தமிழிலக்கணத்தில், உவமையணி என்பது ஒரு புலவர் தான் பிறருக்குக் கூறக் கருதிய பொருளை அவருக்கு நன்கு தெரிந்த ஒன்றைக் காட்டி விளக்குவது ஆகும்.
ஒரு பொருளை இன்னொரு பொருளுடன் ஒப்பிட்டு அழகுபடுத்திக் கூறுவதாம்.
புலவர் தாம்சொல்ல எடுத்துக் கொண்ட பொருளை வேறு ஒரு பொருளுடனோ பல பொருளுடனோ அப்பொருளின் பண்பு,தொழில், பயன் என்பவற்றைக் காரணமாகக் கொண்டு இயைபுபடுத்தி இரு பொருள்களுக்கும் இடையே உள்ள ஒப்புமை புலப்படும்படி பாடுவது உவமை அணியாகும். புலவர் விளக்கிக் கூறக் கருதும் பொருள், 'பொருள்'அல்லது 'உவமேயம்' எனப்படும். அப்பொருளை விளக்கவோ அழகுபடுத்தவோ அவர் இயைத்துக் கூறும் மற்றொரு பொருள்'உவமை' அல்லது 'உவமானம்' எனப்படும். அவ்விரண்டையும் இணைக்கப் பயன்படுவது உவம உருபு ஆகும்.
12 -ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்டதாகக் கருதப்படும் தண்டியலங்காரம் என்னும் இலக்கண நூல் உவமை அணியைக் கீழ்வருமாறு விளக்குகிறது:
“ | பண்பும் தொழிலும் பயனும் என்றிவற்றின் ஒன்றும் பலவும் பொருளொடு பொருள் புணர்த்து | ” |
என்ற நூற்பா விளக்குகிறது. தண்டியலங்காரம் குறிப்பிடும் பொருளணிகள் 35 இல் தலைமை அணியாக உவமை அணி அமைவதாலும் இந்த அணியிலிருந்தே பிற அணிகள் தோன்றுவதாலும் இந்த அணியைத் தாய் அணி என்றும் அழைப்பர்
எடுத்துக்காட்டு :
“ | வேலொடு நின்றான் இடுஎன்றது போலும் கோலொடு நின்றான் இரவு | ” |
விளக்கம் :
செங்கோல் உடைய அரசன் ஒருவன் தன் அதிகாரத்தினைப் பயன்படுத்தி வரி என்ற பெயரில் மக்களிடம் பணம் வசூலிப்பது, வேல் முதலிய ஆயுதங்களைக் கொண்ட ஒரு வழிப்பறி செய்வதற்குச் சமம் ஆகும்.
உவமானம் - வேலொடு நின்றான் இடுஎன்றது.
உவமேயம் - கோலொடு நின்றான் இரவு.
உவம உருபு - போலும்
உவமையணி 24 வகைப்படும். அவையாவன:
என்பனவாகும்.
இவையன்றி
எனப் பலவகையுண்டு
ஒரு பொருளின் வண்ணம், வடிவம், அளவு, சுவை,ஆகியவை அப்பொருளின் 'பண்பு' எனப்படும். இப்பண்புகள் காரணமாக அமையும் உவமையணி, பண்புஉவமையணி ஆகும்
சான்றுகள்:
“ | பால்போலும் இன்சொல்; பவளம்போல் செந்துவர்வாய் | ” |
மேற்கண்ட சொற்றொடர்கள், பால் போன்ற இனிய சொல், பவளத்தைப் போன்றசிவந்த வாய் என்ற பொருட்களைத் தருவதால் பாலின் சுவைப் பண்பு இனிய சொல்லிற்கும் பவளத்தின் வண்ணப் பண்பு சிவந்த வாயிற்கும் உவமையாகக் கூறப்பட்டிருப்பதை அறியலாம்.
ஒரு பொருளின் தொழில் அல்லது செயல் காரணமாக அமையும் உவமையணி, தொழில் உவமையணி எனப்படும்.
சான்றுகள்: "புலிமறவன்","குரங்குமனம்"
மேற்காணும் சான்றுகள், புலியைப் போன்று பகைவருக்குத் துன்பம் தரும் வலிமையினை உடைய மறவன், குரங்கு போன்று அங்கும் இங்கும் தாவுகின்ற மனம் என்ற பொருட்களைத் தருகின்றன. துன்பம் தருதல், தாவுதல் போன்ற தொழில் ஒப்புமை காரணமாக இவை தொழில் உவமையணி ஆயிற்று.
ஒரு பொருளால் கிடைக்கும் பயன் காரணமாக அமையும் உவமையணி பயன் உவமையணி எனப்படும்.
சான்று: "கார் நிகர் வண்கை"
(கார்-மழை;வண்கை-கொடைத்தன்மை)
மழையை ஒத்த கொடைத் தன்மையை உடைய கை என்பது இவ்வடியின் பொருள். மழையால் விளையும் பயனும் வள்ளலின் கை வழங்கும் கொடையால் விளையும் பயனும் ஒத்தலின் இது பயன் உவமையணி ஆயிற்று.
உவமையணியில் உவமானம் ,உவமேயம், உவமை உருபுகள் ஆகிய மூன்றும் வெளிப்படையாக வரும். இவைகளோடு பொதுத்தன்மையும் இருக்கும்.
புலவர் அல்லது கவிஞர் ஒப்பிடக் கொண்டு வந்த பொருள். அதாவது சிறப்பிக்கப்படும் பொருளைச் (உவமேயம்) விளக்குவதற்கோ அழகுபடுத்துவதற்கோ வந்த சிறப்புப் பொருள் உவமானம் அல்லது உவமை எனப்படும்.
