நார்மெர் தட்டு அல்லது நார்மெரின் கல் தட்டு (Narmer Palette / Palette of Narmer), பண்டைய எகிப்தின் துவக்க கால அரச மரபு காலத்தின் முதல் வம்ச மன்னராக நம்பப்படும் நார்மெர்காலத்து கல்வெட்டு பலகை ஆகும்.
அழகிய இக்கற்பலகையின் காலம் ஏறத்தாழ கிமு 3200 – கிமு 3000-க்கும் இடைப்பட்டதாகும். 64 செமீ நீளம், 42 செமீ அகலம் கொண்ட இந்த அழகிய வண்டல் கல் தட்டு, எகிப்தின் தொல்லியல் வரலாற்றில் கண்டெடுக்கப்பட்ட அரிய வகை தொல்பொருள் என எகிப்தியவியல் அறிஞர்கள் கூறுகின்றனர். இக்கற்பலகையின் இருபுறத்தில் எகிப்தியக் கடவுளான பசு தேவதையின் சிற்பம், மன்னர் நார்மெரின் சிற்பம், முதல் வம்சத்தினரின் குலக்குறி சின்னமான தேள் மற்றும் விலங்குகள் சிற்பம் மற்றும் பண்டைய எகிப்திய மொழியை விளக்கும் பட எழுத்து குறிப்புகள் கொண்டது. இக்கற்பலகையை 1897–1898-ஆம ஆண்டுகளில்பண்டைய எகிப்திய நகரமான நெக்கென் நகரத்தில் அகழாய்வின் போது கண்டெடுக்கபட்டது. தற்போது நார்மெர் கற்பலகை எகிப்து நாட்டின் தலைநகரான கெய்ரோவில் உள்ள எகிப்திய அருங்காட்சியகத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது.
நார்மெர் கற்பலகையின் முன் பக்கம் & பின் பக்கம் | |
செய்பொருள் | வண்டல் கல் (siltstone) |
---|---|
அளவு | 64 செமீ x 42 செமீ |
உருவாக்கம் | ஏறத்தாழ கிமு 3200 – 3000 |
கண்டுபிடிப்பு | 1897–1898 |
தற்போதைய இடம் | எகிப்திய அருங்காட்சியகம், கெய்ரோ |
அடையாளம் | CG 14716 |
ஏறத்தாழ 5,100 ஆண்டுகள் பழமையான இக்கற்பலகை எகிப்தின் வரலாற்றையும், நாகரிகத்தையும் விளக்கும் தொல்பொருள் ஆகும். தெற்கு எகிப்தையும், வடக்கு எகிப்தையும் ஒன்றிணைத்ததை நினைவு கூறும் வகையில் மன்னர் நார்மெர் இக்கற்பலகை சின்னத்தை நிறுவினார் எனத்தொல்லியல் அறிஞர்கள் கருதுகின்றனர். இதனை வலியுறுத்தும் வகையில் இக்கற்பலகையில் தெற்கு எகிப்திய மன்னர்கள் அணிந்த வெள்ளை நிற மகுடமும், வடக்கு எகிப்திய மன்னர்கள் அணிந்த சிவப்பு நிற நீண்ட மகுடமும் செதுக்கப்பட்டுள்ளது. மேலும் இக்கற்பலகையில் பண்டைய எகிப்திய கலைகள், பட எழுத்து முறைகள் குறிக்கும் சின்னங்கள் இடம் பெற்றுள்ளது.நார்மெர் கற்பலகையை, இவ்வுலகில் கண்டுபிடிக்கப்பட்ட முதல் வரலாற்று ஆவணம் என எகிப்தியவியல் அறிஞரான பாப் பெரியர் குறிப்பிட்டுள்ளார்.
ஐக்கிய இராச்சியத்தின் தொல்லியல் அறிஞர்களான ஜேம்ஸ் இ. குயுபெல் மற்றும் பிரடெரிக் டபிள்யு. கிரீன் ஆகியோர் 1897–1898-ஆண்டுகளில் நைல் நதியின் மேற்கு கரையில் அமைந்த எட்ஃபூ கோயில் வளாகத்தை அகழாய்வு செய்த போது நார்மெரின் கற்பலகையை கண்டுபிடித்தனர்.
வண்டல் கல்லிலால் செய்யப்பட்ட நார்மெர் கற்பலகை 63 செண்டிமீட்டர் (2.07 அடி) உயரம் கொண்ட அழகிய பதக்க வடிவில் அமைந்துள்ளது. இக்கற்பலகையின் முன் பக்கம் மற்றும் பின் பக்கம் என இரண்டு பக்கங்களிலும் மன்னர் நார்மெர் உருவத்துடன் அழகிய சிற்பங்கள் செதுக்கப்பட்டுள்ளது.
மன்னர் நார்மெரின் பெயரைக் குறிக்கும் வகையில், இக்கற்பலகையின் இருபுறத்தின் மேற்பகுதிகளில் கெளிறு மீன் மற்றும் உளி சிற்பங்கள் செதுக்கப்பட்டுள்ளது. மேலும் கற்பலகையின் இருபுறத்தின் மேற்பகுதியில் வரலாற்று காலத்திற்கு முந்தைய எகிப்தியர்கள் வழிபட்ட வளைந்த கொம்புடன் கூடிய பசு தேவதையின் சிற்பம் உள்ளது.
