உக்ரைன் பன்னாட்டு ஏர்லைன்சு பறப்பு 752 (Ukraine International Airlines Flight 752) என்பது தெகுரான் இமாம் கொமெய்னி பன்னாட்டு வானூர்தி நிலையத்தில் இருந்து கீவ் போரிசுப்பில் பன்னாட்டு வானூர்தி நிலையத்தை நோக்கிச் சென்ற பயணிகள் வானூர்திப் பறப்பு ஆகும்.
2020 சனவரி 8 இல், இப்பறப்பில் ஈடுபட்ட போயிங் 737-800 வானூர்தி புறப்பட்ட சில நிமிட நேரத்தில் ஈரானின் இசுலாமிய புரட்சிப் பாதுகாப்புப் பிரிவின் ஏவுகணை மூலம் தவறுதலாகச் சுட்டு வீழ்த்தப்பட்டது. ஈரானின் அரசுத்தலைவர் அசன் ரவ்கானி இவ்விபத்தை ஒரு "மன்னிக்கமுடியாத தவறு" எனக் கூறினார். இவ்வானூர்தியில் பயணம் செய்த 167 பயணிகள் உட்பட அனைத்து 176 பேரும் உயிரிழந்தனர். உயிரிழந்தவர்களில் 63 பேர் கனடாவைச் சேர்ந்தவர்கள் ஆவர். இது ஒரு தசாப்தத்திற்கும் மேலாக ஈரானில் ஏற்பட்ட மிக மோசமான விமானப் பேரழிவாகும். இந்த விபத்து போயிங் 737-800 விமானம் சம்பந்தப்பட்ட மிக மோசமான நிகழ்வாகும். அத்துடன், 1992 இல் ஆரம்பிக்கப்பட்ட உக்ரைன் பன்னாட்டு ஏர்லைன்சு நிறுவனத்தின் முதலாவது வானூர்தி விபத்து இதுவாகும். ஈரானிய இராணுவத் தளபதி ஜெனரல் காசிம் சுலைமானி அமெரிக்காவால் கொல்லப்பட்டதற்கு பதிலடியாக, ஈராக்கில் உள்ள அமெரிக்க இராணுவத் தளங்கள் மீது ஈரான் ஏவுகணைத் தாக்குதல் நடத்திய சில மணி நேரங்களில், தெகுரானில் இருந்து கிளம்பிய இந்த வானூர்தி விழுந்து நொறுங்கியது.
சுருக்கம் | |
---|---|
நாள் | சனவரி 8, 2020 |
சுருக்கம் | புறப்பட்ட சில நிமிடங்களில் ஈரான் பாதுகாப்புப் படையின் டோர் ஏவுகணை மூலம் தவறுதலாகச் சுட்டு வீழ்த்தப்பட்டது. |
இடம் | சாரியர், தெகுரான் மாகாணம், ஈரான் 35°33′40″N 51°06′14″E / 35.56111°N 51.10389°E |
பயணிகள் | 167 |
ஊழியர் | 9 |
உயிரிழப்புகள் | 176 |
தப்பியவர்கள் | 0 |
வானூர்தி வகை | போயிங் 737-8கேவி |
இயக்கம் | உக்ரைன் பன்னாட்டு ஏர்லைன்சு |
வானூர்தி பதிவு | UR-PSR |
பறப்பு புறப்பாடு | தெகுரான் இமாம் கொமெய்னி பன்னாட்டு வானூர்தி நிலையம், தெகுரான், ஈரான் |
சேருமிடம் | போரிசுபில் பன்னாட்டு வானூர்தி நிலையம், கீவ், உக்ரைன் |
ஆரம்பத்தில், வானூர்தி சுட்டு வீழ்த்தப்பட்டதை நிராகரித்திருந்த ஈரானிய அதிகாரிகள், தொழினுட்பக் கோளாறே விபத்திற்குக் காரனம் என அறிவித்திருந்தனர். ஈரானின் "டோர்" (நேட்டோ அறிக்கையிடல் பெயர்: எஸ்.ஏ-15 காண்ட்லெட்) என்ற நில வான் ஏவுகணை மூலம் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டதாக உளவுக் கண்காணிப்பு செயற்கைக்கோள் படங்கள் காட்டுவதாக அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்தனர், ஆனால் இதற்கான எந்த ஆதாரத்தையும் அவர்கள் அப்போது வெளியிடவில்லை. தமது வானூர்தி "சுட்டு வீழ்த்தப்பட்டிருக்கலாம்" என உக்ரேனிய அதிகாரிகள் கூறினர், அதே நேரத்தில் ஈரானிய அதிகாரிகள் இதனை மறுத்தனர். ஐக்கிய இராச்சியத்தின் பாதுகாப்பு அதிகாரிகள் சுட்டு வீழ்த்தப்பட்டமை குறித்த அமெரிக்க மதிப்பீட்டை ஏற்றுக்கொண்டனர். கனடியப் பிரதமர் ஜஸ்டின் துரூடோ வானூர்தி சுட்டு வீழ்த்தப்பட்டதற்கான சான்றுகள் இருப்பதாகக் கூறினார். வானூர்தி உயரத்தை எட்டிக்கொண்டிருக்கும்போது ஈரானிய ஏவுகணை ஒன்று தாக்கியதைக் காட்டும் செல்லிடத் தொலைபேசிக் காட்சிகள் உறுதி செய்யப்பட்ட காட்சிகள் எனத் தெரிவிக்கப்பட்டது.
