மீசைய முறுக்கு(Meesaya Murukku)ஒரு இந்திய தமிழ் மொழித் திரைப்படம் ஆகும்.
இத்திரைப்படம் 2017 ஆம் ஆண்டில் வெளிவந்த இசைப்பின்னணி கொண்ட காதல் திரைப்படம் ஆகும். இப்படத்தை கிப்கொப் தமிழா ஆதி இயக்கியுள்ளார். இயக்குநராக இவருக்கு இது முதல் திரைப்படமாகும். மேலும் இவர் ஆத்மிகாவுக்கு இணையாக முன்னணி கதாபாத்திரமாக நடிக்கவும் செய்துள்ளார். இத்திரைப்படத்தில் விவேக் மற்றும் விஜயலெட்சுமி துணை கதாபாத்திரங்களாக நடித்துள்ளனர். இத்திரைப்படம் ஆதியின் சொந்தக் கதையைப் பின்னணியாகக் கொண்டு எடுக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. இத்திரைப்படம் 21 சூலை 2017 இல் திரைக்கு வந்து நேர்மறையான விமர்சனங்களைப் பெற்று வசூல்ரீதியாக நல்ல வெற்றியைப் பெற்றுள்ளது.
மீசைய முறுக்கு | |
---|---|
இயக்கம் | கிப்கொப் தமிழாஆதி |
தயாரிப்பு | சுந்தர் சி குஷ்பு (வழங்குபவர்) |
கதை | கிப்கொப் தமிழா |
கதைசொல்லி | கிப்கொப் தமிழா |
இசை | கிப்கொப் தமிழா |
நடிப்பு | கிப்கொப் தமிழா விவேக் ஆத்மிகா |
ஒளிப்பதிவு | உ. கே. செந்தில் குமார் கிருத்தி வாசன் |
படத்தொகுப்பு | ஃபென்னி ஒலிவர் |
கலையகம் | அவ்னி மூவீஸ் |
விநியோகம் | ராக்போர்ட் என்டர்டெய்ன்மென்ட் |
வெளியீடு | 21 சூலை 2017 |
ஓட்டம் | 136 நிமிடங்கள் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
கோயம்புத்தூரைச் சார்ந்த ஆதி மற்றும் ஜீவா ஆகியோர் குழந்தைப் பருவத்திலிருந்து நெருங்கிய நண்பர்கள். ஆதியின் தந்தை இராமச்சந்திரன் ஆதியின் இசையார்வத்திற்கு ஆதரவளிப்பவராக உள்ளார். ஆதி பொறியியல் கல்லூரியில் சேர்ந்து பயிலும் போது அவரது கல்லூரித் தோழி நிலாவைக் (பள்ளியிலிருந்தே குழந்தைப் பருவ நட்பிலிருந்தவர்) காதலிக்கிறார். நிலா செல்வச்செழிப்பான குடும்பத்தில் பிறந்து வளர்ந்தவர். அவரது பெற்றோர் காதலுக்கு எதிரான மனப்பான்மை கொண்டோராவர். ஆதியின் பெற்றோரிடம் சென்று தம் மகளுடன் ஆதி பழகுவதை எதிர்த்து மிரட்டிவிட்டு வருகின்றனர். கல்லூரிப் படிப்பை முடித்த பிறகு நிலாவின் பெற்றோர்கள் அவளை ஆதியைச் சந்திப்பதைத் தவிர்ப்பதற்காக அறையில் வைத்து பூட்டி வீட்டுக் காவலில் வைக்கின்றனர்.
ஆதி தனது தமிழ் ராப் இசைப் பாடல்களுக்காக கல்லூரியில் மிகவும் பிரபலமாகிறார். அவர் யூடியூபில் கிப்கொப் தமிழா என்ற பெயரில் ஒரு பக்கத்தை சொந்தமாகத் தொடங்குகிறார். பட்டப்படிப்பு முடிந்த பிறகு, சென்னைக்குச் சென்று தனித்த இசையமைப்பாளராக வரவேண்டும் என்ற தனது ஆசையைத் தனது தந்தையிடம் தெரிவிக்கிறார். ஆதியின் தந்தை இதற்கு எதிர்ப்பு தெரிவிக்க, தனக்கு ஓராண்டு காலம் அவகாசம் அளிக்குமாறும் அவ்வாறு தன்னால் வெற்றி பெற இயலாவிட்டால் தான் திரும்பி வந்து விடுவதாகவும் தெரிவித்து தந்தையை சமாதானம் செய்கிறார். ஆதி சென்னையை அடைந்து வாய்ப்புகளுக்காக கடினமாக முயற்சி செய்கிறார். ஆனால், எல்லாம் வீணாகிறது. ஓராண்டு முடிந்த பிறகு கோவை திரும்ப முயற்சிக்கும் போது, கடைசி நாளில், ஆதி வானொலி தொகுப்பாளர் மா கா பா ஆனந்தைச் சந்திக்கிறார். பண்பலை வானொலி நிலையமான ரேடியோ மிர்ச்சி அவருக்கு ”கிளப்புல மப்புல” என்ற பாடலைப் பாடுவதற்கான வாய்ப்பை வழங்குகிறது. இதைத் தொடர்ந்து ஆதி கோவை திரும்புகிறார்.
