தமிழ் இணையக் கல்விக்கழகம் (முந்தைய பெயர் : தமிழ் இணையப் பல்கலைக்கழகம்) உலகின் பல பகுதிகளில் வாழும் தமிழர்களின் மரபுகளையும் பண்பாட்டையும் காக்கவும் அவர்களது இலக்கியத் தொடர்பினை நீட்டிக்கவும் 17 பிப்ரவரி 2001ஆம் ஆண்டு நிறுவப்பட்டது.
இந்தியாவில் இணையவழியே கல்வி வளங்களையும் வாய்ப்புகளையும் உலகளாவிய கல்விக்காக நிறுவப்பட்ட முதல் மற்றும் இணையில்லா அமைப்பாக இது விளங்குகிறது. 1999ஆம் ஆண்டு நடைபெற்ற இரண்டாம் தமிழ் இணைய மாநாட்டின் நிறைவு விழாவில் இதற்கான அறிவிப்பினை அப்பொழுதைய தமிழக முதல்வர் மு.கருணாநிதி அறிவித்தார். தமிழ் இணையப் பல்கலைக்கழக ஆட்சிக்குழு ஒன்றால் வழி நடத்தப்பட்டு, ஒரு முழுநேர இயக்குநர் பொறுப்பில் செயற்பட்டு வருகின்றது.
குறிக்கோளுரை | தேமதுரத் தமிழோசை உலகமெலாம் பரவும் வகை செய்தல் வேண்டும் |
---|---|
வகை | தமிழ் இணைய வழி |
உருவாக்கம் | பிப்ரவரி 17 2001 |
தலைவர் | திரு. த. உதயச்சந்திரன் இ.ஆ.ப. |
பணிப்பாளர் | சே. ரா. காந்தி, இ. ர. பா. ப., இயக்குநர் |
அமைவிடம் | , , |
இணையதளம் | www |
இக்கழகத்தின் பணித்திட்டம் இணையவழிக் கல்வித்திட்டங்கள், மின் நூலகம், கணித்தமிழ் வளர்ச்சி எனப் பலவற்றைக் கொண்டுள்ளது. கல்வித்திட்டத்தின் கீழ் சான்றிதழ்க் கல்வி மூன்று நிலைகளில் (அடிப்படை, இடைநிலை மற்றும் உயர்நிலை) வழங்கப்படுகிறது. தவிர, தமிழ் மொழி இளங்கலைப் பட்டப்படிப்பும் அளிக்கப்படுகிறது. தஞ்சையிலுள்ள தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் வழியே தமிழ் முதுகலைப் பட்டமும் வழங்கப்படுகிறது.
தமிழ் இணையக் கல்விக்கழகத்தின் நூலகம், தமிழ் இணையக் கல்விக்கழகப் பாடத்திட்டத்தில் சேர்ந்து பயில்வோர் மற்றும் உலகு தழுவி வாழும் தமிழர்கள் அனைவரது பயன்பாட்டிற்காகவும் உருவமைக்கப்பட்டுள்ளது. நூலகம் எனும் பகுதி நூல்கள், சுவடிக் காட்சியகம், பண்பாட்டுக் காட்சியகம், தமிழிணையம்-மின்னூலகம் என 4 பிரிவாக உள்ளது. விரிவான பொருள்சார் சுட்டிகளாக்குதல் (subject-indexing) மற்றும் தேடல் வசதிகளும் பெரும் வசதியாக உள்ளது.
நூலகம் எனும் பிரிவில் எண்சுவடி முதல் சிறுவர் இலக்கியம் நாட்டுடைமையாக்கப்பட்ட தமிழறிஞர்களின் நூல்கள் அகராதிகள் நிகண்டுகள் கலைச்சொல் தொகுப்புகள் உரோமன் எழுத்து வடிவிலான சங்க இலக்கியம் போன்றவை உள்ளன. இதில் நாட்டுடைமையாக்கப்பட்ட நூல்கள் தவிர பிறவற்றை ஒரு இணையப்பக்க (web page) வடிவில் காணலாம்.
சுவடிக் காட்சியகம் எனும் பிரிவில் மின்னுருவாக்கப்பட்ட ஓலைச் சுவடிகளைக் காணலாம்.
பண்பாட்டுக் காட்சியகம் எனும் பிரிவில் தமிழ் நாடு|தமிழ் நாட்டின் திருத்தலங்கள் திருவிழாக்கள் வரலாற்றுச் சின்னங்கள் கலைகள் விளையாட்டுகள் திருக்கோவில் சாலை வரைப்படங்கள் உள்ளன.
தமிழிணையம்-மின்னூலகம் எனும் பிரிவு தனி இணையத்தளத்துடன் செயல்படுகிறது.
இந்த மின் நூலகம் அரிய நூல்கள் நாட்டுடைமையாக்கப்பட்ட நூல்கள் தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழக நூல்கள் ஆய்விதழ்கள், பருவ இதழ்கள், சுவடிகள் ஆகியவற்றை கொண்டுள்ளது இம்மின்னூலகம் 2015–16 ஆண்டுக்கான தமிழ்நாடு புதுமை முயற்சி திட்டத்தின் (Tamil Nadu Innovation Initiatives – TANII) கீழ் ₹100 கோடியில் தொடங்கப்பட்டது. இதை அப்பொழுதைய தமிழக முதல்வர் எடப்பாடி க. பழனிசாமியால் அக்டோபர் 11 2017 இல் தொடங்கி வைக்கப்பட்டது
கணித்தமிழின் மேம்பாடு மற்றும் வளர்ச்சிக்கானப் பணிகளையும் இப்பல்கலைக்கழகம் கீழ்கண்ட அமைப்புகளைக் கொண்டு மேற்பார்வையிட்டு வருகிறது.
