இஸ்லாமிய வரலாறு என்பது உலக முஸ்லிம்களின் வரலாற்றைக் குறிக்கும்.
இக்கட்டுரையைச் சரிபார்ப்பதற்காக மேலதிக மேற்கோள்கள் தேவைப்படுகின்றன. |
இஸ்லாமிய வரலாற்றின் பல்வேறு காலகட்டங்களைப்பற்றிய ஆய்விற்கு "இஸ்லாமிய உலகு" மற்றும் "இஸ்லாமிய சமுகம் அல்லது உம்மாஹ்" ஆகிய கருதுகோள்கள் பற்றிய புரிதல் பயனுள்ளதாகும். இஸ்லாமிய உலகு என்பது தனியே முஸ்லிம்களை மாத்திரம் குறிக்கவில்லை. மாறாக இதர சமயங்களை பின்பற்றுவோரும் அதில் உள்ளடங்கியிருந்தனர். எனினும் இஸ்லாமிய உம்மாஹ் என்பது முஸ்லிம்களை மட்டுமே குறிக்கின்றது.
இஸ்லாமிய வரலாற்றைப் பொருத்தமட்டில், அது முஹமது நபியால் அறிவிக்கப்பட்ட நாள் முதல் வளர்ச்சியையே கண்டுள்ளது. முஹம்மது நபியின் வாழ்நாளிலேயே அது அராபியத் தீபகற்பம் முழுவதும் பரவியது. இது தவிர மற்றப் பகுதிகளிலும் இஸ்லாம் பரவத் தொடங்கியது. முஹம்மது நபிக்கு பிறகு வந்த ராசிதுன் கலிபாக்கள், உமய்யா கலிபாக்கள், அப்பாசிய கலிபாக்கள், உதுமானிய பேரரசு மற்றும் பல இசுலாமியப் பேரரசுகளின் காரணமாக இஸ்லாம் உலகின் அனைத்து பகுதிகளிலும் பரவியது. முஹம்மது நபியின் மரணத்திலிருந்து மூன்று நூற்றாண்டுகளின் பிற்பாடு மேற்கே அட்லான்திக் சமுத்திரம் தொடங்கி கிழக்கே மத்திய ஆசியா வரையான நிலப்பரப்பு இஸ்லாமிய பேரரசின் ஆட்சியின் கீழ் வந்தது. அத்துடன் இசுலாமிய நாகரிகம் உலகின் கலாச்சார விஞ்ஞான வளர்ச்சிக்கு பங்களிப்புச் செலுத்தியதோடு பல விஞ்ஞானிகளையும் வானியலளர்களையும் கணித மேதைகளையும் மருத்துவர்களையும் தத்துவவியளாளர்களையும் உலகிற்கு தந்தது. மேலும் இசுலாமிய உலகில் தொழினுட்பம், பொருளாதார உட்கட்டமைப்பு என்பனவும் சிறந்து விளங்கின. குர்ஆனை ஓதுதல் ஒரு முக்கிய விடயமாக இருந்ததன் காரணமாக உயர் எழுத்தறிவுவீதம் இஸ்லாமிய உலகில் காணப்பட்டது.
