கேரள வரலாறு என்பது இந்திய வரலாற்றில் பல ஆயிரம் ஆண்டுகள் பின்னோக்கிச் செல்கிறது.
கற்காலத்தைச் சேர்ந்த எடக்கல் குகைச் செதுக்கல்கள் குறைந்தது பொ.ஊ.மு. 5000 ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட புதிய கற்காலத்தைச் சேர்ந்ததாகக் கருதப்படுகிறது. இது இந்தப் பிராந்தியத்தில் இருந்த வரலாற்றுக் காலத்துக்கு முந்தைய நாகரிகம் அல்லது குடியமர்வைக் குறிப்பதாக உள்ளது. பொ.ஊ.மு. 3000 க்கு முன்பிருந்து, கேரளம் மசாலை வர்த்தகத்தில் ஒரு முதன்மை மையமாக உருவானது. மத்திய தரைக்கடல் மற்றும் செங்கடல் துறைமுகங்கள் வழியாக அரபிக் கடல் கடந்து கேரளம் தூர கிழக்கு நாடுகளுடன் நேரடி வணிகத் தொடர்பில் இருந்தது. மசாலை வர்த்தகத்தில் முதன்மையான பகுதியாக உலகின் பெரும்பாலான நாடுகளுக்கு இடையே கேரளம் இருந்தது. வரலாற்றில் கேரளாத் துறைமுகங்கள் மிகப் பரபரப்பான துறைமுகங்களாக (முசிறி) உலக வரலாற்றில் அனைத்து வர்த்தக மற்றும் பயணப் பாதைகள் மத்தியில் இருந்துள்ளன.
கேரளம் என்ற சொல் முதலில் பதிவு செய்யப்பட்டது (கேரளப்புத்ரா என்று) கி.மு 3 ஆம்-நூற்றாண்டைச் சேர்ந்த மௌரிய பேரரசின் பேரரசர் அசோகரின் (பொ.ஊ.மு. 274–237) பாறைக் கல்வெட்டில் ஆகும். கேரளபுத்திரர் (சேரர்) என்பவர் மௌரிய பேரரசுக்கு உட்படாமல் தென்னிந்தியாவில் இருந்த நான்கு தனி அரசுகளில் ஒன்றின் மன்னர்களாவர். பிற தனியரசர்கள் சோழர், பாண்டியர், சத்திய புத்திரர் ஆவர். சேரப் பேரரசு அருகிலிருந்த பேரரசுகளான சோழர் மற்றும் இராஷ்டிரகூடர் ஆகியோரின் தொடர் தாக்குதலினால் வீழ்ச்சியடைந்தது. பொ.ஊ. 8 ஆம் நூற்றாண்டில், ஆதி சங்கரர் நடு கேரளத்தில் பிறந்தார். இவர் இந்தியத் துணைக்கண்டத்தில் பயணித்து, அத்வைத மெய்யியலைப் பரப்பினார்.
1498 இல் வாஸ்கோ ட காமாவின் வருகைக்குப்பின், ஐரோப்பியர்களின் காலனித்துவம் மற்றும் தங்கள் சொந்த நலன்களுக்கு இடையிலான போராட்டங்கள் எழுந்தன. இதன் தொடர்ச்சியாக 1795 இப் பிராந்தியம், பிரித்தானியர்களின் ஆளுகைக்குள்ளானது. விடுதலைக்குப் பிறகான காலத்தின்போது 1956 ஆண்டு முன்னாள் மாகாணங்களான திருவாங்கூர்-கொச்சி, சென்னை மாகாணத்தின், மலபார் மாவட்டம், தென் கன்னடத்தின் காசர்கோடு வட்டம் ஆகியவற்றை இணைத்து கேரள மாநிலம் உருவாக்கப்பட்டது.
கேரளம் குறித்த தொன்மக் கதைகளில் பல, இந்தியாவின் வேத கதைச்சொல்லல் வரலாற்றில் இருந்து வரும் பொதுவான கதைகளாகும். அதே நேரத்தில் கேரளம் எப்போதும் சமஸ்கிருதம் மற்றும், தமிழ் பண்பாட்டின் கலவையாக இருந்துள்ளது.
கேரளத்தின் மிகவும் புகழ்வாய்ந்த தனிச்சிறப்பான விழாவாக, ஓணம் உள்ளது, இதில் கேரளத்தின் ஆழமான மரபுகள் வேரூன்றியுள்ளது. ஓணம் விழா அசுர அரசனான மகாபலி சக்கரவர்த்தியுடன் தொடர்புபட்டதாகக் கொண்டாடப்படுகிறது. இவர் இந்து தொன்மத்தின்படி, கேரளத்திலிருந்து உலகையும், பிற கிரகங்களையும் தன் ஆட்சிக்குள் கொண்டுவந்து ஆண்டார். இவரது முழுப் பேரரசும் செழித்தும், மகிழ்ச்சியுன் இருந்தது, ஆனால், இவர் அசுரராக இருந்த காரணத்தினால் விஷ்ணு ஐந்தாவது அவதாரமாக வாமண அவதாரம் எடுத்துவந்து மகாபலியிடம் மூன்றடி இடத்தை தானமாகப் பெற்று உலகை ஓரடியிலும் வானை மறு அடியிலும் அளந்து மூன்றாவது அடியை மகாபலியின் தலையில் வைத்து பாதாளத்திற்கு அனுப்பினார் என்பது நம்பிக்கை. இந்த மகாபலி சக்கரவர்த்தி ஆண்டுக்கு ஒரு முறை தன் நாட்டு மக்களைக் காண வருவதாகவும் அந்த நாளே ஓணத் திருநாளாக கேரள மக்களால் கொண்டாடப்படுகிறது.
