முதலாம் கோப்பெருஞ்சிங்கன் என்பவன் ஒரு காடவ சிற்றரசன் ஆவான்.
இவனுக்கு வாணிலை கண்ட பெருமாள், மணவாளப் பெருமாள் போன்ற சிறப்புப் பெயர்கள் இருந்தன. மூன்றாம் இராஜராஜனின் 14-ம் ஆட்சி ஆண்டில் (கி.பி 1230) விருத்தாசலத்தில் பொறிக்கப்பட்ட கல்வெட்டிலிருந்து காடவச் சிற்றரசர்கள் இன்னும் சோழரின் மேலாதிக்கத்தை ஏற்று வந்தனர் என்றும் இவர்களுள் கோப்பெருஞ்சிங்கன், தக்க வயது அடைந்ததோடு, முக்கியமானவனாக விளங்கினான் என்றும் தெரிவிக்கிறது. கோப்பெருஞ்சிங்கன் சோழ சக்கரவர்த்தியை சேந்தமங்கலத்தில் சிறைப்படுத்தியதோடு விஷ்ணு கோயில்கள் உட்பட எல்லாக் கோயில்களையும் கொள்ளையடிக்கும் படியும் ஏற்பாடு செய்தான். ஹொய்சாளர்கள் வைணவத்தில் அழுத்தமான தீவிரமான பற்றுடையவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இவர்கள் மன்னன் நரசிம்மன் தன் தலைநகரான துவார சமுத்திரத்திலிருந்து புறப்பட்டதாயும் சோழர்களை மீண்டும் நிலைநாட்டியவன் என்று பெயர் தனக்கு ஏற்படும் வரை போர் முழக்கம் செய்ததாயும் ஒரு கல்வெட்டு குறிப்பிடுகிறது. இவனுடன் ஏற்பட்ட போரினால் கோப்பெருஞ்சிங்கன் சோழ சக்கரவர்த்தியை விடுதலை செய்து அவனுடைய சிம்மாதனத்தில் அமரச் செய்வதாக நரசிம்மனின் தளபதிகளுக்கு அறிவித்தான்.
தஞ்சை மாவட்டம் நீடுரைச் சுற்றிய பகுதி கோப்பெருஞ்சிங்கன் என்ற அழகிய சீயனால் ஆளப்பெற்றதாய் குறிப்பிடுகிறது. கோப்பெருஞ்சிங்கனின் வீரம் வெவ்வேறுவகையான ஜந்து செய்யுட்களில் பாராட்டப்படுகிறது. கோப்பெருஞ்சிங்கனுக்கு அவனி நாராயண நிருபதுங்கன், தொண்டைக்கும் மல்லைக்கும் மன்னன் என்றெல்லாம் பட்டங்கள் இருந்திருக்கிறது. கோப்பெருஞ்சிங்கனும் ஹொய்சாளர்களும் தொடர்ந்து போரிட்டுக்கொண்டிருந்தனர் என்பது கி.பி. 1236ல் துன்முகி ஆண்டில் காடவனுக்கு விரோதமான ஒரு படையெடுப்பில் வீர சோமேசுவரன் மங்கலத்தில் தங்கினான் என்று அறியப்படும் ஒரு குறிப்பால் தெளிவாகத் தெரிகிறது.
ஏழிசை மோகன் மணவாளப்பெருமானை அடுத்து முதலாம் கோப்பெருஞ்சிங்கன் ஆட்சிக்கு வந்தான்,காலம் கி.பி.1216-1242 வரை. இவன் அழகிய சீயன் என்னும் விருது பெயரைக் கொண்டவன்.இவன் தெள்ளாறு என்னுமிடத்தில் சோழ மன்னன் மூன்றாம் இராஜராஜனைபோரில் வென்று,அவனது பரிச்சின்னங்களை கைப்பற்றியதோடு,அம்மன்னனை சிறையிலிட்டான்.இச்செய்தியை திருவண்ணாமலை மாவட்டம்,வந்தவாசி வட்டம்,வயலூரில் உள்ள கல்வெட்டு கூறுகிறது. அக்கல்வெட்டின் வாசகம் கீழ்வருமாறு உள்ளது.
“ | ஸ்வஸ்தி ஸ்ரீ சகல புவனச் சக்ரவர்த்தி ஸ்ரீ கோப்பெருஞ்சிங்கன் சோழனைத் தெள்ளாற்றில் வென்று சகல பரிச்சின்னமும் கொண்டு,சோழனைச் சிறையிட்டு வைத்து சோணாடு கொண்ட அழகிய சீயன் | ” |
வயலூர் கல்வெட்டு பிற்பகுதி பாக்களால் ஆனது அதில் இவனது இலச்சினை பற்றி கூறுகிறது.கோப்பெருஞ்சிங்கனின் கொடி விடைக்(காளைக்) கொடி.அவனது இலச்சினையும் காளையேயாகும்.
இவன் தன்னை "திரிபுவனத் திராசக்கள் தம்பிரான்" என்று அழைத்துக் கொண்டான்.மேலும் "பல்லவர் பெருமான்" "பரதம் வல்ல பெருமாள்" "அழகிய சீயன்" "மல்லை வேந்தன்" "அவனி நாராயணன்". என கல்வெட்டுகள் குறிக்கிறது.