இக்காலப்பகுதி இஸ்லாத்தின் பொற்காலம் என வரலாற்றில் குறிக்கப்படுகிறது. மத்திய காலத்தின் பிற்பகுதியில் மொங்கோலிய படையெடுப்பினாலும் கறுப்புச் சாவு என்று வரலாற்றில் அறியப்படும் தொற்று நோய் பரவலினால் ஏற்பட்ட உயிரிழப்புகளினாலும் பாரசீகம் முதல் எகிப்து வரை பரவியிருந்த இஸ்லாமிய சாம்ராஜ்ஜியம் நலிவடைந்தது. இதனை தொடர்ந்தே துருக்கிய உதுமானிய பேரரசின் எழுச்சி ஆரம்பமானது. எனினும் 18ம் 19ம் நூற்றாண்டுகளில் பல இஸ்லாமிய சாம்ராஜ்ஜியத்தின் நிலப்பரப்புக்கள் ஐரோப்பிய வல்லரசுகளின் ஆதிக்கத்தின் கீழ் வந்தன. மேலும் முதலாம் உலகப்போரின் பின்னர் உதுமானிய பேரரசின் பகுதிகள் செவ்ரெஸ்ச்ச் ஒப்பந்தத்தின் பிரகாரம் பல நாடுகளாக பிரிக்கப்பட்டன. இதைத் தொடர்ந்து இஸ்லாமிய சாம்ராஜ்ஜியம் 1924ம் ஆண்டு முடிவுக்கு வந்தது. 20ம் நூற்றாண்டில் இசுலாமிய உலகை கம்யூனிசம் போன்ற பல்வேறுபட்ட சித்தாந்தங்கள் ஆட்கொண்டிருந்தபோதும் 21ம் நூற்றாண்டின் ஆரம்பத்திலிருந்து முஸ்லிம் உலகின் அரசியல் விடயங்களில் இஸ்லாம் முக்கியமான பாத்திரத்தை வகிக்க ஆரம்பித்திருக்கிறது.
பேராசிரியர் மஜீத் கத்தூரியின் கருத்துப்படி முஸ்லிம்களின் அரசாங்க முறையும் இஸ்லாமிய அரசும் பல கட்டங்களாக வளர்ச்சியடைந்தது . இக்கட்டங்கள் பின்வரும் காலக்கோட்டினால் காட்டப்படுகிறது:
இசுலாத்திற்கு முந்தைய அரேபியா என்பது 630ம் ஆண்டில் இசுலாம் தோன்றுவதற்கு முற்பட்ட காலப்பகுதியைக் குறிக்கும். மத்தியகால அரேபியாவில் வர்த்தக சமயரீதியில் முக்கிய இடமாக விளங்கிய ஹிஜாஸிற்கு தெற்கேயுள்ள பகுதிகளில் குறைஷி என்ற அரபுக் குலம் அதிகாரமிக்கதாய் விளங்கியது. இக்குலமே மக்காவிலுள்ள அக்காலத்தில் முக்கியமான புனிதத்தலமாக விளங்கிய கஃபாவினை நிருவகித்தனர். முகம்மது நபி குறைஷிக்குலத்தில் பனூ ஹாஷிம் கோத்திரத்தில் பிறந்தார் .
முகம்மது நபிக்கு 610ம் ஆண்டிலிருந்து குர்ஆன் இறங்க ஆரம்பித்த போதும் இசுலாத்தின் எழுச்சி முஸ்லிம்கள் மக்காவிலிருந்து மதீனா எனும் நகருக்கு குடிபெயர்ந்ததிலிருந்தே ஆரம்பமானது. இந்த நிகழ்வு வரலாற்றில் ஹிஜ்ரா என்று அழைக்கப்படுகிறது. இசுலாமிய வரலாற்றின் இந்நிகழ்வின் முக்கியத்துவம் காரணமாக இசுலாமிய நாட்காட்டி ஹிஜ்ரி ஆண்டை மையமாக வைத்தே உருவாக்கப்பட்டது. மக்காவில் முகம்மது நபி இசுலாமிய அரசிற்கான அடித்தளத்தை இட்டதன் பிற்பாடு 628ம் ஆண்டிலே மக்கா குறைஷியர்களுக்கும் மதீனா முஸ்லிம்களுக்கும் ஹுதைபியா உடன்படிக்கை எனும் யுத்த நிறுத்த ஒப்பந்தம் கைச்சாத்தானது. இதன் காரணமாக பத்து வருடங்களுக்கு இருதரப்பாருக்குமிடயே சமாதானம் நிலவியது. எனினும் குறைஷிகளும் அவர்களோடு கூட்டணி வைத்திருந்த பக்ர் கோத்திரமும் முஸ்லிம்களோடு கூட்டணி வைத்திருந்த குஷாஹ் கோத்திரத்தின் மீது தாக்குதல் நடத்தியதன் காரணமாக இவ்வொப்பந்தம் முறிவடைந்தது. இதைத்தொடர்ந்து 630ம் ஆண்டிலே மக்கா முஸ்லிம்களால் வெற்றி கொள்ளப்பட்டது. 632ம் ஆண்டு முகம்மது நபி மரணமடைந்தார்.