உக்ரைனின் மிகப்பெரிய வானூர்தி நிறுவனமான உக்ரைன் பன்னாட்டு ஏர்லைன்சு இவ்வானூர்தியை இயக்கியது. இவ்வானூர்தியில் 9 பணியாளர்கள் உட்பட 176 பேர் பயணம் செய்ததாக உறுதி செய்யப்பட்டது. பயணிகளில் 15 பேர் சிறுவர்கள் ஆவார்.
பறப்பு வானூர்தி 752 உள்ளூர் நேரம் காலை 05:15 (ஒசநே+03:30) மணிக்குப் புறப்படுவதாக இருந்தது, ஆனால் தாமதமாக உள்ளூர் நேரம் 06:12 பணிக்குப் புறப்பட்டது. அன்று காலை உள்ளூர் நேரம் 08:00 (ஒசநே+02:00) மணிக்கு கீவ் நகரை அடைந்திருக்க வேண்டும். வானூர்தியில் இருந்து கடைசித் தகவல் காலை 06:14 மணிக்கு (புறப்பட்டு 3 நிமிடங்களுக்குள்ளாக) கிடைத்தது. கடைசியாக கடல் மட்டத்தில் இருந்து 7,925 அடி (2,416 மீ) உயரத்தில் 509 கிமீ/ம வேகத்தில் பறந்து கொண்டிருந்தது. தெகுரான் வானூர்தி நிலையம் சராசரி கடல் மட்டத்திலிருந்து 3,305 அடி (1,007 மீ) உயரத்தில் உள்ளது, இது தரை மட்டத்திலிருந்து 4,620 அடி (1,410 மீ) உயரம் ஆகும். வானூர்தியின் உயரப் பதிவு திடீரென முடிவடைந்தபோது வானூர்தி மேலே ஏறிக்கொண்டிருந்தது.
வானூர்தி நிலையத்திற்கு வடக்கே 15 கிலோமீட்டர் தூரத்தில் அமைந்துள்ள நிலப்பரப்பில் வானூர்தி மோதியது பற்றிய ஒரு காணொளி சமூக ஊடகங்களில் பரப்பப்பட்டது. விமானம் கீழ்நோக்கி வந்தபோது அது தீப்பற்றி எரிந்தது காணொளியில் பதிவாகியுள்ளது. அதன் சில பாகங்கள் வானில் உடைந்து வீழ்ந்தன. பின்னர் அது கீழே வீழ்ந்து நொறுங்கி வெடித்தது. இக்காணொளியின் நம்பகத்தன்மை உறுதி செய்யப்படவில்லை, ஆனாலும் வானூர்தி நொருங்குவதற்கு முன்னரே அது தீப்பிடித்திருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது. இதனால், இவ்வானூர்தி தவறுதலாகச் சுட்டு வீழ்த்தப்பட்டிருக்கலாம் என நம்பப்படுகிறது. இது சுட்டு வீழ்த்தப்பட்டதை ஈரானிய இராணுவம் மறுத்திருக்கிறது. ஆரம்பக் கட்ட விசாரணைகளின் படி, தொழில்நுட்பக் கோளாறே விபத்துக்குக் காரணம் என ஈரானின் பேரழிவு தணிப்பு மற்றும் மேலாண்மை அமைப்பு கூறியுள்ளது.
இடிபாடுகள் பரந்த பகுதியில் பரவியிருந்த நிலையில், விபத்துக்குள்ளான இடத்தில் உயிர் தப்பியவர்கள் எவரும் காணப்படவில்லை.
வானூர்தியில் மொத்தம் 167 பயணிகளும் 9 பணியாளர்களும் இருந்ததாக ஈரான் வான் பரப்பு அமைப்பின் செய்தித் தொடர்பாளர் உறுதிப்படுத்தினார். பெரும்பாலான பயணிகள் உக்ரைன் ஊடாக கனடா திரும்பிக் கொண்டிருந்தவர்கள் ஆவர். 138 பேர் கனடா நோக்கி சென்றதாக கனடியப் பிரதமர் ஜஸ்டின் துரூடோ தெரிவித்தார். பெரும்பாலான கனடிய ஈரானியர்கள் தமது விடுமுறைகளைக் கழித்து விட்டு கனடா திரும்பிக் கொண்டிருந்த கனடியப் பல்கலைக்கழக மாணவர்களும், ஆய்வாளர்களும் அவர்களது குடும்பங்களும் ஆவர்.
தேசியம் | பயணிகள் | பணியாளர்கள் | மொத்தம் |
---|---|---|---|
ஈரான் | 82 | 0 | 82 |
கனடா | 63 | 0 | 63 |
உக்ரைன் | 2 | 9 | 11 |
சுவீடன் | 10 | 0 | 10 |
ஆப்கானித்தான் | 7 | 0 | 4 |
ஐக்கிய இராச்சியம் | 3 | 0 | 3 |
மொத்தம் | 167 | 9 | 176 |
This article uses material from the Wikipedia தமிழ் article உக்ரைன் பன்னாட்டு ஏர்லைன்சு பறப்பு 752, which is released under the Creative Commons Attribution-ShareAlike 3.0 license ("CC BY-SA 3.0"); additional terms may apply (view authors). வேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 4.0 இல் கீழ் கிடைக்கும். Images, videos and audio are available under their respective licenses.
®Wikipedia is a registered trademark of the Wiki Foundation, Inc. Wiki தமிழ் (DUHOCTRUNGQUOC.VN) is an independent company and has no affiliation with Wiki Foundation.