மைசூர் டி.
சௌடையா (ஆங்கில மொழி: Mysore T. Chowdiah) (1895 - 19 சனவரி 1967) எனப் பிரபலமாக அறியப்படும் திருமாகூடலு சௌடையா இந்தியா கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த ஒரு கருநாடக இசை வயலின் வாத்தியக் கலைஞராவார். ஏழு தந்திகள் கொண்ட வயலினை அறிமுகப்படுத்தி அதனை பாடகர்களுக்குப் பக்கவாத்தியமாக வாசித்ததுடன் தனி வயலின் கச்சேரிகளும் செய்தவர்.
மைசூர் டி. சௌடையா | |
---|---|
பின்னணித் தகவல்கள் | |
இயற்பெயர் | திருமாகூடலு சௌடையா |
பிறப்பு | 1895 |
பிறப்பிடம் | திருமாகூடலு, மைசூர், இந்தியா |
இறப்பு | 1967 (அகவை 71–72) |
இசை வடிவங்கள் | கருநாடக இசை |
தொழில்(கள்) | வயலின் வாத்தியக்கலைஞர் |
இசைத்துறையில் | 1910 - 1967 |
குறிப்பிடத்தக்க இசைக்கருவிகள் | |
ஏழு தந்தி வயலினை உருவாக்கி பயன்படுத்தியவர் |
திருமாகூடலு என்ற கிராமத்தில் அகஸ்திய கௌடா, சுந்தரம்மா தம்பதியருக்கு மகனாகப் பிறந்தார். இவரது தாயார் சுந்தரம்மா ஒரு இசைவாணி.
சிறு வயதிலேயே பள்ளிப்படிப்பைத் துறந்த சௌடையா, முதலில் தனது தாயாரிடம் இசை பயில ஆரம்பித்தார்.
பின்னர் முறையாக சங்கீதம் கற்றுக்கொள்வதற்காக இவரது மாமன் மைசூர் அரண்மனையில் பாடகராக இருந்த பிதரம் கிருஷ்ணப்பா என்பவரிடம் குருகுலவாச முறைப்படி மாணாக்கராகச் சேர்த்துவிட்டார்.
சௌடையா வயலின் வாத்தியத்தில் பயிற்சி பெற்றார். சுமார் 20 ஆண்டுகள் கடுமையான பயிற்சி தொடர்ந்தது. மாணாக்கர் என்ற நிலையிலிருந்து கிருஷ்ணப்பாவின் கச்சேரிகளுக்கு பக்க வாத்தியம் வாசிப்பவர் என்ற நிலைக்கு முன்னேறினார்.
இருபதாம் நூற்றாண்டின் இரண்டாவது, மூன்றாவது பத்தாண்டு காலங்களில் கருநாடக இசை மக்கள் மத்தியில் பிரபலமடைந்திருந்தது. ஆனால் அக்காலகட்டத்தில் ஒலிபெருக்கிகள் இருக்கவில்லை. அதனால், கூட்டத்தின் கடைசி வரிசையில் இருப்பவர்களுக்கும் கேட்கக்கூடியதாக, பாடகர்கள் தமது குரலை உயர்த்திப் பாடுவார்கள். ஆனால் வயலினில் ஒரே அளவு ஒலியைத்தான் எழுப்பமுடியும்.
இதனைப்பற்றி சிந்தித்த சௌடையா, இந்தக் குறையை நிவர்த்தி செய்ய, ஒரு தொழிலாளியின் உதவியோடு ஏழு தந்திகள் கொண்ட ஒரு வயலினை உருவாக்கினார். இதன் ஒலி சாதாரண வயலினைவிட அதிக தூரம் பரவக்கூடியதாக இருந்தது.
இப்படியான அசாதாரணமான ஒரு வாத்தியத்தை கருநாடக இசையில் பயன்படுத்த வழிவகை செய்யவேண்டும். அதற்கான திறனையும் சௌடையா வளர்த்துக்கொண்டார். மைசூர் அரசவையில் ஆஸ்தான வித்துவானாக இருந்த சேஷண்ணா என்பவர் இந்தப் புதுமையான வாத்தியத்தை மிகவும் மெச்சினார்.
