ஐரோப்பிய வரலாறு (History of Europe) என்பது வரலாற்றுக் காலத்துக்கு முன்பே, கிமு 45,000 ஆண்டுக்கும் கிமு 25,000 ஆண்டுக்கும் இடையே மக்கள் குடியேற்றம் நடைபெற்று இன்றைய காலம் வரை நீடித்திருக்கின்ற ஐரோப்பிய பெருநில மக்களினங்களின் வரலாற்று வளர்ச்சியைக் குறிக்கும்.
ஐரோப்பாவின் செழிமைமிகு கலாச்சாரத்தின் தொடக்கம் கிரேக்க-உரோமை செவ்விய காலம் என்று பொதுவாக ஏற்கப்படுகிறது. பண்டைய கிரேக்க கலாச்சாரம் மேலைநாட்டுக் கலாச்சாரத்துக்கு அடிப்படை ஆயிற்று. ஐரோப்பாவின் மொழி, அரசியல், கல்வி முறைகள், மெய்யியல், அறிவியல், கலைகள் போன்றவை கிமு 700 அளவில் தோன்றிய கிரேக்க செவ்விய இலக்கியமாகிய "இலியட்" என்னும் காப்பியக் காலத்திலிருந்து ஆரம்பிக்கின்றன.
அச்செல்வங்களை கிமு 509இல் நிறுவப்பட்ட உரோமைக் குடியரசு தனதாக்கியது. உரோமைக் குடியரசு முதலில் இத்தாலியிலும் பின்னர் மத்தியதரைக் கடல் பகுதிகளிலும் பரவியது. அது தன் உச்ச வளர்ச்சியை ஏறக்குறைய கிபி 150இல் எட்டியது.
பல ஆண்டுகள் உள்நாட்டுப் போர்களுக்குப் பின் முதலாம் காண்ஸ்டண்டைன் பேரரசர் தன் தலைநகரை உரோமையிலிருந்து பிசான்சியம் என்னும் கிரேக்க நகருக்கு கிபி 313இல் மாற்றினார். புதிதாக நிறுவப்பட்ட தலைநகர் "காண்ஸ்டண்டைனின் நகர்" எனப் பொருள்படுகின்ற "காண்ஸ்டாண்டிநோபுள்" என்று பெயர் பெற்றது. கிபி 395இல் உரோமைப் பேரரசு இரண்டாகப் பிளவுண்டது. ஐந்தாம் நூற்றாண்டில் மேற்கு உரோமைப் பேரரசு வெளியிலிருந்து வந்த குழுக்களின் தாக்குதல்களுக்கு உள்ளாகியது.
கிபி 410இல் விசிகோத்து பிரிவினர் உரோமையைச் சூறையாடினர். செருமானிய இனத்தைச் சார்ந்த அவர்கள் உரோமைப் பிரதேசங்களில் முதன்முதலாகக் குடியேற வந்தவர்கள். மேற்கு உரோமைப் பேரரசின் கடைசி பேரரசர் 476இல் தம் பதவியை இழந்தார். அதன் பின் தென் கிழக்கு ஐரோப்பாவின் சில பகுதிகளும், மத்தியதரைக் கடல் பகுதிகள் சிலவும் பிசான்சியப் பேரரசு என்று அழைக்கப்பட்ட கிழக்கு உரோமைப் பேரரசின் கீழ் வந்தன. இந்நிலை கிபி 6ஆம் நூற்றாண்டுவரை நீடித்தது.
1453இல் ஓட்டோமான் துருக்கியர் காண்ஸ்டாண்டிநோபுள் நகரத்தைக் கைப்பற்றினார்கள். துருக்கி மொழி முறைக்கு ஏற்ப அந்நகர் "இஸ்தான்புல்" என்று பெயர் மாற்றம் பெற்றது. இப்பெயர் "ஸ்தாம்போல்" என்பதிலிருந்து பிறக்கிறது. அதற்கு மூலமாக இருப்பது "இஸ்திம்பொலின்" (istimbolin" [εις την Πόλιν அல்லது "στην Πόλη]) என்னும் சொல்வடிவம் ஆகும். அதன் பொருள் "நகரத்தில்", "நகருக்கு" என்பதாகும்.
