பீல்டு மார்ஷல் ஆர்ச்சிபால்ட் பெர்சிவல் வேவல், முதலாம் வேவல் பிரபு (Field Marshal Archibald Percival Wavell, 1st Earl Wavel, மே 5, 1883 – மே 24,1950) பிரித்தானியப் படைத்துறையில் மிக உயர்ந்த தரக்குறிப்பான பீல்டு மார்ஷல் பட்டம் வழங்கப்பட்டுள்ள படைத்துறைத் தலைவர் ஆவார்.
இரண்டாம் உலகப் போரின் போது மத்திய கிழக்கில் படைகளை முன்நடத்திச் சென்றவர்.இத்தாலியப் பேரரசுடன் நடந்தப் போரில் பிரித்தானியப் படைகளின் வெற்றிக்குத் தலைமை ஏற்றவர். இந்தியாவின் கடைசிக்கு முந்தைய வைசிராயாக 1943 முதல் 1947 வரை பணியாற்றியவர்.
பீல்டு மார்ஷல் ரைட் ஆனரபள் வேவல் பிரபு ஜிசிபி, ஜிசிஎஸ்ஐ, ஜிசிஐஈ, சிஎம்ஜி, எம்சி, பிசி | |
---|---|
பீல்டு மார்ஷல் சீருடையில் சர் ஆர்ச்சிபால்டு வேவல் | |
இந்தியாவின் வைசிராயும் தலைமை ஆளுநரும் | |
பதவியில் அக்டோபர் 1, 1943 – பெப்ரவரி 21, 1947 | |
ஆட்சியாளர் | ஜார்ஜ் VI |
பிரதமர் | வின்ஸ்டன் சர்ச்சில் கிளமெண்ட் அட்லீ |
முன்னையவர் | லின்லித்கோ பிரபு |
பின்னவர் | மவுண்ட்பேட்டன் பிரபு |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | கோல்செஸ்டர், எசக்சு, ஐக்கிய இராச்சியம் | 5 மே 1883
இறப்பு | 24 மே 1950 வெஸ்ட்மின்ஸ்டர், இலண்டன், ஐக்கிய இராச்சியம் | (அகவை 67)
உறவுகள் | யூஜெனி மாரி குயிர்க்குடன் திருமணம் புரிந்து ஒரு மகனும் மூன்று மகள்களும் |
விருதுகள் | GCB (4 March 1941) GCSI (Aug/September 1943) GCIE (Aug/September 1943) KCB (2 January 1939) CB (1 January 1935) CMG (1 January 1919) Military Cross Knight Grand Cross of the Order of Orange Nassau (Netherlands) (1943) Order of Stanislas (3rd Class) with Swords (Russia) 1917 Order of El Nahda, 2nd Class (Kingdom of Hejaz) (1920) Croix de Guerre (Commandeur) (France) (1920) Military Cross, 1st Class (Greece) (1942) Military Cross (Czechoslovakia) (1943) K. St. J (1944) |
Military service | |
பற்றிணைப்பு | United Kingdom |
கிளை/சேவை | பிரித்தானியப் படை |
சேவை ஆண்டுகள் | 1901–1943 |
தரம் | பீல்டு மார்ஷல் (இராணுவத்தின் உயரியப் பதவி) |
கட்டளை | 6th Infantry Brigade 2nd Division British Troops Palestine and Trans-Jordan Southern Command Middle East Command GHQ India American-British-Dutch-Australian Command |
போர்கள்/யுத்தங்கள் | Second Boer War First World War:
Arab revolt in Palestine Second World War:
|
வேவல் இங்கிலாந்தின் கோல்செஸ்டரில் பிறந்தபோதும் தமது இளமைக் காலத்தை இந்தியாவிலேயே கழித்தார். அவரது தந்தை ஆர்ச்சிபால்ட் கிரகாம் வேவல் பிரித்தானியப் படைத்துறையில் மேஜர்-ஜெனரலாக அங்கு பணியாற்றி வந்தார். தமது தந்தையின் வழிகாட்டுதலின்படியே பிரித்தானியப் படைத்துறையில் பணியாற்ற முடிவு செய்து ஆக்சுபோர்டிலுள்ள சம்மர் பீல்ட்சு பள்ளியிலும் வின்செஸ்டர் கல்லூரியிலும் படித்து பின்னர் சான்ட்ஹர்ஸ்ட்டில் உள்ள ரோயல் மிலிட்டரி அகாதமியில் சேர்ந்தார்.
