எஸ்.
ஆர். நாதன் என்று அழைக்கப்படும் செல்லப்பன் ராமநாதன் (ஆங்கிலம்: Sellapan Ramanathan அல்லது S. R. Nathan; மலாய்: S. R. Nathan; சீனம்: 塞拉潘·拉馬·纳丹); என்பவர் சிங்கப்பூரின் ஆறாவது அதிபர்.
மேதகு எஸ். ஆர். நாதன் S. R. Nathan DUT (First Class) PJG | |
---|---|
செல்லப்பன் ராமநாதன் - 2006 | |
சிங்கப்பூரின் 6-ஆவது அதிபர் | |
பதவியில் 1 செப்டம்பர் 1999 – 31 ஆகஸ்டு 2011 | |
பிரதமர் | கோ சொக் டொங் (1990–2004) லீ சியன் லூங் (2004–இன்று வரையில்) |
முன்னையவர் | ஓங் தெங் சியோங் |
பின்னவர் | டோனி தான் |
அமெரிக்காவிற்கான சிங்கப்பூர் தூதர் | |
பதவியில் 20 செப்டம்பர் 1990 – ஜூன் 1996 | |
குடியரசுத் தலைவர் | வீ கிம் வீ (1985–1993) ஓங் தெங் சியோங் (1993–1999) |
முன்னையவர் | தோமி கோ |
பின்னவர் | சான் எங் சி |
மலேசியாவிற்கான சிங்கப்பூர் தூதர் | |
பதவியில் ஏப்ரல் 1988 – ஜூலை 1990 | |
குடியரசுத் தலைவர் | வீ கிம் வீ] |
பாதுகாப்பு மற்றும் புலனாய்வுப் பிரிவின் இயக்குநர் | |
பதவியில் ஆகஸ்டு 1971 – பிப்ரவரி 1979 | |
குடியரசுத் தலைவர் | பெஞ்சமின் சியர்ஸ் |
முன்னையவர் | தான் பூன் செங் |
பின்னவர் | எடி தியோ |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | செல்லப்பன் ராமநாதன் 3 சூலை 1924 சிங்கப்பூர், நீரிணை குடியேற்றங்கள் |
இறப்பு | 22 ஆகத்து 2016 சிங்கப்பூர் | (அகவை 92)
காரணம் of death | பக்கவாதம் |
இளைப்பாறுமிடம் | மண்டாய் சுடலை |
அரசியல் கட்சி | சுயேச்சை (1999–2011) |
பிற அரசியல் தொடர்புகள் | மக்கள் செயல் கட்சி (1966–1988) |
துணைவர் | ஊர்மிளா நந்தி |
பிள்ளைகள் | 2 |
முன்னாள் கல்லூரி | மலாயா பல்கலைக்கழகம் |
இவர் 1999 செப்டம்பர் 1-ஆம் தேதி தொடங்கி, 2005 ஆகஸ்டு 18-ஆம் தேதி வரை சிங்கப்பூர் குடியரசுத் தலைவராகப் பதவி வகித்து வந்தவர். பின்னர் 2005 ஆகஸ்டு 18-ஆம் தேதி மறுபடியும் தேர்வு செய்யப்பட்டார்.
இவரின் அதிபர் பதவிக் காலம் 2011 ஆகஸ்டு 31-ஆம் தேதி முடிவடைந்தது. இவர் சிங்கப்பூரில் நீண்ட காலம் சேவை செய்த அதிபர் எனும் பெருமையையும் பெறுகிறார்.
31 ஜூலை 2016-இல் இவர் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டார். சிங்கப்பூர் பொது மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் (Singapore General Hospital's Intensive Care Unit) அனுமதிக்கப்பட்டார். 2016 ஆகஸ்டு 22-ஆம் தேதி, அவரின் 92 வயதில் உயிர் துறந்தார்.
இந்திய வம்சாவளியைச் சேர்ந்த நாதன், 1924-ஆம் ஆண்டு ஜூலை 3-ஆம் தேதி சிங்கப்பூரில் பிறந்தார். தந்தையார் பெயர் வி. செல்லப்பன். தாயாரின் பெயர் அபிராமி.
குழந்தைப் பருவத்தில் தன் மூத்த சகோதரர்களுடன் ஜொகூர், மூவார் நகரின் கடல்கரைப் பகுதியில் வாழ்ந்தார். அவரின் மூன்று மூத்தச் சகோதரர்கள் சிறுவயதிலேயே இறந்து விட்டனர். அவரின் தந்தையார் மலாயா ரப்பர் தோட்டங்களுக்கு சேவை செய்யும் ஒரு வழக்கறிஞர் நிறுவனத்தில் ஓர் எழுத்தராக வேலை செய்து வந்தார்.