இப்படையெடுப்புக்குப் பின், உரோமைப் பேரரசு பலம் இழந்தது. உரோமைப் பேரரசின் வடகிழக்கு எல்லையை அடுத்து "புல்கார்" இன மக்கள் முதல் புல்கேரியப் பேரரசை நிறுவினார்கள். செருமானிய இன மக்கள் உரோமைப் பேரரசின் வடக்குப் பகுதியில் அரசுகளை நிறுவினார்கள்.
புதிதாக நிறுவப்பட்ட இப்பேரரசுகளில் இலத்தீன் மொழி பொது மொழியாக ஏற்கப்பட்டது. எஞ்சியிருந்த உரோமை கலாச்சாரம் பரவியது. கிறித்தவ சமயம் பேரரசின் சமயமாகத் தொடர்ந்தது. பிராங்கு இனத்தவர் சார்லிமேன் மன்னரின் தலைமையில் தங்கள் நாட்டை விரிவுபடுத்தினார்கள். கிறித்தவ சமயத்தில் தலைமைப் பொறுப்புடைய திருத்தந்தைதான் கிபி 800இல் சார்லிமேனைப் பேரரசராக அறிவித்து மகுடம் சூட்டினார். ஆனால் வைக்கிங் இனத்தவர், வட ஆப்பிரிக்காவிலிருந்து வந்த முசுலிம்கள், அங்கேரியின் மாக்யார் இனத்தவர் போன்றவர்கள் பேரரசைத் தாக்கியதால் அது பிளவுண்டது. 10 நூற்றாண்டின் நடுக்காலத்தின் போது, அவர்களின் அச்சுறுத்தல் நின்றது. இருப்பினும், வைக்கிங் இனத்தவர் பிரிட்டனையும் அயர்லாந்தையும் அச்சமுறுத்திக் கொண்டே இருந்தார்கள்.
காண்ஸ்டாண்டிநோபுள் நகரம் உருவாக்கப்பட்டதோடு அங்கு கிறித்தவ திருச்சபையும் வளர்ந்தது. அத்திருச்சபை அதற்கு முன் அருகே இருந்த ஹெராக்ளேயா என்னும் மறைமாவட்டத்தின் இடத்தில் புதிதாக, ஊக்கத்தோடு தழைக்கலாயிற்று. விரைவில், காண்ஸ்டாண்டிநோபுள் சபைக்கும் பேரரசின் மேற்குப் பகுதியில் தலைமை இடமாக இருந்த உரோமைத் திருச்சபைக்கும் இடையே இழுபறி எழுந்தது. குறிப்பாக, கிறித்தவப் போதனை பற்றிய கருத்து வேறுபாடுகள் அவ்விரு திருச்சபைத் தலைமை இடங்களுக்கும் இடையே தோன்றின. எடுத்துக்காட்டாக, உரோமைத் திருத்தந்தையின் பதிலாளாக 1054இல் காண்ஸ்டாண்டிநோபுளுக்குச் சென்ற கர்தினால் ஹும்பெர்ட் என்பவர் காண்ஸ்டாண்டிநோபுளின் மறைமுதுவரைச் சபைவிலக்கம் செய்தார். அடுத்த நாளே, காண்ஸ்டாண்டிநோபுள் மறைமுதுவர் கர்தினால் ஹும்பெர்ட்டைச் சபைவிலக்கம் செய்தார்.
இருந்தாலும், மேற்கு ஐரோப்பிய கிறித்தவ நாடுகளின் இராணுவ உதவியை பிசான்சியப் பேரரசு நாடியபோது அவர்கள் உதவிசெய்தார்கள். குறிப்பாக, 1095இலிருந்து முசுலிம் படையெடுப்பு காண்ஸ்டாண்டிநோபுளுக்கு எதிராக நிகழ்ந்தபோது, மேலைக் கிறித்தவ நாடுகள் பிசான்சியத்துக்குப் பலமுறை படைகளை அனுப்பி ஆதரவு அளித்தன.