முகம்மது நபியின் மரணத்தைத் தொடர்ந்து இசுலாமிய அரசு பல கலீபாக்களால் ஆட்சி செய்யப்பட்டது: அபூபக்ர் சித்தீக் (632-634), உமர் இப்னு கத்தாப் (1ம் உமர், 634-644), உதுமான் இப்னு அப்வான் (644-656), அலி இப்னு அபீதாலிப் (656-661). சுன்னி முஸ்லிம்கள் இந்நால்வரையும் நேர்வழிநின்ற கலீபாக்கள் என்று பொருள்படும் "கலீபதுர் ராஷிதூன்" என்று அழைக்கின்றனர். இவர்களின் காலப்பகுதியிலேயே பாரசீகம், எகிப்து, மத்திய கிழக்கு நாடுகள் மற்றும் வட ஆபிரிக்க நாடுகள் என்பன கைப்பற்றப்பட்டன. மேலும் கலீபா உதுமான் இப்னு அப்வானினால் 650ற்கும் 656ற்கும் இடைப்பட்ட காலப்பகுதிகளில் குர்ஆன் முழுமையான புத்தகவடிவில் தொகுக்கப்பட்டது. பின்பு அதன் பிரதிகள் விரிவடைந்து செல்லும் இசுலாமிய சாம்ராஜ்ஜியத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் அனுப்பப்பட்டது . எனினும் இசுலாமிய சாம்ராஜ்ஜியதில் ஏற்பட்ட பிரிவினைகள் இறுதி இரு ராஷிதூன் கலீபாக்களும் கொலை செய்யப்பட காரணமானது. இதில் கலீபா உதுமானின் கொலையை தொடர்ந்து அலீயின் ஆட்சியுரிமை தொடர்பான பிணக்கு இசுலாமிய வரலாற்றில் முதலாம் பித்னா என்று அழைக்கப்படும் உள்நாட்டுப் போரிற்கு வழிகோலியது. கலீபா அலீயின் மரணத்துடன் ராஷிதூன் கலீபாக்களின் காலப்பகுதி முடிவுக்கு வந்தது. இதைத் தொடர்ந்து 1ம் முஆவியா ஆட்சிபீடமேறினார் . இதிலிருந்து உமைய்யாக்களின் ஆட்சி ஆரம்பமானது.
நகர அரசுகள் மற்றும் பேரரசுகள் காலப்பகுதி |
---|
666ம் ஆண்டு அப்துர் ரஹ்மான் இப்னு அபூபக்கரின் மரணத்தை தொடர்ந்து உமையா கலீபா முதலாம் முஆவியா இசுலாமிய கிலாபத்தின் அதிகாரத்தை உமையாக்களின் கீழ் கொண்டுவந்தார் . "உமையா" என்ற பெயர் முதலாம் உமையா கலீபாவின் முப்பாட்டனாரான உமையா இப்னு அப்துஷ் ஷம்ஸ் என்பவரது பெயரிலிருந்து தோன்றியது. உமையாப் பரம்பரையின் தொடக்கம் மக்காவாக இருந்தபோதிலும் திமிஷ்கு உமையா கிலாபத்தின் தலைநகராக விளங்கியது. உமையாக்கள் இசுலாத்தினை அரபிகளுக்கு மட்டுமே உரித்தான ஒரு சமயமாகவே கருதினர். அரபியல்லாத ஒருவர் இசுலாம் மதத்தை தழுவ வேண்டுமெனில் அந்நபர் முதலில் ஏதாவதொரு அரபுச் சமூகத்தின் உறுப்பினராய் சேர வேண்டியிருந்தது. மவாலி என்றழைக்கப்பட்ட அரபியல்லாத முஸ்லிம்கள் உமையாக்களின் காலத்தில் அரபு முஸ்லிம்களுக்குச் சமமாக சமூக பொருளாதார தகுதியைப் பெற்றிருக்கவில்லை.
