இசுலாத்தின் ஐந்து தூண்கள் (Five Pillars of Islam) (arkān al-Islām أركان الإسلام) என்பது இசுலாமிய மார்க்கக் கடமைகள் ஐந்தைக் குறிக்கும்.
அவை கலிமா, தொழுகை, நோன்பு, ஜகாத், ஹஜ்ஜு என்பன ஆகும்.
கலிமா என்பது அல்லாஹ் தவிர வேறு இறைவன் இல்லை என்பதும் முஹம்மது நபி இறைவனின் தூதராக இருக்கிறார்கள் என்பதை நம்புவதாகும். இதை ஒருவர் நம்பி சாட்சி பகர்ந்தால் மட்டுமே முஸ்லீம் ஆவார்.
தொழுகை என்பது முஸ்லிம்களின் ஐந்து மதக் கடமைகளுள் ஒன்றாகும். வயதுவந்த எல்லா முஸ்லிம்களும் தினமும் ஐந்து வேளை அல்லாஹ்வைத் தொழ வேண்டும். மனநோயாளிகளுக்கும், சிறுவர்களுக்கும், மாதவிடாய் நிலையில் உள்ள பெண்களுக்கும் மட்டுமே தொழுகை கடமை இல்லை. பிரயாணங்களில் இருக்கும் நபர்களுக்கு இரண்டு தொழுகைகளைச் சேர்த்து தொழுவதற்கும் குறைத்து தொழுவதற்கும் இசுலாம் அனுமதி வழங்குகிறது.
நோன்பு (Sawm, அரபு மொழி: صوم) என்பது இசுலாமிய நாட்காட்டியின் ஒன்பதாவது மாதமான ரமலான் மாதம் முழுவதும் இசுலாமியர்களால் நோற்கப்படுவது ஆகும். இந்நாட்களில் நோன்பு அனுசரிப்பவர்கள் அதிகாலை சூரியன் உதயமாவதற்கு முன் முதல் மாலையில் சூரியின் மறையும் வரையில், உண்ணாமல், நீரருந்தாமல், புகைக்காமல், மற்றும் வேறு தீய பழக்கங்களில் ஈடுபடாமல் தங்கள் உடலையும் உள்ளத்தையும் தீமைகளின் பால் செலுத்தாமல் இருப்பதாகும். நோன்பை பற்றி குரான் இவ்வாறு கூறுகிறது.
2:183. ஈமான் கொண்டோர்களே! உங்களுக்கு முன் இருந்தவர்கள் மீது நோன்பு விதிக்கப்பட்டிருந்தது போல் உங்கள் மீதும்(அது) விதிக்கப்பட்டுள்ளது; (அதன் மூலம்) நீங்கள் தூய்மையுடையோர் ஆகலாம். 2:184 أَيَّامًا مَّعْدُودَاتٍ ۚ فَمَن كَانَ مِنكُم مَّرِيضًا أَوْ عَلَىٰ سَفَرٍ فَعِدَّةٌ مِّنْ أَيَّامٍ أُخَرَ ۚ وَعَلَى الَّذِينَ يُطِيقُونَهُ فِدْيَةٌ طَعَامُ مِسْكِينٍ ۖ فَمَن تَطَوَّعَ خَيْرًا فَهُوَ خَيْرٌ لَّهُ ۚ وَأَن تَصُومُوا خَيْرٌ لَّكُمْ ۖ إِن كُنتُمْ تَعْلَمُونَ
சகாத் என்ற வார்த்தைக்கு வளர்ச்சி அடைதல், தூய்மைப் படுத்துதல் போன்ற பல்வேறு அர்த்தங்கள் உண்டு. இது இசுலாமியர்களில் வசதி படைத்தோர் தங்கள் செல்வத்தில் 2.5 சதவிகிதம் ஏழைகளுக்கு கொடுப்பதாகும். இது ஏழை இசுலாமியர்களுக்கு கடமை இல்லை. ஜகாத் எட்டுக்கூட்டத்தாருக்கு கொடுக்கப்பட வேண்டும் என அல்குர்ஆன் கூறுகின்றது. ஏழைகளுக்கும், கடன்பட்டோர்க்கும், தங்கள் தேவைகளை தாங்களே பூர்த்தி செய்ய முடியாதவர்களுக்கும் கொடுக்கப்படுகிறது.
ஹஜ்ஜு (அரபி: حج Ḥaǧǧ "யாத்திரை") என்பது இசுலாமியர்களுக்கான புனித யாத்திரை ஆகும். உலகெங்கும் உள்ள இசுலாமியர்கள் தங்களுக்கு பொருளாதார சக்தியும், உடல் வலுவும் இருக்கும் பட்சத்தில் மக்காவிற்கு யாத்திரை மேற்கொள்வது ஹஜ்ஜு என்று அழைக்கப்படுகிறது. இது மனிதர்கள் அனைவரும் சமம் என்பதனையும் நிறத்தால், இனத்தால், மொழியால் யாரும் யாரைவிடவும் உயர்ந்தவரும் இல்லை; தாழ்ந்தவரும் இல்லை என்பதையும் இறைவனுக்கு அடிபணிதலையும் நிரூபிப்பதாகும். இது இசுலாமிய மாதங்களில் ஒன்றான துல் ஹஜ் மாதத்தின் 8 இல் இருந்து 10 வரை கடைபிடிக்கப்படுகிறது. இந்த யாத்திரை செய்ய வசதி இல்லாதோர்க்கு இது கடமை இல்லை.
This article uses material from the Wikipedia தமிழ் article இசுலாத்தின் ஐந்து தூண்கள், which is released under the Creative Commons Attribution-ShareAlike 3.0 license ("CC BY-SA 3.0"); additional terms may apply (view authors). வேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 4.0 இல் கீழ் கிடைக்கும். Images, videos and audio are available under their respective licenses.
®Wikipedia is a registered trademark of the Wiki Foundation, Inc. Wiki தமிழ் (DUHOCTRUNGQUOC.VN) is an independent company and has no affiliation with Wiki Foundation.