பாஸ்கா திருவிழிப்பு (Easter Vigil) என்பது இயேசு கிறித்து சாவிலிருந்து விடுதலை பெற்று உயிர்பெற்றெழுந்த நிகழ்ச்சியை நினைவுகூர்ந்து கத்தோலிக்க திருச்சபையும் பிற கிறித்தவ சபைகளும் ஆண்டுதோறும் சிறப்பிக்கின்ற கொண்டாட்டம் ஆகும்.
இது புனித சனிக்கிழமை மாலையில், பொழுது சாய்ந்த பிறகு முன்னிரவு நேரத்தில் கொண்டாடப்படும். சனிக்கிழமை மாலையிலேயே விழா தொடங்கும் என்பதால் பாஸ்கா திருவிழிப்பு அதை அடுத்து வருகின்ற உயிர்த்தெழுதல் ஞாயிற்றுக் கிழமையின் தொடக்கமாக அமைகிறது.
மனித குலத்தை ஆழமாகப் பாதிக்கின்ற பாவம், சாவு ஆகியவற்றை இயேசு தம் சிலுவைச் சாவினாலும் உயிர்த்தெழுதலாலும் வென்று, மனிதருக்குப் புது வாழ்வு அளித்து, அவர்கள் நிறைவான பேரின்பம் அடைய வானக வழியைத் திறந்தார் என்று கிறித்தவர்கள் நம்புவதால் கிறித்தவ வழிபாட்டு ஆண்டின் மையமாக இவ்விழா உள்ளது.
"பாஸ்கா" என்னும் சொல் Pesach என்னும் எபிரேயச் சொல்லிலிருந்து பிறக்கிறது. அதன் பொருள் கடந்துசெல்லுதல், தாண்டிப் போதல், கடத்தல் என்பதாகும். இதை ஆங்கிலத்தில் "Passover" என்பர். எபிரேய மக்கள் எகிப்து நாட்டில் அடிமைகளாக இருந்து துன்பங்கள் அனுபவித்த காலத்தில் அவர்களுடைய வீட்டு நிலையில் செம்மறியின் இரத்தம் பூசப்பட்டிருப்பது கண்டு ஆண்டவரின் தூதர் அவர்களுக்கு யாதொரு தீங்கும் இழைக்காமல் கடந்து சென்றார் என்னும் செய்தி விடுதலைப் பயணம் 12:1-13இல் உள்ளது. காண்க:
“ | இது 'ஆண்டவரின் பாஸ்கா'. ஏனெனில், நான் இன்றிரவிலேயே எகிப்து நாடெங்கும் கடந்து சென்று, எகிப்து நாட்டில் மனிதர் தொடங்கி விலங்குவரை அனைத்து ஆண்பால் தலைப்பிறப்பையும் சாகடிப்பேன்...நானே ஆண்டவர்! இரத்தம் நீங்கள் இருக்கும் வீடுகளில் உங்களுக்கு அடையாளமாக இருக்கும். நான் இரத்தத்தைக் கண்டு உங்களைக் கடந்து செல்வேன் (விடுதலைப் பயணம் 12:11-13). | ” |
கிறித்தவர்கள் கொண்டாடுகின்ற பாஸ்கா பழைய ஏற்பாட்டு பாஸ்காவின் நிறைவாகக் கருதப்படுகிறது. இங்கே இயேசு சாவினின்று வாழ்வுக்குக் கடந்து செல்லும் செயல் நிகழ்கிறது; அதைத் தொடர்ந்து, கிறித்துவை நம்புகின்றவர்கள் அவருடைய சாவிலும் உயிர்த்தெழுதலிலும் தம்மை ஒன்றித்துக் கொண்டு, தங்கள் அக வாழ்வுக்குச் சாவாக அமைகின்ற பாவத்திலிருந்து விடுவிக்கப்பட்டு, இயேசு வாக்களிக்கின்ற புது வாழ்வுக்குக்குகடந்து செல்கின்றார்கள்.
இந்த உண்மை பாஸ்கா திருவிழிப்பின்போது கொண்டாடப்படுகிறது. கத்தோலிக்க திருச்சபையின் வழக்கப்படி, இக்கொண்டாட்டத்தில் அடங்கியுள்ள நான்கு பகுதிகள் கீழ்வருமாறு:
ஆங்கிலிக்கன், லூதரன் போன்ற பிற கிறித்தவ சபைகளும் இம்முறையையே ஏறக்குறைய கடைப்பிடிக்கின்றன.
பாஸ்கா திருவிழிப்பின் முதல் பகுதியாகிய ஒளி வழிபாட்டின்போது "இயேசு கிறித்து இவ்வுலகிற்கு ஒளி" என்னும் உண்மை பறைசாற்றப்படுகிறது.