உமையாக்கள் உச்ச கட்டத்திலிருந்த போது ஐந்து மில்லியன் சதுர மைல்களுக்குக் கூடிய நிலப்பரப்பு அவர்களது ஆட்சியின் கீழிருந்தது. உமையாக்களின் ஆட்சி அப்பாசியர்களின் வெற்றியோடு முடிவுக்கு வந்தது. இதன் பிற்பாடு உமையாக்கள் வட ஆபிரிக்காவினூடாக அந்தலூசுக்குத் தப்பிச் சென்று அங்கிருந்தவாறு குர்துபா கலீபகத்தை நிலைநாட்டினார்கள்.
முகம்மது நபி இறந்தபொழுது அவரது ஆட்சியின் கீழ் மொத்த அரேபிய தீபகற்பமும் இருந்தது. அதற்கு அவருக்கு பிறகு அதை ஆளுவதற்கு அபூபக்கர் எனபவர் நியமிக்கப்பட்டார். இவருக்கு பிறகு உமர், உசுமான் மற்றும் அலீ ஆகியோர் ஆட்சி செய்தனர். இவர்கள் நால்வரும் ரசூத்தீன் கலிபாக்கள் என அழைக்கப்படுகின்றனர்.இவர்களுக்கு பிறகு உமய்யா கலிபாக்கள் மற்றும் அப்பாசிய கலிபாக்கள் ஆகியோர் இசுலாமிய பேரரசை உலகில் விரிவுப்படுத்தினர். இவர்களின் ஆட்சியின் கீழ் அரேபிய தீபகர்ப்பம், வடக்கு மற்றும் வடமேற்கு ஆப்பிரிக்கா, மத்திய ஆசியா, ஆப்கானிசுத்தான், சிந்து மற்றும் போர்ச்சுக்கல், எசுப்பானியா ஆகிய பகுதிகள் வந்தன. இந்த பகுதிகளில் எல்லாம் இசுலாம் வேகமாக பரவியது. குறிப்பாக அப்பாசிய கலிபாக்கள் ஆட்சிகாலம் 'இசுலாமின் பொற்காலம்' என அழைக்கப்படுகின்றது. இந்த காலத்தில் இசுலாம் கலை மற்றும் அறிவியல் ஆகிய துறைகளிலும் செழித்து வளர்ந்தது. துருக்கியின் ஒட்டாமன் பேரரசின் எழுச்சிக்குப்பிறகு பிறகு, கலிபாக்கள் ஆட்சி முடிவுக்கு வந்தது.
முஆவிய டமஸ்கஸை அழகானதொரு நகரமாக மாற்றினார். மேலும் இசுலாமிய பேரரசின் எல்லைகளை ஒரு கட்டத்தில் கொன்ஸ்தாந்திநோபிள் வரைக்கும் விரிவுபடுத்தினார். எனினும் அனடோலியாவை அண்டியிருந்த பகுதிகளை அவரால் தொடர்ந்தும் தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்க முடியவில்லை. சுன்னி முஸ்லிம்கள் இவரை உள்நாட்டு யுத்ததினை தொடர்ந்து ஏற்பட்ட குழப்பநிலையிலிருந்து முஸ்லிம் தேசத்தினை மீட்டெடுத்து அதன் இஸ்திரத்தன்மைக்கு உதவியவராக கருதியபோதும் சீயா முஸ்லிம்கள் இவரால்தான் அப்போர் ஆரம்பித்ததாக குற்றஞ்சாட்டுகின்றனர். அத்தோடு தனது அதிகாரத்தை தக்கவைப்பதற்காக பல விடயங்களை இட்டுக்கட்டியதாகவும் நபியின் குடும்பத்தவர் பற்றி தவறாக கதை பரப்பியதாகவும் தன்னை எதிர்த்தவர்களை பைசாந்தியப் பேரரசில் அடிமையாக விற்றதாகவும் முஆவியாமீது சீயாக்கள் குற்றம் சுமத்துகின்றனர் . முஆவியாவினை பொறுத்தவரை மகன் யஸீதை அவரைத் தொடர்ந்து ஆட்சியாளராக பிரகடனம் செய்தது மிகவும் சர்ச்சைக்குரிய ஒரு விடயமாக பார்க்கப்படுகிறது.
