யூதித்து (Judith) என்னும் நூல் பழைய ஏற்பாட்டுப் பகுதியாகிய இணைத் திருமுறைத் தொகுப்பைச் சேர்ந்த ஏழு நூல்களுள் ஒன்றாகும்.
இந்நூல்கள் கத்தோலிக்க திருச்சபையாலும் மரபுவழாத் திருச்சபையாலும் பிற விவிலிய நூல்களைப் போன்று இறைஏவுதலால் எழுதப்பட்டவையாக ஏற்கப்பட்டுள்ளன.
யூதித்து என்னும் இந்நூல் கிரேக்க மூல மொழியில் Ιουδίθ (Iudíth) என்றும், இலத்தீனில் Iudith என்றும் பெயர் பெற்றுள்ளது. எபிரேய மொழியில் இப்பெயர் יְהוּדִית (Yehudit, Yəhûḏîṯ ) என வரும்; இப்பெயரின் பொருள் "யூதப் பெண்மணி" என்பதாகும்; "புகழ்பெற்றவர்" என்றும் பொருள்கொள்ளலாம்.
இந்நூல் இணைத் திருமுறை விவிலிய நூல் ஆகும். விவிலியத்தின் பகுதியாக இந்நூல் கி.பி. முதல் நூற்றாண்டிலிருந்தே ஏற்கப்பட்டது. 397இல் கார்த்தேசு (Carthage) நகரில் நடந்த சங்கத்திலும், பின்னர் திரெந்து சங்கத்திலும் (கி.பி. 1546) இது விவிலியத் திருமுறை நூலாக அதிகாரப்பூர்வமாக ஏற்கப்பட்டது .
செலூக்கியர் ஆட்சியின்போது யூதர்கள் அனுபவித்த துயரத்தின் வரலாற்றையும், மக்கபேயர் வழியாகக் கடவுள் அவர்களுக்கு அளித்த முழுவிடுதலையையும் பின்னணியாகக் கொண்ட இந்நூல் ஒரு புதினம்.
இது கி.மு. இரண்டாம் நூற்றாண்டின் இறுதியில் அல்லது முதல் நூற்றாண்டின் இடைப்பகுதியில் இயற்றப்பட்டிருக்கலாம்.
யூதித்து நூலின் ஆசிரியர் யார் என்பது தெளிவாகத் தெரியவில்ல. ஆனால், அவர் பாலசுத்தீனாவில் பரிசேயரின் வழிமரபில் தோன்றிய ஒரு யூதர் என்பதில் ஐயமில்லை. இந்நூல் எபிரேய மொழியில் எழுதப்பட்டிருக்க வேண்டும்; மூல நூல் கிடைக்காமையால், செப்துவசிந்தா (Septuaginta) என்று அழைக்கப்படும் அதன் கிரேக்க மொழிபெயர்ப்பே இன்று நமக்கு மூலபாடமாக இருந்து வருகிறது.
ஒருவர் கடவுள் மீது பற்றுறுதி கொண்டு செயல்பட்டால், எத்துணை வலிமைபடைத்த உலக ஆற்றல்களையும் வென்றுவிடலாம் என்பது இந்நூலின் மையக் கருத்தாகும். இக்கருத்தை யூதர்கள், என்றும் தங்கள் நினைவில் நிறுத்தும் பொருட்டு, கோவில் அர்ப்பணிப்பின் ஆண்டு விழாவின்போது இந்நூல் பொதுவில் படிக்கப்பட்டது.
ஆணாக்கம் நிலவிய இசுரயேல் சமூகத்தினர் யூதித்து கதையை ஏற்றுக்கொண்டது வியப்பைத் தரலாம். சமுதாயத்தில் தாழ்நிலைக்கு ஒதுக்கப்பட்ட பெண், அதுவும் ஒரு கைம்பெண், அன்று தலைவர்களாகக் கருதப்பட்ட ஆண்களின் ஆட்சிக்குச் சவால் விடுத்தார். அவர்கள் கோழைத்தனமாக நடந்துகொண்டதற்காக அவர்களைக் கடிந்துகொண்டார். ஆனால் அவரிடம் நாட்டுப்பற்று இருந்தது; கடவுள் நம்பிக்கையும் மிகுந்திருந்தது. எனவே யூதித்து யூத வரலாற்றிலும் உணர்வுநிலையிலும் ஒரு சிறப்பிடம் வகிக்கின்றார்.
