கணாதன்(செங்கிருதம்: कणाद) மற்றும் காசியபர், உலுக்கா, கனந்தர், கணாபுகர் என்றும் அறியப்படுபவர் தொன்மைய இந்தியாவின் மெய்யியலாளரும் அறிஞரும் ஆவார்.
இவரே வைசேடிகம் என்ற சமயநெறியேத் தோற்றுவித்தவராகக் கருதப்படுகிறார். கி.பி இரண்டாம் நூற்றாண்டில் எழுதப்பட்ட மணிமேகலை பெருங்காதையில் 27ஆவது காதையில் குறிப்பிடப்பட்டுள்ள ஆறு வகையான சமயநெறிகளில் வைசேடிகம் குறித்தும் கணாதர் குறித்தும் விளக்கமான செய்திகள் உள்ளன.
கணாதன் | |
---|---|
பிறப்பு | கி.மு 600- கி.மு 200 துவாரகை இன்றைய குசராத்து |
தத்துவம் | வைசேடிகம் |
கி. மு ஆறாம் நூற்றாண்டுக்கும் கி.மு இரண்டாம் நூற்றாண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில் வாழ்ந்ததாக மதிப்பிடப்படும் இவரைக் குறித்த வாழ்க்கைக் குறிப்புகள் கிடைக்கப்பெறவில்லை. இவரது வழமையான பெயரான "கணாதன்" என்பதற்கு "அணுவை உண்பவர்" எனப் பொருள் கொள்ளலாம். இவரே இந்திய மெய்யியலில் அணுவைக் குறித்த கருத்தியலை நாட்டியவர். தனது வடமொழி நூலான வைசேடிக சூத்திரத்தில் இது குறித்து விளக்கியுள்ளார். இவரது உரை கணாதர் சூத்திரங்கள், அல்லது கணாதரின் நூற்பா எனவும் அழைக்கப்படுகின்றது.
தமது கருத்தியலில் கணாதர் அண்டத்தின் உருவாக்கலையும் இருத்தியலையும் விளக்க முற்பட்டுள்ளார். அணுக்கொள்கை, தருக்கம், மெய்யியல் பயன்படுத்தி இந்த விளக்கத்தைத் தர முயன்றுள்ளார். மெய்யியலின் உள்ளியக் கருத்தியலை மனித வரலாற்றில் முதன்முதலில் முன்மொழிந்தவர் இவரேயாகும். கணாதரின் கூற்றுப்படி எதுவம் உட்பிரிவாக பிரிக்க முடியும், ஆனால் இந்த உட்பிரிவை ஒரு கட்டத்திற்கு மேல் பிரிக்க முடியாத நிலை வரும். இவ்வாறு பிரிக்கமுடியாதளவில் உள்ளவை பரமாணு எனப்படும். இவை பிரிக்கப்பட முடியாதவை மட்டுமல்ல, இவை அழிக்க முடியாதவையும் கூட. இவற்றின் பல்வேறு கூட்டுப் பொருட்களே சிக்கலான பொருட்களாகும். இதுவே அனைத்து பொருட்களின் இருப்புக்கு காரணமுமாகும். இந்த கருத்தியலை இந்து சமயத்தின் ஆன்மாவிற்கும் பொருத்தி ஆத்திகமல்லா வழியிலும் வீடுபேறு அடையும் வழியை விளக்கினார். கணாதரின் கருத்துக்கள் இந்து சமயத்தின் பல்வேறு கருத்தியல்களிலும் உள்வாங்கப்பட்டுள்ளது. வரலாற்றின்படி இது இந்து சமயவியலில் நியாயம் குறித்ததாக அமைந்தது.
கணாதரின் ஆய்வில் ஆறு பகுப்புகள் (பதார்த்தாக்கள்) உள்ளன; இவை அறியக்கூடியவையும் பெயரிடப்பட்டவையுமாகும். இவற்றின் மூலமாக அண்டத்தின் அனைத்தையும், பார்வையாளர்கள் உட்பட, விவரிக்க முடியும் என்று கணாதர் கூறுகிறார். இந்த ஆறு பகுப்புகளாவன: திரவியம் (பொருள்), குணம் (பண்பு), கர்மன் (நகர்வு), சாமான்யம் (எங்குமுள்ளது), விசேடம் (குறிப்பிட்டவை), மற்றும் சமவாயம் (இருப்பியல்). திரவியம் எனப்படும் பொருட்களை ஒன்பது பிரிவுகளாக பிரிக்கிறார்; இவற்றில் சில அணுவளவிலானவை, சில பெரியவை, மற்றும் வேறு சில எங்கும் நிறைந்தவை
கணாதரின் தாக்கம் இந்திய மெய்யியலில் மிகவும் குறிப்பிடத்தக்கது. பல்வேறு மெய்யியல் நூல்களிலும் இவர் குறிப்பிடப்பட்டுள்ளார்; இவற்றில் இவர் காசியபர், உலுக்கா, கனந்தர், கணாபுகர் என்று குறிப்பிடப்படுகிறார். சீன இலக்கியங்களில், இவர் மதிப்புடன் சத்-உலூக்கா எனப்படுகின்றார். இவரது வைசேடிக மெய்யியலானது இதேபோல "ஔலுக்கிய மெய்யியல்" போன்ற பல்வேறு பெயர்களில் விளங்குகின்றது. இவரது பெயர் உலுக்கா என்பது ஆந்தையைக் குறிக்கும்; ஆந்தையைப் போல பகல் முழுவதும் ஆராய்ச்சியிலும் தியானத்திலும் ஈடுபடும் கணாதர் இரவில் ஒருமுறை மட்டுமே உண்பார் என்பது ஓர் செவிவழிச் செய்தி.}}
கணாதரின் கருத்துக்கள் பல துறைகளிலும் பொருந்தின; மெய்யியலை மட்டுமன்றி மற்ற துறைகளிலும் இவரது தாக்கம் இருந்தது. காட்டாக, மருத்துவ நூலை இயற்றிய சரகரின் சரக சம்கிதையிலும் இந்தத் தாக்கத்தைக் காணலாம்.
This article uses material from the Wikipedia தமிழ் article கணாதன், which is released under the Creative Commons Attribution-ShareAlike 3.0 license ("CC BY-SA 3.0"); additional terms may apply (view authors). வேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 4.0 இல் கீழ் கிடைக்கும். Images, videos and audio are available under their respective licenses.
®Wikipedia is a registered trademark of the Wiki Foundation, Inc. Wiki தமிழ் (DUHOCTRUNGQUOC.VN) is an independent company and has no affiliation with Wiki Foundation.