எசுப்பானியா, தெற்கு பிரான்சு, முதல் புல்கேரிய பேரரசு, லித்துவேனியா, மற்றும் பேகனியப் பகுதிகள் ஒன்றிணைந்து வருவதற்கு 1396இல் நிகழ்ந்த நிக்கோப்பொலிசு சண்டை காரணமாயிற்று. அதுவே ஐரோப்பிய நடுக்காலத்தில் நிகழ்ந்த மிகப்பெரியதும், இறுதியாக நிகழ்ந்ததுமான சிலுவைப்போர் ஆகும்.
அதைத் தொடர்ந்து பெரும் நிலக்கிழார் உறவுகளும், பிரபுக்கள் ஆட்சியும் உருவாயின. மேல்தட்டு ஆட்சிக் குடும்பங்கள் திருமண உறவுகளை ஏற்படுத்தித் தங்களைப் பலப்படுத்திக்கொண்டன. 13ஆம் நூற்றாண்டின் நடுக்காலத்தில் மங்கோலியர் ஐரோப்பா மீது படையெடுத்தனர். 1347-1353 காலத்தில் ஐரோப்பாவில் கறுப்புச் சாவு என்ற பயங்கர கொள்ளைநோய் பரவி சுமார் 25 மில்லியன் மக்களைக் கொன்றது. அதாவது அன்றைய ஐரோப்பிய மக்கள் தொகையில் 30 முதல் 60 விழுக்காடு மக்கள் மடிந்துபட்டனர். இதைத் தொடர்ந்து, பெரும் நிலக்கிழார் ஆட்சிமுறை சிதையத் தொடங்கியது.
14ஆம் நூற்றாண்டிலிருந்து ஐரோப்பாவில் மறுமலர்ச்சி ஏற்படத் தொடங்கியது. செவ்விய காலத்து கிரேக்க-உரோமை அறிவுக் கருவூலங்கள் மீண்டும் கண்டுபிடிக்கப்பட்டு ஐரோப்பாவில் கலாச்சாரப் புத்துணர்வு ஏற்படத் தொடங்கியது. முதலில் புளோரன்சு நகரிலும் பின்னர் ஐரோப்பா முழுவதிலும் மறுமலர்ச்சி பரவியது. அச்சு இயந்திரம் கண்டுபிடிக்கப்பட்டதும் அறிவு விரிவாக்கத்துக்குத் துணை ஆனது. புதிய அறிவியல் மற்றும் மெய்யியல் சிந்தனைகள் மரபுவழி வந்த கிறித்தவ சமயக் கொள்கைகளுக்கு சவாலாக அமைந்தன.
16ஆம் நூற்றாண்டில் கிறித்தவ சபையில் சீர்திருத்தம் கொணர புரட்டஸ்தாந்து சபைகள் எழுந்தன. செருமனியில் மார்ட்டின் லூதர் திருத்தந்தையின் அதிகாரத்தைக் கேள்விக்கு உட்படுத்தினார். அதுபோல, மன்னர் எட்டாம் ஹென்றி இங்கிலாந்து திருச்சபை மீது தன் ஆதிக்கத்தை நிலைநாட்ட முயன்று, திருச்சபையைப் பிளவுபடுத்தினார். எசுப்பானியாவுக்கும் செருமனிக்கும் இடையே போர்கள் நிகழ்ந்தன.
15ஆம் நூற்றாண்டிலேயே போர்த்துகல் மற்றும் எசுப்பானியா நாடுகள் தங்கள் வணிகத்தை விரிவாக்க கடல்வழி காண்பதில் முனைந்தன. ஐரோப்பாவிலிருந்து ஆப்பிரிக்காவுக்கும் அமெரிக்காவுக்கும் ஆசியாவுக்கும் கடல்வழிகள் கண்டுபிடிக்கப்பட்டன. இவ்வாறு ஐரோப்பா உலகத்தின் பிற பெரும் நிலப்பகுதிகளோடு நேரடி தொடர்பு கொண்டது. அதே நேரத்தில் கத்தோலிக்க நாடுகளும் புரட்டஸ்தாந்து நாடுகளும் ஐரோப்பாவில் ஒன்றுக்கொன்று போர்களில் ஈடுபட்டன. இறுதியில் 1648இல் வெஸ்ட்ஃபாலியா அமைதி ஒப்பந்தம் ஏற்பட்டது.