வழிபாடு நடைபெறும் கோவிலில் எல்லா விளக்குகளும் அணைக்கப்படும். கோவில் முற்றத்தில் இருள்சூழ்ந்த நிலையில் புதுத்தீ உருவாக்கப்படும். அங்கு குருவும் திருப்பணியாளரும் செல்வர். மக்களும் சூழ்ந்து நிற்பர். ஒருவர் பாஸ்கா திரியை எடுத்துச் செல்வார். சாவினின்று வாழ்வுக்குக் கடந்துசென்ற இயேசு மனிதருக்குப் புது வாழ்வு அளிக்கிறார் என்னும் கருத்தை உள்ளடக்கிய இறைவேண்டலுக்குப் பின் குரு தீயை மந்திரிப்பார். அதிலிருந்து பாஸ்கா திரி ஏற்றப்படும். இத்திரி இயேசு கிறித்துவுக்கு அடையாளமாக இருந்து, அவரே உலகுக்கு ஒளி என்னும் உண்மையை உணர்த்துவதாகும். பின்னர் பவனி தொடங்கும். எரிகின்ற பாஸ்கா திரியின் ஒளி மட்டுமே தெரியும் போது, குரு திரியை உயர்த்திப் பிடித்துக் கொண்டு "கிறிஸ்துவின் ஒளி இதோ!" என்று பாட, மக்கள் "இறைவனுக்கு நன்றி" என்று பதில் கூறுவார்கள்.
பின்னர் மக்கள் தங்கள் கைகளில் இருக்கும் திரிகளைப் பாஸ்கா திரியிலிருந்து ஏற்றுவார்கள். இது கிறித்துவின் ஒளி மனிதருக்கு வழங்கப்பட்டு, அவர்களும் உலகுக்கு ஒளியாக மாற அழைக்கப்படுகிறார்கள் என்னும் உண்மையை உணர்த்தும் செயலாகும். மீண்டும் இருமுறை குரு "கிறிஸ்துவின் ஒளி இதோ!" என்று பாட, மக்களும் பதில் மொழி வழங்குவார்கள்.
பவனி பீடத்தை வந்தடைந்ததும் மக்கள் எல்லாரும் தங்கள் கைகளில் எரிகின்ற திரிகளைப் பிடித்திருக்க, குரு அல்லது திருத்தொண்டர் பாஸ்கா புகழுரையைப் பாடுவார். கோவில் விளக்குகள் ஏற்றப்படும். பாஸ்கா புகழுரை முடிந்ததும் எல்லாரும் திரிகளை அணைத்துவிட்டு, தங்கள் இடங்களில் அமர்வர். இறைவாக்கு வழிபாடு தொடங்கும்.
பாஸ்கா திருவிழிப்பின் ஒரு முக்கிய பகுதி இறைவாக்கு வழிபாடு ஆகும். பழைய ஏற்பாடு, புதிய ஏற்பாடு ஆகிய விவிலியப் பகுதிகளிலிருந்து பாடங்கள் அறிக்கையிடப்படும். பாடங்களுக்கு இடையே திருப்பாடல்கள் பாடப்படும். விவிலிய பாடங்களும் பதிலுரைப் பாடல்களும் கீழ்வருமாறு முழங்கப்படும்:
முதல் ஏழு வாசகங்களும் முடிந்த பின் மக்கள் தங்கள் திரிகளை ஏற்றி, கையில் பிடித்திருக்க, "உன்னதங்களிலே இறைவனுக்கு மாட்சிமை உண்டாகுக" என்னும் பாடல் பாடப்படும். அப்போது இசைக் கருவிகள் முழங்கும்; மணியோசை எழுப்பப்படும். எல்லாரும் உயிர்பெற்றெழுந்த இயேசுவின் மகிழ்ச்சியில் பங்கேற்பர்.
இதைத் தொடர்ந்து விவிலிய வாசகங்களின் விளக்கமாகவும், பாஸ்கா திருவிழிப்பின் பொருள் பற்றியும் குரு விளக்கமளித்து, "மறையுரை" வழங்குவார்.
பாஸ்கா திருவிழிப்பின்போது குழந்தைகளுக்கும் பெரியவர்களுக்கும் திருமுழுக்கு வழங்கும் பழக்கம் தொடக்க காலத்திலிருந்தே உள்ளது. எல்லாரும் எரியும் மெழுகுதிரியைப் பிடித்திருப்பர். புனிதர்களின் பிரார்த்தனை பாடப்படும். குரு எரியும் பாஸ்கா திரியை எடுத்து தயாரிக்கப்பட்டிருக்கும் தண்ணீர் நிறைந்த கலத்தினுள் அதை அமிழ்த்தி இறைவேண்டல் செய்வார். நீரை மந்திரிப்பார். அந்நீரைப் பயன்படுத்தி, தயாரிப்புப் பெற்ற மக்களுக்குத் திருமுழுக்கு வழங்கப்படும். சில இடங்களில் முழுக்கு முறையிலும், சில இடங்களில் தலையில் நீர் வார்க்கும் முறையிலும் திருமுழுக்கு வழங்கப்படும். ஏற்கெனவே திருமுழுக்குப் பெற்ற மக்கள் இந்நேரத்தில் தங்கள் திருமுழுக்கு வாக்குறுதிகளைப் புதுப்பித்துக் கொள்வர். பாவத்தை விட்டுவிட்டு, இயேசு காட்டுகின்ற புதுவழியில் நடப்பதற்கு மக்கள் வாக்களிப்பார்கள். சில வேளைகளில் உறுதிப்பூசுதல் சடங்கும் நிகழும். பொது மன்றாட்டுகள் இறைவேண்டலாக எழுப்பப்படும்.
