திருவாரூர் மாவட்டம் (Tiruvarur district) இந்திய மாநிலமான தமிழ்நாட்டின் 38 மாவட்டங்களில் ஒன்றாகும்.
திருவாரூர் | |
மாவட்டம் | |
ராஜகோபாலசுவாமி திருக்கோயில்,மன்னார்குடி | |
திருவாரூர் மாவட்டம்:அமைந்துள்ள இடம் | |
நாடு | India |
மாநிலம் | தமிழ்நாடு |
தலைநகரம் | திருவாரூர் |
பகுதி | மத்திய மாவட்டம் |
ஆட்சியர் | திருமதி. தி.சாருஸ்ரீ , இ.ஆ.ப. |
காவல்துறைக் கண்காணிப்பாளர் | திரு வி. ஆர். சீனிவாசன், இ.கா.ப |
நகராட்சிகள் | 4 |
வருவாய் கோட்டங்கள் | 2 |
வட்டங்கள் | 9 |
பேரூராட்சிகள் | 7 |
ஊராட்சி ஒன்றியங்கள் | 10 |
ஊராட்சிகள் | 430 |
வருவாய் கிராமங்கள் | 573 |
சட்டமன்றத் தொகுதிகள் | 4 |
மக்களவைத் தொகுதிகள் | 1 (பகுதி) |
பரப்பளவு | 2374 ச.கி.மீ. |
மக்கள் தொகை | 12,64,277 (2011) |
அலுவல் மொழி(கள்) | தமிழ் |
நேர வலயம் | இசீநே (ஒசநே+5:30) |
அஞ்சல் குறியீடு | 610 xxx |
தொலைபேசிக் குறியீடு | 04366, 04367 |
வாகனப் பதிவு | TN-50, TN-68 |
பாலின விகிதம் | 1017 ♂/♀ |
கல்வியறிவு | 82.86% |
இணையதளம் | tiruvarur |
இம்மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிடம் திருவாரூர் ஆகும். திருவாரூர் மாவட்டம், தஞ்சாவூர் மாவட்டத்திலிருந்து வலங்கைமான் வட்டத்தையும், நாகப்பட்டினம் மாவட்டத்திலிருந்து சில வட்டங்களையும் பிரித்து 1 சனவரி 1997-இல் நிறுவப்பட்ட மாவட்டம் ஆகும்.
திருவாரூர் சோழ சாம்ராஜ்யத்தின் ஐந்து பராம்பரிய தலைநகரங்களில் ஒன்றாக இருந்துள்ளது. தென்னிந்தியாவின் நெற்களஞ்சியம் என அனைவராலும் அறியப்படுகிறது. இப்பெயர் ஒருங்கிணைந்த தஞ்சாவூர் மாவட்டத்தினைக் குறிப்பதாகும். காவிரி ஆற்றின் டெல்டா பகுதியில் அமைந்திருக்கும் இம்மாவட்டம், நெல் வயல் வெளிகளினாலும், உயர்ந்த தென்னை மரங்களினாலும், பசுமையான தாவரங்களினாலும் செழிப்புடன் திகழ்கிறது. காவிரி நதி மற்றும் அதன் கிளை நதிகள் இம்மாவட்ட நிலத்தினை வளப்படுத்துகின்றன.
பொ.ஊ. 7, 8-ஆம் நூற்றாண்டுகளில் வாழ்ந்த சைவக்குரவர்களான திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர் ஆகியோர் இயற்றிய தேவாரத்தில் சிறப்பித்துக் கூறப்பட்டுள்ள பாடல்பெற்ற தலமாக திருவாரூர் அமைந்துள்ளது. மார்கழி ஆதிரை விழா, பங்குனி உத்திரப்பெருநாள், வீதிவிடங்கனுக்கு நீதி செய்த முறை ஆகியவற்றை இப்பாடல்களின் மூலம் அறியலாம். இக்கோயில் 9-ஆம் நூற்றாண்டில் முதலாம் ஆதித்ய சோழனால் கற்கோயிலாக கட்டப்பெற்றதாகும். அதன்பின்னர், முதலாம் இராஜராஜசோழன் காலத்தில் புனரமைக்கப்பட்டது. பிற்காலச் சோழர்கள் மற்றும் பாண்டியர்களின் கல்வெட்டுகள் இக்கோயிலில் உள்ளன.