ஐரோப்பியர்கள் தங்கள் ஆதிக்கத்தை அமெரிக்கா, ஆசியா, ஆப்பிரிக்கா ஆகிய பெரும் நிலப்பகுதிகளுக்குப் பரப்பியதைத் தொடர்ந்து குடியேற்ற ஆதிக்கப் பேரரசுகள் (colonial empires) உருவாயின. பழைய உலகிலிருந்து (ஆசியா, ஐரோப்பா, வட ஆப்பிரிக்கா) புதிய உலகுக்கு (வட, நடு, தென் அமெரிக்கா பகுதிகள்) விலங்குகள், செடிகொடிகள் (நோய்களும் கூட) கொண்டு செல்லப்பட்டன. அவ்வாறே புதிய உலகப் பயிர்கள், செடிகள், விலங்குகள் போன்றவை பழைய உலகுக்குக் கொண்டுவரப்பட்டன.
ஆசியாவிலிருந்தும் அமெரிக்க கண்டங்களிலிருந்தும் ஐரோப்பாவுக்குக் கொண்டுவரப்பட்ட பொருள்வளங்களைக் கொண்டு முதலில் இங்கிலாந்திலும் பின்னர் பிற ஐரோப்பிய நாடுகளிலும் தொழிற்புரட்சி முன்னேறிச் சென்றது. இவ்வாறு, நிலம் சார்ந்த வேளாண்மைத் தொழிலிலிருந்து பொருள் உற்பத்திப் பொருளாதாரம் வளர்ந்தது.
1775இலிருந்து தொடங்கி, அமெரிக்காவில் அமைந்த பிரித்தானிய குடியேற்றப் பகுதிகள் தமக்கு நேர் ஆட்சி உரிமையும் விடுதலையும் வேண்டும் என்று கோரி, போராடத் தொடங்கின. 1789-1799இல் நிகழ்ந்த பிரெஞ்சுப் புரட்சி ஐரோப்பாவின் எல்லாப் பகுதிகளிலும் "சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம்" என்னும் விழுமியங்கள் அடிப்படையில் அரசியல் மாற்றங்கள் ஏற்பட வழியாயிற்று. பிரான்சின் முதலாம் நெப்போலியன் (1769-1821) ஆட்சியைக் கைப்பற்றி, பல மாற்றங்களைக் கொணர்ந்தார்.
1815-1871 காலகட்டத்தில் பல புரட்சிகளும் விடுதலைப் போர்களும் ஐரோப்பாவில் நிகழ்ந்தன. பிரான்சிலும் ஐக்கிய இராச்சியத்திலும் சோசலிசக் கொள்கைகளும் தொழிற்சங்க அமைப்புகளும் பரவின. நிலக்கிழார் ஆட்சிமுறையின் கடைசி அடையாளங்கள் 1861இல் உருசியாவிலிருந்து மறைந்தன. 19ஆம் நூற்றாண்டின் தொடக்கத்திலிருந்தே பால்கன் நாடுகள் ஓட்டோமான் ஆட்சியிலிருந்து ஒவ்வொன்றாக விடுதலை பெறத் தொடங்கின. 1870-1871இல் பிராங்கோ-புருச்சிய போர் நிகழ்ந்ததைத் தொடர்ந்து செருமனியும் இத்தாலியும் தன்னுரிமை கொண்ட நவீன நாடுகளாக உருப்பெற்றன. அதுபோலவே, பெரும்பான்மையான ஐரோப்பிய நாடுகளும் சட்ட அமைப்பு கொண்ட முடியாட்சியின் கீழ் வரத் தொடங்கின.