நார்மெர் கற்பலகையின் மேற்புறத்தின் இரண்டு பக்ககளிலும் பண்டைய எகிப்தியக் கடவுளான பசு தேவதையின் வளைந்த கொம்புகளுடன் கூடிய உருவங்கள் செதுக்கப்பட்டுள்ளது. இரண்டு பசு தேவதைகளின் உருவங்களின் நடுவில் மன்னர் நார்மெரின் பெயரைக் குறிக்கும் வகையில், இக்கற்பலகையின் இருபுறத்தின் மேற்பகுதிகளில் கெளிறு மீன் மற்றும் உளி சிற்பங்கள் செதுக்கப்பட்டுள்ளது. கற்பலகையின் நடுவில் தெற்கு எகிப்திய மன்னர்கள் அணியும் நீண்ட வெள்ளை நிற மகுடமும் மற்றும் வலது கையில் ஆயுதம் தாங்கிய மன்னர் நார்மெரின் உருவம் உள்ளது. நார்மெர் மன்னரின் வலதுபுறத்தில் ஒரு மனிதன் இடது கையில் மன்னரின் காலணிகளும், வலது கையில் நீர்க்குடுவையும் தாங்கியவாறும் ஒரு உருவம் உள்ளது. நார்மெர் மன்னரின் இடதுபுறத்தில் மண்டியிட்ட நிலையில் உள்ள ஒரு கைதியை மன்னர் அடிக்கும் நிலையில் ஒரு சிற்பம் உள்ளது. மனிதனின் தலைக்கு மேல் வடக்கு எகிப்தை குறிக்கும் பாபிரஸ் காகித்தால் செய்யப்பட்ட 6 நாணல் மலர்களும், ஓரசு கடவுளைக் குறிக்கும் வல்லூறு பறவையின் உருவமும் உள்ளது. இதில் ஓரசு கடவுள் அம்மனிதனின் தலையை தாக்குவதாக உள்ளது. நார்மெர் மன்னரின் காலுக்கு அடியில் நிர்வாண கோலத்தில் இரண்டு மீசையுடைய மனிதர்கள் ஓடும் நிலையில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. அதில் ஓடும் மனிதர்களின் தலைகளுக்கு மேல் இரண்டு படவெழுத்துகள் காணப்படுகிறது. இது நார்மெர் மன்னர் போரில் வென்ற நகரங்களை குறிக்கிறது.
கற்பலகையின் பின்புற பாகத்தின் அடியில் காளை போன்ற உருவத்தின் அடியில் மன்னர் கீழ் எகிப்திய மன்னர்கள் அணியும் சிவப்பு நிற நீண்ட மகுடத்துடன் மன்னர் நார்மெர் கையில் பூனை மற்றும் நெல்லை சூடடிக்கும் கோலுடன் அமர்ந்திருப்பது போன்ற உருவமும் காணப்படுகிறது.
பின்பக்க கற்பலகையின் நடுப்புறத்தில் சண்டையிடும் இரண்டு விலங்குகளின் நீண்ட தலைகள் ஒன்றுடன் ஒன்று பின்னிக்கொண்டும், அதன் தலைகளை பக்கத்திற்கு ஒருவர் நீண்ட கயிற்றால் பிணைத்துக் கொண்டு இருப்பது போன்ற உருவம் செதுக்கப்பட்டுள்ளது. இவ்வுருவம் கீழ் எகிப்து மற்றும் மேல் எகிப்தை மன்னர் நார்மெர் ஒன்றிணைத்ததை காட்டுகிறது. மேலும் இவ்வுருவம் பண்டைய மெசொப்பொத்தேமியாவின் உரூக் பண்பாடு காலத்திய (கிமு 4100 – 3000) நீண்ட கழுத்துகளால் பின்னப்பட்ட விலங்குகளின் வரிசைக் கல்வெட்டுகளுடன் ஒத்துப்போகிறது.
கற்பலகையின் மேற்புறத்திற்கு அடியில் நீண்ட தலைமுடி உடைய ஒரு மன்னரும், மன்னருக்குப் பின்புறம் இருவரும், முன்புறம் ஐவர் விலங்கு உருவங்கள் கொண்ட பதாகைகளுடன் ஊர்வலமாகச் செல்லும் காட்சி செதுக்கப்பட்டுள்ளது. இக்காட்சியின் வலதுபுறத்தில் 10 நபர்கள், ஐவர் ஐவராக தரையில் பிணமாக கிடக்கும் காட்சி செதுக்கப்பட்டுள்ளது. இது போரில் மன்னர் நார்மெர் அடைந்த வெற்றியை நினைவு கூறும் வகையில் உள்ளது. இந்த பிணங்களின் உருவங்களுக்கு மேல் கப்பல், வல்லூறு, குத்தீட்டி போன்ற உருவங்கள் செதுக்கப்பட்டுள்ளது. இவ்வுருங்கள் மன்னர் நார்மெர் போரில் கைப்பற்றிய ஊர்களின் பெயராக இருக்கலாம் எனக்கருதப்படுகிறது.
கற்பலகையில் மேற்புறத்தில் எகிப்தியக் கடவுளான பசு தேவதை நீண்ட வளைந்த கொம்புகளுடன் உள்ளது. பசு தேவதைகளுக்கு நடுவில் மன்னர் நார்மெரின் முதல் வம்சத்தவர்களைக் குறிக்கும் குலக்குறிச் சின்னமான தேள் உருவம் காணப்படுகிறது.
This article uses material from the Wikipedia தமிழ் article நார்மெர் கற்பலகை, which is released under the Creative Commons Attribution-ShareAlike 3.0 license ("CC BY-SA 3.0"); additional terms may apply (view authors). வேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 4.0 இல் கீழ் கிடைக்கும். Images, videos and audio are available under their respective licenses.
®Wikipedia is a registered trademark of the Wiki Foundation, Inc. Wiki தமிழ் (DUHOCTRUNGQUOC.VN) is an independent company and has no affiliation with Wiki Foundation.