எஸ்.
ராமகிருஷ்ணன் (ச. இராமகிருட்டினன்) (பிறப்பு: ஏப்ரல் 13, 1966) என்பவர் தற்காலத் தமிழ்ப் படைப்புலக எழுத்தாளர் ஆவார். புதினங்கள், சிறுகதைகள், கட்டுரைகள், நாடகங்கள், குழந்தைகளுக்கான ஆக்கங்கள், திரைக்கதை, திரைப்பட உரையாடல்கள் உள்ளிட்ட படைப்புச் செயற்பாடுகளில் ஈடுபட்டு வருவதோடு, தனது உரைகள், பத்திகள் மூலமாகச் சிறந்த இலக்கியங்கள், திரைப்படங்கள் ஆகியவற்றை அறிமுகப்படுத்தியும் வருகிறார். சஞ்சாரம் என்னும் இவருடைய படைப்புக்கு 2018 சாகித்திய அகதெமி விருது இவருக்கு வழங்கப்பெற்றது.
எஸ். ராமகிருஷ்ணன் | |
---|---|
2016-ஆம் ஆண்டுவாக்கில் | |
பிறப்பு | 13 ஏப்ரல் 1966 மல்லாங்கிணர், பிரிக்கப்படாத இராமநாதபுரம் மாவட்டம், சென்னை மாநிலம் (தற்போது விருதுநகர் மாவட்டம், தமிழ்நாடு), இந்தியா |
இருப்பிடம் | சென்னை, தமிழ்நாடு, இந்தியா |
இனம் | தமிழர் |
குடியுரிமை | இந்தியர் |
அறியப்படுவது | எழுத்தாளர் |
பெற்றோர் | சண்முகம், மங்கையர்க்கரசி |
வாழ்க்கைத் துணை | சந்திரபிரபா |
பிள்ளைகள் | ஹரி பிரசாத், ஆகாஷ் |
வலைத்தளம் | |
http://www.sramakrishnan.com/ |
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள மல்லாங்கிணற்றைச் சொந்த ஊராகக் கொண்ட இவரது பெற்றோர் சண்முகம், மங்கையர்க்கரசி என்போராவர். இவரது தந்தைவழித் தாத்தா திராவிட இயக்கத்தில் பற்றுடையவர். தாய்வழித் தாத்தா சைவ சமயப் பற்றுடையவர். இவ்விரு வீடுகளிலும் இலக்கியங்கள், சமூகச் சிந்தனைகளைப் படித்தும், பேசியும் வரும் சூழல் நிலவியதாகக் குறிப்பிடுகிறார். ஆங்கில இலக்கியம் பயின்று அதிலேயே முனைவர் பட்ட ஆய்வு மேற்கொள்ளத் தொடங்கி இடையில் கைவிட்டிருக்கிறார்.
தற்சமயம் மனைவி சந்திரபிரபா, குழந்தைகள் ஹரி பிரசாத், ஆகாஷ் ஆகியோருடன் சென்னையில் வசித்து வருகிறார்.
இவரது முதல் கதையான "பழைய தண்டவாளம்" கணையாழியில் வெளியாகியிருக்கிறது. 1984-இல் எழுதத் தொடங்கிய இவரது எழுத்துகள் ஐம்பதிற்கும் கூடிய எண்ணிக்கையில் நூல்வடிவம் பெற்றுள்ளன (விரிவான பட்டியல் கீழே தரப்பட்டுள்ளது). ஆனந்த விகடன் இதழில் இவர் எழுதிய துணையெழுத்து, கதாவிலாசம், தேசாந்திரி, கேள்விக்குறி ஆகிய தொடர்கள் தீவிர இலக்கிய வட்டாரம் தாண்டி பரவலான வாசகப் பரப்பை இவருக்கு ஈட்டித் தந்திருக்கின்றன. இவரது சிறுகதைகள் ஆங்கிலம், இடாய்ச்சு, பிரான்சியம், கன்னடம், வங்காளம், இந்தி, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன."அட்சரம்" என்ற இலக்கிய இதழின் ஆசிரியராக இருந்து எட்டு இதழ்கள் வரை வெளியிட்டிருக்கிறார்.