ஐரோப்பிய நாடுகள் ஒன்றுக்கொன்று எதிராகப் போட்டியிட்டு பேரரசுகள் அமைக்க முனைந்தன. அதன் விளைவாக முதலாம் உலகப் போர் 1914இல் வெடித்தது. அப்போரும் அதன் விளைவாக ஏற்பட்ட வறுமையும் 1917இல் உருசியப் புரட்சி எழக் காரணமாயின. அதன் விளைவாக சோவியத் யூனியன் உருவாகியது. அங்கு பொதுவுடைமை ஆட்சி ஏற்பட்டது. முதலாம் உலகப் போருக்குப் பின் 1919இல் கையெழுத்தான வெர்சாய் ஒப்பந்தம் போரில் தோற்ற செருமனியால் அநீதியான செயலாகக் கருதப்பட்டது. 1929இல் ஏற்பட்ட பெரும் பொருளாதார வீழ்ச்சி ஐரோப்பாவின் பொருளாதாரத்தைக் கடுமையாகப் பாதித்தது. இதனால் இத்தாலி, செருமனி, எசுப்பானியா ஆகிய நாடுகளில் பாசிச ஆட்சிப்போக்கு தலைதூக்கியது. தீவிர தேசியவாதத்தை முன்வைத்து, செருமனியின் எல்லைகளை விரிவுபடுத்த நாசிக் கட்சி முனைந்ததைத் தொடர்ந்து இரண்டாம் உலகப் போர் (1939-1945) வெடித்தது.
இரண்டாம் உலகப் போர் முடிந்ததும், ஐரோப்பா கண்டம் அமெரிக்க ஆதரவு பெற்ற முதலாளித்துவ நாடுகள் ஒருபக்கம் என்றும், சோவியத் யூனியனின் ஆதரவு பெற்ற சோசலிச நாடுகள் மறுபக்கம் என்றும் இரு பெரும் பகுதிகளாகப் பிரிந்து, இழுபறி நிலை உருவானது. முதலாளித்துவப் பொருளாதார அமைப்பைக் கொண்ட பெரும்பான்மை ஐரோப்பிய நாடுகள் ஐக்கிய அமெரிக்காவின் ஆதரவின் கீழ் வட அத்திலாந்திய ஒப்பந்த அமைப்பு என்னும் பாதுகாப்பு உடன்பாடு செய்துகொண்டன. பொதுவுடைமை ஆட்சியின் கீழ் இருந்த கிழக்கு ஐரோப்பிய நாடுகள் சோவியத் யூனியனின் ஆதரவின் கீழ் வார்சா உடன்பாடு செய்தன. இந்த இரு அமைப்புகளுக்கும் நாட்டுக் கூட்டுகளுக்கும் இடையே நல்லுறவு நிலவவில்லை. மாறாக, பனிப்போர் நிலைமையே தொடர்ந்தது.
1989ஆம் ஆண்டு இறுதியில் கிழக்கு ஐரோப்பாவில் பொதுவுடைமை ஆட்சி ஆட்டம் கண்டது. சோவியத் யூனியனின் ஆதரவின் கீழ் இருந்த போலந்து, அங்கேரி, உருமேனியா ஆகிய நாடுகளில் அரசியல் சுதந்திரம் கோரி இயக்கங்கள் எழுந்தன. பொதுவுடைமை ஆட்சி வீழ்ச்சியுற்றது. சோவியத் யூனியனிலும் 1990-1991இல் பொதுவுடைமை ஆட்சி கவிழ்ந்தது. சோவியத் யூனியனைச் சார்ந்திருந்த நாடுகள் முழுச் சுதந்திரம் பெற்றன.
இதன் விளைவாக ஐரோப்பிய நாடுகளுக்கிடையே பொருளாதார ஒருங்கிணைப்பு அதிகரித்தது. மேற்கு ஐரோப்பா முன்னாள் பொதுவுடைமை ஆட்சியின் கீழ் இருந்த கிழக்கு ஐரோப்பிய நாடுகளையும் 2004, 2007 ஆண்டுகளில் ஐரோப்பிய ஒன்றியத்தில் ஏற்கத் தொடங்கின.
This article uses material from the Wikipedia தமிழ் article ஐரோப்பிய வரலாறு, which is released under the Creative Commons Attribution-ShareAlike 3.0 license ("CC BY-SA 3.0"); additional terms may apply (view authors). வேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 4.0 இல் கீழ் கிடைக்கும். Images, videos and audio are available under their respective licenses.
®Wikipedia is a registered trademark of the Wiki Foundation, Inc. Wiki தமிழ் (DUHOCTRUNGQUOC.VN) is an independent company and has no affiliation with Wiki Foundation.