பிள்ளையான் என அறியப்படும் சிவனேசதுரை சந்திரகாந்தன் (பிறப்பு: ஓகஸ்ட் 18, 1975) இலங்கைத் தமிழ் அரசியல்வாதியும், நாடாளுமன்ற உறுப்பினரும், முன்னாள் கிழக்கு மாகாண முதலமைச்சரும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் (தமவிபு) கட்சியின் தலைவருமாவார்.
விடுதலைப் புலிகளின் முன்னாள் போராளியான இவர் கருணா என அறியப்பட்ட விநாயகமூர்த்தி முரளிதரனுடன் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பிலிருந்து 2004 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் பிரிந்து சென்று கருணா குழுவில் முக்கிய தலைவராக செயற்பட்டார்.
சிவனேசதுரை சந்திரகாந்தன் | |
---|---|
இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் ஆகத்து 2020 | |
தொகுதி | மட்டக்களப்பு மாவட்டம் |
கிழக்கு மாகாணத்தின் 1-வது முதலமைச்சர் | |
பதவியில் 16 மே 2008 – 18 செப்டம்பர் 2012 | |
முன்னையவர் | வெற்றிடம் கொழும்பின் நேரடி ஆட்சி |
பின்னவர் | நஜீப் அப்துல் மஜீத் |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 18 ஆகத்து 1975 கல்குடா, மட்டக்களப்பு மாவட்டம் |
தேசியம் | இலங்கைத் தமிழர் |
அரசியல் கட்சி | தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் |
இணையத்தளம் | chandrakanthan.com |
2007 ஏப்ரலில் தமவிபு கட்சியில் இடம்பெற்ற உள்ளக மோதலை அடுத்து, கருணா கட்சியில் இருந்து வெளியேறியதை அடுத்து, பிள்ளையான் கட்சித் தலைவரானார். 2008 கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்று கிழக்கு மாகாணத்தின் முதலாவது முதலமைச்சரானார்.
மட்டக்களப்பு மாவட்டம், வாழைச்சேனை, பேத்தாழையைப் பிறப்பிடமாகக் கொண்ட பிள்ளையான் பேத்தாழை விபுலானந்தா வித்தியாலயத்திலும் பின்னர் வாழைச்சேனை இந்துக்கல்லூரியில் க.பொ.த. (சாதாரண தர) வகுப்பு (தரம் 11) வரை கல்வி பயின்றவர்.
1990 ஏப்ரல் 4 இல் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தில் தனது 15வது வயதில் "பிள்ளையான்" என்ற இயக்கப் பெயரில் போராளியாக இணைந்தார். 1997 இல் முல்லைத்தீவு இராணுவமுகாம் தாக்குதல், 2001 இல் ஆனையிறவு முகாம் தாக்குதல் ஆகியவற்றில் பங்கு பற்றினார்.
2004 இல் விடுதலைப் புலிகள் அமைப்பில் இருந்து கருணா அணியுடன் சேர்ந்து விலகி அவ்வமைப்பில் பதில் தலைவரானார். ஆனாலும், விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனுக்கு விசுவாசமான பல போராளிகள் கிழக்கு மாகாணத்தில் இருந்தனர். 2004 ஏப்ரலில் வெருகல் தாக்குதலில் கருணா அணி தோற்கடிக்கப்பட்டது. அதன் பின்னர் கருணா அணி கிழக்கு மாகாணத்தில் சில சிறிய முகாம்களை அமைத்து இலங்கை ஆயுதப் படைகளின் உதவியுடன் புலிகளுக்கு எதிரான தாக்குதல்களை சிறிய அளவில் மேற்கொண்டு வந்தது. கருணாவின் சகோதரர் ரெஜி கொல்லப்பட்டதைத் தொடர்ந்து பிள்ளையான் அவ்வமைப்பின் இராணுவப் பிரிவின் தலைவரானார். 2006 நடுப்பகுதியில் புலிகளிக்கும் இராணுவத்தினருக்கும் இடையே போர்நிறுத்த உடன்பாடு முறிவடைந்ததை அடுத்து, இலங்கை அரசுப்படைகள் கிழக்கு மாகாணத்தில் புலிகள் மீது பெரும் தாக்குதலைத் தொடுத்தது. இறுதியில், 2007 சூலையில், அரசுப்படைகளின் உதவியுடன் கருணா அம்மானின் துணை இராணுவக் குழு விடுதலைப் புலிகளின் முகாம்களை முழுமையாகக் கைப்பற்றியது. 2007 ஏப்ரலில் இல் கருணா அணியில் இடம்பெற்ற உள்ளக மோதல்களைத் தொடர்ந்து கருணா இலண்டனுக்குத் தப்பி ஓடியதை அடுத்து அவ்வமைப்பின் தலைவரானார். 2004 இல் கருணா ஆரம்பித்த தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் (தமவிபு) என்ற அரசியல் கட்சியின் தலைமைப் பொறுப்பையும் ஏற்றுக் கொண்டார்.