அனைத்துப் புராணங்களிலும் பழமையான புராணமான மச்ச புராணத்தில், இறைவன் விஷ்ணுவின் மச்ச அவதாரக் கதைபற்றிய புராணமாகும். இதில் தமிழகம் மற்றும் கேரளத்தில் உள்ள மலையாக மலையா மலைகள் என்னும் மலையைப் பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது. சமஸ்கிருதத்தின் பழமையான நூலான ரிக் வேதத்தின் ஒரு பகுதியான ஆரண்யகத்தில் கேரளம் பற்றிய குறிப்பு உள்ளது. மேலும் இது இராமாயணம் மற்றும் மகாபாரதத்திலும் குறிப்பிடப்படுகிறது.
கேரளத்தின் தோற்றம் குறித்து தொன்மங்கள் நிலவுகின்றன. அத்தகைய ஒரு தொன்மக்கதையில் விஷ்ணுவின் அவதாரமான பரசுராமர் தன் போர்க் கோடாலியை கடலில் வீசி கடலில் மூழ்கி இருந்த கேரளத்தை மேலே கொண்டுவந்து மீட்டதாக ஒரு கதை நிலவுகிறது.
தொல்லியல் ஆய்வுகளில் வழியாக கேரளத்தில் பல இடைக் கற்கால, புதிய கற்கால, பெருங்கற்கால இடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. இந்தக் கண்டுபிடிப்புகள் செம்மை பாறையைக் குடைந்து அமைக்கப்பட்ட குகைகள் (Chenkallara), குடைக் கல் (Kudakkallu), தொப்பிக் கல் (Toppikallu), கல்திட்டை (Kalvrtham), ஈமத்தாழி (Nannangadi), நெடுநிலை நடுகல் (Pulachikallu) என வகைப்படுத்தபட்டுள்ளன. இந்த ஆய்வுகள் பண்டைய கேரள சமூகத்தின் வளர்ச்சி மற்றும் அதன் கலாச்சாரம் பழைய கற்கால கட்டத்தில் இருந்து தொடங்கி, மற்றும் மத்திய கற்காலம், கற்கால மற்றும் புதியகற் காலம் வரை அதன் தொடர்ச்சி சுட்டிக்காட்டப் படுகிறது. எனினும், வெளிநாட்டு கலாச்சாரத் தொடர்புகள் இந்த கலாச்சார உருவாக்கத்தில் உதவின. இந்த ஆய்வுகள் பிற்பகுதியில் வெண்கலக் காலம் மற்றும் துவக்க இரும்புக் காலத்தின் போது சிந்து சமவெளி நாகரிகத்துடனான கூடிய உறவு பற்றி தெரிவிக்கின்றன.
கேரளம் பொ.ஊ.மு. 3000 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே மசாலை ஏற்றுமதியில் முன்னணியில் ஈடுபட்டுவந்துள்ளதை, சுமேரியா பதிவுகள் வழியாக தெரியவருகிறது. இந்த மசாலை நிலத்தின் புகழ்வாய்ந்த்தாகவும், பபிலோனியா, அசீரியர், எகிப்தியர் போன்றோருக்கு முசிறித் துறைமுகம் கவரும்விதமாக பொ.ஊ.மு. 3வது மற்றும பொ.ஊ.மு. 2வது நூற்றாண்டுகளில் விளங்கியது. அராபியர் மற்றும் போனீசியா போன்ற மக்கள் இந்த துவக்கக் காலத்திலேயே கேரள வர்த்தகத்தில் தங்கள் முக்கியத்துவத்தை நிறுவுவதில் வெற்றியடைந்து இருந்தனர்.
சங்க இலக்கிய நூல்களான புறநானூறு, அகநானூறு ஆகிய நூல்களில் உரோம கப்பல்கள் கேரளத் துறைமுகங்களில் தங்கம் போன்ற பொருட்களை கொண்டுவந்து கொடுத்து, மாற்றாக மேற்கத்திய நாடுகளுக்கு மிகவும் தேவைப்பட்ட மிளகு போன்ற மசாலை பொருட்களை கொண்டு சென்றதாக பல வரிகளில் கூறுகிறது. பழங்கால இலக்கியமான சங்க இலக்கியங்களின் தொகை நூல்களின் பாடல்களில் பல பழங்கால கேரளத்தில் இயற்றப்பட்டவை. இதில் பதிற்றுப்பத்து நூல் கேரளத்தின் துவக்க நூற்றாண்டு மன்னர்களான சேரர் மரபை விளக்கும் முதன்மையான நூலாக விளங்குகிறது.
பண்டைய கேரளத்தைப் புரிந்துகொள்ள முதன்மையான ஆதாரமாக உள்ள தமிழிலக்கியங்கள் பதினெண்மேற்கணக்கு நூல்களாகும். மேலும் தமிழ் நூல்களான புறநானூறு, அகநானூறு, சிலப்பதிகாரம், மணிமேகலை ஆகிய நூல்களில் பாடல்களை இயற்றிய புலவர்களான பரணர், கபிலர், கௌதமனர், மாமூலனார், ஔவையார் போன்றோரின் சங்கப்பாடல்கள் வழியாக சேரமன்னர்களான உதியன் சேரலாதன், நெடுஞ்சேரலாதன், செங்குட்டுவன் போன்றோரைப்பற்றிய குறிப்புகளை அறிய இயலுகிறது. இவர்களின் தலைநகரான வஞ்சி உரோம் நாட்டின் முதன்மை வணிக மையமாக இருந்தது.