முஆவியாவினை தொடர்ந்து ஆட்சிபீடமேறிய யஸீதின் காலப்பகுதியிலே முஸ்லிம்கள் பல பின்னடைவுகளை சந்தித்தனர். 682ம் ஆண்டில் யஸீத் உக்பா இப்னு நபியை வட ஆபிரிக்காவின் ஆளுநராக நியமித்தார். உக்பா பெர்பர் இனத்தவர்களுடனும் பைசாந்தியர்களுடனான பல யுத்தங்களை வெற்றி கொண்ட போதும் உக்பாவும் அவரது படையினரும் பிஸ்க்ரா என்ற இடத்தில் கைஸலா தலைமையிலான பெர்பெர் படையினால் பதுங்கியிருந்து நடத்தப் பட்ட தாக்குதலில் கொல்லப்பட்டனர். இதைத்தொடர்ந்து பெர்பெர்கள் முஸ்லிம் படையினரை வட ஆபிரிக்காவிலிருந்து விரட்டியடித்தனர் . மேலும் உமையாக்கள் கடலில் தங்களுக்கிருந்த ஆதிக்கத்தையும் இழந்தனர். இதன் காரணமாக ரொட்ஸ் மற்றும் க்ரீட் தீவுகளையும் கைவிட வேண்டியேற்பட்டது.
இரண்டாம் முஆவியாவின் காலப்பகுதி உள்நாட்டுப் போர்களின் காரணமாக மிகவும் குழப்பம் நிறைந்ததாக காணப்பட்டது. எனினும் இக்குழப்பங்கள் நன்கு படித்த ஆளுமையுள்ளவராக விளங்கிய அப்துல் மலிக் இப்னு மர்வான் ஆட்சியாளராக பொறுப்பேற்றதை தொடர்ந்து பெரிதும் குறைவடைந்தது. அத்துடன் இவரது காலப்பகுதியிலே முக்கியமான ஆவணங்களனைத்தும் அரபு மொழிக்கு மொழிமாற்றம் செய்யப்பட்டன. மேலும் முழு முஸ்லிம் உலகிற்கும் ஒரு நாணய அலகை அறிமுகப்படுத்தினார். இதன் காரணமாக 692ம் ஆண்டு பைசாந்தியப் பேரரசனான இரண்டாம் யஸ்டினியன் முஸ்லிம்கள் மீது போர் தொடுத்தான். செபஸ்டொபொலிஸ் யுத்தம் என்றழைக்கப்படும் இந்தப் போரில் அப்துல் மலிக் இப்னு மர்வானின் படைகள் பைசாந்தியர்களை தோற்கடித்தன. இதன் பிற்பாடு நாணய அலகு முஸ்லிம் உலகின் பிரத்தியேகமான நாணய அலகாக உபயோகிக்கப்பட்டு வந்தது. அப்துல் மலிக் முஸ்லிம் உலகின் ஆட்சியை இஸ்திரப்படுத்தியதல்லாமல் விவசாயம் மற்றும் வர்த்தகம் என்பவற்றிலும் சீர்திருத்தத்தை கொண்டு வந்தார். அத்தோடு அரபு மொழியை அரச கரும மொழியாக்கினார். மேலும் கிரமமான தபால் சேவையும் இவரால் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