ரோயல் மிலிட்டரி அகாதமியில் பட்டம் பெற்றபின்னர் மே 8, 1901இல் பிரித்தானியப் படையில் ஏற்றுக்கொள்ளப்பட்டார். இரண்டாம் போயர் போரில் போரிட்டார். 1903ஆம் ஆண்டு இந்தியாவிற்கு மாற்றப்பட்டு பாசார் பள்ளத்தாக்குச் சண்டையில் பெப்ரவரி 1908இல் போரிட்டார். ஆகத்து 1904இல் லெப்டினன்டாக பதவி உயர்வு பெற்றார். சனவரி 1909இல் தமது படைப்பிரிவிலிருந்து கேம்பர்லே பணியாளர் கல்லூரிக்கு அனுப்பப் பட்டார். 1911இல் உருசிய மொழி கற்பதற்காக இம்பீரியல் உருசியன் அகாதமிக்கு அனுப்பப் பட்டார். ஓராண்டுப் பயிற்சிக்குப் பின்னர் அந்தாண்டின் இறுதியில் தமது படைப்பிரிவிற்குத் திரும்பினார். 1912ஆம் ஆண்டு ஏப்ரலில் போர் அலுவலகத்தில் மூன்றாம் நிலை அதிகாரியாகப் பொறுப்பேற்றார். அதே ஆண்டு சூலையில் இராணுவப் பயிற்சி இயக்குநரகத்திற்கு மாற்றப்பட்டார். மார்ச்சு 1913இல் வேவல் கேப்டனாகப் பதவி உயர்வு பெற்றார்.
முதலாம் உலகப் போரில் பிரான்சிற்கு அனுப்பப் பட்ட வேவல் அங்கு தற்காலிகமாக ஒன்பதாவது காலாட்படையினருக்கு தலைமையேற்று 1915இல் இரண்டாம் ஈப்பிரெசு சண்டையில் தனது இடது கண்ணை இழந்து காயமடைந்தார். மேலும் வேவல் இராணுவ சிலுவை வென்றார். திசம்பரில் உடல்நலம் தேறி படைத்துறையின் பல்வேறு பிரிவுகளில் பல நிலைகளை ஏற்று தலைமையகத்திலிருந்து ஒருங்கிணைப்பு அதிகாரியாகப் பணியாற்றினார்.
சனவரி 1918இல் வெர்சே அரண்மனையிலிருந்து இயங்கிய உச்சப் போர் பேரவையில் நியமிக்கப்பட்ட வேவல் மார்ச்சு 1918இல் எகிப்திய படைப்பிரிவின் கீழ் பாலத்தீனத்தில் நடந்த சண்டையில் பங்கேற்றார்.
முதலாம் உலகப் போர் முடிவுற்ற நிலையில் பிரித்தானியப் படையின் சிக்கன நடவடிக்கை காரணமாக தமது பதவிநிலை குறைக்கப்பட்டும் சில காலம் அரை ஊதியத்திலும் பணியாற்றினார். மார்ச்சு 1932 முதல் அக்டோபர் 1933 வரை மன்னர் ஜார்ஜ் VIக்கு ஏடிசியாகப் பணியாற்றினார். பின்னர் மீண்டும் வேலையின்றி பாதி சம்பளத்தில் பணி புரிந்து வந்தார்.
ஆகத்து, 1937ஆம் ஆண்டு அங்கு எழுந்த அராபிய கலகத்தைத் தொடர்ந்து பாலத்தீனத்திற்கு மாற்றப்பட்டார். சனவரி 1938இல் லெப்டினன்ட் ஜெனரலாக பதவி உயர்வு பெற்றார்.
அதே ஆண்டு ஏப்ரலில் பிரித்தானிய தெற்கு அதிகாரமையத்திற்கு தலைமை அதிகாரியாக நியமிக்கப்பட்டார். சூலை 1939இல் முழுமையான ஜெனரல் மதிப்புடன் மத்திய கிழக்கு அதிகார மையத்திற்கு தலைமையேற்றார். பின்னர், 15 பெப்ரவரி 1940 முதல் கிழக்கு ஆபிரிக்கா, கிரீஸ், பால்கன் பகுதிகளுக்கானப் பொறுப்பும் வழங்கப்பட்டது.