பொ.ஊ.மு. 3 ஆம்- நூற்றாண்டைச் சேர்ந்த அசோகரின் பாறைக் கல்வெட்டில் கேரளத்தை ஆண்ட சேர மன்னரை கேரளப்புத்திரா என குறிப்பிடுகிறது. பண்டைய இந்தியாவின, சமஸ்கிருத அறிஞர்களான கட்யாயனா (ஏறத்தாழ பொ.ஊ.மு. 4 வது நூற்றாண்டு) மற்றும் பதஞ்சலி (ஏறத்தாழ பொ.ஊ.மு. 2 ஆம் நூற்றாண்டு) ஆகிய சமஸ்கிருத அறிஞர்கள், கேரள புவியியல் குறித்து ஒரு சாதாரண அறிமுகத்தை தங்கள் எழுத்துக்களில் குறிப்பிட்டுள்ளனர்.
அசோகரின் ஆட்சிக் காலத்தில் தென்னிந்தியாவின் தன்னுரிமை பெற்ற கேரளபுத்திரர் உள்ளட்ட ஐந்து நாடுகள் இருந்தன, பிற அரசுகள் சோழர், பாண்டியர், தாமிரபரணி, சத்தியபுத்திரர் ஆகியோர் ஆவர். கேரளம் பல தேசவழிகளாக நிர்வாக ரீதியாக சேரர்களால் பிரிக்கப்பட்டு (( பிராந்திய ஆளுநர்கள் )) இருந்துது. பிராந்திய ஆளுநர்கள் நடுவழி என அழைக்கப்பட்டனர்.
சேரர் மேற்கு மலபார் கடற்கரையை, சோழர்கள் தென் மத்திய குடாநாட்டில் சேழமண்டல கடற்கரையைப் பகுதியையும், பாண்டியர்கள் தென் மத்திய தீபகற்பத்தை ஆண்டனர். இவர்கள் மட்டுமல்லாது வேளிர் என்றழைக்கப்பட்ட பல குறுநில மன்னர்கள் பலர் தங்கள் நிலப்பரப்பை ஆண்டனர். சேரப் பேரரசுக்கு உட்டபட்ட பகுதிகளாக தற்கால கேரளம் மற்றும் தற்கால தமிழ்நாட்டின் கோயமுத்தூர் மாவட்டம், சேலம் மாவட்டம் ஆகிய பகுதிகள் அடங்கி இருந்தன. கேரள பிராந்தியத்தின் மொழிகளாக பழந்தமிழ் மற்றும் சமஸ்கிருதம் ஆகியன இருந்தன. . சேரரின் தலைநகராக வஞ்சி நகரம் இருந்தது. இந்த வரலாற்றுகால வஞ்சி நகரம் தற்கால கேரளத்தின் பழங்கால துறைமுக நகரமான முசிறிக்கு அருகில் இருந்தது. என்ற கருத்து நிலவினாலும், தற்கால தமிழ்நாட்டில் உள்ள கரூர்தான் சேரர்களின் பழங்கால தலைநகரம் என்ற கருத்தும் உள்ளது. மற்றோரு பார்வையாக சேரர் ஆட்சியின்போது பல தலைநகரங்கள் இருந்ததாக கூறப்படுகிறது.
பௌத்தம் மற்றும் சைனம் ஆகிய சமயங்கள் பழங்காலத்திலேயே கேரளத்தை வந்தடைந்தன. பண்டைய இந்தியாவின் ஏனைய பகுதிகளிலிருந்து வந்த, புத்த மற்றும் சமண சமயங்கள், முதல் ஐந்து நூற்றாண்டுகளில் துவக்கக் கால திராவிட நம்பிக்கைகளுடன் இணைந்து இருந்தன.
மேற்காசியா மற்றும் தெற்கு ஐரோப்பா போன்ற பகுதிகளில் இருந்து வந்த வணிகர்களால் கேரளத்தின் கடலோரப் பகுதிகளில் குடியேற்றங்கள் நிறுவப்பட்டன. கேரளத்துடன் யூதர்களுடனான தொடர்பு பொ.ஊ.மு. 573 இன் துவக்கத்தில் தொடங்கியது. கேரளத்துடனான அரேபியர்களின் வணிகத் தொடர்புகள் பொ.ஊ.மு. நான்காம் நூற்றாண்டுக்கு முன்பே துவங்கிவிட்டது, எரோடோட்டசு (பொ.ஊ.மு. 484–413) தன் குறிப்புகளில் கேரளப் பொருட்களை அரேபியர்கள் கொண்டுவந்து ஈடன் யூதர்களிடம் விற்றதாக குறிப்பிட்டுள்ளார். 4 ஆம் நூற்றாண்டில், பாரசீகத்திலிருந்து சில கிருத்தவர்கள் கேரளத்திற்கு குடிபெயர்ந்துள்ளனர் மற்றும் இவர்கள் பழங்கால கிருத்தவர்களான சிறியன் கிருத்தவ்வர்களின் சமூகத்துடன் இணைந்துள்ளனர். இந்த சிறியன் கிருத்தவர்கள் பூர்வீகத்தில் முதலாம் நூற்றாண்டில் புனித தாமசால் கிருத்தவர்களாக மதம் மாற்றப்பட்டவர்கள். மாப்ளா என்னும் பட்டம் வெளிநாடுகளில் இருந்து வருபவர்களுக்கு அளிக்கப்படும் மரியாதைக்குறிய பட்டமாக இருந்தது; மேலும் யூதர்கள், சிறியன் கிருத்தவர்கள், முஸ்லீம்கள் ஆகியோரில் வெளிநாட்டிலிருந்து குடியேறியவர்களின் சந்ததியினர் பிற்காலத்தில் தங்ள் பெயருக்கு பின்னால்: யூத மாப்பாளா, கிருத்தவ மாப்ளா, முஸலீம் மாப்ளா என அழைக்கப்பட்டனர். இந்தச் சமூகங்களின் புனைவின்படி, இந்தியாவின் பழங்கால கிருத்துவ தேவாலயங்கள், பள்ளிவாசல்கள், யூத தொழுகைக் கூடங்கள் (பொ.ஊ. 1568) போன்றவை கேரளத்தில் கட்டப்பட்டவை என்கின்றன. துவக்கக் காலத்தில் யூத, கிருத்தவ, முசுலீம் மக்கள் சிறிய எண்ணிக்கையில் இணைந்து இருந்தனர். அவர்கள் உள்ளூர் இந்து சமூகத்துடனும் தங்களுக்குள்ளும் சுமூகமாக இணைந்து வாழ்ந்து வந்தனர், இந்த கூட்டுறவால் தங்களுக்குள் வணிக ஆதாயங்களை அடைந்தனர். இன்னொரு குறிப்பிடத்தக்க சமூகமாக க்னானாய என்னும் கிருத்தவ பிரிவினர் மத்திய கிழக்கிலிருந்து கேரளத்திற்கு வந்து சேர்ந்தவர்களாவர்.