இரண்டாம் வலீத் எகிப்து மற்றும் பைசாந்தியப் பேரரசுகளின் பகுதிகளை மீளவும் கைப்பற்றியதோடு வட ஆபிரிக்காவின் மேற்குப்பகுதி மற்றும் கார்தேஜ் ஆகிய நிலப்பரப்புகளையும் தனது கட்டுப்பாட்டில் கொண்டு வந்தார். மேலும் தாரிக் இப்னு சியாத் தலைமையிலான முஸ்லிம் இராணுவம் ஜிப்ரொல்டர் நீரிணையை கடந்து ஸ்பெயினை கைப்பற்ற ஆரம்பித்தது. ஸ்பெயினின் விஸ்கொத் இன ஆட்சியாளர்கள் லிஸ்பன் நகரத்தின் வீழ்ச்சியுடன் முற்றுமுழுதாக முஸ்லிம்களால் தோற்கடிக்கப்பட்டனர். இதேவேளை முகம்மது இப்னு காஸிம் தலைமையிலான முஸ்லிம் படை இந்துகுஷ் வரையிலான கீழைத்தேய நாடுகளை வெற்றிகொண்டது. இதன் மூலம் அல் வலீத் காலப்பிரிவில் இசுலாமிய கிலாபத் மேற்கே ஸ்பெயின் முதல் கிழக்கே இந்தியா வரை வியாபித்திருந்தது. அல்ஹஜ்ஜாஜ் இப்னு யூசுப் படைத்தலைவர்களை தெரிவு செய்வதிலும் அவர்களை வழிநடத்துவதிலும் மிகப் பெரிய பங்காற்றினார். அல்-வலீத் கட்டுக்கோப்பானதொரு இராணுவத்தை விஸ்தரிப்பதிலும் உமைய்யாக் காலப்பிரிவிலேயே மிகவும் வலிமை பொருந்தியதொரு கப்பற் படையை உருவாக்குவதிலும் மிகவும் கவனம் செலுத்தினார். இவ்வாறான காரணங்களே அவரது கிலாபத் ஸ்பெயின் வரை விரிவடைய உதவின. அல் வலீதின் காலப்பிரிவு இசுலாமிய சாம்ராஜ்ஜியத்தின் உச்சமாக கருதப்படுகிறது.
சிலுவைப்போர்கள் எனப்படுவது ஐரோப்பிய கிறித்துவ மன்னர்களுக்கும், சலாத்தீன் போன்ற இசுலாமிய மன்னர்களுக்கும் இடையில் ஏற்பட்ட தொடர் போர்களை குறிக்கும். 9ம் நூற்றாண்டுவாக்கில் ஐரோப்பிய படைகள் இசுலாமியர்களின் வசம் இருந்த செருசலேம் நகரை கைப்பற்ற தொடர்ந்து பல படையெடுப்புகளை நடத்தினர். இந்த போர்களின் காரணமாக செருசலேம் நகர், கிறித்தவர் மற்றும் இசுலாமியர் கைகளில் மாறிமாறி வந்தது. இசுலாமிய வரலாற்றில் மிக முக்கியமான இந்த போர்களின் இறுதியில் செருசலேம் நகரம் இசுலாமியர்களின் கைகளிலேயே வந்தது.
அப்பாசிய கலிபாக்களின் இறுதி காலத்தில் எழுச்சி பெற்ற துருக்கியர்கள், அவர்களின் அநேக பகுதிகளை கைப்பற்றினர். இதன் பிறகு இசுலாம் மதத்தை ஏற்ற அவர்கள், 'ஒட்டாமன் பேரரசு' என்ற பேரரசை ஏற்படுத்தினர். தங்களையும் கலிபாக்கள் என அழைத்துக்கொண்ட இவர்களின் ஆட்சியில் இசுலாம் மிக வேகமாக பரவியது. இவர்களின் ஆட்சி முதலாம் உலக யுத்தம் வரை தொடர்ந்தது.
