இந்து தொன்மவியலின் அடிப்படையில் அகலிகை (சமஸ்கிருதம்: अहल्या, அகல்யா) என்பவர் கௌதம மகரிஷியின் ரிஷிபத்தினி ஆவார்.
தேவர்களின் தலைவனான இந்திரன் இவர் மேல் ஆசை கொண்டு, கௌதம மகரிஷியின் உருவத்தோடு வந்து புணர்வு செய்திட, அதனை அறிந்த கௌதமர் அகலிகையைக் கல்லாக மாற சாபமிட்டார். இவ்வாறு கல்லாக மாறிய அகலியை ராமனின் கால்பட்டதால் மீண்டும் மனிதவுருவம் பெற்றதாக இந்து சமய நூல்கள் பல சொல்லுகின்றன.
அகலிகை | |
---|---|
பஞ்சகன்னிகை-இல் ஒருவர் | |
அகல்யா ரவி வர்மாவின் ஓவியம் (1848–1906) | |
தேவநாகரி | अहल्या |
சமசுகிருதம் | அகல்யா |
வகை | முனிவர், பஞ்சகன்னிகை |
இடம் | கௌதமரின் குடில் |
துணை | கௌதமர் |
குழந்தைகள் | சதானந்தன் (இராமாயணத்தில்)) |
இவர் அகல்யா, அகல்யை என்றும் அழைக்கப்பெறுகிறார்.
அகலிகை (அகல்யை) என்ற பெயர் களங்கமற்றவள் என்று பொருள்படக் கூடியது. இவர் பிரம்ம தேவரின் மானசீக மகளாவர்.
திருமாலின் மோகினி அவதாரத்தில் அழகான உடலைப் பெற்று அசுரர்களை மயக்கி தேவர்களுக்கு அமுதம் கிடைக்க வழிவகை செய்தார். இந்தச் செயலில் அழகென்பது காமத்தினால் மயக்குவதற்காகப் பயன்பட்டமையால், அழகென்பது தவத்திற்காகப் பயன்படுமாறு மாற்ற பிரம்மன் எண்ணினார். அதற்காக அழகு நிறைந்த பெண்ணை படைத்தார். அவளுக்கு அகலிகை என்று பெயரிட்டார்.
புராணங்களின்படி உலகை முதலில் சுற்றி வருபவருக்குத் தன் மகளை மணமுடித்துத் தருவதாகப் பிரம்மா கூறியதாகவும், அதன்படி கௌதமர் ஒரு பசுவை வலம் வந்து அகலிகையை மணந்ததாகச் சொல்லப்படுகிறது.
இத்தம்பதியருக்குச் சதானந்தன் என்ற மகன் பிறந்ததார். அவர் பிற்காலத்தில் ஜனகரின் புரோகிதர் ஆகி, உபா கர்மச் செயல்களுக்குத் துணை நின்றார். அகல்யைக்கு அஞ்சனை மகள் இருந்ததாகவும் சில கதைகள் கூறுகின்றன.
அழகில் மிக உயர்ந்தவளாக இருக்கின்ற அகலிகை மேல் இந்திரனுக்கு ஆசை உண்டாகிறது. அவள் ஆற்றங்கரையில் இருக்கும் சமயம் தன்னுடைய விருப்பத்தினை வெளியிட்டு அகலிகையின் கோபத்திற்கு ஆளாகிறான். தன் கணவனைத் தவிர பிறரை நினையாமல் வாழும் கற்புக்கரசியாக அகலிகை இருந்ததால், ஒருநாள் கௌதமர் ஆற்றங்கரைக்குச் செல்லும் நேரம், கௌதமராக உருமாறி அகலியைப் புணர்கிறான். திரும்பி வந்த கோதமன் நடந்ததை அறிந்து இருவரையும் சபிக்கிறார். இக்கதையை வான்மீகி சொல்லும் போது புதிதாக வந்திருப்பவன் இந்திரன் என்று அறிந்த பின்னும் அகலிகை அவனுடன் கூடி மகிழ்ந்திருந்தாள் என்கிறார். இதையே திருவானைக்கால் புராணம் உடையார் இந்திரனே நமை இருக்கின்றானோ புந்தியின் அரும்பிய பொருவில் ஓதையார் என்று கூறுகிறது. ஆனால் வால்மீகி இராமாயணத்தைத் தமிழில் பெயர்த்து எழுதிய கம்பரோ அகலிகையை நெஞ்சினால் பிழைப்பிலாள் என்றே கூறுகிறார்.
குடிலுக்குத் திரும்பிய கௌதமர், இந்திரனோடு அகலிகை இன்பமாக இருப்பதைக் கண்டு கோபம் கொள்கிறார். இந்திரனுக்கும் சாபமிட்டுவிட்டு, அகலிகையைக் கல்லாக மாறும்படி சபிக்கிறார். அவள் இந்திரன் கௌதமராக மாறி வந்தமையால்தான் இவ்வாறு நிகழ்ந்தது என்று விளக்கம் கூற, மனமிரங்கிய கௌதமர் இராமரின் கால்பட்டு சாபம் நீங்கும் என்று கூறுகிறார்.
பின்பு, இராமாயணக் கதையின்படி இராமனின் பாதம்பட்டு இவர் சாபவிமோசனம் பெற்றார் என்று தெரிகிறது.
அகலிகை வெண்பா என்பது அகலிகையைப் பற்றிய வெண்பா நூலாகும். இந்நூலை தமிழ்ச்செம்மல் வெ.ப.சுப்பிரமணிய முதலியார் இயற்றியுள்ளார். இந்நூலில் அகலிகையின் கதையானது வெண்பா பாடல்களால் பாடல்பெற்றுள்ளது.
அகலிகை கதையைத் தழுவி புதுமைப்பித்தன் சாப விமோசனம் என்ற பெயரில் சிறுகதை எழுதியுள்ளார். கதையின் இறுதியில் சீதையை இராமன் வனவாசத்துக்கு அனுப்பியதைக் கண்டு அவள் மீண்டும் கல்லானதாக குறிப்பிட்டிருப்பார்.
இந்து தொன்மவியலில் ஐந்து புராணப் பெண்கள் பஞ்சகன்னிகைகள் என்று அழைக்கப்பெறுகின்றார்கள். இவர்களே மிகச்சிறந்த தர்மப்பத்தினிகளாகவும், இல்லற வழிகாட்டிகளாகவும் குறிக்கப்பெறுகிறார்கள்.
அகலிகை கல்லாகச் சமைந்திருந்த கௌதம மகரிஷியின் ஆச்சிரமம் இருந்த இடம் இப்போது "அகல்யா இடம்" (Ahalya Sthan, அகல்யா ஸ்தான்) என அழைக்கப்படுகிறது. இது பிகார் மாநிலம், தர்பங்கா மாவட்டத்தில் உள்ளது. இங்கு 17-ஆம் நூற்றாண்டில் எழுப்பப்பட்ட இராமர் கோவில் இருக்கிறது.
ஜெகம் புகழும் புண்ணிய கதை அனுமனின் கதயே - இந்திரா சௌந்திரராஜன்
This article uses material from the Wikipedia தமிழ் article அகலிகை, which is released under the Creative Commons Attribution-ShareAlike 3.0 license ("CC BY-SA 3.0"); additional terms may apply (view authors). வேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 4.0 இல் கீழ் கிடைக்கும். Images, videos and audio are available under their respective licenses.
®Wikipedia is a registered trademark of the Wiki Foundation, Inc. Wiki தமிழ் (DUHOCTRUNGQUOC.VN) is an independent company and has no affiliation with Wiki Foundation.