சங்க காலத்தின் இறுதியில் தென்னிந்தியாவின் மேற்கு கடற்கரைப் பகுதியின் சமூக அமைப்பில் ஒரு மாபெரும் மாற்றம் ஏற்பட்டது. அதாவது சங்க காலத்தின் இறுதியில், கேரளத்தில் பிராமணர்களின் குடியேற்றம் பெருமளவில் ஆரம்பித்தது, 8 ஆம் நூற்றாண்டில், சங்கிலித் தொடராக பெருமளவிலான பிராமணர்கள் நடுகேரளத்தில் குடியேறினர். இதனால் பார்ப்பணமயம் அல்லது சமசுகிருதமயமாதல் கேரளத்தில் துவங்கியது, பல கோயில்கள் கட்டப்பட்டு, நம்பூதிரி சமூகம் உருவானது. கேரளத்தில் 8 ஆம் நூற்றாண்டில் பிறந்த ஆதி சங்கரர் அத்வைத மெய்யியலை பரப்பினார். முழு கேரளத்திலும் பிராமணரின் குடியேற்றம் ஏற்பட்டு அவர்களின் கட்டுப்பாட்டில் ஏராளமான நிலமும், சலுகைகளும் பெற்றனர் இதனால் கேரளம் இந்துக் கோவில் வலையமைப்பின் கீழ் வந்தது. இதனால் சமூக அரசியல் அமைப்புகளில் மாற்றங்கள் ஏற்பட்டன. பிராமணர்கள் படிப்படியாக சமூகத்தின் உயரடுக்குக்கு வந்தனர். வர்கங்களுக்கிடேயான நிலப்பிரபுத்துவ சண்டைகள் உருவாயின. மேல் இடைநிலை மற்றும் தாழ்ந்த சாதிகள் என எண்ணற்ற பட்டங்களுடன் சாதி ஏற்றத்தாழ்கவுள் உருவாயின.
பிராந்தியத்தின் வரலாற்றில் பொ.ஊ. 6 ஆம் நூற்றாண்டு முதல் 8 ஆம் நூற்றாண்டுவரையிலான காலகட்டம் பெரும்பாலும் தெளிவின்றி உள்ளது. இரண்டாம் சேரப் பேரரசு ( ஆட்சிக் காலம். 800–1102), இது மகோதையபுர குலசேகர மரபு எனவும் அழைக்கப்படுகிறது. இதை நிறுவியவர் குலசேகர வர்மனாவார், இந்தப் பேரரசின் உன்னதமான காலகட்டத்தில் இதன் ஆட்சி எல்லைக்குள் தற்கால கேரளத்தின் முழுப்பகுதியும், தமிழ்நாட்டின் சில பகுதிகளும் அடங்கி இருந்தன. குலசேகரனின் ஆட்சிக்காலத்தின், துவக்கக் காலத்தில் தெற்குப்பகுதியான நாகர்கோவில் முதல் திருவல்லாவரையிலான பகுதியை ஆய் மன்னர்கள், ஆட்சியின் கீழ் இருந்தது. இவர்கள் தங்கள் ஆட்சிப் பகுதியை 10 ஆம் நூற்றாண்டில் சேரப் பேரரசிடம் இழந்தனர். குலசேகரனின் ஆட்சியின் போது, கேரளக் கலை, இலக்கியம், வர்த்தகம் மற்றும் இந்து மத பக்தி இயக்கம் மறுமலர்ச்சி அடைந்தது. இக்காலகட்டத்தில் தமிழர் என்ற அடையாளத்திலிருந்து கேரளமக்கள் மாறுபட்டு தனி மொழியினர் ஆனர். பேரரசின் உள்ளூர் நிர்வாகம் மாகாணங்களாகப் பிரிக்கப்பட்டு, நடுவழிகளக்கு என்னும் நாயர் தலைவர்களின் கட்டுப்பாட்டின் கீழ் விடப்பட்டன, ஒவ்வொரு மாகாணமும் பல தேசங்கலாக பிரிக்கப்பட்டு தேசவழி என்னும் தலைவர்களின் கட்டுப்பாட்டின் கீழ் விடப்பட்டன.
