சிரியா பில்கோன்கர் (Shriya Pilgaonkar, பிறப்பு 25 ஏப்ரல் 1989 ) என்பவர் ஒரு இந்திய நடிகை, இயக்குநர், தயாரிப்பாளர் ஆவார்.
இவர் முதன்மையாக இந்தி திரைப்படங்கள் மற்றும் இணைய நிகழ்ச்சிகளில் பணியாற்றிவருகிறார். நடிகர் சச்சின் மற்றும் சுப்ரியா பில்கோங்கருக்குப் பிறந்த இவர், மராத்தி திரைப்படமான எகுல்டி ஏக் (2013) மூலம் நடிகையாக அறிமுகமானார். அப்படத்தில் நடித்ததற்காக இவர் மகாராட்டிர அரசு திரைப்பட விருதுகளில் சிறந்த அறிமுக நடிகைக்கான விருதை பெற்றார்.
பான் (2016) என்ற இந்தி திரைப்படத்தில் அறிமுகமான பிறகு, பில்கோன்கர் மிர்சாபூர் (2018), கில்ட்டி மைண்ட்ஸ், தி ப்ரோக்கன் நியூஸ் (2022), தாசா கபார் (2023) போன்ற வெற்றிகரமான வலைத் தொடர்களில் பணியாற்றி தன்னை நிலைநிறுத்திக் கொண்டார். கில்டி மைண்ட்ஸ் வலைத் தொடரில் நடித்ததற்காக இவர், பிலிம்பேர் ஓ.டி.டி விருதுகளில் நாடகத் தொடர்களில் சிறந்த நடிகைக்கான பரிந்துரையைப் பெற்றார். இது தவிர, இவர் பல்வேறு வலை தொடர்களில் நடித்துள்ளார். மேலும் அவற்றில் சிலவற்றை இயக்கியுள்ளார்.
பில்கோன்கர் 25 ஏப்ரல் 1989 அன்று மும்பையில் பிறந்தார். இவர் பிரபல நடிகர்களான சச்சின் மற்றும் சுப்ரியா பில்கோங்கருக்கு ஒரே குழந்தை ஆவார். இவர் தன் குழந்தை பருவத்தில் தொழில்முறை நீச்சல் வீராங்கனையாக பயிற்சி பெற்றார். மேலும் பள்ளியில் படிக்கும் காலத்தில் பல பதக்கங்களைப் பெற்றார். பில்கோன்கர், சிறுமியாக இருந்தபோது சப்பானிய மொழி வகுப்புகளுக்குச் சென்றார். தான் வளர்ந்த பிறகும் மொழிபெயர்ப்பாளராகவோ அல்லது மொழியியலாளராகவோ ஆகலாம் என்று விரும்பினார். பின்னர் வேறு திசையில் செல்ல முடிவு செய்த பில்கோன்கர் மும்பையில் உள்ள செயின்ட் சேவியர் கல்லூரியில் சமூகவியலில் இளங்கலை பட்டப்படிப்பை முடித்தார். பில்கோங்கர் சிறுவயதில் கதக் கற்றுக்கொண்டார்.
பில்கோன்கர் தன் ஐந்து வயதில், முதன்முதலில் து தூ மைன் மெயின் என்ற இந்தி தொலைக்காட்சித் தொடரில் பிட்டு என்ற சிறுவன் பாத்திரத்தில் நடித்தார். பில்கோன்கர் 2012 இல் கரண் செட்டியின் ஃப்ரீடம் ஆஃப் லவ் என்ற 10 நிமிட குறும்படத்தில் நடித்ததன் மூலம் திரையில் அறிமுகமானார். இந்த நாடகத்தில், இவர் நடித்தார், பாடினார், நடனமாடினார்.
பில்கோன்கர் 2013 ஆம் ஆண்டு மராத்தி திரைப்படமான எகுல்டி ஏக் மூலம் பெரிய திரைக்கு அறிமுகமானார். படத்தில் இவர் ஸ்வரா என்ற கதாபாத்திரத்தில் நடித்தார். அந்தத் திரைப்படத்தை எழுதி, இயக்கி, தயாரித்த இவரது தந்தை (சச்சின் பில்கோன்கர்) இவருக்கு ஸ்வரா என்ற பாத்திரத்தை வழங்கினார். பில்கோன்கர் கூறுகையில், "என் தாயார் உட்பட பல திறமைசாலிகளை அறிமுகப்படுத்திய பெருமை அவருக்கு உண்டு என்றார். அவர் எனக்கு பட வாய்ப்பை தந்தபோது, நான் அந்த உதவியை விரும்பவில்லை. ஆனால் அவர் "காரணமின்றி வளங்களை முதலீடு செய்ய நான் முட்டாள் அல்ல." என்று என்னை அமைதிப்படுத்தினார். இந்த திரைப்படம் இவருக்கு சிறந்த அறிமுக நடிகைக்கான மகாராட்டிர அரசு திரைப்பட விருது உட்பட பல விருதுகளைப் பெற்றுத் தந்தது. தி டைம்ஸ் ஆஃப் இந்தியாவின் விமர்சகர், "அவரது (சச்சின் பில்கோன்கர்) மகள் சிரியாவுக்கு இது சரியான தொடக்கமாகும், மேலும் அவர் பார்வையாளர்களை ஏமாற்றவில்லை" என்று கூறினார்.
எகுல்டி ஏக்கில் நடித்த இவரது பாத்திரத்தைத் தொடர்ந்து, இவர் இண்டர்னல் அபையர்ஸ் அண்ட் காமன் பீபிள் ஆகிய நாடகங்களில் நடித்தார். பின்னர் இவர் ஆஸ்கார் விருது பெற்ற இயக்குனர் கிளாட் லெலோச் இயக்கிய பிரஞ்சு திரைப்படமான Un plus une இல் பணியாற்றினார். இப்படத்தில், அவர் இந்திய நடனக் கலைஞரும் நடிகையான அயன்னா என்ற பாத்திரத்தில் நடித்தார்.
பில்கோன்கர் 2016 ஆம் ஆண்டு பான் திரைப்படத்தின் வழியாக பாலிவுட்டில் அறிமுகமானார். மனீஷ் ஷர்மா படத்தில் அந்தப் பாத்திரத்துக்கு 750 பெண்களில் இருந்து பில்கோன்கரை தேர்ந்தெடுத்தார். மேலும் இவர் சாருக் கானுடன் ஒரு பாத்திரத்தை ஏற்றதை ஒரு பெரிய திருப்புமுனையாக கருதினார். இப்படத்தில் அவர் தில்லியை சேர்ந்த நேஹா என்ற அழைப்பு மைய பெண்ணாகவும், கௌரவின் தோழியாகவும் நடித்துள்ளார். பான் படத்தின் வெளியீட்டுக்குப் பிறகு பிறகு, பில்கோன்கர் மிகுந்த வரவேற்ப்பைப் பெற்றார்.
This article uses material from the Wikipedia தமிழ் article சிரியா பில்கோன்கர், which is released under the Creative Commons Attribution-ShareAlike 3.0 license ("CC BY-SA 3.0"); additional terms may apply (view authors). வேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 4.0 இல் கீழ் கிடைக்கும். Images, videos and audio are available under their respective licenses.
®Wikipedia is a registered trademark of the Wiki Foundation, Inc. Wiki தமிழ் (DUHOCTRUNGQUOC.VN) is an independent company and has no affiliation with Wiki Foundation.