இம்மன்னனின் காலத்திய கல்வெட்டுகள் என்று 13 கல்வெட்டுகள் கண்டறியப்பட்டுள்ளன.இக்கல்வெட்டுகளில் மிகமுக்கியமானவை செங்கற்பட்டு,ஆத்தூர்,கடலூர்,விருத்தாசலம்,அத்தி,திருவெண்ணைநல்லூர்,வில்லியனூர், வயலூர் போன்ற கல்வெட்டுகளாகும்.
இக்கல்வெட்டில் "அழகிய சீயன் அவனி ஆளப்பிறந்தான் காடவன் கோபெருஞ்சிங்கன்"என்று குறிப்பிடுகிறது.
திருவண்ணாமலை மாவட்டம்,செய்யாறு வட்டம்,அத்தியின் அகஸ்தீவரர் கோயிலில் வெட்டப்பெற்றிருக்கும் கல்வெட்டு பாடல் கல்வெட்டாக உள்ளது. இதில் ஆறு பாடல்கள் கட்டளைக் கலித்துறையில் எழுதப்பெற்றிருக்கின்றன.
முதலாம் கோப்பெர்ஞ்சிங்கன் மூன்றாம் இராஜராஜனை சிறை வைத்த செய்தியையும்,அம்மன்னன் போசள மன்னனால் மீட்கப்பட்ட செய்தியை தெரிவிக்கும் இலக்கியம் கத்யகர்ணாமிர்தம் என்ற கன்னட வரலாற்று நூலாகும் ,இதனை இயற்றியவர் காளகளப புலவர் ஆவார்.
இம்மன்னனின் ஆத்தூர் கல்வெட்டில் தில்லை ஆடவல்லான் கோயிலின் தென்கோபுரத்தை எழுநிலைமாடமாக திருப்பணி செய்வித்தான் என அறிவிக்கிறது.
“ | தெற்குத் கோபுரத் திருவாசல் சொக்கச் சீயன் திருநிலை எழுகோபுரமாகச் செய்யத் திருப்பணிக்கு உடலாக | ” |
இக்கல்வெட்டின்படி பார்த்தால்,முன்னர் அங்கிருந்த கோபுரத்தை எழுநிலை மாடமாக உயர்த்தி திருப்பணி செய்யப்பெற்றதை அறியலாம்.
கோப்பெருஞ்சிங்கன் 13ஆம் நூற்றாண்டில் பாடல் பெற்ற தலைவர்களில் சேந்தமங்கலத்தைத் தலைநகராகக் கொண்டு ஆண்ட சிற்றரசன் இவன். பல்லவர் படைத்தலைவர் வழியில் வந்தவன். சோழர் பரம்பரையில் பெண் கொண்டு வாழ்ந்தவன்.எனினும் மூன்றாம் இராசராசனைச் சிறைபிடித்துச்சோழப்பேரரசு வீழ்ச்சிக்குக் காரணமாக இருந்தவன்.தஞ்சை, தென்னார்க்காடு மாவட்டங்களில் இவனது கல்வெட்டுகள் மிகுதி.
இவன் புலவனாகவும் விளங்கினான். ஆந்திர மாநிலம் கோதாவரி மாவட்டம் இடர்க்கரம்பை ஊரிலுள்ள கல்வெட்டுகளும் இவனைக் குறிப்பிடுகின்றன. வாயலூர்ச் சாசனப் பாடல்கள் இவன் சோழனைச் சிறையிலிட்ட செய்திகளைக் கூறுகின்றன. இடர்க்கலம்பை, வயலூர் பாடல்கள் இவனால் பாடப்பட்டவை எனக் கருதப்படுகின்றன. இப்பாடல்களின் இறுதியில் 'சொக்கசீயன் ஆணை' எனப் பொறிக்கப்பட்டுள்ளது. ஒரு பாடல்
“ | திறையிட்(டு) இருமின்கள் தெவ்வேந்திர் செம்பொன் துறையிட்ட பூம்புகார் வேந்தன் – சிறைகிடந்த கோட்டம் தனைநினைமின் கோப்பெருஞ்சிங் கன்கமல நாட்டம் கடைசிவந்த நாள் | ” |
முதலாம் சடையவர்மன் சுந்தரபாண்டியன் காடவர் குல மன்னனான முதலாம் கோப்பெருஞ்சிங்கனை போரில் வென்று அவனது தலைநகரான சேந்தமங்கலத்தை முற்றுகையிட்டுக் கைப்பற்றினான்.காடவ மன்னனின் யானை,குதிரை மற்றும் பிற செல்வங்கள் அனைத்தினையும் கவர்ந்து கொண்டு சேந்தமங்கலத்தினை ஆளும் பொறுப்பினைக் கோப்பெருஞ்சிங்கனிடமே அளித்தான்.
This article uses material from the Wikipedia தமிழ் article முதலாம் கோப்பெருஞ்சிங்கன், which is released under the Creative Commons Attribution-ShareAlike 3.0 license ("CC BY-SA 3.0"); additional terms may apply (view authors). வேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 4.0 இல் கீழ் கிடைக்கும். Images, videos and audio are available under their respective licenses.
®Wikipedia is a registered trademark of the Wiki Foundation, Inc. Wiki தமிழ் (DUHOCTRUNGQUOC.VN) is an independent company and has no affiliation with Wiki Foundation.