11 ஆம் நூற்றாண்டில் ஆண்ட சேரர்- சோழர் ஆட்சிக் காலத்தில் நடந்த தொடர் போர்களால் ஏற்பட்ட தடைகளால் கேரளத் துறைமுகங்களில் வணிகம் குறைந்து போயின. பௌத்தமும், சமணமும் நாட்டிலிருந்து காணாமல் போயின. சமூக அமைப்பு சாதி அடிப்படையிலான உட்பூசல்களால் விரிசல் கண்டது. இறுதியில், சேரப் பேரரசை 1102 இல் சோழரும், பாண்டியரும் இணைந்து தாக்கி தங்கள் வசப்படுத்தினர். எனினும், 14 ஆம் நூற்றாண்டில், தெற்கில் வேணாடு அரசை ரவிவர்ம குலசேகரன் (1299-1314) அமைத்து, தென்னிந்தியாவில் குறுகிய காலத்துக்கு தனது மேலாதிக்கத்தை ஏற்படுத்தினார். இவரின் மரணத்திற்குப் பிறகு, ஒரு வலுவான மைய ஆட்சி இல்லாத நிலை ஏற்பட்டு, குறுநில நாயர்கள் மற்றும் பல தளபதிகளின் கீழ் சுமார் முப்பது சிறிய சிற்றரசுகளாக ஆனது; இவற்றில் ஆற்றல் மிக்க அரசுகளாக வடக்கில் கோழிக்கோடு நாடும், தெற்கில், வேணாடும் மையப்பகுதியில் கொச்சி நாடும் உருவாயின.
ஆதி சங்கரர் (பொ.ஊ. 789), இந்தியாவின் சிறந்த மெய்யியலாளர்களில் ஒருவர், இவர் கேரளத்தின் காலடியில் பிறந்தவர், இவர் அத்வைத தத்துவத்தை உருவாக்கினார். சங்கரர் இந்தியத் துணைக்கண்டத்தில் பயணத்தின் வழியாகவும் சொற்பொழிவுகள் வழியாகவும் தன் கருத்துகளைப் பரப்பினார். இவர் இந்தியாவின் புகழ்வாய்ந்த நான்கு மடங்கள் நிறுவப்பட காரணமாக இருந்தார். இவை வரலாற்றில் அத்வைத வேதாந்தத்தின் மறுமலர்ச்சிக்கும் பரவலுக்கும் உதவின. ஆதிசங்கரரே தசநமி மரபின் அமைப்பாளராகவும், சண்மத நிறுவனராகவும் கருதப்படுகிறார்.
இவரின் சமஸ்கிருத படைப்புகள் அத்வைத கோட்பாட்டை நிறுவுவதைப் பற்றியதாகவே இருந்தன. மேலும் இவரால் துறவியர் மடங்களுக்கான கடுமையான சமய சடங்குகள் வரையறுக்கப்பட்டன. மேலும் அவரது படைப்புகள் உபநிடதங்களில் காணப்படும் கருத்துகளை விவரிக்கும் வகையிலும், வேத நியதிகளுக்கு விளக்க உரைகளாகவும் அமைந்தன. மேலும் இவரது நூல்களில் மாற்று மத சிந்தனைகளாக இருந்த சாங்கியம், பௌத்தம் ஆகியவற்றை எதிர்க்கும் விவாதங்களைக் கொண்டதாகவும் இருந்தன.
வேணாடு என்பது கேரளத்தின் தென்மேற்கு முனையில் இருந்த அரசாகும். இது சேரர் மற்றும் பாண்டியர் ஆகியோர்க்கு இடையில் அரசியல் முக்கியத்துவம்வாய்ந்த இடத்தில் இருந்தது. 11 ஆம் நூற்றாண்டின் இறுதிவரை ஆய் நாட்டின் அதிகாரத்துக்கு உட்பட்ட பகுதியாக இது இருந்தது. ஆய் அரசு கேரளத்தின் தென் பகுதியில் நாகர்கோவில் முதல் வடக்கில் திருவல்லா வரையிலான நிலப்பரப்பில் ஆட்சிபுரிந்த பழமையான அரசமரபாகும். இவர்களின் தலைநகராக கொல்லம் இருந்தது. 7 ஆம் நூற்றாண்டு முதல் 8 ஆம் நூற்றாண்டு காலகட்டத்தில் ஆய் நாட்டின் மீது பாண்டியர் தொடர் தாக்குதலில் ஈடுபட்டனர். இதனால் ஆய் நாடு சரிவைக் கண்டபோதும், 10 ஆம் நூற்றாண்டின் துவக்கம்வரை தங்கள் ஆதிக்கத்தை நிலைநாட்டி வந்து. ஆய் நாடு பலவீனமடைந்ததால் இரண்டாம் சேரப் பேரரசின் ஆட்சிக்குட்பட்ட பகுதியாக மாறியது. 1096 ஆம் ஆண்டு வேணாட்டின் மீது சோழர்கள் படை எடுத்துவந்து கொல்லத்தை அழித்தனர். என்றாலும், சேரர்களின் தலைநகரான மகோதையபுரம் அடுத்தடுத்த தாக்குதலில் வீழ்ந்தது. இதனால் சேர மன்னன் ராம வர்ம குலசேகரன் தன் தலைநகரை கொல்லத்துக்கு மாற்றினார். இவ்வாறு, ஆண்ட ராம வர்ம குலசேகரனே சேரப் பேரரசின் இறுதி அரசர் ஆவார், இவரே வேணாட்டு அரச மரபை நிறுவியவர் அன்று முதல் சேர மன்னர்கள் குலசேகரன் என்ற பட்டத்துடன் வேணாட்டை ஆண்டனர். 12 ஆம் நூற்றாண்டில் இறுதியில் வேணாடு சுதந்திர அரசாக மாறுகிறது. அதன்பிறகு வேனாட்டு மன்னர் வேணாடு மூப்பில் நாயர் என்றும் அழைக்கப்பட்டார்.
