சாமுவேல் பெப்பீசு (Samuel Pepys) என்பவர் இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த ஒரு கடற்படை நிர்வாகியாவார்.
ஆங்கிலேய நாடாளுமன்றத்தில் ஓர் உறுப்பினராகவும் இவர் இருந்துள்ளார். 1633 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 23 ஆம் தேதியன்று பெப்பீசு பிறந்தார். 1660-1669 காலப்பகுதியில் ஓர் இளைஞராக பெப்பீசு தொகுத்து வந்த நாட்குறிப்பு புகழ் பெற்ற ஒரு படைப்பாகும். கடற் பயணப் பட்டறிவு ஏதுமில்லை என்றாலும் பெப்பீசின் தலைமைப் பண்பு, விடாமுயற்சி, நிர்வாகத் திறமை உள்ளிட்ட காரணங்களால் இங்கிலாந்தின் அரசர்கள் இரண்டாம் சார்லசு மற்றும் இரண்டாம் யேம்சு இருவரது ஆட்சியிலும் கடற்படையின் தலைமை நிர்வாகியாக பதவி வகிக்கும் நிலைக்கு உயர்ந்தார். இராயல் கடற்படையின் ஆரம்பகால தொழில்மயமாக்கல் நிர்வாகத்தில் இவரது செல்வாக்கும சீர்திருத்தங்களும் முக்கியமானவையாகும்.
சாமுவேல் பெப்பீசு Samuel Pepys | |
---|---|
ஜே. ஹேல்ஸ் (J. Hayls) வரைந்த சாமுவேல் பெப்பீசுவின் படம் . எழுதுகிழி் (canvas) எண்ணெய் நிறப்படம் 1666. | |
பிறப்பு | இலண்டன், இங்கிலாந்து | 23 பெப்ரவரி 1633
இறப்பு | 26 மே 1703 கிளாஃவம், இங்கிலாந்து | (அகவை 70)
கல்லறை | செயிண்ட்டு ஆலேவ் ஆர்ட்டு தெரு, லண்டன், இங்கிலாந்து |
பணி | கடற்படை நிர்வாகி மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் |
அறியப்படுவது | தனிநபர் நாட்குறிப்பு |
சமயம் | ஆங்கிலிக்கன் |
வாழ்க்கைத் துணை | எலிசபெத் செயின்ட்டு மிழ்சேல் |
1660 ஆம் ஆண்டு முதல் 1669 ஆம் ஆண்டு வரை பெப்பீசு தொகுத்து வைத்திருந்த விரிவான நாட்குறிப்பு 19 ஆம் நூற்றாண்டில் முதன்முதலில் வெளியிடப்பட்டது. ஆங்கில மறுசீரமைப்பு காலத்திற்கான மிக முக்கியமான முதன்மை ஆதாரங்களில் இதுவும் ஒன்றாகும். 1665, 1666 ஆம் ஆண்டுகளில் இலண்டனில் ஏற்பட்ட பிளேக் பெரும் தொற்று நோய், இரண்டாம் ஆங்கிலேய-டச்சு போர் மற்றும் இலண்டன் பெரும் தீ விபத்து போன்ற பெரிய நிகழ்வுகளின் தனிப்பட்ட வெளிப்பாடு மற்றும் நேரில் கண்ட சாட்சியமாக இந்நாட்குறிப்பு திகழ்கிறது.
இலண்டன் நகரத்தின் பிளீட்டு தெருவிலுள்ள சாலிசுபெரி குடியிருப்பு வளாகத்தில் 1633 ஆம் ஆண்டு பெப்பீசு பிறந்தார். தையல் தொழிலாளியான யான் பெப்பீசும் வொயிட் சேப்பல் மாவட்டத்தைச் சேர்ந்த இறைச்சிக் கடைக்காரரின் மகளான மார்க்கரெட்டும் இவரது பெற்றோர்களாவர். இவரது பெரிய மாமா தால்போட்டு பெப்பீசு 1625 ஆம் ஆண்டு கேம்பிரிட்ச்சிற்கான நீதிபதியாகவும் சிறிது காலம் நாடாளுமன்ற உறுப்பினராகவும் இருந்தவராவார். இவரது தந்தையின் சித்தி மகன் சர் ரிச்சர்ட் பெப்பீசு 1640 ஆம் ஆண்டில் சட்பரிக்கு நாடாளுமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டவராவார்.
பதினொரு குழந்தைகள் கொண்ட குடும்பத்தில் ஐந்தாவது குழந்தையாக பெப்பீசு இருந்தார். ஆனால் குழந்தை இறப்பு அதிகமாக இருந்த காலமென்பதால் குடும்பத்தில் உயிர் பிழைத்த குழந்தைகள் பட்டியலில் மிகப் பெரியவர் ஆனார். 1633 ஆம் ஆண்டு மார்ச்சு மாதம் 3 ஆம் தேதியன்று செயின்ட் பிரைட்சு தேவாலயத்தில் இவருக்கு திருமுழுக்கு செய்து வைக்கப்பட்டது. பெப்பீசு தனது குழந்தை பருவத்தை முழுவதுமாக இலண்டனில் கழிக்கவில்லை. சிறிது காலம் நகரின் வடக்கே இருக்கும் கிங்சுலேண்டில் செவிலியர் குடி லாரன்சுடன் வாழ்வதற்காக அனுப்பப்பட்டார். 1646-1650 ஆம் ஆண்டு காலத்தில் பெப்பீசு இலண்டனின் செயின்ட் பால் பள்ளியில் கல்வி கற்கும் முன்பாக 1644 ஆம் ஆண்டில் அண்டிங்டன் இலக்கணப் பள்ளியில் பயின்றார். 1649 ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட முதலாம் சார்லசின் மரணதண்டனை நிகழ்வில் இவர் கலந்து கொண்டார்.