கிறித்தவர்கள் யூதித்து என்னும் பெண்மணி மரியாவுக்கு ஒரு முன்னறிவிப்பு என்று கருதுகின்றனர். யூதித்தின் நற்பண்புகளையும் அழகையும் அறிவையும் வியந்து, மக்கள் பாடிய வாழ்த்துப் பாடல் மரியாவுக்குப் பொருந்துவதாகக் கிறித்தவம் விளக்குகிறது:
"நீரே எருசலேமின் மேன்மை;
நீரே இசுரயேலின் பெரும் மாட்சி;
நம் இனத்தாரின் உயர் பெருமை நீரே!
இவற்றையெல்லாம் உம் கையாலேயே ஆற்றியிருக்கிறீர்;
இசுரயேலுக்கு நன்மைகள் செய்திருக்கிறீர்.
இவை குறித்துக் கடவுள் மகிழ்ச்சி அடைந்துள்ளார்.
எல்லாம் வல்ல ஆண்டவர் எக்காலத்துக்கும்
உமக்கு ஆசி வழங்குவாராக!"
யூதித்து 7:19-22
உள்ளம் தளர்ந்துபோன இசுரயேலர் தங்கள் கடவுளாகிய ஆண்டவரை நோக்கிக் கதறினர்;
ஏனெனில், அவர்களைச் சூழ்ந்துகொண்ட பகைவர்களிடமிருந்து தப்பிக்க வழியே இல்லை.
காலாட்படை, தேர்ப்படை, குதிரைப்படை அடங்கிய அசீரியரின் படைத்திரள் முழுவதும்
முப்பத்துநான்கு நாள் இசுரயேலரைச் சூழ்ந்துகொள்ள, பெத்தூலியாவில் வாழ்ந்தவர்கள்
அனைவருடைய தண்ணீர்க் கலன்களும் வெறுமையாயின. நீர்த்தொட்டிகள் வறண்டுகொண்டிருந்தன.
ஒரு நாளாவது தண்ணீர் கிடைக்கவில்லை; அவர்களுக்குக் குடிநீர் அளவோடுதான் கொடுக்கப்பட்டது.
அவர்களின் குழந்தைகள் சோர்வுற்றார்கள்; பெண்களும் இளைஞர்களும் தாகத்தால் மயக்கமடைந்து
நகரின் தெருக்களிலும் வாயில்களிலும் விழுந்து கிடந்தார்கள். ஏனெனில் அவர்களிடம் வலுவே இல்லை."
யூதித்து 16:1-9
"யூதித்து பாடிய பாடல்:
என் கடவுளுக்கு முரசு கொட்டுங்கள்;
ஆண்டவருக்கு மேள தாளங்களோடு
பண் இசையுங்கள்...
அசீரியன் வடக்கு மலைகளிலிருந்து வந்தான்;
எண்ணற்ற படைவீரர்களுடன் வந்தான்.
அவர்களது பெருந்திரள் ஓடைகளைத் தடுத்து நிறுத்தியது.
அவர்களுடைய குதிரைப்படை மலைகளெங்கும் பரவியிருந்தது...
எல்லாம் வல்ல ஆண்டவரோ ஒரு பெண்ணின் கையால் அவர்களை முறியடித்தார்.
வலிமைவாய்ந்த அவனை இளைஞர் வெட்டி வீழ்த்தவில்லை;
அரக்கர்கள் அடித்து நொறுக்கவில்லை;
உயரமான இராட்சதர்கள் தாக்கவில்லை;
ஆனால் மெராரியின் மகள் யூதித்து
தம் முக அழகால் அவனை ஆற்றல் இழக்கச் செய்தார்...
அவரது அழகு அவனது உள்ளத்தைக் கொள்ளை கொண்டது.
அவரது வாள் அவனது கழுத்தைத் துண்டித்தது..."
பொருளடக்கம் | நூல் அதிகாரங்கள் மற்றும் வசன வரிசை | 1995 திருவிவிலியப் பதிப்பில் பக்க வரிசை |
---|---|---|
1. யூதர்களுக்கு நேரிட்ட பேரிடர் | 1:1 – 7:32 | 25 – 34 |
2. யூதித்து வழியாகக் கிடைத்த வெற்றி | 8:1 – 16:25 | 34 – 48 |
This article uses material from the Wikipedia தமிழ் article யூதித்து (நூல்), which is released under the Creative Commons Attribution-ShareAlike 3.0 license ("CC BY-SA 3.0"); additional terms may apply (view authors). வேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 4.0 இல் கீழ் கிடைக்கும். Images, videos and audio are available under their respective licenses.
®Wikipedia is a registered trademark of the Wiki Foundation, Inc. Wiki தமிழ் (DUHOCTRUNGQUOC.VN) is an independent company and has no affiliation with Wiki Foundation.