இரண்டாம் உலகப் போரின் போது மத்தியகிழக்கில் தலைமை படையதிகாரியாக இருந்த வேவல் சூன் 1940இல் இத்தாலியப் படைகளுடனான சண்டைகளில் துவக்கத்தில் சிப்பாய்கள் குறைவான காரணத்தால் பின்வாங்கினாலும் கூடுதல் படைப்பிரிவுகள் வந்தபிறகு பின்னர் விரைவாக முன்னேறி கிழக்கு ஆபிரிக்காவிலிருந்து இத்தாலியர்களை வெளியேற்றும் நிலையை எட்டினார். இந்நிலையில் கிரீசில் செருமானியப் படைகள் முன்னேறுவதைத் தடுக்க தமது படைகளை அங்கு அனுப்ப தயக்கம் காட்டினார். பலத்த அழுத்தத்தினால் அவ்வாறு வேவல் அனுப்ப நேர்ந்தது மிகத் தவறான முடிவாக அமைந்தது. கிழக்கு ஆபிரிக்காவில் செருமானியர்களின் துணையுடன் இத்தாலியர்கள் மீண்டும் இழந்த நிலைகளை மீட்டதுடன் கிரீட்டிலும் பிரித்தானியப் படை பெருத்த தோல்வியை அடைந்தது. இந்நிகழ்வினால் பிரித்தானியப் பிரதமர் வின்ஸ்டன் சர்ச்சிலுக்கும் வேவலுக்கும் மனத்தாபம் ஏற்பட்டது. கிரீசைத் தொடர்ந்து அச்சு நாடுகள் ஈராக்கை கைப்பற்ற முயன்றனர். இப்போதும் தமது படையினரை ஈராக்கிற்கு அனுப்ப மறுத்தார். இதையொட்டி இந்திய அதிகாரமையத்தின் தலைவரான கிளாட் ஓச்சின்லெக்கின் படைகளை பாஸ்ராவிற்கு அனுப்ப ஆணையிடப்பட்டது. அப்பானியாவிலுள்ள இந்தியப் படையினரின் வான்தளம் முற்றுகையிடப்பட்ட நிலையில் வேவல் ஒருசிறிய படைப்பிரிவை அங்கு அனுப்பி முற்றுகையைத் தகர்த்தார். மே முடிவில் வேவலின் தலைமையின் கீழ் இந்தியப் படைகளும் வேவலின் படைகளும் ஈராக்கின் பாக்தாதைக் கைப்பற்றின. ஈராக் போர் முடிவிற்கு வந்தநிலையில் மீண்டும் அங்கிருந்த படைகள் இந்தியத் தலைமையகத்தின் கட்டளைக்குக் கீழ் வந்தன.
சர்ச்சில் வேவலை புதுதில்லிக்கும் அங்கிருந்த கிளாட் ஓச்சின்லெக்கை மத்திய கிழக்கிற்கும் இடம் மாற்றினார். வேவல் இந்தியாவிலும் ஈராக்கிலும் உள்ள படைகளுக்கு தலைமை தாங்கினார். திசம்பர் 1941இல் ஐக்கிய இராச்சியத்திற்கு எதிராக சப்பானியர்கள் போர் தொடுத்தனர். பர்மா, மலாயா, டச்சுக் கிழக்கிந்திய பகுதிகள், பிலிப்பைன்சு பகுதிகளை உள்ளடக்கிய அமெரிக்க-பிரித்தானிய-டச்சு-ஆத்திரேலியக் கூட்டுப்படையின் தலைவராக வேவல் பொறுப்பேற்றார்; இருப்பினும் இத்தகைய பரந்த நிலப்பரப்பை காக்கத் தேவையான படைபலம் இன்றி சிங்கப்பூர் மற்றும் பிரித்தானிய மலாயாவை சப்பானியர்கள் கைப்பற்றுவதை தடுக்க இயலாதவராக இருந்தார். சிங்கப்பூரிலிருந்து சாவாவிற்குத் தப்பிப்பதற்காகப் படகு ஒன்றில் ஏறவிருந்த சமயத்தில் தமது பார்வையற்ற இடது கண்ணினால் கவனிக்க இயலாது தடுமாறி கீழே விழுந்து முதுகெலும்புகள் உடைந்தன.