தமிழ் மென்பொருள் மேம்பாட்டு நிதி (Tamil Software Development Fund – TSDF) என்பது தமிழில் புதிதாக மென்பொருள் உருவாக்கவோ அல்லது ஏற்கனவே உள்ள மென்பொருளை மேம்படுத்தவோ நினைக்கும் ஒரு நிறுவனத்திற்கோ அல்லது தனி மனிதற்கோ வழங்கப்படும் நிதியாகும்
இந்நிதி தமிழ் நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள நிறுவனத்திற்கும் அல்லது இந்திய அரசின் உதவியோடு இந்தியாவில் எப்பகுதியிலிருந்தும் செயல்படும் நிறுவனங்களுக்கும் வழங்கப்படும்
தமிழ் இணையக் கல்விக்கழகத்தின் பரப்புரை அலகே கணித்தமிழ்ப் பேரவை ஆகும் .கல்லூரிகள்தோறும் கணித்தமிழ்ப் பேரவை என்பது தமிழக அரசின் கொள்கை முடிவு ஆகும்.கணித்தமிழ்ப் பேரவையானது, இணையத்தில் தமிழின் பங்களிப்பை வளப்படுத்துதல், வலுப்படுத்துதல் கணித் தமிழ் மற்றும் தமிழ் பயன்பாட்டு மென்பொருள்களை உருவாக்கம் செய்ய ஊக்குவித்தல்/ மாணவர்களுக்கு அகநிலை பயிற்சி அளித்தல் கணிப்பொறியில் தமிழ் உள்ளீட்டு பயிற்சியினை ஆசிரியர்கள், மாணவர்கள், கணிப்பொறி ஆர்வலர்களுக்கு வழங்குதல் கட்டற்ற மென்பொருள் பயன்பாட்டை முன்னெடுத்தல் கணித்தமிழ்த் திருவிழா நடத்துதல் தமிழ் மென்பொருள், குறுஞ்செயலி உருவாக்கம், மின் உள்ளடக்கப் பயிற்சி வழங்குதல் கணித்தமிழ் சார்ந்த பயன்பாட்டை ஊக்குவிக்க கோடை கால முகாம் நடத்துதல் கலைக்களஞ்சிய உருவாக்கம் ஆகியனவற்றை இலக்குகளாகக் கொண்டு செயல்பட்டு வருகிறது.
தமிழ் இணையக் கல்விக்கழகம் தமிழ் மொழியில் இலக்கண இலக்கியங்களையும், தமிழ் மொழி வரலாறு, தமிழ்ப் பண்பாடு ஆகியவற்றைப் பயில விரும்புவோரின் தேவைகளை நிறைவு செய்வதற்கு உதவும் வகையில் இந்நிறுவனம் பிற பல்கலைக்கழகங்களுக்கு நிகராக முழுமையான பல்கலைக்கழகமாக நிலை உயர்த்தப்படும் என்று முதலமைச்சர் மு.கருணாநிதி அறிவித்தார். அதற்கான சட்டம் இயற்றும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது.
ஆகத்து 11 2014-இல் அப்பொழுதைய தமிழக முதல்வர் செ. செயலலிதா தமிழக சட்டப் பேரவையில் 110 விதியின் கீழ் பின்வருமாறு அறிவித்தார்
தமிழரின் சாதனைகள், தமிழ் மொழி மற்றும் இலக்கியம் குறித்து அறிந்து கொள்ளும் வகையில், ₹20 இலட்சத்தில், தகவலாற்றுப்படை என்ற இணையத்தளம் உருவாக்கப்படும். இத்திட்டத்தின் கீழ் 627 தொல்லியல் மற்றும் வரலாற்று தளங்கள், நினைவுச்சின்னங்கள், அகழாய்வுகள், கல்வெட்டுகள், சமயம் சார்ந்த இடங்கள், சிற்பங்கள், நாணயங்கள், செப்பேடுகள்,ஓவியங்கள் ஆகியவை புகைப்படங்களாக எடுக்கப்பட்டு தேவையான மீதரவுடன் (Meta data) நிலையான வடிவத்தில் இத்தளத்தில் பதிவேற்றம் செய்யப்படும் என்றார்.
அக்டோபர் 11 2017 இல் அப்பொழுதைய தமிழக முதல்வர் எடப்பாடி க. பழனிசாமியால் தொடங்கி வைக்கப்பட்டது. தொல்லியல் மற்றும் வரலாற்று தளங்களின் புகைப்படத்துடன் கூடிய மேலதிக ஆவணங்கள் இத்தளத்தில் நாள்தோறும் பதிவேற்றம் செய்யப்படுகின்றன. இத்தளம் தமிழ் இணையக் கல்விக்கழகத்தின் கீழ் உள்ளது
This article uses material from the Wikipedia தமிழ் article தமிழ் இணையக் கல்விக்கழகம், which is released under the Creative Commons Attribution-ShareAlike 3.0 license ("CC BY-SA 3.0"); additional terms may apply (view authors). வேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 4.0 இல் கீழ் கிடைக்கும். Images, videos and audio are available under their respective licenses.
®Wikipedia is a registered trademark of the Wiki Foundation, Inc. Wiki தமிழ் (DUHOCTRUNGQUOC.VN) is an independent company and has no affiliation with Wiki Foundation.