1930-களில் ஏற்பட்ட உலகளாவிய பொருளாதார மந்தநிலை மற்றும் மலாயாவின் ரப்பர் விலைச் சரிவுகளின் காரணமாகக் குடும்பத்தில் வறுமை. நாதனின் தந்தையார் கடன் சுமைகளைச் சுமந்து குடும்ப வாழ்க்கையில் போராடினார். இருப்பினும் நாதனுக்கு எட்டு வயதாக இருக்கும் போது அவரின் தந்தையார் தற்கொலை செய்து கொண்டார்.
சிங்கப்பூர் திரும்பிய நாதன், தன் ஆரம்பக் கல்வியை ஆங்கிலோ-சீனப் பள்ளியிலும் (Anglo-Chinese School) ரங்கூன் சாலை காலைப் பள்ளியிலும் (Rangoon Road Morning School) பெற்றார்.
விக்டோரியா பள்ளியில் இடைநிலைக் கல்வியைப் பயின்றார். இவர் இரண்டு முறை பள்ளியில் இருந்து வெளியேற்றப்பட்டார். பின்னர் தாயாருடன் தகராறு செய்து கொண்டு, 16 வயதில் வீட்டை விட்டு ஓடிவிட்டார்.
சிங்கப்பூரில் ஜப்பானிய ஆக்கிரமிப்பின் போது, நாதன் அவர்கள், ஜப்பானிய மொழியைக் கற்றுக் கொண்டார். பின்னர் ஜப்பானியப் பொதுக் காவல்துறையில் மொழிபெயர்ப்பாளராகப் பணியாற்றினார்.
இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு, வேலை செய்து கொண்டே, இங்கிலாந்து ஆக்ஸ்போர்ட் வோல்சி கல்வி நிலையத்தில் (Wolsey Hall, Oxford) அஞ்சல் படிப்பின் மூலம் தன் இடைநிலைக் கல்வியை முடித்தார்.
அதோடு அப்போது சிங்கப்பூரில் இருந்த மலாயா பல்கலைக்கழகத்தில் படிக்கச் சென்றார். பல்கலைக்கழகத்தில் இரண்டாம் ஆண்டில் படிக்கும் போது, பல்கலைக்கழக சோசலிஸ்டு மன்றத்தின் (University Socialist Club) செயலாளராக ஆனார். 1954-ஆம் ஆண்டில் சமூக ஆய்வுகளில் சிறப்புத் தேர்ச்சி பெற்று பட்டயம் பெற்றார்.
1955-ஆம் ஆண்டில் சிங்கப்பூர் பொதுச் சேவையில் சேர்ந்தார். 1962 - 1966 ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில் தேசிய தொழிற்சங்கச் சம்மேளனத்தின் துணைத் தலைவராக இருந்தார். பின்னர் வெளியுறவு அமைச்சகத்திலும்; மற்றும் உள்துறை அமைச்சகத்திலும் பணியாற்றினார்.
1974-இல் லாஜு கடத்தல் (Laju Incident அல்லது Laju Ferry Hijacking) எனும் நிகழ்ச்சி நடந்தபோது, அவர் சிங்கப்பூர் பாதுகாப்பு அமைச்சகத்தின், பாதுகாப்பு மற்றும் புலனாய்வுப் பிரிவில் (Security and Intelligence Division of the Ministry of Defence) பணிபுரிந்து வந்தார். 1979 முதல் 1982 வரை சிங்கப்பூர் வெளியுறவு அமைச்சகத்தின் முதன்மை நிரந்தரச் செயலாளராகவும் (First Permanent Secretary of the Foreign Ministry) பணியாற்றினார்.
1982-இல் சிங்கப்பூர் பொதுச் சேவையை விட்டு வெளியேறி ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் நாளிதழின் (Straits Times Press) நிர்வாகத் தலைவராகப் பொறுப்பு ஏற்றார். 1988 மற்றும் 1996-க்கும் இடைப்பட்ட காலத்தில் அவர் மலேசியாவுக்கான சிங்கப்பூர் தூதராகவும், அமெரிக்காவுக்கான தூதராகவும் பணியாற்றினார். 1999 முதல் 2011 வரை சிங்கப்பூரின் அதிபராக 12 ஆண்டுகள் பதவி வகித்தார்.
1974 ஜனவரி 31-ஆம் தேதி, லாஜு கடத்தல் (Laju Incident) நிகழ்ச்சி நடைபெற்றது. பயங்கரவாத ஜப்பானிய செம்படை (Japanese Red Army); மற்றும் பாலஸ்தீன விடுதலைக்கான முன்னணி (Popular Front for the Liberation of Palestine) படை உறுப்பினர்கள்; சிங்கப்பூர் புலாவ் புகோம் தீவில் (Pulau Bukom) இருந்த சிங்கப்பூர் பெட்ரோலியக் கொள்கலன்கள் மீது வெடிகுண்டுகளை வீசினர்.
அந்தக் கட்டத்தில் ஜப்பானிய செம்படைக்குப் பிணைக் கைதிகளாக இருக்க முன்வந்த அரசாங்க அதிகாரிகளின் குழுவில் நாதன் அவர்களும் ஒருவராக இருந்தார்.
