யோகி ஆதித்தியநாத் (Yogi Adityanath, பிறப்பு: அஜய் சிங் பிசுத் (Ajay Singh Bisht; 5 சூன் 1972) இந்திய இந்து சமயக் குருக்களும், இந்துத்துவத்தை அடையாளப்படுத்தும் அரசியல்வாதியும் ஆவார்.
இவர் 2017 மார்ச் 19 முதல் உத்தரப் பிரதேச மாநிலத்தின் தற்போதைய முதலமைச்சராக உள்ளார். பாரதிய ஜனதா கட்சியின் மாநில முன்னணிப் பேச்சாளராக இருக்கும் இவர் கோரக்பூர் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினராக 1998 ஆம் ஆண்டு முதன்முதலாக தேர்ந்தெடுக்கப்பட்டார். அப்போது இவரே வயதில் மிகவும் இளையவரான நாடாளுமன்ற உறுப்பினர். தொடர்ச்சியாக இதே தொகுதியில் ஐந்து தடவைகள் நாடாளுமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
யோகி ஆதித்தியநாத் | |
---|---|
உத்தரப் பிரதேசத்தின் முதலமைச்சர் | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் 19 மார்ச் 2017 | |
ஆளுநர் | இராம் நாயக் ஆனந்திபென் படேல் |
முன்னையவர் | அகிலேஷ் யாதவ் |
இந்தியா நாடாளுமன்றம் for கோரக்பூர் | |
பதவியில் 05 அக்டோபர் 1998 – 21 செப்டம்பர் 2017 | |
முன்னையவர் | மகாந்த் அவைதியநாத் |
பின்னவர் | பிரவீன் குமார் நிசாத் |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | அஜய் சிங் பிசுத் 5 சூன் 1972 பஞ்சூர், பௌரி கர்வால், உத்தரப் பிரதேசம் (இன்றைய உத்தராகண்டம்) |
அரசியல் கட்சி | பாரதிய ஜனதா கட்சி |
இணையத்தளம் | www |
இந்து கோவில்கள் நிறைந்த கோரக்பூர் மடத்தில் இவரது ஆசான் மகந்த் அவைத்தியநாத் 2014 செப்டம்பரில் இறந்த பிறகு யோகி ஆதித்தியநாத் தலைமை குருவானார். 1998 ஆம் ஆண்டு நாடாளுமன்றத்துக்குத் தெரிவு செய்யப்பட்டபின் இந்து யுவ வாகினி என்ற இளைஞர் அமைப்பை உருவாக்கினார். இந்த அமைப்பு ஆர். எஸ். எஸ். மற்றும் பஜ்ரங் தள் அமைப்புகளை விட வேறானது. 2007 ஆம் ஆண்டு மதக் கலவரத்தில் இந்த அமைப்பு தொடர்பு பட்டிருந்தது. அந்தக் கலவரத்தின் போது கோராக்பூரில் இருவர் உயிரிழந்தார்கள். பல நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு போடப்பட்டது. யோகி ஆதித்தியநாத் கைது செய்யப்பட்டார். ஆயினும் ஒரு சில தினங்களில் அவர் விடுவிக்கப்பட்டார்.
இவர் உத்தராகண்டம் மாநிலத்தின் பௌரி கார்வல் மாவட்டத்திலுள்ள பான்சுர் என்ற இடத்தில் ஆனந்த் சிங் பிஸ்த் என்பவருக்கு மகனாகப் பிறந்தார். அஜய் சிங் பிஸ்த் எனப் பெயரிடப்பட்டார். இவரது தந்தை ஒரு வன சரக அதிகாரியாவார். கணிதத்தில் இளங்கலை படிப்பை உத்தராகண்டு கார்வல், ஸ்ரீ நகரிலுள்ள ஹேமாவதி நந்தன் பகுகுணா (எச், என் பி) பல்கலைக்கழகத்தில் படித்தார்.
1990 ஆம் ஆண்டளவில் அஜய் சிங் பிஸ்த் தன் குடும்பத்தை விட்டு நீங்கி அயோத்தி இராமர் கோவில் இயக்கத்தில் சேர்ந்தார். நாத சைவ மரபினரான மகந்த் அவைத்தியநாத்தின் சீடரானார். அதன் பின் இவருக்கு ஆதித்தியநாத் யோகி என்னும் பெயர் வழங்கப்பட்டது. துறவிகளின் வழமைப்படி இவரது குருவான மகந்த் வைத்தியநாத் இவருக்குத் தந்தையாகவும் ஆனார். மகந்த் அவைத்தியாநாத்தின் மறைவிற்குப் பின்னர், இவர் கோரக்கநாதர் மடத்தின் தலைவராகவும் உள்ளார். 2002-இல் இந்து யுவ வாகினி எனும் அமைப்பை நிறுவி அதன் நிறுவனத் தலைவர் ஆனார். ஆதித்தியநாத் யோகி தனது பிறந்த ஊருக்கு அடிக்கடி சென்று வந்ததோடு அங்கு ஒரு பள்ளிக்கூடத்தையும் நிறுவினார்.
