பசுபதி முத்திரை (Pashupati Seal) மொகெஞ்சதாரோ தொல்லியல் களத்தில் கண்டெடுக்கப்பட்ட சிந்து வெளி நாகரீக காலத்தியதாகும்.
பசுபதி முத்திரையானது சோப்புக்கல்லில் வடிக்கப்பட்டது. காண்டாமிருகம், யானை, காளை, மான், புலி போன்ற விலங்குகளால் சூழப்பட்டும், பத்மாசனத்தில் யோக நிலையில் அமர்ந்திருப்பவர் தலையில் காளையின் கொம்புகள் மற்றும் திரிசூலம் பொறித்த முத்திரையை பசுபதி சிற்பம் என்பர்.
மொகெஞ்சதாரோ தொல்லியல் களத்தின் தெற்குப் பகுதியின் தொகுதி எண் 1ல், 1928 - 1929ல் அகழ்வாய்வு செய்த போது கண்டெடுத்த 420 தொல்பொருட்களில், கிமு 2350 - 2000க்கும் இடைப்பட்ட காலத்திய பசுபதி முத்திரையும் ஒன்றாகும்.
3.5 செமீ உயரம், 3.56 செமீ அகலம் மற்றும் .076 செமீ நீள, அகலம், தடிமனுடன் கூடிய சோப்புக்கல்லிலான சிந்து வெளி எழுத்துக்களுடன், காண்டாமிருகம், யானை,காளை, மான், புலி முதலிய விலங்குகள் சூழ, கால்களை மடித்து அமர்ந்த நிலையில், தலையில் திரிசூலம் போன்ற காளையின் கொம்புகளுடன் கூடிய ஒரு யோகின் உருவம் பொறித்த முத்திரை கண்டெடுக்கப்பட்டது.
இந்தியத் தொல்லியல் ஆய்வகத்தின் தலைமை இயக்குனராக் இருந்த, தொல்லியல் ஆய்வாளர் ஜான் மார்ஷல், சிந்து வெளி நாகரீகம் இருந்த பகுதிகளை அகழாய்வு செய்தவர். அகழாய்வில் கிடைத்த பசுபதி முத்திரையை மனித குல படைப்பாற்றலின் சின்னமாக குறிக்கப்படும் இலிங்கமாக கருதினார்.
இவர் பசுபதி முத்திரையை பகுப்பாய்வு செய்து, அதில் உள்ள யோக நிலையில் அமர்ந்த உருவம் வேதகாலத்திற்கு முந்தைய பண்டைய இந்திய மக்கள் வணங்கிப் போற்றிய, தற்கால சிவபெருமானின் முந்தையத் தோற்றமான உருத்திரன் என்று பகுப்பாய்வு செய்துள்ளார்.
பசுபதி முத்திரை சிவனை குறிக்கும் என்பதற்கான எனது நான்கு காரணங்கள். இம்முத்திரையில் ஐந்து முகங்கொண்ட சிவனின் மூன்று முகங்கள் வெளிப்படையாகத் தெரிகிறது.. இரண்டாவதாக தலையில் காளையின் கொம்புகள் மற்றும் சிவனுக்குரிய சிறப்புச் சின்னமான திரிசூலமும் உள்ளது. மூன்றாவதாக இம்முத்திரையில் அமர்ந்த நிலையில் உள்ள தோற்றம் ஒரு குறிப்பிட்ட யோக நிலையில் அமர்ந்திருக்கும் மகாயோகியான சிவனை நினைவுப்படுத்துகிறது. நான்காவதாக யோகியைச் சுற்றிலும் உள்ள விலங்குகள், பசுபதி எனும் சீவராசிகளின் தலைவரான சிவபெருமானை நினைவுப்படுத்துகிறது.
பின்னர், 1931 ஆம் ஆண்டில் ஜான் மார்சல், பசுபதி முத்திரை சீவராசிகளின் படைப்பிற்கு மூலகாரணமாக உருவகப்படுத்தும் இலிங்கத்துடன் தொடர்புடையது என்பதை தெளிவுபடுத்தினார்.
பசுபதி முத்திரை குறித்து பல்வேறு கலந்துரையாடல்கள் நடைபெற்றது. அறிஞர்களிடையே, ஜான் மார்ஷலின் பசுபதி முத்திரை குறித்த பகுப்பாய்விற்கு ஆதரவுகளும், விமர்சனங்களும், எதிர்ப்புகளும் எழுந்தது. டோரிஸ் மெத் சிறீனிவாசன் என்பவர், ஜெர்மானிய இந்தியவியல் அறிஞர் ஜான் மார்ஷலின் பசுபதி முத்திரைக் குறித்த கூற்றை ஆதாரங்களுடன் மறுத்துள்ளார்.மேலும் ஹெர்பர்ட் சுல்லிவான் மற்றும் ஆல்ப் ஹில்டெபிடெல் ஆகியோர் ஜான் மார்ஷலில் கூற்றை ஆதாரங்களுடன் மறுத்துள்ளனர்.
இருப்பினும், காளையை வாகனமாகக் கொண்ட ஆதிசிவனைக் குறிக்கும் முத்திரையே பசுபதி முத்திரை என முடிந்த முடிபாக அறிஞர்கள் ஏற்றுள்ளனர். இந்த பசுபதி முத்திரையை வேதகால தேவதைகளும், முனிவர்களுமான உருத்திரன், அக்கினி, மகிசாசூரன், கலைக்கோட்டு முனிவர் மற்றும் யோகிகளுடன் தொடர்புறுத்தி நோக்கப்படுகிறது. மேலும் ஆரியர் அல்லாத தெய்வங்களுடனும் தொடர்புறுத்தப்படுகிறது.
2002 ஆம் ஆண்டில் கிரிகோரி எல். போஸ்சல் எனும் தொல்லியல் அறிஞர் பசுபதி முத்திரையை மூக்கொம்பு விலங்குடன் இணைத்துப் பேசுகிறார். மேலும் இம்முத்திரையின் தோற்றம் ஒரு சமயச்சடங்கு ஒன்றின் போது காணப்படுவது என்றும் கருதுகிறார்.
This article uses material from the Wikipedia தமிழ் article பசுபதி முத்திரை, which is released under the Creative Commons Attribution-ShareAlike 3.0 license ("CC BY-SA 3.0"); additional terms may apply (view authors). வேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 4.0 இல் கீழ் கிடைக்கும். Images, videos and audio are available under their respective licenses.
®Wikipedia is a registered trademark of the Wiki Foundation, Inc. Wiki தமிழ் (DUHOCTRUNGQUOC.VN) is an independent company and has no affiliation with Wiki Foundation.