ஆனாலும் சில வித்துவான்கள் இந்த வயலின் மிகக் கூடுதலான ஒலி எழுப்புவதாகக் கூறி அதனைக் கச்சேரிகளில் பயன்படுத்துவதை ஆட்சேபித்தனர். ஜி. என். பாலசுப்பிரமணியம் சௌடையாவை சவுண்டையா (Sound-iah) எனவும் வீணை தனம்மாள் குடும்பத்தினர் செவிடையா எனவும் நகைச்சுவையாக கிண்டல் செய்தனர். செம்பை வைத்தியநாத பாகவதர் மட்டும் எவ்வித மறுப்புமின்றி தனக்கு பக்கவாத்தியமாக ஏழு தந்தி வயலினை ஏற்றுக்கொண்டார். (செம்பை வைத்தியநாத பாகவதர் நாதசுவரத்தையே பக்கவாத்தியமாக வைத்து இசைக்கச்சேரி செய்தவர் என்பது ஈண்டுக் குறிப்பிடத்தக்கது.)
மறுப்புகளை புறம்தள்ளி சௌடையா தனது ஏழு தந்தி வயலினை தொடர்ந்து பயன்படுத்தினார். காலக்கிரமத்தில் தனது திறமையினால் எல்லா வித்துவான்களுக்கும் ஏற்ற வகையில் அதனை வாசித்து பாராட்டு பெற்றார்.
பல ஆண்டுகள் தொடர்ந்து தனித்தும், பக்கவாத்தியமாகவும் வயலின் வாசித்து வந்தார். செம்பை வைத்தியநாத பாகவதர், அரியக்குடி இராமானுஜ ஐயங்கார், ஆலத்தூர் சகோதரர்கள், ஜி. என். பாலசுப்பிரமணியம், முசிரி சுப்பிரமணிய ஐயர், செம்மங்குடி சீனிவாச ஐயர், மதுரை மணி ஐயர் போன்ற பிரபல பாடகர்களுக்கு பக்கவாத்தியமாக வயலின் வாசித்துள்ளார்.
இவரோடு பிரபல தாள வாத்தியக் கலைஞர்களான புதுக்கோட்டை தட்சணாமூர்த்திப் பிள்ளை, பாலக்காடு டி. எஸ். மணி ஐயர், பழனி சுப்பிரமணிய பிள்ளை போன்றோர் உடன் வாசித்துள்ளார்கள்.
மைசூரிலும் பெங்களூரிலும் ஐயனார் இசைக்கல்லூரி என்ற இசைக் கல்லூரிகளைத் தொடங்கி பல மாணவர்களைப் பயிற்றுவித்தார்.
வி. சேதுராமையா, ஆர். கே. வெங்கடராம சாஸ்திரி, மைசூர் வி. ராமரத்தினம், கண்டதேவி அழகிரிசாமி, சி. ஆர். மணி ஆகியோர் குறிப்பிடத்தக்க மாணாக்கர்கள்.
சௌடையா நினைவாக பெங்களூருவில் ஒரு மண்டபம் கட்டப்பட்டுள்ளது. வயலின் வடிவில் கட்டப்பட்டுள்ள இம்மண்டபம் நவீன வசதிகளுடன் 1045 இருக்கைகள் கொண்டதாக அமைக்கப்பட்டுள்ளது.
This article uses material from the Wikipedia தமிழ் article மைசூர் டி. சௌடையா, which is released under the Creative Commons Attribution-ShareAlike 3.0 license ("CC BY-SA 3.0"); additional terms may apply (view authors). வேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 4.0 இல் கீழ் கிடைக்கும். Images, videos and audio are available under their respective licenses.
®Wikipedia is a registered trademark of the Wiki Foundation, Inc. Wiki தமிழ் (DUHOCTRUNGQUOC.VN) is an independent company and has no affiliation with Wiki Foundation.