மேலும் பணயக் கைதிகளை விடுவிக்கவும்; பயங்கரவாதிகளின் பாதுகாப்பான வழியை உறுதிப்படுத்தவும்; நாதன் அவர்கள் குவைத் நாட்டுக்குப் பயணம் மேற்கொண்டார். அந்தப் பிரச்சினையைச் சுமுகமாகத் தீர்த்து வைத்தார்.
அவரின் துணிச்சலுக்காக, ஆகஸ்ட் 1974-இல் அவருக்கு பிங்காட் ஜசா கெமிலாங் எனும் சிறப்புச் சேவைப் பதக்கம் (Meritorious Service Medal) வழங்கப்பட்டது.
2011 ஜூலை 1-ஆம் தேதி, மூன்றாவது முறையாக அதிபராகப் பதவியேற்கப் போவது இல்லை என்று நாதன் அறிவித்தார். அவர் தன் வயதை ஒரு காரணமாகக் காட்டினார். தன்னுடைய 87-ஆவது வயதில் அதிபர் பதவியின் கனமான பொறுப்புகளச் சுமக்க இயலாது என்று அதிபர் பதவியை மறுத்து விட்டார்.
அதே ஆண்டு செப்டம்பர் 1 ஆம் தேதி அவர் அதிபர் பதவியை விட்டு வெளியேறினார். புதிய அதிபராக டோனி டான் என்பவர் தேர்வு செய்யப்பட்டார்.
15 டிசம்பர் 1958-இல், ஊர்மிளா நந்தி (Urmila Nandey) (பிறப்பு 1929); என்பவரை அதிபர் நாதன் மணந்தார். அவருக்கு ஒரு மகன்; பெயர் ஒசித் (Osith). மற்றும் ஒரு மகள்; பெயர் ஜோதிகா (Juthika). மூன்று பேரக் குழந்தைகள்.
அதிபர் நாதனுக்கு 31 ஜூலை 2016 காலை நேரத்தில் இதயப் பக்கவாதம் ஏற்பட்டது. சிங்கப்பூர் பொது மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவுக்கு கொண்டு செல்லப்பட்டார். 22 ஆகஸ்ட் 2016 இரவு 9:48 மணிக்கு, அவரின் 92 வயதில் மருத்துவமனையில் உயிர் துறந்தார்.
நாதன் அவர்கள் சிங்கப்பூருக்கு ஆற்றிய சேவைகளுக்கு வழங்கப்படும் மரியாதையின் அடையாளமாக, 2016 ஆகஸ்டு 23-ஆம் தேதி முதல் 26-ஆம் தேதி வரை, நான்கு நாட்களுக்கு, சிங்கப்பூரின் அனைத்து அரசுக் கட்டிடங்களிலும் சிங்கப்பூர் தேசியக் கொடி அரைக் கம்பத்தில் பறக்கவிடப்பட வேண்டும் என்று சிங்கப்பூர் அரசாங்கம் உத்தரவிட்டது.
பொதுமக்களின் பார்வைக்காகவும்; மரியாதையைச் செலுத்துவதற்காகவும்; நாதனின் உடல் 2016 ஆகஸ்டு 25-ஆம் தேதி சிங்கப்பூர் நாடாளுமன்ற வளாகத்தில் வைக்கப்பட்டு இருந்தது.
2016 ஆகஸ்டு 26-ஆம் தேதி, அதிபர் நாதனைக் கௌரவிக்கும் வகையில் அரசு இறுதிச் சடங்கு நடைபெற்றது. அவரின் உடல் நாடாளுமன்ற வளாகத்தில் இருந்து கொண்டு செல்லப்பட்டது. அரசு இறுதி ஊர்வலத்தில் அவரின் உடல், அவரின் வாழ்க்கையில் முக்கியத்துவம் வாய்ந்த இடங்களைச் கடந்து சென்றது.
சிங்கப்பூரின் பல்லினப் பாரம்பரியத்தை உருவகமாகக் கருதிய நாதனுக்கு மிகவும் பிடித்தமான பாடலான "தஞ்சாவூர் மண்ணு எடுத்து" எனும் பாடல் அவரின் இறுதி ஊர்வாத்தில் இசைக்கப்பட்டது. பொற்காலம் எனும் தமிழ்த் திரைப்படத்தின் பாடல்.
அரசு இறுதிச் சடங்குகளைத் தொடர்ந்து, அவரின் உடல் மண்டாய் மயானத்தில் (Mandai Crematorium) தகனம் செய்யப்பட்டது.
This article uses material from the Wikipedia தமிழ் article செல்லப்பன் ராமநாதன், which is released under the Creative Commons Attribution-ShareAlike 3.0 license ("CC BY-SA 3.0"); additional terms may apply (view authors). வேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 4.0 இல் கீழ் கிடைக்கும். Images, videos and audio are available under their respective licenses.
®Wikipedia is a registered trademark of the Wiki Foundation, Inc. Wiki தமிழ் (DUHOCTRUNGQUOC.VN) is an independent company and has no affiliation with Wiki Foundation.