ஆதித்தியநாத் கோராக்பூரிலுள்ள மடத்தின் தலைவராக உள்ளார். அங்குள்ள குடியிருப்பில் எளிமையான முறையில் வாழ்ந்து வருகிறார். அங்கு வானொலி, தொலைக்காட்சி போன்ற சாதனங்கள் எதுவுமில்லை. நேரு, மகாத்மா காந்தி, ஆபிரகாம் லிங்கன், மார்ட்டின் லூதர் கிங் ஆகியோரது புத்தகங்கள் உள்ளன. ஒவ்வொரு நாளும் பத்திரிகைகள் படிக்கும் வழக்கம் கொண்டவர். இவர் 400 க்கும் மேற்பட்ட பசுத் தொழுவங்களை (கோசாலா) நடத்தி வருகிறார். அவற்றின் தலைமை ஊழியராக முகமது என்பவர் பணியாற்றி வருகிறார். மடத்திலுள்ள கோவிலின் முதல் பொறியாளராகப் பணியாற்றிய நிசார் அகமது என்பவர் கோயில் அருகேயுள்ள மண்டபம், கடைகள், ஆசிரமம், மருத்துவமனை ஆகியவற்றைத் தான் வடிவமைத்ததாகக் கூறியுள்ளார். ஆதித்தியநாத் இந்துத் தீவிர ஆதரவாளராக அடையாளம் காணப்பட்ட போதிலும் இவரது மடத்தில் பொறியாளர், காசாளர் உட்பட பல நிலைகளில் முஸ்லிம்கள் பணியாற்றிவருகின்றனர்.
18 மே 2014 தொடக்கம் 19 மார்ச் 2017 வரையிலான தொகுப்பு.
விபரம் | வரவு | விவாத பங்களிப்பு | கேள்விகள் எண்ணிக்கை | தனி நபர் தீர்மானம் |
---|---|---|---|---|
யோகி ஆதித்தியநாத் | 77% | 56 | 284 | 3 |
தேசிய சராசரி | 81% | 45.3 | 180 | 1.4 |
மாநில சராசரி | 88% | 71.6 | 116 | 1 |
இவர் 2017-ஆம் ஆண்டில் முதன்முறையாக உத்தரப் பிரதேச முதலமைச்சராகப் பதவியேற்றபின் 47 அமைச்சர்களை நியமித்தார். இவர்களில் 22 பேர் அமைச்சரவை நிலையுள்ள அமைச்சர்கள். 9 பேர் தனிப்பொறுப்புள்ள மாநில அமைச்சர்கள். அமைச்சர்களில் 5 பெண்களுக்கு இடமளித்துள்ளதோடு ஒரு முஸ்லிம், 3 தலித்துகள் ஆகியோரை நியமனம் செய்தார்.. கேசவ் பிரசாத் மௌரியா, தினேஸ் சர்மா ஆகியோரை துணை முதலமைச்சர்களாக நியமித்தார்.
2022 உத்தரப் பிரதேச சட்டமன்றத் தேர்தலில் யோகி ஆதித்தியநாத் தலைமையிலான பாரதிய ஜனதா கட்சி கூட்டணி, மொத்தமுள்ள 403 தொகுதிகளில் 273 தொகுதிகளைக் கைப்பற்றி ஆட்சியை தக்க வைத்துக்கொண்டார்.,
யோகி ஆதித்தியநாத் உத்தரப் பிரதேச மாநில முதலமைச்சராக மீண்டும் இரண்டாம் முறையாக 25 மார்ச் 2022 அன்று பதவியேற்றார். இந்த முறை கேசவ் பிரசாத் மவுரியாவுடன் தினேஷ் சர்மாவிற்கு பதிலாக பிரிஜேஷ் பதக் துணை முதலமைச்சராக பொறுப்பேற்றார்.
மார்ச் 2011 இல், "குங்குமப்பூ நிறப் போர் - இந்து தீவிர முன்னேற்றம்" என்ற ஆவணத்திரைப்படம் ஆதித்தியநாத் சமய முரண்பாட்டை முன்னெடுப்பதாகக் குற்றம் சுமத்தியது. ஆதித்தியநாத் பேரணியில் கலந்து கொண்ட முகம் தெரியாத பேச்சாளர் இந்துப் பார்வையாளர்களிடம் முசுலிம் பெண்களின் சவங்களைத் தோண்டி எடுத்து பாலியல் வன்புணர்வு செய்யுமாறு மேடையில் தெரிவித்தார். இதனை ஆதித்தியநாத்தும் கேட்டுக் கொண்டிருந்தார். இது சமூக வலைத்தளங்களில் மார்ச்சு 2015 இல் விவாதப் பொருளாகியது.
ஆதித்தியநாத் சமய கலப்புத் திருமணம் பற்றிய உரையாடலின்போது, "அவர்கள் ஒரு இந்துப் பெண்ணை எடுத்தால், நாங்கள் 100 முசுலிம் பெண்களை எடுப்போம்" எனத் தெரிவித்தார். ஒரு கூட்டத்தில் இவர் பேசும்போது "அவர்கள் ஒரு இந்துவைக் கொன்றால் நாங்கள் 100 ..." என்று சொல்லி இடைவெளி விட, கூடியிருந்த மக்கள் "கொலை செய்வோம்" எனக் கூறினார்கள். "அவர்கள் என்ன செய்கிறார்களோ அதை நாங்கள் நூறு மடங்கு செய்வோம்" எனச் சொன்னார்.
This article uses material from the Wikipedia தமிழ் article யோகி ஆதித்தியநாத், which is released under the Creative Commons Attribution-ShareAlike 3.0 license ("CC BY-SA 3.0"); additional terms may apply (view authors). வேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 4.0 இல் கீழ் கிடைக்கும். Images, videos and audio are available under their respective licenses.
®Wikipedia is a registered trademark of the Wiki Foundation, Inc. Wiki தமிழ் (DUHOCTRUNGQUOC.VN) is an independent company and has no affiliation with Wiki Foundation.