மலாயாவில் அடைந்த தோல்வியை அடுத்து சாவாவிலும் சுமத்ராவிலும் நிலைமை மோசமடைய சாவாவிலிருந்த கூட்டுப்படையின் தலைமையகம் மூடப்பட்டு வேவல் இந்தியா திரும்பினார். பெப்ரவரி 23இல் பர்மாவிலும் பிரித்தானியப் படைகளுக்கு அங்கு மேஜர் ஜெனரலாகப் பணியாற்றிய ஜாக்கி ஸ்மைத்தின் தவறான முடிவினால் பெருத்த பின்னடைவு ஏற்பட்டது. இதனையொட்டி அப்போதிருந்த இந்திய வைசிராய் லின்லித்கொ பிரபு சர்ச்சிலுக்கு முன்னணி படைத் தலைவர்களை விமரிசித்துக் கடிதம் எழுதினார். இதைத் தொடர்ந்து வேவலுக்கு எரால்ட் அலெக்சாண்டரை பர்மா போர்முனைக்கு அனுப்ப கட்டளைப் பிறப்பிக்கப்பட்டது. விரைவில் ஈராக்கிலிருந்து ஓர் தனிப்படை பர்மா கோர் என அனுப்பப்பட்டது. இருப்பினும் சப்பானியர்களை நிறுத்தவியவில்லை. மழைக்காலத்தை ஒட்டி பிரித்தானியப் படைகள் இந்தியா திரும்ப சப்பானியர்களும் தமது முன்னேற்றத்தை நிறுத்தினர்.
சனவரி 1943 ஆண்டில் வேவல் பீல்டு மார்ஷல் என்ற இராணுவத்தின் உயரியப் பட்டம் வழங்கப்பட்டது. 1943ஆம் ஆண்டில் லின்லித்கொ ஓய்வுபெற்றபோது, சர்ச்சிலுடன் நல்லுறவு இல்லாதபோதும், வேவல் இந்திய வைசிராயாக அறிவிக்கப்பட்டார். 1943இல் அவருக்கு வைகௌன்ட் என்ற சிறப்புப் பட்டமும் வழங்கப்பட்டது.
பதவியேற்ற சில நாட்களிலேயே வங்காளப் பஞ்சத்தை எதிர்கொண்டு நிவாரணப் பொருட்களையும் அரிசியையும் வழங்க இராணுவத்தைப் பயன்படுத்தினார்.
துவக்கத்தில் இந்திய அரசியல்வாதிகளுடன் புகழ் பெற்றிருந்தாலும் விடுதலை பெற்ற பிறகான நாட்டின் அமைப்பு குறித்தும் விடுதலை அறிவிப்புக் குறித்தும் எழுந்த அழுத்தங்களாலும் சர்ச்சிலிடமிருந்து தகுந்த ஆதரவு கிடைக்காததாலும் மிகுந்த விமரிசனத்திற்கு ஆளானார். உலகப் போர் முடிவடைந்தநிலையில் இந்தியர்களின் எதிர்பார்ப்பை சந்திக்க இயலாமல் இருந்தார். இந்திய அரசியல் இயக்கங்களுக்கிடையேயான கருத்து மோதல்கள் சமயச் சண்டைகளுக்கு வழி வகுத்தது. 1947ஆம் ஆண்டில் வேவலின் திறமையில் அப்போதைய பிரதமர் அட்லீயின் நம்பிக்கையை இழந்து லூயி மவுண்ட்பேட்டனை இந்திய வைசிராயாக நியமித்தார்.
This article uses material from the Wikipedia தமிழ் article ஆர்ச்சிபால்ட் வேவல், which is released under the Creative Commons Attribution-ShareAlike 3.0 license ("CC BY-SA 3.0"); additional terms may apply (view authors). வேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 4.0 இல் கீழ் கிடைக்கும். Images, videos and audio are available under their respective licenses.
®Wikipedia is a registered trademark of the Wiki Foundation, Inc. Wiki தமிழ் (DUHOCTRUNGQUOC.VN) is an independent company and has no affiliation with Wiki Foundation.