கோழிக்கோடு அரச மரபினரான சமூத்திரியினரின் பூர்வீகம் குறித்து வரலாற்று ஏடுகளில் தெளிவான செய்திகள் இல்லை. எனினும், சமூத்திரிகள் முதலில் பழங்கால சேர நாட்டின் எரல்நாடு பிராந்தியத்தின் ஆட்சியாளர்களான எரடிகள் என்பவர்களின் வழிவந்தவர்கள் என பொதுவாக ஒப்பு கொள்ளப்படுகிறது. எரநாடு மாகாணத்தில் தற்கால மலப்புறம் மாவட்டத்தின் வடபகுதியைக் கொண்டதாகவும், மேற்கில் வள்ளுவநாடு, போலநாடு ஆகிய பகுதிகளான் நிலப்பகுதியால் சூழப்பட்டதாக இருந்தது. இந்த மரபின் தோற்றம் குறித்த கதைகள் சில நிலவுகின்றன. இதில் தற்கால கொண்டோட்டிக்கு அருகில் உள்ளநெடியிருப்பு என்ற பகுதியைச் சேர்ந்த எரடி குலத்தை சேர்ந்த இரண்டு இளம் சகோதரர்களான மாணிக்கன் மற்றும் விக்ரமன் ஆகிய இருவரே இந்த அரச மரபை உருவாக்கியவர்கள் என்றும் இந்த இருவரும் சேரர் படையில் மிகவும் நம்பிக்கைக்குரிய தளபதிகளாக இருந்து வந்தவர்களாவர். கேரளத்தைச் சேர்ந்த வரலாற்று ஆசிரியரான எம்.ஜி.எஸ். நாராயணன், தனது, கோழிக்கோடு என்னும் நூலில்: எரடிகள் தங்களின் உண்மையான நாட்டையும், நகரத்தையும் சேரர்களிடன் இழந்தனர், அதன்பிறகு சேர மன்னனால் அவர்களின் பரம்பரை சொத்தில் ஒரு சிறிய அளவு நிலத்தை கடற்கரையை ஒட்டி அவர்களுக்கு வழங்கினர். இந்த எரடிகள் கடற்கரை சதுப்பு நிலத்தில் தங்கள் தலைநகரை அமைத்துக்கொண்டு, கோழிக்கோடு அரசை நிறுவினர். இவர்கள் பிற்காலத்தில் சமுதாத்தரி (கடலை எல்லையாக கொண்டவன்) என்ற பட்டத்தைச் சூட்டிக்கொண்டு கோழிக்கோடை ஆண்டனர்.
சமுத்திராத்திரி மரபினர் முஸ்லீம், சீனர் வணிகர்களுடன் வணிகரீதியாக இணைந்தனர். இதனால் கிடைத்த பொருளாதார வளத்தால் கோழிக்கோடு இராணுவரீதியாக வளர்ச்சியடைந்தது. இதனால் மத்திய காலமான 14 ஆம் நூற்றாண்டில் மலையாளம் பேசும் பகுதிகளில் கோழிக்கோடு மன்னர் சக்கிவாய்ந்த மன்னராக உருவெடுத்தார். நடுகேரளத்தின் பெரும்பகுதியை கோழிக்கோடு கைப்பற்றியது, மட்டுமல்லாது கொச்சி ராஜ்ஜியத்த்தின் மன்னரையும் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருந்தனர். இதனால் கொச்சி அரசு தனது தலைநகரை தெற்குப் பகுதிக்கு (பொ.ஊ. 1405) மாற்றியது. 15 ஆம் நூற்றாண்டில் கொச்சி நாடு கோழிக்கோடுக்கு கப்பம் செலுத்தும் நிலைக்குத் தள்ளப்பட்டது.
இந்திய பெருங்கடலின் கடல்வழி மசாலை வணிகம் இடைக்காலத்தில் அரேபியர்களின் ஏகபோகத்தில் இருந்தது. ஆனால், மத்திய கிழக்கு வர்த்தகர்கள் இந்தியாவுக்கு கடல்பாதை கண்டுபிடிபிடிப்பு காலத்தில் ஐரோப்பியர்கள் மசாலை வணிகத்தில், குறிப்பாக கருப்பு மிளகு, வர்த்தகத்தில் அரேபியர்களுக்கு ஒரு சவாலாக உருவெடுத்தனர். போர்த்துகீசிய வாஸ்கோடகாமா 1498 கடல்வழிப்பாதையை கண்டுபிடித்து. கோழிக்கோடுக்கு வந்ததைத் தொடர்ந்து மசாலை வணிகம் கிழக்கு கப்பல் வணிகத்தால் உச்சக்கட்டத்தை அடைந்தது, வணிகத்தில் ஐரோப்பியரின் ஆதிக்கம் தொடங்கியது.