ஆதியின் தந்தையின் விருப்பத்தின் பேரில் ஆதி முதுகலை வணிக மேலாண்மை படிப்பிற்கு சென்னையில் விண்ணப்பிக்கிறார். திடீரென, ஆதி "கிளப்புல மப்புல" பாடல் சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பரவுவதை அறிகிறார். ஆதியின் நம்பிக்கை புத்துயிர் பெறுகிறது. ஆதி இசைத்துறையில் தனது வாய்ப்பைத் தேடும் முயற்சியைத் தொடரப் போவதாகவும், அதே நேரத்தில் தனது முதுகலைப் பட்டத்தை முடித்து விடுவதாகவும் உறுதியளித்து சென்னை கிளம்புகிறார்.
நிலாவின் பெற்றோர் நிலாவின் திருமணத்தை உறுதி செய்ததை அறிந்து ஆதி அதிர்ச்சி அடைகிறார். ஆதி நிலாவைச் சந்தித்து இன்னும் ஓராண்டு மட்டும் தனக்காகக் காத்திருக்கும்படி வேண்டுகிறார். இதற்கு நிலா ஏற்கெனவே தான் ஓராண்டு காலம் காத்திருந்து விட்டதாகவம், இனியும், தன்னால் காத்திருக்க இயலாதென்றும் தெரிவிக்கிறார். ஆதி மனமொடிந்து சென்னையை விட்டுத் திரும்புகிறார். நிலா தனது பெற்றோரின் விருப்பப்படி மணம் முடிக்கிறார். அதே நேரத்தில், ஆதி கிப்கொப் இசையில் புகழ்பெற்ற ஆளுமையாகிறார்.
ஆகத்து 2013 இல் ஆதி கிப்கோப் தமிழா ஒரு முழுநீளத் திரைப்படம் தயாரிப்பதற்கு தனது கதையை ஒரு ஆரம்பப்புள்ளியாக பயன்படுத்திக் கொள்ள ஒப்பந்தம் ஒன்றில் கையொப்பமிட்டார். இதனடிப்படையில் உருவாக உள்ள திரைப்படம் 2014 ஆம் ஆண்டின் மத்தியில் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்பட்டது. இதுவரை வேண்டப்படாத திரைக்கதையை இயக்குவதற்கு தகுந்ததொரு இயக்குநரையும் தேடியதாகக் கூறியுள்ளார். ஒரு சுருக்கமான எந்தவித முன்னேற்றமும் இல்லாத நிலைக்குப் பிறகு, அக்டோபர் 2016 இல், 90–வினாடி விளம்பரப்படம் ஒன்று கிப்கொப் தமிழாவின் யூடியூப் அலைவரிசையில் வெளியிடப்பட்டது இத்திரைப்படமானது "மீசைய முறுக்கு" என்று பெயரிடப்பட்டுள்ளதாகவும், என். ராமசாமி மற்றும் ஹேமா ருக்மணி ஆகியோரால் தேனாண்டாள் ஸ்டுடியோ நிறுவனத்தால் தயாரிக்கப்படுவதாக செய்தி வெளியானது. ஜல்லிக்கட்டு குறித்த ஆதியின் டக்கரு டக்கரு பாடலால் ஈர்க்கப்பட்ட தேனாண்டாள் நிறுவனத்தார் ஆதி கதையை விவரித்த விதத்தைப் பார்த்து அவரையே கதாநாயகனாக நடிக்கக் கேட்டுக் கொண்டு ஐந்து நிமிட நேரத்தில் ஆதியின் கனவு நனவாக பச்சைக்கொடி காட்டினர். படம் முழுக்க வருகின்ற கதையின் முன்னணி கதாபாத்திரமாக நடிப்பதையும் தவிர்த்து, ஆதி இத்திரைப்படத்தின் எழுத்தையும், இயக்கத்தையும் கவனித்துக் கொண்டார். மேலும், அவர் இத்திரைப்படத்திற்கு இசை மற்றும் பாடல் வரிகள் எழுதுவது போன்ற பணிகளிலும் ஈடுபட்டார். செய்தியாளர் சந்திப்பில் சுந்தர் சி இத்திரைப்படத்தின் வெளியீட்டிற்கு முன் இத்திரைப்படம் ஆதியின் வாழ்க்கையின் ஒரு பகுதியைக் கூறும் படம் என்பதையும் உறுதிப்படுத்தினார். இத்திரைப்படத்தின் தலைப்பானது ஆதியின் தந்தை ஆதியிடம் அடிக்கடி பேசக்கூடிய "தோற்றாலும், ஜெயித்தாலும், மீசைய முறுக்கு" என்ற வசனத்தில் இருந்து வருவிக்கப்பட்டது.
This article uses material from the Wikipedia தமிழ் article மீசைய முறுக்கு (2017 திரைப்படம்), which is released under the Creative Commons Attribution-ShareAlike 3.0 license ("CC BY-SA 3.0"); additional terms may apply (view authors). வேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 4.0 இல் கீழ் கிடைக்கும். Images, videos and audio are available under their respective licenses.
®Wikipedia is a registered trademark of the Wiki Foundation, Inc. Wiki தமிழ் (DUHOCTRUNGQUOC.VN) is an independent company and has no affiliation with Wiki Foundation.