சாம் ஹார்முஸ்ஜி பிரேம்ஜி ஜாம்ஷெட்ஜி மானெக்சா (Sam Hormusji Framji Sam Bahadur Jamshedji Manekshaw, ஏப்ரல் 3, 1914 – சூன் 27, 2008) என்னும் முழுப் பெயர் கொண்ட சாம் மானேக்சா நான்கு தலைமுறைகளாக இராணுவத்தில் பணிபுரிந்தவர்.
40 ஆண்டுகால ராணுவ சேவையில் 5 போர்களைச் சந்தித்தவர். இந்திய இராணுவத்தின் எட்டாவது தலைமைத் தளபதியாக இருந்து இந்தியா வழிநடத்திய ஏனைய போர்களில் கலந்து கொண்டவர். இரண்டாம் உலகப்போரிலும், பாகித்தானுடனான போரிலும் இவரின் தலைமையில் இந்தியா போரை எதிர்கொண்டது. பாகிஸ்தானுடனான போரின்போது பிரதமராக இருந்த இந்திரா காந்தியுடன் முரண்பட்டபோதும், போர்க்குணத்துடன் போராடி பாகிஸ்தானைத் தோற்கடித்துச் சரணடையச் செய்தவர். வங்கதேசம் எனும் தனிநாடு உருவாகக் காரணமாகி, இன்றுவரை அந்த நாட்டினரால் தங்களது தேசத்தின் மீட்பராக நினைவுகூரப்படுபவர். இரும்பு மனிதர் என்று போற்றத்தக்க உறுதி படைத்தவர். இந்தியாவின் மிக உயர்ந்த பதவியான பீல்டு மார்ஷல் பதவியை முதலில் பெற்றார். அப்பதவியை அடைந்தவர்கள் இருவரே. மற்றவர் கரியப்பா.
சாம் மானேக்சா | |
---|---|
சாம் மானேக்சா எட்டாவது தலைமைத் தளபதி இந்தியாவின் முதல் பீல்டு மார்ஷல் | |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | அமிர்தசரஸ், பஞ்சாப் | ஏப்ரல் 3, 1914
இறப்பு | சூன் 27, 2008 வெலிங்டன், தமிழ்நாடு | (அகவை 94)
விருதுகள் | பத்ம விபூஷண் பத்ம பூஷண் Military Cross |
கையெழுத்து | |
புனைப்பெயர் | "சாம் பகதூர்" |
Military service | |
பற்றிணைப்பு | வார்ப்புரு:நாட்டுத் தகவல் பிரித்தானிய இந்தியா (1947 வரை) இந்தியா (1947க்குப் பிறகு) |
கிளை/சேவை | இந்திய படை |
சேவை ஆண்டுகள் | 1934–2008 |
தரம் | பீல்டு மார்சல் |
போர்கள்/யுத்தங்கள் | இரண்டாம் உலகப்போர் 1947 இந்திய பாகித்தான் போர் சீன இந்தியப் போர் 1965,இந்திய பாக்கித்தான் போர் வங்க விடுதலைப் போர் 1971 |
பஞ்சாப் மாநிலம், அமிர்தசரஸில் ஏப்ரல் 3, 1914-ல் ஒரு பார்சி குடும்பத்தில் சாம் மானெக்ஷா பிறந்தார் .இவருடைய தந்தை ஹோர்முஸ்ஜி மானெக்சா; தாயார் ஹீராபாய். பள்ளிப் படிப்பு முடிந்ததும் இங்கிலாந்து சென்று மருத்துவம் படிக்க விரும்பினார் மானெக்சா. ஆனால் சிறு வயதாக இருப்பதால் அனுமதி மறுக்கப்பட்டது. இதனால் கோபமடைந்த அவர் டேராடூனில் உள்ள இந்திய ராணுவக் கல்லூரிக்கு விண்ணப்பித்தார். இங்கு படிக்க முதன்முதலாக தேர்ந்தெடுக்கப்பட்ட 40 பேரில் அவரும் ஒருவர். 1934-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் இந்திய ராணுவத்தில் இரண்டாம் லெப்டினென்டாக சேவையைத் துவங்கினார் மானெக்சா.
1942-ம் ஆண்டு பர்மாவில் பணியாற்றியபோது இரண்டாம் உலகப் போர் மூண்டது. ஜப்பானியப் படைகள் மீது நடத்திய எதிர்த் தாக்குதலில் ஏராளமான இந்திய வீரர்கள் மாண்டனர். அப்போது ஒரு போர்முனையைப் பிடிக்க எடுக்கப்பட்ட எதிர் நடவடிக்கையின்போது மானெக்சா மீது இயந்திரத் துப்பாக்கி குண்டுகள் பாய்ந்தன. தனது உடல் வயிறு, உள்ளிட்ட 9 இடங்களில் குண்டு காயம் அடைந்தார். ரங்கூனில் உள்ள ராணுவ மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டுத் தேறினார். இதில் பலத்த காயமடைந்தபோதும், அந்த முனையை மானெக்சா கைப்பற்றினார். அப்போதைய ராணுவத் தளபதி டி.டி.கவன், மானெக்சாவின் உறுதியையும், துணிவையும் பாராட்டி போர்முனையிலேயே 'மிலிட்டரி கிராஸ்' என்ற விருதை அளித்தார். 1942, ஏப்ரல் 23 ஆம் நாள் லண்டன் கெசட் இதழ் இச்செய்தியை வெளியிட்டது.