பின்னர் நற்கருணை வழிபாடு தொடரும். குரு மக்களின் பெயரால் அப்பத்தையும் இரசத்தையும் கடவுளுக்குக் காணிக்கையாக ஒப்புக் கொடுப்பார். கடவுளின் வல்லமையால் அப்பமும் இரசமும் இயேசு கிறித்துவின் உடலும் இரத்தமுமாக மாற்றம் பெறுகின்றன என்று கிறித்தவர் நம்புகின்ற சடங்கு நிகழும். மக்கள் நற்கருணை விருந்தில் கலந்துகொண்டு இறைவனுக்கு நன்றி செலுத்துவர்.
இவ்வாறு, புனித வியாழனன்று தொடங்கிய "பாஸ்கா முப்பெரும் விழா" நிறைவுபெறும்.
“ | வாரத்தின் முதல் நாள் விடியற் காலையிலேயே தாங்கள் ஆயத்தம் செய்திருந்த நறுமணப் பொருள்களை எடுத்துக் கொண்டு அப்பெண்கள் கல்லறைக்குச் சென்றார்கள்; கல்லறை வாயிலிலிருந்து கல் புரட்டப்பட்டிருப்பதைக் கண்டார்கள். அவர்கள் உள்ளே நுழைந்தபோது அங்கே ஆண்டவர் இயேசுவின் உடலைக் காணவில்லை. அதைக் குறித்து அவர்கள் குழப்பமுற்றார்கள். அப்போது திடீரென, மின்னலைப் போன்று ஒளிவீசும் ஆடை அணிந்த இருவர் அவர்களுக்குத் தோன்றினர். இதனால் அப்பெண்கள் அச்சமுற்றுத் தலைகுனிந்து நின்று கொண்டிருந்தனர். அவர்கள் அப்பெண்களை நோக்கி, "உயிரோடு இருப்பவரைக் கல்லறையில் தேடுவதேன்? அவர் இங்கே இல்லை. அவர் உயிருடன் எழுப்பப்பட்டார். கலிலேயாவில் இருக்கும்போது அவர் உங்களுக்குச் சொன்னதை நினைவுபடுத்திக் கொள்ளுங்கள். மானிடமகன் பாவிகள் கையில் ஒப்புவிக்கப்பட்டுச் சிலுவையில் அறையப்படவேண்டும்; மூன்றாம் நாளில் உயிர்த்தெழ வேண்டும் என்று சொன்னாரே" என்றார்கள். அப்போது அவர்கள் அவருடைய வார்த்தைகளை நினைவிற்கொண்டு கல்லறையைவிட்டுத் திரும்பிப் போய் இவை அனைத்தையும் பதினொருவருக்கும் மற்ற அனைவருக்கும் அறிவித்தார்கள். அவர்கள் மகதலா மரியா, யோவன்னா, யாக்கோபின் தாய் மரியா என்பவர்களும் அவர்களோடு இருந்த வேறு சில பெண்களும் ஆவர். அவர்கள் நிகழ்ந்தவற்றைத் திருத்தூதர்களுக்குக் கூறினார்கள். அவர்கள் கூற்று வெறும் பிதற்றலாகத் தோன்றியதால் திருத்தூதர்கள் அவர்களை நம்பவில்லை. ஆனால் பேதுரு எழுந்து கல்லறைக்கு ஓடினார். அங்கு அவர் குனிந்து பார்த்தபோது உடலைச் சுற்றியிருந்த துணிகளை மட்டுமே கண்டார்; நிகழ்ந்ததைக் குறித்துத் தமக்குள் வியப்புற்றவராய்த் திரும்பிச் சென்றார். | ” |
பெரிய வியாழன்
பெரிய வெள்ளி
இயேசுவின் சிலுவைச் சாவு
இயேசுவின் உயிர்த்தெழுதல்
பாஸ்கா திரி
பாஸ்கா புகழுரை
புனித சனி
This article uses material from the Wikipedia தமிழ் article பாஸ்கா திருவிழிப்பு, which is released under the Creative Commons Attribution-ShareAlike 3.0 license ("CC BY-SA 3.0"); additional terms may apply (view authors). வேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 4.0 இல் கீழ் கிடைக்கும். Images, videos and audio are available under their respective licenses.
®Wikipedia is a registered trademark of the Wiki Foundation, Inc. Wiki தமிழ் (DUHOCTRUNGQUOC.VN) is an independent company and has no affiliation with Wiki Foundation.