கோழிக்கோடு அரசர் சமூத்திரி மகாராஜா தனது பகுதியினுள் வர்த்தகம் செய்ய போர்த்துகீசியருக்கு அனுமதி அளித்தார். இதனால் கோழிக்கோடு பகுதியில் தொழிற்சாலைகள் மற்றும் கோட்டைகளை அமைத்து போர்சுகீசியர் தமது வர்த்தகத்தால் அப்பகுதியை செழிக்கவைத்தனர். மேலும் வணிகத்தில் தங்களுக்கு போட்டியாக உள்ள அரேபியர்களின் சொத்துக்கள் மீது போர்ச்சுகீசியர்கள் தாக்குதல்களைத் தொடுத்தனர், இதனால் சமூத்திரி மகாராஜாவுக்கும் போர்ச்சுக்கல்காரர்களுக்கும் மோதல் உருவானது. போர்ச்சுக்கல்லுக்கும் கோழிக்கோடு மன்னருக்கும் உருவான மோதலை போர்த்துகீசியர்கள் தங்களுக்குச் சாதகமாக பயன்படுத்திக் கொண்டனர் - அவர்கள் கொச்சியுடன் கூட்டணி வைத்தனர். மற்றும் பிரான்சிஸ்கோ டி அல்மீடியா, 1505 இல் போர்த்துகீசியரின் இந்திய வைஸ்ராயாக நியமிக்கப்பட்டார். அவர் தனது தலைமையகத்தை கொச்சியில் நிறுவினார். அவரது ஆட்சியின் போது, போர்த்துகீசியர்கள் கொச்சி மீது மேலாதிக்கம் செய்தனர். மேலும் மலபார் கடலோரத்தில் பல கோட்டைகளை நிறுவினர். ஆயினும்கூட போர்ச்சுக்கல் கோட்டைகள் சமூத்திரி மகாராஜாவின் படைகளால் தாக்குதலுக்கு உள்ளாகியது. தங்களுக்கு சாதகமாக ஒரு ஒப்பந்த்த்தை பெற அவர்களை நிர்பந்தித்து, கோழிக்கோடு தளபதி குஞ்சல் மரக்கார் என்பவரின் தலைமையில் கடற்படை தாக்குதல்கள் 1571 இல் நடத்தப்பட்டன. இறுதியில் போர்த்துகீசியர்களின் சலியாம் கோட்டை சமூத்திரி மகாராஜாவின் படைகளால் வெல்லப்பட்டது. இது ஒரு ஒப்பந்தத்தை நாட வேண்டிய கட்டாயத்தை போர்ச்சுகீசியர்களுக்கு ஏறபடுத்தியது.
கொல்லம் நகரின், தங்கச் சேரியில் போர்த்துகீசிய கல்லறைகள் கொல்லம் நகரில் போர்த்துகீசிய படையெடுப்பு நடந்த பகுதியைச் சுற்றி 1519 இல் கட்டப்பட்டது (டச்சு படையெடுப்பு பிறகு, அது டச்சு கல்லறையில் மாறியது). இங்கு உள்ள பக்கிங்காம் கால்வாய் (தங்கச்சேரி கலங்கரை விளக்கம் மற்றும் கல்லறை ஆகியவற்றுக்கு இடையே இந்த சிறிய கால்வாய் அமைந்துள்ளது) போர்த்துகீசிய கல்லறைகளுக்கு மிகவும் நெருக்கமாக அமைந்துள்ளது. செயின்ட் தாமஸ் கோட்டை மற்றும் போர்த்துகீசிய கல்லறையின் எச்சங்கள் இன்னும் தங்கச்சேரியில் உள்ளன.
பிரெஞ்சுக் கிழக்கிந்திய நிறுவனம் 1724 இல் மாகியில் ஒரு கோட்டையை கட்டியது. இதற்கு மூன்றாண்டுகளுக்கு முன்பு ஆண்ட்ரே மொல்லண்டின் மற்றும் படகர மன்னர் வழுன்னவர் ஆகியோர் இடையே ஒப்பந்தம் உருவானது. மாகியை மராத்தியர் கைப்பற்றி இருந்த நிலையில் 1741 ஆம் ஆண்டு டி டா பவுர்டோன்னய்ஸ் மராத்தியர்களிடமிருந்து மீட்டார்.
இந்நிலையில் 1761 இல் பிரித்தானியர்கள் மாகியை பிரஞ்சுக்காரர்களிடமிருந்து கைப்பற்றினர். 1763 இல் பிரஞ்சுகாரர்கள் மற்றும் பிரித்தானியர் ஆகியோருக்கு இடையில் ஏற்பட்ட பாரீஸ் உண்ட்பாட்டின்படி மாகியை பிரித்தானியர்கள் மீண்டும் பிரஞ்சுக்காரர்களிடம் ஒப்படைத்தனர். 1779 ஆம் ஆண்டு பிரஞ்சு-ஆங்கிலப் போர் வெடித்ததைத் தொடர்ந்து மாகேவை மீண்டும் பிரஞ்சுக்காரர்கள் இழக்கவேண்டிவந்தது. 1783 ஆண்டு இந்தியவாவிலுள்ள பிரஞ்சு குடியேற்றங்களை திரும்ப ஒப்படைக்க பிரித்தானியர்கள் ஒப்புக்கொண்டனர், இதன்படி 1785 ஆண்டு மாகே பிரஞ்சுக்காரர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
பலவீனமான போர்த்துகீசியர்களின் கோழிக்கோடு, கொச்சி இடையேயான வணிக தலத்தின் கட்டுப்பாட்டை பெற தொடர்ந்து நடந்த மோதல்கள்களை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்ட டச்சுக் கிழக்கிந்தியக் கம்பனி தனது கட்டுப்பாட்டில் இந்தபிரதேசத்தின் வணிகத்தை கொண்டுவந்தது. டச்சு மலபார் (1661-1795) திருவாங்கூர் அரசர் மார்த்தாண்டவர்மாவுடன் நடந்த தொடர்ச்சியான போர்களால் பலமிழந்தது. 1741 இல் நடந்த குளச்சல் போரில் டச்சுப் படைகள் திருவாங்கூர் படைகளிடம் தோல்வியுற்றது. இதனால் டச்சுக்காரர்கள் மலபாரில் தங்கள் முழுபலத்தையும் இழந்தநிலையில் 1753 ஆண்டு டச்சுக்காரர்கள் திருவாங்கூர் மன்னரிடம் ஒரு ஒப்பந்தம் செய்துகொண்டனர். அதன்படி, இப்பிராந்தியத்தின் அனைத்து அரசியல் நடவடிக்கைகளிலிருந்தும் ஒதுங்கினர். இதற்கிடையில் மார்தாண்டவர்மா வடக்கில் இருந்த சிற்றரசுகளை போர் வெற்றிகளால் தன் நாட்டுடன் இணைத்துக்கொண்டார். இது கேரளத்தில் திருவாங்கூர் உயர்நிலையை அடைய காரணமாக அமைந்தது. மைசூரின் ஐதர் அலி வடக்கு கேரளத்தை 18 ஆம் நூற்றாண்டில் கைப்பற்றானார், கோழிக்கோட்டை 1766 இல் கைப்பற்றினார்.