1650 ஆம் ஆண்டு பெப்பீசு கேம்பிரிட்சு பல்கலைக் கழகத்திற்குச் சென்றார். செயின்ட் பால் பள்ளியிலிருந்து இரண்டு கல்வி உதவித் தொகைகள் இவருக்கு கிடைத்தன, 1651 ஆம் ஆண்டு மாக்டலீன் கல்லூரியில் படித்தபோதும் உணவு மற்றும் கட்டண சலுகைகள் இவருக்குக் கிடைத்தன. இக்கல்லூரியில் 1654 ஆம் ஆண்டு தனது இளங்கலை பட்டத்தை பெப்பீசு பெற்றார்.
பிரெஞ்சு உகியுனோட்டு குடியேறியவர்களின் வழித்தோன்றலான பதினான்கு வயது எலிசபெத் டி செயின்ட் மைக்கேலை பெப்பீசு திருமணம் செய்து கொண்டார்.
சிறு வயதிலிருந்தே பெப்பீசு சிறுநீர் பாதையில் சிறுநீர்ப்பைக் கற்கள் நோயால் அவதிப்பட்டார். இதே நோயால் பெப்பீசின் தாயும் சகோதரர் சானும் பின்னர் பாதிக்கப்பட்டனர். வலி மற்றும் சிறுநீரில் இரத்தம் வெளியேறுதல் உள்ளிட்ட பிற அறிகுறிகள் இல்லாமல் ஒருபோதும் பெப்பீசு இருந்ததில்லை. திருமணமான நேரத்தில் இந்நிலை மிகவும் மோசமாக இருந்தது.
1657 ஆம் ஆண்டில் பெப்பீசு சிறுநீரகக் கல் அறுவை சிகிச்சை செய்ய முடிவு செய்தார். அக்காலத்தில் இதுவோர் எளிமையான முடிவல்ல. ஏனெனில் அறுவை சிகிச்சை குறிப்பாக வேதனையானது மற்றும் அபாயகரமானது என்று அப்போது அறியப்பட்டது. ஆயினும்கூட பெப்பீசு அறுவை சிகிச்சை நிபுணர் தாமசு ஓலியரைக் கலந்தாலோசித்தார். மார்ச் 26, 1658 ஆம் ஆண்டு மார்ச்சு 26 அன்று, பெப்பீசீன் உறவினர் யேன் டர்னரின் வீட்டில் ஒரு படுக்கையறையில் இந்த அறுவை சிகிச்சை நடந்தது. பெப்பீசின் சிறுநீரகக் கல் இச்சிகிச்சையில் வெற்றிகரமாக அகற்றப்பட்டது. இந்த சிகிச்சையின் ஒவ்வோர் ஆண்டு நிறைவையும் கொண்டாடவேண்டும் என்று தீர்மானித்த பெப்பீசு பல ஆண்டுகள் கொண்டாடியும் மகிழ்ந்தார். இருப்பினும் அறுவைச் சிகிச்சைக்குப் பின்னரான நீண்டகால பக்க விளைவுகள் இருந்தன. இவரது சிறுநீர்ப்பையில் மேற்கொள்ளப்பட்ட கீறல் பெப்பீசு வாழ்க்கையின் பிற்பகுதியில் மீண்டும் பாதிப்பை உண்டாக்கியது. அறுவைசிகிச்சைக்கு முன்னர் இவர் குழந்தை இல்லாதவராக இருந்ததார் என்றாலும் இச்சிகிச்சை பெப்பீசை மலட்டுத்தன்மையடையச் செய்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. இதற்கு நேரடியான ஆதாரங்கள் எதுவும் கொடுக்கப்படவில்லை. 1658 ஆம் ஆண்டின் நடுப்பகுதியில் பெப்பீசு தற்கால டவுனிங் தெருவுக்கு அருகிலுள்ள ஆக்சு யார்டுக்கு இடம்பெயர்ந்தார். சியார்ச்சு டவுனிங்கின் அமைச்சவரையில் சபாநாயகராக பணியாற்றினார்.
This article uses material from the Wikipedia தமிழ் article சாமுவேல் பெப்பீசு, which is released under the Creative Commons Attribution-ShareAlike 3.0 license ("CC BY-SA 3.0"); additional terms may apply (view authors). வேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 4.0 இல் கீழ் கிடைக்கும். Images, videos and audio are available under their respective licenses.
®Wikipedia is a registered trademark of the Wiki Foundation, Inc. Wiki தமிழ் (DUHOCTRUNGQUOC.VN) is an independent company and has no affiliation with Wiki Foundation.