புலவர் அல்லது கவிஞர் விளக்கிக் கூறக் கருதும் பொருள், அதாவது சிறப்பிக்கப்படும் பொருள் உவமேயம் எனப்படும்.
இரு பொருள்களை ஒப்புமைப் படுத்துவதற்காகப் பயன்படுத்தும் இடைச்சொல்லான 'போன்ற' என்பது போலப் பொருள் தரும் சொற்கள் உவம உருபுகள் எனப்படும். உதாரணம்: போன்ற, போல, நிகர்த்த, உடைய, ஒப்ப, அன்ன, அனைய, அற்றே
(எ.கா.) உவம உருபு - தொடர்
உவம உருபுகளை,
“ | போலப் புரைய ஒப்ப உறழ
| ” |
என்ற மேற்கண்ட நூற்பா பட்டியலிடுகிறது.
இரண்டுக்கும் உள்ள தன்மை(சந்திரன் போல முகம். இங்கு சந்திரன் உவமானம். முகம் உவமேயம். இதில் சந்திரனின் வடிவம், அழகு, வட்டம், குளிர்மை போன்றவை பொதுத்தன்மை)
சான்று: அகழ்வாரைத் தாங்கும் நிலம்போலத் தம்மை இகழ்வார்ப் பொறுத்தல் தலை
இங்கு,
உவமானம்: அகழ்வாரைத் தாங்கும் நிலம்
உவமேயம்: தம்மை இகழ்வார்ப் பொறுத்தல்
உவமை உருபு: போல
வெளிப்படையாகத் தெரியாத உவமைஉருபுகள் உவமைத்தொகை எனப்படும். அதாவது உவமை தொக்கி நிற்பது.
உதாரணம்: கயல்விழி - கயல் போல் விழி
இங்கு உவமை உருபு (போல்) மறைந்து நிற்கிறது.
இதே போல இன்னொரு உதாரணம்:
மதிமுகம் - மதி போன்ற முகம்
உவமை உருபு (போன்ற) மறைந்து நிற்கிறது.
உவமையணியை இன்னொரு விதத்தில் இன்னும் இரண்டாகப் பிரிக்கலாம்.
அவையாவன:
1- எடுத்துக்காட்டு உவமையணி
2- இல்பொருள் உவமையணி
இது நேர்ப்பொருளில் வெளிப்படையாகச் சொல்வது
இதில் உவைமை உருபுகள் வெளிப்ப்ட வருவதில்லை.உவமை,உவமேயம் தனித்தனித் தொடர்களக வருகின்றன. உதாரணம்:
தொட்டனைத்து ஊறும் மணற்கேணி
மாந்தர்க்கு கற்றெனத் தூறும் அறிவு
மணற்கேணியானது எவ்வளவு ஆழமாகக் கிண்டுகிறோமோ அவ்வளவுக்கவ்வளவு நீர் சுரக்கும். அதே போல மனிதர் எவ்வளவுகெவ்வளவு கற்கிறார்களோ அவ்வளவுக்கவ்வளவு அவர்களது அறிவு பெருகும்.
இல்பொருள் உவமையணி மறைபொருளில் வரும். அதாவது இல்லாத ஒன்றை இருப்பது போல கற்பனை செய்து அதனை உவமையாகக் காட்டுவது.
உதாரணம்:
“ | அன்பகத்து இல்லா உயிர்வாழ்க்கை வன்பாற்கண். வற்றல் மரம் தளிர்த்தற்று - குறள் 79 | ” |
.
விளக்கம் :
அதாவது வலிமையான ஒரு பாலைவனத்திலே பட்டமரம் தளிர்த்ததைப் போன்று அன்பில்லா உயிர்வாழ்க்கை தளிர்க்காது. அதாவது வலிமையான பாலைவனத்திலே பட்டமரம் தளிர்க்கவே தளிர்க்காது. அதே போலத்தான் அன்பில்லா வாழ்க்கையும்.
நாட்டார் பாடல்களிலும் உவமைகள் பொருத்தமுற, அழகாக, இயல்பாகக் கையாளப்பட்டுள்ளன. இவை ஏட்டுக் கவிதைகளில் புலவர்களால் பொதுவாகக் கையாளப்படும் உவமைகளிலும் பார்க்கச் சுவையுடைத்தாய் உள்ளன. ஓரிரு உதாரணங்கள் வருமாறு
ஈச்சம் குருத்துப்போல இருந்துமுகம் வாடலாமா?
(மாவிலங்க மரத்தின் பட்டையையும் மானிறைச்சியையும் ஈச்சம் குருத்தையும் நாட்டு மக்கள் வெயிலிலே காயவைத்து வெவ்வேறு தேவைகளுக்குப் பயன்படுத்துவது வழக்கம். இந்த இயற்கையான நிகழ்ச்சியையே நாட்டுப்புறக் கவிஞன் உவமையாகக் காட்டுகின்றான்)
பாசிப் பழத்தழகி பக்கத்தில் நான் வந்திடுவேன்.
This article uses material from the Wikipedia தமிழ் article உவமையணி, which is released under the Creative Commons Attribution-ShareAlike 3.0 license ("CC BY-SA 3.0"); additional terms may apply (view authors). வேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 4.0 இல் கீழ் கிடைக்கும். Images, videos and audio are available under their respective licenses.
®Wikipedia is a registered trademark of the Wiki Foundation, Inc. Wiki தமிழ் (DUHOCTRUNGQUOC.VN) is an independent company and has no affiliation with Wiki Foundation.