பாபநாசம் சிவன் (செப்டம்பர் 26, 1890 - அக்டோபர் 1, 1973) கருநாடக இசையில் பல இராகங்களில் 2500 க்கும் அதிகமான கிருதிகளை இயற்றிய இசை அறிஞர் ஆவார்.
பாபநாசம் சிவன் | |
---|---|
பிறப்பு | இராமசர்மன் 26 செப்டம்பர் 1890 போலகம், தஞ்சாவூர், தமிழ்நாடு |
இறப்பு | அக்டோபர் 1, 1973 | (அகவை 83)
அறியப்படுவது | கருநாடக இசையறிஞர், நடிகர் |
பெற்றோர் | ராமாமிருத ஐயர், யோகாம்பாள் |
இவர் ராமாமிருத ஐயர் - யோகாம்பாள் அம்மாள் ஆகியோருக்கு இரண்டாவது மகனாகப் பிறந்தார். இவர் தமிழ்நாட்டில் தஞ்சாவூரில் உள்ள போலகம் என்னும் ஊரில் பிறந்தார். இவரது இயற்பெயர் ராமசர்மன். பெற்றோர் இவரை ராமய்யா என அழைத்தனர். ராமய்யா பிற்காலத்தில் பாபநாசம் சிவன் என்ற பெயருடன் 20 ஆம் நூற்றாண்டின் சிறந்த தமிழ் வாக்கேயக்காரராக விளங்கினார்.
இவர் அதிகாலையில் சிவன் கோயிலின் முன் நின்று உருகி நாள்தோறும் பாடியதால் சிவபெருமானே கைலாசத்தில் இருந்து இளைஞர் வடிவம் கொண்டு இறங்கிவந்ததாகப் புகழ்ந்து தஞ்சாவூரில் உள்ள கணபதி அக்கிரகாரத்தில் உள்ளவர்கள் பாபநாசம் சிவன் என்று அழைத்தனர்.
தனது ஏழாம் வயதில் தந்தையை இழந்ததினால் வறுமை காரணமாக, தாயுடன் திருவனந்தபுரத்தில் வாழ்ந்த தன் மூத்த தமையனார் ராஜகோபாலனிடம் வந்து சேர்ந்தார். மற்றவர்கள் கொடுக்கும் அன்னதானத்தின் மூலம் உணவுண்டு தமது இள வயது வாழ்க்கையைக் கழித்தார். அங்கு தங்கியிருந்த வேளையில் இவர் மலையாளம் பயின்று மகராஜ சமசுகிருதக் கல்லூரியில் சேர்ந்து 1910 இல் வையகர்ண பட்டதாரி ஆனார்.
சிறந்த குரல்வளத்தையும், இசை உள்ளறிவையும் கொண்டிருந்ததால் இசையின் ஆரம்பப் பயிற்சிகளை ஆஸ்தான வித்துவான் நூரணி மகாதேவ ஐயர்,சம்பபாகவதர் ஆகியோரிடமிருந்து பெற்றார். பஜனை செய்வதின் மூலம் இவரது இசைப்புலமை மெருகேறியது.
ஒருநாள் கோனேரி ராஜபுரம் வைத்தியநாத ஐயரின் கச்சேரியைக் கேட்டபின், அவரை அணுகி தன்னை அவரின் மாணவனாக ஏற்கும்படி கேட்டுக் கொண்டார். அவர் சம்மதிக்கவே அவருடன் 7 வருடம் தங்கி இசை நிகழ்ச்சிகளுக்குச் சென்றார். இதன் பின் தனது குருவின் பாணியிலே ஆலாபனை, நிரவல், ஸ்வரப் பிரஸ்தாரம் என்பவற்றைப் பாடத் தொடங்கினார்.
1917இல் சுப்பரமணிய ஐயரின் முயற்சியினால் இவரது திருமணம் நடந்தது. நீலா ராமமூர்த்தி, ருக்மணி ரமணி என்ற இரு பெண் குழந்தைகள் இவருக்குப் பிறந்தனர்.
1918 ஆம் ஆண்டு திருவையாற்றில் நடந்த தியாகராஜர் ஆராதனையில் சிவன் தனது முதற் கச்சேரியை நிகழ்த்தினார். இதன் பின்னர் பாபநாசம் சிவன் தென்னிந்தியா முழுவதிலும் வட இந்தியாவின் சில பகுதிகளிலும் தனது கச்சேரிகளை நடத்தினார்.
பாபநாசம் சிவன் தனது முத்திரையாக "ராமதாஸ" என்பதை வைத்து கிருதி, வர்ணம்,பதம், இசைநாடகங்கள், ஜாவளி ஆகிய பல இசை வடிவங்களை இயற்றியுள்ளார். கோயில்களின் முன்னின்று பல பாடல்களை இயற்றினார். இப்படியாக இவர் இயற்றிய பாடல்களை, புகழ்பெற்ற கருநாடக பாடகர்கள் பலரும் தங்கள் இசை நிகழ்ச்சிகளில் பாடியுள்ளனர். கருநாடக மும்மூர்த்திகளுக்குப் பிறகு வந்த இசைப்பாடல்கள் இயற்றியவர்களில் முக்கியமானவர் பாபநாசம் சிவன்.
1921 இல் சிவன் சென்னைக்கு வந்து தங்கிவிட்டார். இவருடைய ஆக்கங்களை ஆறு தொகுப்புகளாக இவருடைய மகள் ருக்மணி ரமணி வெளியிட்டுள்ளார்.
பாடலாசிரியராக, இசையமைப்பாளராக, ஒரு நடிகராகவும் தமிழ்த் திரையுலகிற்கு தனது பங்களிப்பினைத் தந்துள்ளார் சிவன். ஏறத்தாழ 70 திரைப்படங்களுக்கு மொத்தமாக 800 பாடல்களை எழுதியுள்ளார். இவர் எழுதி முதன் முதலில் வெளிவந்த திரைப்படம் ரத்னாவளி (1935) ஆகும்.
1973 ஆம் ஆண்டு, அக்டோபர் 1 அன்று அதிகாலை நான்கு மணியளவில் காலமானார்.
This article uses material from the Wikipedia தமிழ் article பாபநாசம் சிவன், which is released under the Creative Commons Attribution-ShareAlike 3.0 license ("CC BY-SA 3.0"); additional terms may apply (view authors). வேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 4.0 இல் கீழ் கிடைக்கும். Images, videos and audio are available under their respective licenses.
®Wikipedia is a registered trademark of the Wiki Foundation, Inc. Wiki தமிழ் (DUHOCTRUNGQUOC.VN) is an independent company and has no affiliation with Wiki Foundation.