நீதியரசர் எம்.
பாத்திமா பீவி (Justice M. Fathima Beevi) இந்திய உச்ச நீதிமன்றத்திற்கு நியமிக்கப்பட்ட முதல் பெண் நீதியரசர் ஆவார்.(1989) உயர்ந்த நீதித்துறை பதவிகளை ஏற்ற முதல் முஸ்லிம் பெண்மணியாகவும் விளங்கினார். இந்தியா மட்டுமன்றி ஆசியாவிலேயே மிக உயர்ந்த நீதிமன்றத்தின் நீதிபதியாக பதவியேற்ற முதல் பெண்மணி என்ற பெருமையையும் உடையவர். தமது பணி ஓய்விற்குப் பிறகு தேசிய மனித உரிமை ஆணையத்தில் ஒரு உறுப்பினராகவும் 1997 முதல் 2001 வரை தமிழ்நாடு ஆளுநராகவும் பொறுப்பேற்றுக் கொண்டார்.
நீதியரசர் எம். பாத்திமா பீவி | |
---|---|
பிறப்பு | 30 ஏப்ரல் 1927 பத்தனம்திட்டா, கேரளம் |
இறப்பு | 23 நவம்பர் 2023 |
இருப்பிடம் | 8/387, அன்னவீடு, பேட்டை, பத்தனம்திட்டா, 689 645 (கேரளா) |
தேசியம் | இந்தியா |
அறியப்படுவது | இந்திய உச்ச நீதிமன்றத்தின் முதல் பெண் நீதியரசர், தமிழ்நாட்டின் ஆளுநர் |
முன்னிருந்தவர் | எம் சன்னா ரெட்டி / கிருஷண் காந்த் (கூடுதல். பொறுப்பு) |
பின்வந்தவர் | முனைவர் சி ரங்கராஜன் (ஆளுநர் பொறுப்பில்) |
சமயம் | இசுலாம் |
பெற்றோர் | மீரா சாகிப், கதீஜா பீபி |
பாத்திமா பீவி கேரள மாநிலத்தில் உள்ள பத்தனம்திட்டாவில் ஏப்ரல் 30, 1927இல் பிறந்தார். அன்னவீட்டில் மீரா சாகிபும் மற்றும் கதீஜா பீவியும் இவரது பெற்றோர்களாவர்.தமிழ் வேர்களைக் கொண்ட ராவுத்தர் குடும்பத்தில் பிறந்தார், அப்பகுதியில் உள்ள பழங்கால முஸ்லிம் சமூகமாகும். பத்தனம்திட்டையில் உள்ள கத்தோலிகேட் உயர்நிலைப் பள்ளியில் பள்ளிக் கல்வி பெற்றார். தமது அறிவியல் இளங்கலை பட்டப் படிப்பை திருவனந்தபுரத்தில் உள்ள யூனிவெர்சிட்டி கல்லூரியில் படித்தார். சட்ட இளங்கலைப் பட்டப்படிப்பை திருவனந்தபுரத்தில் உள்ள அரசு சட்டக் கல்லூரியில் பயின்றார்.
பாத்திமா ஓர் வழக்கறிஞராக நவம்பர் 14, 1950இல் பதிந்து கொண்டார். கேரளாவின் கீழ்நிலை நீதிமன்றங்களில் தமது பணிவாழ்வைத் துவங்கினார். மே, 1958இல் கேரள கீழ்நிலை நீதித்துறை பணியில் முனிசீப்பாக நியமிக்கப்பட்டார். 1968இல் துணை நீதிபதியாக பதவியேற்றம் பெற்றார்.1972இல் முதன்மை நீதித்துறை மாஜிஸ்ட்ரேட்டாக உயர்வு பெற்றார். இரண்டாண்டுகளிலேயே 1974இல் மாவட்ட மற்றும் அமர்வு நீதிபதியாகப் பொறுப்பேற்றார்.
சனவரி 1980இல் வருமானவரி மேல்முறையீட்டுத் தீர்ப்பாயத்தில் நீதித்துறை உறுப்பினராக நியமிக்கப்பட்டார். பின்னர் ஆகத்து 4, 1983இல் உயர்நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டார். இப்பணியில் மே 14, 1984இல் நிரந்தரம் செய்யப்பட்டார். ஏப்ரல் 29, 1989இல் கேரள உயர்நீதிமன்ற நீதிபதி பொறுப்பிலிருந்து பணி ஓய்வு பெற்றார். ஆனால் அக்டோபர் 6, 1989இல் உச்ச நீதி மன்றத்தின் நீதிபதியாக நியமிக்கப்பட்டார். இப்பணியிலிருந்து ஏப்ரல் 29, 1992இல் ஓய்வு பெற்றார்.
பணி ஓய்விற்குப் பிறகும் பல மூத்த நீதிபதிகளைக் கருத்தில் கொள்ளாது இவர் உச்ச நீதிமன்றத்திற்கு நியமிக்கப்பட்டது ராஜீவ் காந்தியால் எடுக்கப்பட்ட அரசியல் முடிவாக கருதப்பட்டது. முஸ்லிம் பெண்கள் (மணமுறிவில் உரிமைகள் பாதுகாப்பு சட்டம் இயற்றியதால் ஏற்பட்ட சர்ச்சையின் பின்னணியில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக விமர்சனங்கள் எழுந்தன.
This article uses material from the Wikipedia தமிழ் article எம். பாத்திமா பீவி, which is released under the Creative Commons Attribution-ShareAlike 3.0 license ("CC BY-SA 3.0"); additional terms may apply (view authors). வேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 4.0 இல் கீழ் கிடைக்கும். Images, videos and audio are available under their respective licenses.
®Wikipedia is a registered trademark of the Wiki Foundation, Inc. Wiki தமிழ் (DUHOCTRUNGQUOC.VN) is an independent company and has no affiliation with Wiki Foundation.