முதலாம் குலோத்துங்க சோழர் காலத்தில் திருவாரூர் தலைநகரமாகவும், சைவ வளர்ச்சி மையமாகவும் திகழ்ந்ததாக இக்கோயில் கல்வெட்டுகளின் மூலம் அறியலாம். 13ஆம் நூற்றாண்டில், இரண்டாம் இராஜேந்திரசோழர் காலத்தில், சோழர்களின் வீழ்ச்சிக்குப் பின்னர் பாண்டியர்கள் மற்றும் ஹோய்சாலர்கள் ஆதிக்கத்தில் இம்மாவட்டம் இருந்துள்ளது. நாயக்கர்கள், விஜயநகர அரசுகள், மராத்தியர்கள் காலத்திலும் தொடர்ந்த அரசின் ஆதரவு காரணமாக இம்மாவட்டம் கலாச்சார மையமாக திகழ்ந்துள்ளது. மராத்தியரின் ஆட்சிக்காலத்தில் சிதம்பரம் நடராஜரின் தற்காலிக வீடாகவே திருவாரூர் இருந்துள்ளது. 1759இல் ல்ல்லியின் கீழ் செயல்பட்ட பிரெஞ்சுபடைகள் திருவாரூர் தியாகராஜ சுவாமி கோயிலில் மறைக்கப்பட்ட பொக்கிஷங்களை தேடி சூறையாடினர். அப்போது கோயிலைச் சேர்ந்த 5 அந்தணர்கள், ஆங்கிலேயர்களுக்கு உளவு பார்க்கிறார்கள் என சந்தேகிகப்பட்டு கொல்லப்பட்டனர். மேலும், பல கல்வெட்டு ஆய்வுகள் நடத்துவதற்கு உகந்த தமிழக இடங்களில் ஒன்றாக திருவாரூர் உள்ளது.
சுதந்திரத்திற்குப் பிறகு திருவாரூர், தஞ்சாவூர் மாவட்டத்தின் ஒரு பகுதியாக 1991 வரையிலும், பின்னர் 1997க்குப் பின்னர் நாகப்பட்டினம் மாவட்டத்தின் ஒரு பகுதியாகவும் இருந்தது. வரலாற்று ரீதியாக திருவாரூர் சமயம், கலை மற்றும் அறிவியல் ஆகியவற்றில் சிறந்தவர்களின் மையமாகத் திகழ்ந்தது. திருவீழிமிழலை, திருப்பாம்புரம், திருமீயச்சூர், திருவாஞ்சியம், தில்லைவிளாகம், திருக்கண்ணமங்கை போன்ற வரலாற்றில் பிரபலமான கோவில்கள் இம்மாவட்டத்தில் அமைந்துள்ளன. முத்துப்பேட்டை அருகே ஜாம்புவானோடையில் பழமையும், புகழும் மிக்க தர்கா அமைந்துள்ளது. கர்நாடக சங்கீத மும்மூர்த்திகளான தியாகராஜர், முத்துசாமி தீட்சிதர், சியாமா சாஸ்திரி ஆகியோர் திருவாரூரில் பிறந்தவர்கள். இவர்கள் இம்மாவட்டத்திற்கு புகழையும், கண்ணியத்தையும் சேர்க்கிறார்கள்.
இம்மாவட்டம் 2 வருவாய் கோட்டங்களையும், 8 வருவாய் வட்டங்களையும், 28 உள்வட்டங்களையும், 573 வருவாய் கிராமங்களையும் கொண்டது.
இம்மாவட்டம் 4 நகராட்சிகளையும், 7 பேரூராட்சிகளையும், 10 ஊராட்சி ஒன்றியங்களையும், 430 கிராம ஊராட்சிகளையும் கொண்டது.
