புகைபிடித்தல் (Smoking) என்பது ஒரு பொருள் எரிக்கப்பட்டு அதன் விளைவாகத் தோன்றும் புகையானது சுவாசித்தலின் மூலம் சுற்றோட்டத் தொகுதியில் செல்லும் நடைமுறையினைக் குறிப்பதாகும்.
புகையிலை செடியின் உலர்ந்த இலைகள் பொதுவாகப் பயன்படுத்தப்படும் மூலப்பொருளாகும். இதனை வட்ட வடிவ காகிதத்தில் வைத்து உருவாக்கப்படுவது வெண்சுருட்டு ஆகும். இதில் உள்ள உலர்ந்த தாவர இலைகள் எரிதலின் மூலம் ஆவியாகி அதன் மூலப் பொருட்கள் நுரையீரலைச் சென்றடைகிறது. காற்றோட்டத் தொகுதியின் மூலம் விரைவாக உறிஞ்சப்பட்டு அவை உடல் திசுக்களை அடைகின்றன. இதில் நிக்காட்டீன் எனும் கரிம வேதியல் அடங்கியுள்ளது. சில கலாச்சாரங்களில், புகைபிடித்தல் பல்வேறு சடங்குகளின் ஒரு பகுதியாக மேற்கொள்ளப்படுகிறது, அங்கு அதனைப் பயன்படுத்துபவர்கள் மயக்கம் போன்ற நிலைகளைத் தூண்டுவதற்குப் பயன்படுத்துகிறார்கள், அவர்கள் புகைபிடித்தல் என்பது ஞானோதயத்திற்கு வழிவகுக்கும் என்று நம்புகிறார்கள்.
புகைபிடித்தல் என்பது மனமகிழ் மருந்துகளின் மிகவும் பொதுவான வடிவங்களில் ஒன்றாகும். உலகளவில் ஒரு பில்லியனுக்கும் அதிகமான மக்கள் புகையிலைப் பயன்படுத்தி புகைப்பிடிக்கின்றனர். இவர்களில் பெரும்பான்மையானவர்கள் வளர்ந்து வரும் நாடுகளில் உள்ளனர். இதற்கு அடுத்ததாக கஞ்சா, மற்றும் அபினி பயன்படுத்தி புகைப்பிடிக்கின்றனர்.வணிக ரீதியாக இவை பரவலாக கிடைக்காததால் இவற்றின் பயன்பாடு மிகவும் குறைவாகவே உள்ளது. சுருட்டுகள், பீடிகள், ஹூக்காக்கள் மற்றும் பாங்க்கள் ஆகியவற்றின் மூலமும் புகைப்பிடிக்கின்றனர்.
புகைப்பழக்கத்தின் வரலாறு கிமு 5000 ஆம் ஆண்டின் சாமனிஸ்டிக் சடங்குகளுக்கு முந்தையது. இசுரயேலர் பின்னர் கத்தோலிக்க மற்றும் பண்டைய கிறிஸ்தவ தேவாலயங்களில் பாபிலோனியர்கள், இந்தியர்கள் மற்றும் சீனர்கள் போன்ற பல பண்டைய நாகரிக மத சடங்குகளின் ஒரு பகுதியாக தூபத்தை எரிக்கும் நடைமுறைகள் இருந்தன. அமெரிக்காவில் புகைபிடித்தல் என்பது தூபம் எரியும் விழாக்களில் துவங்கியிருக்கலாம் என்றும் கருதப்படுகிறது. அதன் பின்னர் ஷாமன் மதத்தினரால் இன்பத்திற்காகவோ அல்லது ஒரு சமூகக் கருவியாகவோ பின்னர் ஏற்றுக்கொள்லப்பட்டது. புகையிலை மூலம் புகைத்தல் மற்றும் மாயத்தோற்ற மருந்துகளை உட்கொள்வதன் மூலம் ஆன்மா உலகத்துடன் தொடர்பு கொள்ள இயலும் என நம்மப்பட்டது.
புகைபிடித்தலில், கஞ்சா, நெய், மீனின் உமிழ்நீர், உலர்ந்த பாம்புத் தோல்கள் மற்றும் ஊதுபத்திக் குச்சிகளைச் சுற்றி வடிவமைக்கப்பட்ட பல்வேறு பசைகள் போன்ற பொருட்கள் 2000 ஆண்டுகளுக்கு முன்னர் பயன்படுத்தப்பட்டது. புகைபிடித்தல் ( தூபம் ) மற்றும் தீ பிரசாதம் ( ஓமம் ) ஆகியவை மருத்துவ நோக்கங்களுக்காக ஆயுர்வேதத்தில் பரிந்துரைக்கப்படுகின்றன, மேலும் இந்த நடைமுறைகள் 3,000 ஆண்டுகள் வரை நடைமுறையில் உள்ளன.நவீன காலத்திற்கு முன்பு, பல்வேறு நீளம் அல்லது குளிர்ச்சியான தண்டுகளுடன் புகையிலைக் குழாய்கள் மூலம் புகைபிடித்தனர். சைப்ரசு மற்றும் கிரீட்டில் வெண்கல யுகத்திற்குப் பிறகு அபின் புகைப்பதற்கான குழாய்கள் இருந்ததாக தொல்பொருள் கண்டுபிடிப்புகள் கூறுகின்றன.