அதே சமயம் 16ம் நூற்றாண்டு வாக்கில் பாரசீக பகுதிகளில் சியா இசுலாம் பிரிவை சேர்ந்த சா மன்னர்களால் சியா பேரரசு தோற்றுவிக்கப்பட்டது. இந்த பேரரசு சுமார் இரண்டு நூற்றாண்டுகள் வரை பாரசீக பகுதிகளில் கோலோச்சியது. இதே போல இந்தியாவில் துருக்கிய - மங்கோலிய இனத்தை சேர்ந்த பாபர் என்பவரால் மொகலாய பேரரசு நிறுவப்பட்டது. 18ம் நூற்றாண்டு வரை தொடர்ந்த இந்த பேரரசு, ஆங்கிலேய காலணி ஆதிக்கத்தின் காரணமாக முடிவுக்கு வந்தது. இது தவிர பல சிறிய மற்றும் குறுகிய கால இசுலாமிய அரசுகள் இந்த பகுதிகளில் ஆட்சியை அமைத்தன. மேற்கூரிய இந்த இசுலாமிய பேரரசுகள் காரணமாக தெற்காசிய பகுதிகளில் இசுலாம் மதம் பரவியது. இந்த பேரரசுகளால் மட்டும் அன்றி வியாபாரிகள் மற்றும் போதகர்கள் மூலமாகவும் இசுலாம் மதம் பரவியது.
இரண்டாம் உலக யுத்தத்தின் பிறகு, பல புதிய நாடுகள் உதயமாகின. அவ்வாறு உருவான ஒரு நாடே இசுரேல் ஆகும். இது பிரித்தானியப் பேரரசின் ஒரு பகுதியான பாலஸ்தீனத்தில் அமைக்கப்பட்டது. யூதர்களுக்காக அமைக்கப்பட்ட இந்த நாட்டினால், பூர்வீக பாலஸ்தீனியர்களின் நாடாளும் உரிமை பறிபோனது. இதன் காரணமாக பாலசுத்தீனீய விடுதலை இயக்கங்கள் தோன்றின. யாசர் அராபத் போன்றவர்கள் தலைமையில் தோன்றிய இந்த இயக்கங்கள் பின்னாளில் நடைபெற்ற இஸ்ரேலிய ராணுவ தாக்குதல், மற்றும் அல்-அக்சா மசூதி நெருப்பிடப்பட்டது காரணமாக தீவிரவாத இயக்கங்களாக மாறின. மேலும் ஈராக் - குவைத் போரின் காரணமாக சவூதி அரேபியா நாட்டில் முகாமிட்ட அமெரிக்க ராணுவ படைகள், அங்கேயே நிரந்தரமாக தங்கியதன் காரணமாகவும், இசுரேல் நாட்டை அமெரிக்கா ஆதரித்து வருவதன் காரணமாகவும் இசுலாமியர்களில் பெரும்பாலோர் அமெரிக்கா மற்றும் மேலை நாடுகளை வெறுக்கத் தொடங்கினர். இதன் காரணமாகவும் அல்-கொய்தா போன்ற தீவிரவாத இயக்கங்கள் தோன்றின. இந்த இயக்கங்களின் காரணமாக இசுலாம் ஒரு தீவிரவாத மதம் போன்ற தோற்றம் பெற்றது. இருப்பினும் ஆசிய-ஆப்பிரிக்க நாட்டு இசுலாமியர்களின் வியாபார பெயர்வு காரணமாக, புதிய பகுதிகளிலும் இசுலாம் பரவுகின்றது. இதைத் தவிர பொருளாதார மற்றும் கல்வியின் பொருட்டு புலம்பெயரும் இசுலாமியர்களின் காரணமாக மற்ற மேற்கத்திய நாடுகளிலும் இசுலாம் மதம் பரவுகின்றது.