2008 மார்ச் 10 இல் மட்டக்களப்பு மாவட்டத்தில் நடத்தப்பட்ட ஒன்பது உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தல்களில் சந்திரகாந்தன் தலைமையிலான தமவிபு கட்சி போட்டியிட்டு அனைத்து சபைகளையும் கைப்பற்றியது. இத்தேர்தலில், சந்திரகாந்தனின் தந்தை ஆறுமுகம் சிவனேசதுரை கோறளைப்பற்று பிரதேச சபையின் உறுப்பினராகத் தெரிவு செய்யப்பட்டார்.}}
கிழக்கு மாகாண சபைக்கான முதலாவது தேர்தல் 2008 மே 10 ஆம் நாள் நடைபெற்றது. பிள்ளையானின் தமவிபு கட்சி ஆளும் மகிந்த ராசபக்ச டதலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணியுடன் இணைந்து அக்கட்சியின் சின்னத்தில் போட்டியிட்டது. கிழக்கு மாகாண சபைக்கான 37 இடங்களில் ஐமசுகூ 20 இடங்களைக் கைப்பற்றியது. சந்திரகாந்தன் மட்டக்களப்பு மாவட்டத்தில் அதிகூடிய விருப்பு வாக்குகளைப் பெற்றார். 2008 மே 16 இல், சந்திரகாந்தனை கிழக்கு மாகாணத்தின் முதலாவது முதலமைச்சராக மகிந்த ராசபக்ச நியமித்தார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் யோசப் பரராஜசிங்கம், நடராஜா ரவிராஜ் ஆகியோரின் படுகொலைகள் தொடர்பாக விசாரணைக்காக அழைக்கப்பட்ட சந்திரகாந்தன் 2015 அக்டோபர் 14 அன்று கைது செய்யப்பட்டுக் காவலில் வைக்கப்பட்டார்.
பிள்ளையான் சிறையில் இருந்தவாறே 2020 நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் வேட்பாளராக மட்டக்களப்பு மாவட்டத்தில் போட்டியிட்டு மாவட்டத்திலேயே அதிகூடிய விருப்பு வாக்குகள் (54,198) பெற்று நாடாளுமன்றத்திற்கு முதன் முதலாகத் தெரிவு செய்யப்பட்டார்.
2015 அக்டோபரில் கைது செய்யப்பட்டு சிறையில் இருந்த பிள்ளையான் 2020 நவம்பர் 24 அன்று பிணையில் விடுவிக்கப்பட்டார்.
This article uses material from the Wikipedia தமிழ் article சிவனேசத்துரை சந்திரகாந்தன், which is released under the Creative Commons Attribution-ShareAlike 3.0 license ("CC BY-SA 3.0"); additional terms may apply (view authors). வேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 4.0 இல் கீழ் கிடைக்கும். Images, videos and audio are available under their respective licenses.
®Wikipedia is a registered trademark of the Wiki Foundation, Inc. Wiki தமிழ் (DUHOCTRUNGQUOC.VN) is an independent company and has no affiliation with Wiki Foundation.