இம்மாவட்டம் 4 சட்டமன்றத் தொகுதிகளைக் கொண்டுள்ளது. 3 சட்டமன்றத் தொகுதிகள் நாகப்பட்டினம் மக்களவைத் தொகுதியுடனும், மன்னார்குடி சட்டமன்றத் தொகுதி தஞ்சாவூர் மக்களவைத் தொகுதியுடனும் இணைக்கப்பட்டுள்ளது.
சீரமைப்பிற்கு முன்னுள்ள தொகுதிகள் | சீரமைப்பிற்கு பின்னுள்ள தொகுதிகள் |
---|---|
* 175 - நன்னிலம் (தனி) | நன்னிலம் |
* 176 - திருவாரூர்(தனி) | திருவாரூர் |
* 177 - திருத்துறைப்பூண்டி(தனி) | திருத்துறைப்பூண்டி (தனி) |
* 178 - மன்னார்குடி | மன்னார்குடி |
திருவாரூர் மாவட்டத்தில் வேளாண்மைத் தொழில் முதன்மைத் தொழிலாக உள்ளது. 80 விழுக்காட்டிற்கும் மேற்பட்டவர்கள் விவசாயத்தை நம்பி உள்ளனர். இம்மாவட்டத்தின் முதன்மைச் சாகுபடிப் பயிர் நெற்பயிராகும். தமிழ்நாட்டின் நெற்களஞ்சியத்தை நிரப்புவதில் இம்மாவட்டம் முக்கியப் பங்கு வகிக்கிறது. தலைக்காவிரி மற்றும் அதன் கிளைநதிகள் பாசனத்திற்கு அளிக்கும் வண்டல் மண் வளத்தால் வேளாண்மையில் முக்கிய இடத்தைப் பெறுகிறது. இம்மாவட்டத்தின் இயற்கை அழகிற்கு முத்துப்பேட்டையில் அமைந்துள்ள அலையாத்தி காடுகள் காரணமாகின்றன. 1937 பிப்ரவரி மாதத்தில் முத்துப்பேட்டை அலையாத்தி காடுகள் பாதுகாக்கப்பட்ட காடுகளாக சென்னை மாகாண அரசினால் அறிவிக்கப்பட்டது. தற்போது தமிழ்நாடு வனத்துறை இதனைப் பாதுகாத்து பராமரித்து வருகிறது. வருவாய்த்துறை அரசாணை (நிலை) எண்.681, நாள் 25.7.1996இன்படி 01.01.1997 முதல் தனி மாவட்டமாக அறிவிக்கப்பட்டு, பிரிப்பதற்கு முந்தைய நாகப்பட்டினம் மாவட்டத்திலிருந்து 9 ஒன்றியங்களும், தஞ்சாவூர் மாவட்டத்திலிருந்து 1 ஒன்றியம் சேர்த்து திருவாரூரைத் தலைமையிடமாகக் கொண்டு உருவாக்கப்பட்டது. மாவட்டத்தில் உள்ள மொத்த பரப்பளவான 328869 எக்டேரில் 322859 எக்டேரை சாகுபடி பரப்பாகக்கொண்டுள்ளது. விவசாய உற்பத்தியில் நிலைத்தன்மையை உறுதி செய்யவும். மக்கள் தொகை வளர்ச்சிக்கேற்ப உற்பத்தியை உயர்த்தவும் தேவையான, அரசின் கொள்கைகளும், நோக்கங்களும் வகுக்கப்படுகின்றன. இதன்மூலம் விவசாயம் சார்ந்த தொழிலகங்களின் மூலப்பொருள்கள் கிடைப்பது உறுதி செய்யப்படுவதுடன், ஊரக மக்களுக்கு வேலைவாய்ப்பு வசதிகள் கிடைக்கப்பெறுகிறது.
This article uses material from the Wikipedia தமிழ் article திருவாரூர் மாவட்டம், which is released under the Creative Commons Attribution-ShareAlike 3.0 license ("CC BY-SA 3.0"); additional terms may apply (view authors). வேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 4.0 இல் கீழ் கிடைக்கும். Images, videos and audio are available under their respective licenses.
®Wikipedia is a registered trademark of the Wiki Foundation, Inc. Wiki தமிழ் (DUHOCTRUNGQUOC.VN) is an independent company and has no affiliation with Wiki Foundation.