உலகளவில் இறப்புக்கான முக்கிய காரணங்களில் புகைபிடித்தலும் ஒன்றாகும்.இதனால் ஆண்டுதோறும் 8 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் இறக்கின்றனர். ஆனால் அவர்களில் 1.2 மில்லியன் மக்கள் புகைப் பழக்கம் அற்றவர்கள், மற்றவர்கள் புகை பிடிப்பதால் அவர்கள் இறக்கின்றனர். ஐக்கிய அமெரிக்காவில் ஆண்டுதோறும் சுமார் 5,00,000 மக்கள் புகை பிடித்தல் தொடர்பான நோய்களால் இறக்கின்றனர் என்றும் சீன மக்கள் தொகையில் மூன்றில் ஒரு பங்கு ஆண்களின் ஆயுட்காலம் கணிசமாகக் குறைந்துள்ளது என்றும் மதிப்பிடப்பட்டுள்ளது. ஆண் மற்றும் பெண் புகைப்பிடிப்பவர்கள் முறையே சராசரியாக 13.2 மற்றும் 14.5 வருடங்கள் தங்களது சராசரி ஆயுளை இழக்கின்றனர். வாழ்நாள் முழுவதும் புகைபிடிப்பவர்களில் பாதி பேர் புகைபிடிப்பதன் விளைவாக தங்களது சராசரியான ஆயுட்காலத்திற்கு முன்னதாகவே இறக்கின்றனர். 85 வயதிற்கு முன் நுரையீரல் புற்றுநோயால் இறப்பதற்கான ஆபத்து ஆண் புகைப்பிடிப்பவருக்கு 22.1% ஆகவும், பெண் புகைப்பிடிப்பவருக்கு 11.9% ஆகவும் உள்ளது. ஒரு நாளைக்கு ஒரு சிகரெட்டை மட்டும் புகைப்பதால் குருதி ஊட்டக்குறை இதய நோய் ஏற்படும் அபாயம் உள்ளது.
புகைபிடிப்பதால் ஏற்படக்கூடிய நோய்களில் உடல் குழாய்ச் சுருக்கம் அல்லது மலட்டுத்தன்மை, நுரையீரல் புற்றுநோய், மாரடைப்பு மற்றும் நாட்பட்ட தடுப்பு நுரையீரல் நோய் ஆகியவை அடங்கும். கர்ப்ப காலத்தில் புகைபிடிப்பதால், கருவுக்கு ADHD ஏற்படலாம்.
புகைபிடித்தல் என்பது பல்முரசு நோய் மற்றும் பல் இழப்பு ஆகியவற்றின் முதன்மைக் காரணியாக உள்ளது. புகைபிடிப்பதால் ஏற்படும் விளைவுகள் தினசரி புகைபிடிக்கும் வெண்சுருட்டுகளின் எண்ணிக்கை மற்றும் பழக்கத்தின் கால அளவைப் பொறுத்து பல்முரசு நோய்களின் தாக்கம் மாறுபடும். புகைப்பிடிக்காதவர்களுடன் ஒப்பிடும்போது புகைப்பிடிப்பவர்களுக்கு பல் எலும்புகள் இழப்பு ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் என்று ஆய்வுகள் கண்டறிந்துள்ளன [1], மேலும், புகைபிடிப்பவர்கள் மற்றும் மது அருந்துபவர்கள், வாய்வழி புற்றுநோய் (வாய் மற்றும் உதடு) உருவாகும் அபாயம் அதிகமாகும். புகைபிடிப்பதால் வாயில் மிலனோசிசும் ஏற்படலாம்.
குழந்தைகள் மற்றும் இளம் பருவத்தினருக்குப் போதுமான கல்வி மற்றும் மருத்துவர்களின் ஆலோசனைகளை வழங்குவதன் மூலமாக புகையிலை பயன்பாட்டின் அபாயத்தைக் குறைக்க இயலும் எனக் கண்டறியப்பட்டுள்ளது. சமூக தீர்வு நடவடிக்கைகள் மூலம் கர்ப்பத்தின் பிற்பகுதியில் பெண்கள் புகைபிடிப்பதை நிறுத்தவும், குறைந்த பிறப்பு எடை மற்றும் குறைப்பிரசவத்தை குறைக்கவும் இயலும் எனக் காட்டுகிறது. 2016 காக்ரேன் மதிப்பாய்வு, போதுமான மருந்துகள் எடுத்துக்கொள்ளுதல் மற்றும் தேவையான ஆதரவுகளை வழங்குவது ஆகியவை குறைந்தபட்ச தலையீடுகள் அல்லது வழக்கமான கவனிப்பை விட மிகவும் பயனுள்ளதாக இருந்தது என்பதைக் காட்டுகிறது. மற்றொரு காக்ரேன் மதிப்பாய்வு "புகைபிடிப்பதைக் குறைப்பதோ அல்லது திடீரென நிறுத்துவதோ புகைப்பிடிப்பதை நிறுத்தும் சிறந்த நடைமுறையாகக் கருதப்படுவதில்லை என்று பரிந்துரைக்கிறது. எனவே எப்படி புகைப்பிடிப்பதை நிறுத்த வேண்டும் எனும் வாய்ப்பை புகைப்பிடிப்பவர்களுக்கு வழங்க வேண்டும்.
This article uses material from the Wikipedia தமிழ் article புகைத்தல், which is released under the Creative Commons Attribution-ShareAlike 3.0 license ("CC BY-SA 3.0"); additional terms may apply (view authors). வேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 4.0 இல் கீழ் கிடைக்கும். Images, videos and audio are available under their respective licenses.
®Wikipedia is a registered trademark of the Wiki Foundation, Inc. Wiki தமிழ் (DUHOCTRUNGQUOC.VN) is an independent company and has no affiliation with Wiki Foundation.