தற்போது 2020ல் உலகில் ஏறக்குறைய 200 கோடி மக்கள் இசுலாமிய மதத்தை பின்பற்றுகின்றனர். மொத்த உலக நாடுகளில் 50 நாடுகளில் இசுலாமியர்கள் பெரும்பான்மையாக வசிக்கின்றனர். மொத்த மக்கள் தொகையில் 20 % முசுலிம்கள் அரபு நாடுகளில் வசிக்கின்றனர். கண்டங்கள் வரிசையில் ஆசிய கண்டத்தில் அதிக இசுலாமியர்கள் வசிக்கின்றனர். மேலும் இதுவே உலகின் இரண்டாவது பெரிய மதமாக இருக்கின்றது.
மசூதிகள் எனப்படுவது இசுலாமியர்கள் பிரார்த்தனை நடத்துவதற்காக கட்டப்படும் கட்டிடங்கள் ஆகும். இவை அனைத்தும் சவூதி அரேபியா நாட்டில் உள்ள மெக்கா நகரில் கட்டப்பட்டுள்ள புனித காபாவை நோக்கியே கட்டப்படுகின்றன. இவை பிரார்த்தனை நடத்துவதற்காக மட்டும் அன்றி மக்கள் சந்தித்து தங்கள் பொது பிரச்சனைகளை பேசுவதற்ககும், இசுலாமிய கல்வியை கற்பதற்கும் உதவுகின்றன. ஏழாம் நூற்றாண்டு வரை பொதுவாக அரேபிய பாணியில் மட்டும் கட்டப்பட்டுவந்த மசூதிகள், இன்றைய நாட்களில் மற்ற கலாச்சார அமைப்புகளிலும் கட்டப்படுகின்றன.
இசுலாமிய நாள்காட்டி சந்திரனை மையமாக வைத்து கணக்கிடப்படுகின்றது. உமர் (ரலி) காலத்தில்தான் இசுலாமிய நாள்காட்டி முறை அறிமுகப்படுத்தப்பட்டது. கி.பி 622ம் ஆண்டு மக்காவிலிருந்து மதீனா நகருக்கு முகம்மது நபி(சல்) தப்பி சென்ற நிகழ்ச்சி 'ஹிஜ்ரத்' என அழைக்கப்படுகின்றது. இந்த நாளில் இருந்தே இசுலாமிய வருடங்கள் கணக்கிடப்படுகின்றன. இதை முன்னிட்டே இசுலாமிய வருடங்கள் 'ஹிஜ்ரி' என அழைக்கப்படுகின்றன. 30 வருட சுற்றுமுறையை அடிப்படையாக கொண்ட இசுலாமிய வருட முறை, 354 நாட்களை கொண்ட பத்தொன்பது சாதாரண வருடங்களையும், 355 நாட்களை கொண்ட பதினொன்று லீப் ஆண்டுகளையும் கொண்டது. இசுலாமிய பண்டிகைகள் அனைத்துமே, இசுலாமிய ஹிஜ்ரி முறையையே பின்பற்றி கொண்டாடப்படுகின்றன. இசுலாமியர்களின் முக்கியமான பண்டிகைகளான தியாகப்பெருநாள் (பக்ரித் பண்டிகை - ஈத் உல் அள்ஹா) மற்றும் நோன்பு பெருநாள் (ரமலான் பண்டிகை - ஈத் உல் ஃபித்ர்) ஆகியவை முறையே துல்ஹஜ் 10ம் நாளும், ஷவ்வால் முதல் நாளும் (ரமலான் கடைசி) கொண்டாடப்படுகின்றது.
This article uses material from the Wikipedia தமிழ் article இசுலாமிய வரலாறு, which is released under the Creative Commons Attribution-ShareAlike 3.0 license ("CC BY-SA 3.0"); additional terms may apply (view authors). வேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 4.0 இல் கீழ் கிடைக்கும். Images, videos and audio are available under their respective licenses.
®Wikipedia is a registered trademark of the Wiki Foundation, Inc. Wiki தமிழ் (DUHOCTRUNGQUOC.VN) is an independent company and has no affiliation with Wiki Foundation.