உடல்நலம் தேறியதும் குவெட்டாவில் உள்ள பணியாளர் கல்லூரிக்கு பயிற்சியாளராக அனுப்பப்பட்டார். பிறகு மீண்டும் பர்மாவில் போர்முனையில் பணியாற்றச் சென்றபோது மீண்டும் குண்டுக் காயம் அடைந்தார். போர் முடிவடையும் தறுவாயில் 10 ஆயிரம் போர்க் கைதிகளின் மறுவாழ்வுக்காக உதவி செய்தார். 1946-ல் ஆஸ்திரேலியாவுக்குச் சுற்றுப்பயணம் செய்து திரும்பினார். இந்தியப் பிரிவினைக்குப் பிறகு இராணுவத்தில் நிர்வாகச் சீர்திருத்தங்களை மேற்கொண்டார். இதனால் 1947- 48-ஆம் ஆண்டு ஜம்மு-காஷ்மீர் நடவடிக்கையில் வெற்றி கிடைத்தது. இதன் பிறகு கர்னலாக பதவி உயர்வு பெற்றார். நாகாலாந்தில் ஏற்பட்ட உள்நாட்டு கிளர்ச்சியை வெற்றிகரமாக முறியடித்தார்.
1969-ம் ஆண்டு ஜூன் 7 ஆம் நாள் சாம் மானெக்சா இந்தியாவின் ராணுவத் தளபதியாகப் பதவியேற்றார். இந்திய ராணுவ வீரர்களை மேலும் மேலும் ஊக்கப்படுத்தி, தன்னம்பிக்கையுடன் போராட வைத்து பாகிஸ்தான் ராணுவத்தை வெறும் 14 நாள்களில் சரணடையச் செய்தார் மானெக்சா. இந்த நடவடிக்கையின் போது 93 ஆயிரம் பாகிஸ்தான் வீரர்கள் மற்றும் சிவிலியன்களை போர்க் கைதிகளாக இந்தியா சிறைபிடித்தது. இந்திய ராணுவ வரலாற்றில் மிகப் பெரிய வெற்றியாகவும், மிக வேகமான ராணுவ வெற்றியாகவும் இது போற்றப்படுகிறது. இதையடுத்து ஏற்பட்ட சிம்லா ஒப்பந்தத்தின் மூலம் வங்கதேசம் உருவாக்கப்பட்டது. சாம் மானெக்சா இந்தியாவின் ராணுவத் தளபதியாக பதவியேற்றார். 1971-ம் ஆண்டு நடைபெற்ற இந்திய-பாகிஸ்தான் போரில் தனது ராணுவத் திறமையைப் பயன்படுத்தியதன் மூலம் இந்தியாவை வெற்றி பெறச்செய்து வங்கதேசம் உருவாகக் காரணமானார்.
ராணுவ சேவையில் இருந்து ஓய்வு பெற்ற பின்னர் தமிழ்நாட்டில், நீலகிரி மாவட்டத்தில் குன்னூரில் உள்ள வெலிங்டன் ராணுவ கன்டோன்மென்டில் தங்கி இருந்தார். 2007 ஆம் ஆண்டு கோகர் அயூப் என்பவர் ஓய்வு பெற்ற முன்னாள் பீல்டு மார்ஷல் மானெக்சாவின் மீது '1965-ல் இந்தியா பாகிஸ்தான் போரின்போது இந்திய ராணுவ ரகசியங்களை 20,000 ருபாய்கு விற்று விட்டதாக வழக்கு தொடர்ந்தார். ஆனால் அவ்வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது. இந்திய ராணுவத்தில் ஒப்பற்ற சேவைகளைச் செய்த பீல்டு மார்ஷல் சாம் மானெக்சா உடல்நிலை மிகவும் மோசமானதைத் தொடர்ந்து 2008, ஜூன் 27-ம் தேதி காலமானார்.
This article uses material from the Wikipedia தமிழ் article சாம் மானேக்சா, which is released under the Creative Commons Attribution-ShareAlike 3.0 license ("CC BY-SA 3.0"); additional terms may apply (view authors). வேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 4.0 இல் கீழ் கிடைக்கும். Images, videos and audio are available under their respective licenses.
®Wikipedia is a registered trademark of the Wiki Foundation, Inc. Wiki தமிழ் (DUHOCTRUNGQUOC.VN) is an independent company and has no affiliation with Wiki Foundation.