional terms may apply (view authors). வேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 4.0 இல் கீழ் கிடைக்கும். Images, videos and audio are available under their respective licenses.
®Wikipedia is a registered trademark of the Wiki Foundation, Inc. Wiki தமிழ் (DUHOCTRUNGQUOC.VN) is an independent company and has no affiliation with Wiki Foundation.