"இலக்கியத்தை எல்லா அர்த்தத்திலும் ஒரு வாழ்நாள் சேவையாகச் செய்து வருபவர் எஸ். ராமகிருஷ்ணன்" என்று ஜெயமோகனும், "ஜெயகாந்தன் போல... எஸ். ராமகிருஷ்ணனும் தமிழில் ஒரு மிகப்பெரும் இயக்கம்" என்று மனுஷ்யபுத்திரனும் குறிப்பிட்டுள்ளனர். புத்தாயிரத்தின் இலக்கியம் - இருபதாம் நூற்றாண்டின் இறுதிப் பத்து ஆண்டுகளில் தமிழ் நாவல்களின் போக்கு பற்றி மதிப்பிடுகையில் ந. முருகேச பாண்டியன் "எஸ். ராமகிருஷ்ணனின் நெடுங் குருதி, யாமம் ஆகிய இருநாவல்களிலும் கதைசொல்லலில் தொடர்ச்சியறு தன்மை நேர்த்தியுடன் வெளிப்பட்டுள்ளது" என்று கருத்துரைத்துள்ளார்.
வாழ்நாள் சாதனையைப் பாராட்டும் முகமாகக் கனடியத் தமிழ் இலக்கியத் தோட்டம் வழங்கும் 2011-ஆம் ஆண்டுக்கான இயல் விருது எஸ். ராமகிருஷ்ணனுக்கு சூன் 16, 2012 அன்று ரொறொன்ரோவில் நடந்த விழாவில் வழங்கப்பட்டது. இதே தமிழ் இலக்கியத் தோட்ட அமைப்பு 2007-இல் புனைவு இலக்கியத்திற்கான விருதை எஸ். ராமகிருஷ்ணனின் யாமம் புதினத்துக்கு வழங்கியது குறிப்பிடத்தக்கது. சாம்சங் இந்தியா நிறுவனமும் சாகித்திய அகாதமியும் இணைந்து ஆண்டுக்கு 8 இந்திய மொழிகளில் சிறந்த இலக்கியப் பங்களிப்பைச் செய்தவர்களுக்கு தாகூர் இலக்கிய விருதினை 2009-ஆம் ஆண்டு முதல் மூன்று ஆண்டுகளுக்கு வழங்கி வந்தன. 2010-ஆம் ஆண்டு தமிழுக்கான தாகூர் இலக்கிய விருது யாமம் புதினத்துக்காக எஸ். ராமகிருஷ்ணனுக்கு வழங்கப்பட்டது. பழனி வாழிய உலகநல நற்பணி மன்றம் நெடுங்குருதி புதினத்துக்கு 2003-ஆம் ஆண்டுக்கான ஞானவாணி விருதினை வழங்கியது. இவர் எழுதிய அரவான் எனும் நூல் தமிழ் வளர்ச்சித் துறையின் 2006 ஆம் ஆண்டுக்கான சிறந்த நூல்களில் நாடகம் (உரைநடை, கவிதை) எனும் வகைப்பாட்டில் பரிசு பெற்றிருக்கிறது. இவர் பெற்றுள்ள பிற விருதுகளாவன:
சஞ்சாரம் என்ற நாவலை எழுதியமைக்காக 2018-ஆம் ஆண்டுக்கான சாகித்ய அகாதமி விருது வழங்கப்பட்டுள்ளது. கரிசல் மண்ணின் நாதசுர இசைக்கலைஞர்களின் வாழ்வியல், நாதசுரக் கலையின் சிறப்புகள், நாதசுரக் கலைஞர்களின் சாதியச் சூழல் ஆகியவற்றைச் சஞ்சாரம் நாவல் விவரிக்கிறது.
சு.வெங்கடேசனின் காவல் கோட்டம் புதினத்துக்கு இவர் எழுதிய விமர்சனக் கட்டுரை பரவலான கண்டனத்தோடும், ஒருவித வியப்போடும் எதிர்கொள்ளப்பட்டது. பொருள் மயக்கம் தரும் கவனமற்ற உரைநடை, சலிப்பூட்டும் சொல்லாட்சி, இலக்கணப் பிழைகள் உள்ளிட்டவற்றுக்காக இவரது சில ஆக்கங்கள் விமர்சிக்கப்பட்டதுண்டு. சண்டக்கோழி படத்தில் இவர் எழுதியதாகக் கருதப்படும் சர்ச்சைக்குரிய ஒரு வசனத்தால் பெண் படைப்பாளிகளின் கண்டனத்துக்கு ஆளானார்.
This article uses material from the Wikipedia தமிழ் article எஸ். ராமகிருஷ்ணன், which is released under the Creative Commons Attribution-ShareAlike 3.0 license ("CC BY-SA 3.0"); additional terms may apply (view authors). வேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 4.0 இல் கீழ் கிடைக்கும். Images, videos and audio are available under their respective licenses.
®Wikipedia is a registered trademark of the Wiki Foundation, Inc. Wiki தமிழ் (DUHOCTRUNGQUOC.VN) is an independent company and has no affiliation with Wiki Foundation.