துறவி என்பது உலக இன்பங்களில் மனத்தைச் செலுத்தாது, ஆன்மீக ஈடேற்றத்தை நோக்கமாகக் கொண்டவர், ஆசையை விட்டவரை சந்நியாசி என்பர்.
துறவிகள் பெரும்பாலும் காவி அணிவது வழக்கம்.
இந்து சமயம் "மனிதனின் வாழ்க்கையை நான்கு வகையாக பிரித்தது. அவை பிரம்மச்சர்யம் (மாணவப் பருவம்), கிரகஸ்தம் (இல்லறம்), வனப்பிரஸ்தம் மற்றும் சந்நியாசம் (துறவறம்) என்று கூறப்படுகின்றன. அவற்றில் பிரம்மச்சரியம் என்பது கிரகஸ்தம் ஆவதற்கு முன்பு கடைபிடிக்கும் சாதகர் நிலை (பயிற்சி நிலை) எனவும், வனப்பிரஸ்தம் என்பது துறவறம் மேற்கொள்வதற்கான சாதகர் நிலை எனவும் கொள்ளலாம்.
இந்த அடிப்படையில் மனிதனின் வாழ்க்கை பிறந்ததிலிருந்து பதினாறு வயது வரை பாலபருவம் எனவும், அந்த சமயம் அவனை எந்த நியதிகளும் கட்டுப்படுத்துவதில்லை. அடிப்படைக் கல்வி மட்டுமே கட்டுப்படுத்தும்.
பதினாறு வயதிலிருந்து இருபத்துநான்கு வயது வரை அவன் பிரம்மச்சாரி, அந்த சமயம் வாழ்க்கைக் கல்வியை கிரகஸ்தனாக இருப்பதற்கு வேண்டிய சகல விதமான விஷயங்களையும் படிப்பறிவாக அறிந்து கொள்கிறான்.
இருபத்து நான்கு வயதில் பிரம்மச்சரிய நிலையை முடித்து தான் கற்ற கல்வியை தனக்கென்று இறைவனால் உருவாக்கப்பட்ட மனைவியுடன் சேர்ந்து கிர்கஸ்தனாகி அனுபவ நிலைக்கு கொண்டு வருகின்றான். அந்த நிலை ஐம்பத்தாறு வயது வரை நீடிக்கிறது.
ஐம்பத்தாறு வயதிலிருந்து மனிதன் வனப்பிரஸ்த நிலைக்கு சென்றுவிடவேண்டும். அதாவது எதிலும் பொதுவான நோக்கம் கொண்டு துறவு நிலைப்பற்றி முழுமையாக படிப்பறிவாக அறிய வேண்டும். அதிகபட்சமாக அவன் எழுபத்திரண்டு வயதுக்கு மேல் வாழ்ந்தால் முற்றிலும் துறவியாகி விடவேண்டும்." என்று மனிதன் வாழ்க்கையை நான்காகப் பிரித்துத் துறவும் வாழ்க்கையின் ஒரு பகுதி என்கிறது
கிறித்தவத்தில் துறவி எனப்படுவோர் துறவற சபையில் சேர்ந்து, அச்சபையின் சட்டங்களுக்கு கீழ்படிந்து, கற்பு, ஏழ்மை, கேழ்படிதல் என்னும் வார்த்தை பாடுகளை எடுத்துக் கொண்டோரைக் குறிக்கும்.
கிறித்தவ துறவிகளுக்கும் குருக்களுக்கும் வேறுபாடு உள்ளது. எல்லா குருக்களும் துறவிகள் அல்லர்.
ஆதி திருச்சபைகளில் வனத்து சின்னப்பரை போல் துறவிகள் தனியே வாழ்க்கை நடத்தினர். பிற்காலத்தில் இத்தகையோர் ஒருங்கே கூடி ஒரு குழுமமாக செப வாழ்வில் இடுபட்டனர். இத்தகையோரை ஒழுங்கு படுத்த புனித ஆசிர்வாதப்பர் பல சட்டங்களை இயற்றினார். இவையே இன்றளவும் பல இடங்களில் உள்ளது.
இசுலாம் மதத்தைப் பொறுத்தவரை துறவுக்கு அனுமதியில்லாத நிலையே உள்ளது. இது குறித்து இசுலாம் தத்துவ நூல்களில் பல கருத்துக்கள் வலியுறுத்தப்பட்டுள்ளன.
“இளைஞர்களே உங்களில் திருமணத்துக்கு சக்தி பெற்றவர் மணமுடித்துக் கொள்ளட்டும்! இயலாதோர் நோன்பு நோற்றுக் கொள்ளட்டும்! ஏனெனில் நோன்பு (ஆசையைக்) கட்டுப்படுத்தக் கூடியதாகும்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: இப்னு மஸ்வூத் (ரலி) புஹ்காரி (5065), முஸ்லிம் (2710)
This article uses material from the Wikipedia தமிழ் article துறவி, which is released under the Creative Commons Attribution-ShareAlike 3.0 license ("CC BY-SA 3.0"); additional terms may apply (view authors). வேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 4.0 இல் கீழ் கிடைக்கும். Images, videos and audio are available under their respective licenses.
®Wikipedia is a registered trademark of the Wiki Foundation, Inc. Wiki தமிழ் (DUHOCTRUNGQUOC.VN) is an independent company and has no affiliation with Wiki Foundation.