ஐதர் அலி மற்றும் அவரது வாரிசான, திப்பு சுல்தான், ஆகியோரின் எதிர்ப்புகளால் 18 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் தென்னிந்தியா முழுவதும் நான்கு ஆங்கிலோ-மைசூர் போர்களுக்கு வழிவகுத்தது, 1792 ஆம் ஆண்டில் திப்பு சுல்தான் பிரித்தானியருக்கு மலபார் மாவட்டத்தை விட்டுக்கொடுத்தார். மேலும் 1799 இல் தற்போதைய தென் கன்னட மாவட்டம், காசர்கோடு மாவட்டம் ஆகியவற்றையும் விட்டுக்கொடுத்தார். பிரித்தானியர்கள் கொச்சி (1791) மற்றும் திருவாங்கூர் (1795) ராஜ்ஜிய ஆட்சியாளர்களுடன் துணைப்படைத் திட்டத்தின்படி ஒப்பந்தங்கள் செய்துகொண்டனர். தங்கள் தன்னாட்சியைப் பராமரிக்க பிரித்தானியாவின் இந்தியாவின் சுதேச அரசுகள் பிரித்தானியருக்கு ஆண்டுக்கு ஒருமுறை கப்பம் கட்டும் நிலைக்கு ஆனார். மலபார் மற்றும் தெற்கு கன்னட மாவட்டங்களில் பிரித்தானிய இந்தியாவின் சென்னை மாகாணத்தின் ஒரு பகுதியாக இருந்தன.
இந்தியா, 1947 இல் விடுதலை பெற்றபிறகு, திருவாங்கூர் மற்றும் கொச்சி ஆகிய இரண்டு சுயாதீனமான அரசாட்சிகள் இந்திய ஒன்றியத்தில் சேர்ந்தன, இரண்டு நாடுகளான இவை திருவிதாங்கூர்-கொச்சி என 1949 சூலை 1 ஆம் திகதி ஒன்றிணைக்கப்பட்டன. 1950 ஆம் ஆண்டு ஜனவரி 1 ஆம் தேதி, திருவிதாங்கூர்-கொச்சி ஒரு மாநிலமாக அறிவிக்கப்பட்டது. மதராஸ் மாகாணம் 1947 இல் மதராஸ் மாநிலமாக மாற்றப்பட்டது.
1956 நவம்பர் 1 அன்று, மாநிலங்கள் மறுசீரமைப்பு சட்டத்தின் கீழ் கேரள மாநிலம் உருவாக்கப்பட்டது. புதிய கேரளத்துக்காக மலபார் மாவட்டம் மற்றும் திருவாங்கூர்-கொச்சி (தமிழ்நாட்டுடன் இணைக்கப்பட்ட நான்கு தெற்கு தாலுகாக்கள் தவிர்த்து), மற்றும் காசர்கோடு, தெற்கு கன்னட மாவட்டங்கள் போன்றவை ஒன்றிணைத்து உருவாக்கப்பட்டது. 1957 ம் ஆண்டு, புதிய கேரள சட்டமன்றத்திற்கான தேர்தல் நடத்தப்பட்டது, இந்தேரதலில் சீர்திருத்தவாதத்தை முன்வைக்கும், கம்யூனிஸ்ட் தலைமையிலான அரசாங்கம் ஈ. எம். எஸ். நம்பூதிரிபாடு தலைமையின் கீழ் அமைந்தது. இதுவே உலகில் முதல் முறையாக ஜனனாயக முறையில் ஒரு கம்யூனிஸ்ட் அரசாங்கம் அதிகாரத்துக்கு தெரிவு செய்யப்பட்டது என்ற வரலாறை படைத்தது. இதனால் இந்தியாவில் உள்ள வறுமைமிக்க, வளர்ச்சி குறைந்த கேரள கிராமப்புறப் பகுதிகளில், முற்போக்காகன நிலச் சீர்திருத்தங்கள் துவங்கின.
This article uses material from the Wikipedia தமிழ் article கேரள வரலாறு, which is released under the Creative Commons Attribution-ShareAlike 3.0 license ("CC BY-SA 3.0"); additional terms may apply (view authors). வேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 4.0 இல் கீழ் கிடைக்கும். Images, videos and audio are available under their respective licenses.
®Wikipedia is a registered trademark of the Wiki Foundation, Inc. Wiki தமிழ் (DUHOCTRUNGQUOC.VN) is an independent company and has no affiliation with Wiki Foundation.