பூச்சியுண்ணல் (Entomophagy) என்பது பூச்சிகளை உணவாக உட்கொள்வதைக் குறிக்கும்.
பூச்சிகள் பல்வேறு விலங்குகளால் உட்கொள்ளப்பட்டாலும், மனிதரால் உட்கொள்ளப்படும்போதே இந்தச் சொல் பயன்படுத்தப்படுகின்றது. பூச்சியுண்ணும் வேறு விலங்குகள் பூச்சியுண்ணிகள் என அழைக்கப்படுகின்றன. சில ஊனுண்ணித் தாவரங்களும் பூச்சியுண்ணிகளாக இருக்கின்றன.
சில இடங்களில் தமது சாதாரண உணவாகவே பூச்சிகளைப் பயன்படுத்துகின்றனர். அவற்றிலிருக்கும் புரத ஊட்டச்சத்துக் காரணமாக அவற்றை மனிதருக்கான புரத உணவாகக் கொள்ளலாம் என்ற கருத்தும் உள்ளது. ஆனாலும் பல இடங்களில் இது ஏற்றுக்கொள்ளப்படுவதில்லை. இருப்பினும் எதிர்காலத்தில் உலக மக்களின் உணவுத்தேவை அதிகரிக்கையில், பூச்சிகளின் எண்ணிக்கையும் மிக அதிகளவில் இருக்கையில் பூச்சியுண்ணல் மிகச் சாதாரணமானதாக மாறக்கூடும் என்று நம்பப்ப்படுகின்றது.
மனிதர்கள் பொதுவாக பூச்சிகளை உண்பதில்லை எனக் கருதினாலும், சிலசமயங்களில் ஒரு பூச்சி உண்ணியாக இருக்கின்றார்கள். தாய்லாந்து, சீனா, யப்பான், பிரேசில், மெக்சிகோ, கானா போன்ற நாடுகளில் பூச்சியுண்ணும் பழக்கம் அதிகளவில் காணப்படுகின்றது. ஆஸ்திரேலியப் பழங்குடிகள் மத்தியிலும் பூச்சியுண்ணும் பழக்கம் காணப்படுகின்றது. தமிழக நாட்டுப் புறங்களில் ஈசல் பூச்சிகளை வறுத்துண்ணும் வழக்கம் உள்ளது.
உலகின் சில பகுதிகளில் பூச்சியுண்ணல் மக்களின் கலாச்சாரத்துடன் இணைந்துள்ளது. 1000 க்கு மேற்பட்ட பூச்சி இனங்கள் உலக சனத்தொகையின் 80% இனரால் உண்ணப்படுவதாக அறியப்படுகின்றது. ஆனாலும் பல சமூகங்களில் இது சாதாரணமாக நிகழ்வதில்லை. பூச்சியுண்ணல் அபிவிருத்தி அடைந்த பல இடங்களில் அரிதாகவே இருந்தாலும், இலத்தீன் அமெரிக்கா, ஆப்பிரிக்கா, ஆசியா, ஓசியானியாவின் பல அபிவிருத்தியடைந்து வரும் இடங்களில் இந்த பூச்சியுண்ணும் பழக்கம் காணப்படுகின்றது.
உண்ணப்படும் பூச்சிகள் பல உள்ளன. வெட்டுக்கிளிகள், எறும்புகள், வண்டுகள், பட்டுப்புழு, சில பூச்சிகளின் குடம்பி, கூட்டுப்புழு பருவநிலைகள் என்பவை இவற்றில் அடங்கும்.
பூச்சிகளை உணவாக கொள்ளும்போது புரதம் மட்டுமல்லாமல் உயிர்ச்சத்துக்கள், கல்சியம், இரும்புச் சத்து போன்ற கனிமங்கள், கொழுப்பு போன்ற ஊட்டச்சத்துக்களும் கிடைக்கின்றன. அத்துடன் இவற்றை வளர்க்க மிகச் சிறிய இடமே போதுமானதாக இருக்கும்.
பூச்சிகளில் வேறு தீமை தரும் ஒட்டுண்ணிகள் இருக்கக் கூடும். இவை சமைப்பதன்மூலம் நிவர்த்தி செய்யப்படலாம். மேலும், பூச்சிகளில் பூச்சிக்கொல்லிகள் சேர்ந்து இருக்கக்கூடும் என்பதனால் அவை உண்ண முடியாதவை ஆகின்றன. அத்துடன் பூச்சிகள் தாவரங்களை உணவாகக் கொள்ளும்போது, அங்கு களைக்கொல்லி பயன்படுத்தப்பட்டிருப்பின், அதன் நச்சுத்தன்மை பூச்சிகளில் பெருக்கமடைந்து இருக்கும்.
This article uses material from the Wikipedia தமிழ் article பூச்சியுண்ணல், which is released under the Creative Commons Attribution-ShareAlike 3.0 license ("CC BY-SA 3.0"); additional terms may apply (view authors). வேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 4.0 இல் கீழ் கிடைக்கும். Images, videos and audio are available under their respective licenses.
®Wikipedia is a registered trademark of the Wiki Foundation, Inc. Wiki தமிழ் (DUHOCTRUNGQUOC.VN) is an independent company and has no affiliation with Wiki Foundation.